ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பி.ட்டி. கத்தரிக்குத் தடை: தொடர வேண்டிய விழிப்புணர்வு - கி.வெங்கட்ராமன்

(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மார்ச் 2010 இதழில் வெளியான கட்டுரை)
அக்கறையுள்ள அறிவாளர்களும், உழவர்களும் ஒன்றிணைந்து போராடினால் அரசைப் பணியவைக்க முடியும் என்பதற்கு பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருப்பது ஒரு எடுத்துக்காட்டு. மான்சான்டோ நிறுவனத்தின் பி.ட்டி.கத்தரியைத் தற்போதைக்கு சந்தைக்கு அனுமதிக்கப் போவதில்லை என்று 09.02.2010 அன்று இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அறிவித்தார்.

பி.ட்டி.பருத்தியில் ஏற்பட்ட கடுமையான பாதிப்பு அறிவாளர்களையும், உழவர்களையும் விழிப்புறச்செய்தது. பி.ட்டி. கத்தரியை அனுமதித்தால் பிற உணவுப் பயிர்களுக்கும் கம்பெனி ஆதிக்கம் தொடரும் என்பதை இவர்கள் உணர்ந்தனர். எனவே பி.ட்டி.கத்தரி பற்றிய விவாதத்தில் இவர்கள் கூர்மையாகப் பங்கேற்றனர். ஆயினும் இந்திய அரசின் மரபீனிப் பொறியியல் ஏற்பிசைவுக்குழு அறிவியல் வழிப்பட்ட எந்தவித எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் கடந்த 2009 அக்டோபர் 14 அன்று பி.ட்டி.கத்தரி விற்பனைக்கு ஏற்பு வழங்கியது. இக்குழுவில் உச்சநீதிமன்றத்தின் பார்வையாளராக இடம் பெற்றிருந்த செல் உயிரியலாளர் முனைவர். பி.எம்.பர்கவா இம்முடிவு எவ்வாறு தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டது என்பதை வெளிப்படுத்தினார். பி.ட்டி.கத்தரிக்கு ஏற்பு வழங்குவது குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட உள்குழு பெரிதும் அமெரிக்க விதை நிறுவனமான மான்சான்டோவின் கையாள்களால் நிரப்பப்பட்டிருந்தது என்பதை டவுன் டு எர்த் இதழ் அம்பலப்படுத்தியது. (காண்க: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், பிப்ரவரி 2010)

ஆயினும், வலுவான எதிர்ப்பு தொடர்ந்ததன் காரணமாக இதுகுறித்து இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னால் மக்கள் கருத்து கேட்டு அறியப்படும் என இந்திய அரசு அறிவித்தது.

இதற்கேற்ப கொல்கத்தா, புவனேஸ்வர், ஆமதாபாத், சண்டிகர், ஐதராபாத், பெங்களுர் ஆகிய இடங்களில் பொது விசாரணைகள் நடைபெற்றன. எல்லா இடங்களிலும் அறிவாளர்கள், உழவர்கள், தொண்டு நிறுவனங்கள், மக்களமைப்புகள் ஆகியவற்றின் பேராளர்கள் பங்கேற்று பி.ட்டி.கத்தரியினால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கினர். உத்தரப்பிரதேசம், ஜார்கண்டு, கேரளா, ஆந்திரம், கர்நாடகா ஆகியவற்றின் முதலமைச்சர்கள், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஆகியோர் பி.ட்டி.கத்தரியை ஆய்வின்றி சந்தைக்கு அனுமதித்துவிடக்கூடாது எனக் கேட்டுக்கொண்டு அமைச்சருக்கு கடிதம் அனுப்பினர்.

இவற்றின் விளைவாக ‘பி.ட்டி.கத்தரி’ குறித்து எழுந்துள்ள எதிர்க்கருத்துக்களை உரியவாறு ஆய்வு செய்த பிறகே அதனை சந்தைக்கு இந்திய அரசு அனுமதிக்கும்’ என்று 09.02.2010 அன்று சுற்றுச்சூழல் இணை அமைச்சர் செயராம் ரமேசு அறிவித்தார்.

அவரது விரிவான அறிக்கை இச்சிக்கல் குறித்து நாமும் வேறு பல அமைப்பினரும் எழுப்பிய ஐயங்களை உறுதிசெய்வதாக அமைந்தது.

பி.ட்டி.கத்தரி குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் சுயேச்சையான ஆய்வகங்களில் செய்யப்பட்டவை அல்ல. மாறாக மான்சான்டோவின் துணைநிறுவன ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளை அப்படியே ஏற்பிசைவுக்குழு கேள்வியின்றி ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை அரசு அறிக்கை ஒப்புக்கொண்டது. பி.ட்டி.பருத்தி சட்டவிரோதமான வழிகளில் சந்தைக்கு வந்து, சந்தையை ஆக்கிரமித்து உள்ளுர் பருத்தி வகைகளை முந்திச்சென்றது என அமைச்சரின் அறிக்கை (பத்தி 12,13 ) கூறுகிறது. இதுபற்றி மீளாய்வு செய்யவேண்டியது அவசியம்தான்என்றும் ஏற்றுக்கொள்கிறது.

பி..ட்டி.கத்தரிக்கு ஒப்புதல் வழங்கும் முன் பல் சூழல் கள ஆய்வு செய்யப்படவில்லை என்று பிரான்சு நாட்டின் புகழ்பெற்ற அறிவியலாளர் செரிலானி, நியூசிலாந்தின் நுண்ணுரியியல் ஆய்வாளர் ஜாக் ஹய்ன்மேன் உள்ளிட்ட பலரும் சுட்டிக்காட்டியதை சரியான செய்தி என்று அமைச்சரின் அறிக்கை ஏற்றுக்கொண்டது (பத்தி 16).

சித்தமருத்துவம் உள்ளிட்ட இந்திய நாட்டின் உள்நாட்டு மருத்துவ முறைகளில் மருந்துப்பொருளாக பயன்படும் கத்தரியில் மரபீனி மாற்றுத் தொழில்நுட்பம் ஏற்படுத்தும் தீய விளைவுகளை ஆய்வுக்குழு ஆய்வுக்கே எடுத்துக்கொள்ளவில்லை என்பதை மாற்று மருத்துவ வல்லுநர்கள் சுட்டிக்காட்டினர். அமைச்சரின் அறிக்கை இச்சிக்கலை உறுதிப்படுத்துகிறது (பத்தி 20)

பி.ட்டி.கத்தரிக்குப் பதிலாக கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் “சொந்தமாக உருவாக்கியுள்ள” மரபீனி மாற்று கத்தரியை அனுமதிக்கப்போவதாக சட்டமன்றத்தில் தமிழக வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அறிவித்திருந்தார். இது மான்சான்டோவின் பி.ட்டி.கத்தரிக்கு உள்ளுர் முகமூடி அணிவித்து உலவவிடும் சூதான முயற்சி என்பதை எச்சரிக்கையாகக் கூறியிருந்தோம் (காண்க: பிப்ரவரி இதழ்). சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தற்சார்பு வேளாண்மை வல்லுனர்களும் தமிழக முதலமைச்சரை சந்தித்தபிறகு முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையிலும், வீரபாண்டி ஆறுமுகத்தின் சட்டமன்ற அறிவிப்பு கடைபிடிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது ஆபத்தானது என நாம் எடுத்துக்காட்டியதை அமைச்சர் செயராம் ரமேசின் அறிக்கையும் உறுதிசெய்கிறது.

“2005 மார்ச்சு மாதத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும், மான்சான்டோவும் செய்துகொண்ட பொருள் மாற்ற உடன்பாடு. (விணீtமீக்ஷீவீணீறீ ஜிக்ஷீணீஸீsயீமீக்ஷீ கிரீக்ஷீமீமீனீமீஸீt) கவலையோடு கவனிக்கத்தக்கது. இந்த ஆய்வின் விளைவாக உருவாகும் மரபணு மற்றும் பிற மரபீனி மாற்ற கத்தரி விளைபொருள்கள் இறுதியில் மான்சான்டோ நிறுவனத்திற்கே உரிமையானது என்பதை மேற்சொன்ன உடன்பாடு வலியுறுத்துகிறது” என அமைச்சர் அறிக்கை பத்தி 11 சுட்டிக்காட்டுகிறது.

பி.ட்டி.கத்தரிக்கு மான்சான்டோவே உலக உரிமம் பெற்றிருக்கும்போது பல்கலைக்கழகத்தின் சார்பில் ‘சொந்தத் தயாரிப்பாக உருவாக்கப்படுவதாக’ தமிழக அரசு கூறியது ஒரு மோசடி அறிவிப்பு என்பது உறுதியாகிறது.

மான்சான்டோவின் பி.ட்டி.கத்தரிக்கு பல்கலைக்கழக முகமூடி அணிவித்து வெளியிடுவதை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும். ஏனெனில் பி.ட்டி.கத்தரிக்கு எதிராக சொல்லப்பட்ட அனைத்து செய்திகளும் இந்த முகமூடிக் கத்தரிக்கும் பொருந்தும்.

ஆந்திராவில் அக்கறையுள்ள அறிவியலாளர்கள் முன் முயற்சி எடுத்து ஆறு இலட்சம் உழவர்களை ஒன்றிணைத்து இருபது இலட்சம் ஏக்கரில் மேற்கொள்ளும் பூச்சிக் கொல்லியில்லா வேளாண்மை. சிந்தித்துப்பார்க்க வேண்டிய மாற்று என அமைச்சர் செயராம் ரமேசு அறிக்கையே ஒத்துக்கொள்கிறது.

இதனைத் தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.

தமிழர்களை நோயாளியாக்கும், உழவர்களை கடனாளியாக்கும், மண்ணை மலடாக்கும், வெளிநாட்டு மன்சான்டோவின் காலடியில் மண்ணின் வேளாண்மையைக் கட்டிப்போடும் மரபீனி மாற்றக் கத்தரியை எந்தவடிவிலும் தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது. மண்ணின் மரபான நுட்பம் சார்ந்து தலை நிமிரும் தற்சார்பு வேளாண்மைக்கு அனைத்து வகையிலும் ஊக்கம் கொடுக்க வேண்டும்.மரபீனி மாற்றப் பயிர்கள் ஏற்படுத்த வாய்ப்புள்ள பாதிப்புகள் குறித்து விரிவான ஆய்வு இன்றி இவற்றை அனுமதிக்கக் கூடாது.

பி.ட்டி.பருத்தி, பி.ட்டி. வெண்டை, பி.ட்டி. நெல் உள்ளிட்ட அனைத்து மரபீனிப் பயிர்களின் வெளி ஆய்வு மற்றும் விற்பனையை இந்திய அரசு மீளாய்வு செய்து அவற்றிற்கு உரியவாறு தடைவிதிக்க வேண்டும்.

இத்திசையில் இந்திய அரசையும், தமிழக அரசையும் தமிழ்நாட்டு உழவர்கள் வலியுறுத்த வேண்டும். அறிவியலாளர்கள் இம்முயற்சியில் முன்னோடியாகத் திகழ வேண்டும்.
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மார்ச் 2010 இதழில் வெளியான கட்டுரை)

1 comment:

  1. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.