ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஆர்.எஸ்.எஸ் – நரேந்திரமோடி ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் - பெ.மணியரசன்

ஆர்.எஸ்.எஸ் – நரேந்திரமோடி ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் - பெ. மணியரசன்
நரேந்திர மோடி அடால்ப் இட்லர் ஆகிவிட முடியாது. இட்லர் போல் ஆக வேண்டும் என்று மோடி ஆசைப்படலாம்; ஆனால் அது நடக்காது.

இட்லரைப் போல் பட்டாளத்தில் பணியாற்றிய படைவீரர் அல்லர் மோடி; பல்வேறு பலவீனங்கள் கொண்ட நாடாளுமன்ற அரசியல்வாதி இவர்.

இந்தியா செர்மனி அன்று; ஒரே தேசிய இனமான செர்மானிய டச் தேசிய இனத்தின் தாயகம் செர்மனி. அதன் மரபினம் ஆரியர்; ஆனால் அதன் தேசிய இனம் செர்மானியர். இந்தியா பல்வேறு தேசிய இனங்களின் பல்வேறு தேசங்களின் இடைக்கால இணைப்பு!

இட்லரின் நாஜிக் கட்சியைப் போன்றதன்று பா.ச.க. பதவிப்பித்தர்கள், ஊழல் பெருச்சாளிகள், ஒழுக்கக் கேடர்கள் எனப் பலதரப்பட்டவர்களின் அரசியல் குழுமம் பா.ச.க.

இட்லரைப் போல் அனைத்ததிகாரங்களையும் நரேந்திர மோடி பெறுவதை ஆர்.எஸ்.எஸ். விரும் பாது. பயன்படுத்தித் தூக்கி எறிவதுதான் ஆர்.எஸ். எஸ். பண்பு. இப்போதைக்கு ஆர்.எஸ்.எஸ். பணம் கட்டும் பந்தயக்குதிரை நரேந்திர மோடி!

பன்னெடுங்காலத்திற்கு முன்பே ஆரியர்கள் மேலை ஆரியர், கீழை ஆரியர் என்று இரண்டாகப் பிரிந்துவிட்டனர். செர்மானியர் மேலை ஆரிய மரபினர். இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள ஆரியப் பிரிவினர் கீழை ஆரியர்.
மேலை ஆரியர்கள் பல்வேறு தேசிய இனங்களாக உருமாறி விட்டனர். ஆனால், கீழை ஆரியர் பல்வேறு தேசிய இனங்களாகப் படிமலர்ச்சியும் அடையவில்லை; தாமே ஒரு தனித் தேசிய இனமா கவும் வளரவுமில்லை. வர்ணாசிரம தர்மத்தால் சிதறி, சாரத்தில் பிராமணப் பிரிவாகச் சிறுத்து, ஓர் உளவியல் இன வடிவமாகப் பல பிரிவுகளில் ஆரியம் உள்ளது. எனவே, அது நேரடியாக இனஅரசியல் பேசாமல் இந்துத்துவாஎன்ற பெயரில் மத அரசியல் பேசுகிறது. அந்த மத அரசியல் ஊடாக ஆரிய இனஅரசியல் பேசுகிறது. ஆனால், இட்லர் நேரடியாக ஆரிய இனஅரசியல் பேசினார்.

இவையெல்லாம் தாம் மேலை ஆரியத்திற்கும் கீழை ஆரியத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகள்.

கீழை ஆரியத்திற்கென்று ஒரு பார்ப்பனியப் பண்பாடும் - உளவியலும், அவை சார்ந்த உத்திகளும் இருக்கின்றன. அந்தக் கீழை ஆரிய அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ்.

ஆட்சியாளர்களை அண்டி நின்று, ஆன்மிகம் பேசி, அரசியல் தந்திரம் பேசி, தனக்கானவர்களாக ஆட்சியாளர்களை வளைத்துக் கொண்டு தனது சமூக மேலாதிக்கத்தை நிறுவிக் கொள்ளும் உத்திதான் பெரும்பாலும் கீழை ஆரியப் பார்ப்பனியத்தின் உத்தி.

ஆனாலும் பார்ப்பனர்கள் அரச குருவாக இருந்துகொண்டு அரசர்களை இயக்குவார்கள், அரசர்களை ஆட்டி வைப்பார்கள். வாய்ப்புகள் உருவானால் வாள் சுழற்றும் தளபதிகளாகவும் வலம் வருவார்கள்.

மராட்டியத்தில் சித்பவனப் பார்ப்பனர்கள் பேஷ்வாக்களாக - அதாவது முதலமைச்சர்களாக இருந்து கொண்டு மன்னர்களை ஆட்டி வைத்தார்கள். அந்த சித்பவனப் பார்ப்பனப் பிரிவுதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிரந்தரத் தலைமை!

இப்பொழுது மன்னராட்சி இல்லை. வாக்காளர்கள் பெரும் பான்மை அடிப்படையில் தீர்மானிக்கும் தலைவர்கள் ஆட்சி நடைபெறுகிறது. இது மன்னர்நாயகமும் இல்லை, மக்கள்நாயகமும் இல்லை, தலைவர் நாயகம்! இந்தத் தலைவர் நாயகத்தில் அவ்வப்போது ஒரு தலைவரை முன்னிறுத்துகிறது ஆர்.எஸ்.எஸ். அட்டல் பிகாரி வாஜ்பாயி, லால் கிசன் அத்வானி, அடுத்து நரேந்திர மோடி!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவான பா.ச.க.வுக்கு இப்போது நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை கிடைத்து ஆட்சி நடத்துகிறது.
 
குசராத்தில் 2002- இல் இரண்டாயிரம் இசுலாமியர்களைக் கொன்று, இந்துத்துவா வெறியாட்டம் நடத்தி, இந்துமத மக்களை ஒருங்கு திரட்டிக் கொண்டது நரேந்திர மோடி ஆட்சி. அந்த வெற்றியின் விளைவாக இசுலாமியர்களை அச்சுறுத்தி, அவர்களையும் தனது கொற்றத்தின் நிழலில் இழுத்துக் கொண்டது. இதனால் மூன்றாவது முறையாகக் குசராத் சட்டமன்றத்தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று முதல்வரானார் மோடி! அத்வானி குதிரையைவிட மோடி குதிரையே முறுக்கானது, போட்டிக்குத் தகுந்தது என்று முடிவு செய்தது ஆர்.எஸ்.எஸ். தலைமை.

பாபர் மசூதியை இடித்து, இந்து பயங்கரவாதத்தைப் பரப்பி, பா.ச.க.வுக்கு முதல்முதலாக இந்தியாவின் ஆட்சியதிகாரம் கிடைக்கத் தடம் போட்ட அத்வானி இப்போது கவர்ச்சி இழந்த கிழட்டுக் குதிரை என்பது ஆர்.எஸ்.எஸ். மதிப்பீடு!

நரேந்திர மோடியை வைத்து, இந்த ஐந்தாண்டுகளுக்குள், அடுத்த ஐம்பதாண்டுகளுக்கு ஆரியத்திற்குத் தேவையான அடிப்படைகளைப் போட்டுவிட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அவசரம் காட்டுகிறது.
இந்தியாவை இந்துதேசமாக அறிவிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அண்மையில் கோரிக்கை வைத்தார். வர்ணாசிரம தர்மமும் சாதிப் பிரிவுகளும் சமூக வளர்ச்சிக்குத் தேவை என்று கொள்கை வைத்துக் கொண்டு - அதையும் அண்மையில் மீண்டும் ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்திய சுதர்ஸ்சனராவ் என்ற ஆரியச்சார்பு அரை வேக்காட்டு ஆய்வாளரை இந்திய வரலாற்று ஆய்வுக்குழுவின் (ICHR) தலைவராக்கியுள்ளார் நரேந்திர மோடி. இதே கருத்துடைய ஆர்.எஸ்.எஸ்.காரரான தீனாநாத் பத்ராவைக் கொண்டு பள்ளிப் பாடத்திட்டங்களை அணியப்படுத்த முயல்கிறார் மோடி.

ஆர்.எஸ்.எஸ். ஆங்கில ஏடுகளில் ஒன்றான இந்து வாய்ஸ்’’ மும்பையிலிருந்து வெளிவருகிறது. அது நரேந்திர மோடிக்கு இந்துத்துவா கோரிக்கைகளை வைத்துள்ளது.

1. இந்தியாவுக்குப் புதிய ரூபாய்த் தாள்களையும் நாணயங்களையும் அச்சிட வேண்டும். அவற்றில் காந்தி படத்தை நீக்கி விட்டு மாதா லெட்சுமி படத்தை அச்சிட வேண்டும்.

2. சன கன மனப் பாட்டுப்பாடி முடிந்ததும், “வந்தே மாதரம்’’ என்றும் பாரத் மாதா கீ ஜே’’ என்றும் ஒவ்வொருவரும் கட்டாயம் முழக்கம் கொடுக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இதை கட்டாயமாக்க வேண்டும்.

3. “வந்தே மாதரம்’’, “பாரத் மாதா கீ ஜே’’ என்று சொல்ல மறுப்பவர்கள், இந்திய அரசுக் கொடியை அவமதிப்பவர்கள் ஆகியோரின் வாக்குரிமை மற்றும் அடிப்படை உரிமைகளைப் பறிக்க வேண்டும். அவர்கள் உயிர் வாழ்வதற்கான உரிமை மட்டுமே இருக்க வேண்டும்.

4. சமற்கிருதப் பாடசாலைகளுக்கு நிதி வழங்க வேண்டும்.

5. “சிறுபான்மையினர்’’ என்ற சொல்லைத் தடை செய்ய வேண்டும்.

6. அயோத்தியில் மிகப்பெரிய இராமர் கோயில் கட்ட வேண்டும். காசியிலும், மதுராவிலும் மசூதிகள் உள்ள இடங்களில் இந்துக் கோயில்கள் கட்ட வேண்டும்.

7. பெண்கள் பாதுகாப்பிற் கென்று கொண்டு வரப்பட்டுள்ள குடும்ப வன்முறைத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும்.

8. பெண்களின் உடை என்னவாக இருக்க வேண்டும் என்பதற்கு சட்டம் கொண்டு வர வேண்டும்.

9. இந்துக் கோயில்கள், இந்து நிறுவனங்கள் எதிலும் அரசு தலையிடக் கூடாது. அரசு வசம் உள்ளவற்றை இந்து அமைப்புகளிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

10. சட்டீஸ்கத் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள சல்வா ஜூடும்என்ற நிலக்கிழார்களின் தனிப்பட்ட ஆயுதப்படையை அரசு அனுமதித்தது போல, சில இந்து அமைப்புகள் தங்களுக்கென்று ஆயுதப்படை உருவாக்கிக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

இவை போன்ற இன்னும் பல கோரிக்கைகள் இருக்கின்றன. அவ்விதழின் ஆசிரியர் தலைமை அமைச்சர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் அவ்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. (Hindu Voice - June -2014). இக்கடிதம் ஏற்கெனவே தமிழர் கண்ணோட்டம் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆரியம் காட்டும் அவசரம் புரிகிறது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சி தொடருமா, தொடராதா என்ற ஐயம் அவர்களுக்கே இருக்கிறது. 

மீண்டும் பாபர் மசூதி இடிப்புப் பயங்கரவாதம் போல், குசராத் மதப்படுகொலைப் பயங்கரம் போல் ஏதாவதொன்று பா.ச.க.வினாலோ, ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களாலோ அரங்கேற்றப்பட்டால்தான் மறுபடியும் இந்துக்களின் ஒருமுனைத் திரட்சியை உருவாக்க முடியும். சிறுபான்மை மத மக்களை அச்சுறுத்தி வாக்கு வாங்க முடியும்.

வரக்கூடிய உத்தரப்பிரதேச சட்டப் பேரவைக்கான இடைத் தேர்தல், பொதுத்தேர்தல் ஆகியவற்றில் வெற்றியை ஈட்டுவதற்காக இப்பொழுது சகரன்பூர் கலவரம் போன்ற இந்து முசுலிம் வகுப்புக் கலவரங்களை பா.ச.க. தூண்டி வருகிறது. இப்படிக் கலகங்களைத் தூண்டுவதை ஞாயப்படுத்தி, பா.ச.க. வின் அனைந்திந்தியத் தேசிய செயற்குழுஉறுப்பினர் சி.டி. இரவி என்பவர் தமது டுவிட்டரில் வெளியிட்ட செய்தி, கள்வன் கையும் களவுமாக பிடிப்பட்டது போல், ஆர்.எஸ்.எஸ். பரிவாரத் திட்டத்தை அம்பலப் படுத்துகிறது.

சகரன்பூர் மதக்கலவரம் பற்றித் தமது டுவிட்டரில் எழுதிய சி.டி. இரவி ”2002-லிருந்து குசராத்தில் செயல்பட்டு வரும் முன்மாதிரி மட்டுமே அவர்களின் (முசுலிம் களின்) கலகக்காரர்களைக் கட்டுப் படுத்தி வைக்கும். அம்மாதிரி நடவடிக்கைகள் பாரதம் முழுவதற்கும் தேவை’’.

அத்வானியைப் பின்னுக்குத் தள்ளி, நரேந்திர மோடியைத் தலைமை அமைச்சர் வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ். முடிவு செய்ததற்குக் காரணம் 2002-இல் குசராத்தில் நரேந்திர மோடி ஆட்சியில் முசுலிம்கள் இரண்டாயிரம் பேர் கொலை செய்யப்பட்டதுதான். பா.ச.க.வில் உள்ள இளம் அரசியல்வாதிகள் உயர் பதவிகளை அடைவதற்கு ஆர்.எஸ்.எஸ். காட்டியுள்ள வழிமுறை இதுதான்!

அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் மக்களவைத் தேர்தலுக்கு ஓராண்டிற்கு முன்பாகவே, நரேந்திர மோடியைத் தலைமை அமைச்சர் வேட்பாளராகத் தேர்வு செய்தது ஏன்? குசராத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து நரேந்திர மோடி செய்த சேவையை மெச்சிய பன்னாட்டு நிறுவனங்கள், “இப்படிப் பட்ட தாராளமய நாயகன் தலைமை அமைச்சராக வந்தால், இன்னும் தாரளமாக நமக்கு இந்தியாவே கிடைக்கும்’’ என்று பேராசைப்பட்டனர். மேற்கு வங்கம் சிங்கூரில் உழவர் போராட்டத்தினால் விரட்டியடிக்கப்பட்ட டாட்டா-வின் மகிழுந்து (நானோ கார்) தொழிற்சாலையை ஆரத் தழுவி குசராத்திற்கு அழைத்துக் கொண்டவர் மோடி.

அதனால் நரேந்திர மோடிக்கான தேர்தல் உத்திகள், விளம்பரங்கள், பரப்புரைகள், செலவுகள் அனைத்தையும் பன்னாட்டு நிறுவனங்கள் கவனித்துக் கொண்டன. இந்திய நாட்டுப் பெருமுதலாளிகள், அடுத்து நரேந்திர மோடிதான் வர வேண்டும் என்று ஏற்கெனவே முடிவு செய்திருந்தனர்; பா.ச.க. காட்டில் பணமழை அடைமழையாய்ப் பெய்தது.
இந்த வெளிநாட்டு முதலாளிகள் - இந்திய முதலாளிகள் ஆகியோரின் தேர்வும் - ஆர்.எஸ்.எஸ். தேர்வும் ஒன்றாய் அமைந்து நரேந்திர மோடியைத் தீர்மானித்தது எப்படி?

பன்னாட்டு நிறுவனங்களின்- குறிப்பாக அமெரிக்காவின் நுகர்வுப் பண்பாடும் மனிதர்களை உதிரிகளாகப் பார்க்கும் பண்பாடும் ஆரியத்திற்கும் உரியவைதாம். வாழ்க்கைப் போட்டியில் வலுவுள்ளது வாழட்டும் - வலுவற்றது அழியட்டும்’’ என்ற கோட்பாடு- முதலாளியத்திற்கும் ஆரியத்திற்கும் பொதுவானதே! சுதேசி சாக்ரான் என்று வைத்துக் கொண்டு இந்தியப் பொருளையே வாங்குங்கள் என்று பத்தாண்டுகளுக்கு முன் ஆர்.எஸ்.எஸ். நாடகமாடிய தெல்லாம் பழங்கதை!
எதிர்ப்புகளை ஒடுக்கி ஆளுகின்ற ஓர் எதேச்சாதிகாரி இந்துத் துவாவுக்கும் தேவை; பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தேவை. இவ்விருதரப்பினரின் விருப்பத்தை நிறைவு செய்பவராக நரேந்திர மோடி அமைந்தார்.

இந்திய விடுதலை நாள் விழா உரையில், “இந்தியாவில் செய்தது என்பதை இந்தியாவில் செய்ததாக மாற்றுங்கள்’’ (Made In India – Make In India) என்றார். இரண்டிற்கும் என்ன வேறுபாடு என்பது மோடிக்கே வெளிச்சம்!

செங்கோட்டை மதில் மேல் நின்று கொண்டு இந்தியாவை ஏலம் கூறினார். உலக முதலாளிகளே உங்கள் உற்பத்தி அனைத்தையும் இந்தியாவில் செய்யுங்கள் - எங்கு வேண்டுமானாலும் கொண்டு போய் விற்றுக் கொள்ளுங்கள்’’ என்று கூவினார். இந்தியாவை ஏலம் போடும் இந்தக் கூச்சலில் மன்மோகன் சிங்கிற்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், ஒளிவுமறைவின்றி ஓங்கிக் குரலெடுத்து ஏலம் போட, மன்மோகனுக்குக் கொஞ்சம் கூச்சமிருந்தது. இதே ஏலத்தை நளினமாக - நாசுக்காக அவர் போட்டார். முரட்டுத்தனத்திற்கு முக்காடு தேவையில்லை என்ற எதேச்சாதிகார மனம் மோடிக்கு இருப்பதால், ஒளிவு மறைவின்றி ஓங்கிக் கூவினார்.

இந்திய சுதேசியமும், இந்துத்துவ சுதேசியமும் உலகமயத்தின் பங்களிகளே!

உலக நாடுகளுக்குத் தேவை யானவற்றையெல்லாம் இந்தியாவில் செய்திட அனுமதித்தால், அதன் எதிர் விளைவுகள் என்னவாக இருக்கும்?
இந்தியாவின் நீர் வளம், நில வளம் அனைத்தும் பாழாகும்; உலோகக் கழிவுகளும் இரசாயனக் கழிவுகளும் குவிந்து செயற்கை இமயமலைகள் உருவாகும். சுற்றுச் சூழல் பாழ்பட்டு மனிதர்கள் வாழத் தகுதியில்லாத மண்ணாக இந்தியா மாறும். அமெரிக்காவின் டெட்ராய்டு நகரம் உலக நாடுகளுக்கான கார்களை உற்பத்தி செய்தது. இப்போது, அந்த டெட்ராய்டு நகராட்சி, வாழத் தகுதியில்லாத மண்ணாகிவிட்டது; பெரும்பாலான மக்கள் வெளியேறி விட்டனர். நகராட்சியாக இருந்த டெட்ராய்டு, ஊராட்சி அளவிற் கான மக்களைக் கொண்டதாக சுருங்கிவிட்டது.

இவ்வாறு பல நகரங்கள், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வாழத் தகுதியற்றவையாக மாறி விட்டதால், அந்நாட்டு முதலாளிகள் வெளி நாடுகளில் உற்பத்தி செய்யப் புறப்பட்டனர். அவர்களை அழைக்கிறார் மோடி.

வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு நிரம்புவதற்கேற்ற வகையில் தொழிலாளர் சட்டங்களில் உள்ள தொழிலாளர் உரிமைகளை வெட்டிக் குறைக்கவும் மோடி திட்டமிட்டுள்ளார். ஏற்கெனவே மன்மோகன் சிங் அரசு - சிறப்புப் பொருளியல் மண்டலங்களில் தொழிற் சங்க உரிமைகள் இல்லாமல் செய்து வைத்துள்ளது.

ஒரு நாட்டின் தொழில் உற்பத்தி எந்த அளவில் இருக்க வேண்டும்? அடிப்படையில் அந்நாட்டின் தேவையை நிறைவு செய்வதாகவும் தேவைப்பட்ட அளவுக்கு வெளிநாட்டுப் பணம் ஈட்டுவதற்குரிய ஏற்றுமதி அளவிலும் மட்டுமே ஒரு நாட்டின் பொருளுற்பத்தி இருக்க வேண்டும். இந்த அளவைத் தாண்டினால் அந்த நாட்டின் பொருளியல் சீரழியும்; வளம் அழியும்.

வல்லரசு நாடுகளும் வலிமையான முதலாளிய நாடுகளும் இந்தியாவை முற்றுகையிட்டு, வரம்பின்றித் தொழில் தொடங்கினால் உள்நாட்டில் உள்ள சிறிய, நடுத்தர, தொழில் முனைவோர்க்கு சுடுகாட்டில்தான் இடம் இருக்கும்!

இந்திய அரசுத்துறையையும் விட்டு வைக்கமாட்டோம்; அவற்றை வெளிநாட்டார் வசம் ஒப்படைத்தே தீருவோம்’’ என்று உறுதி பூண்டுள்ளனர் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள். இந்தியத் தொடர்வண்டித்துறையிலும் இந்தியப் பாதுகாப்புத் துறையிலும் 100 விழுக்காடு வெளிநாட்டு மூலதனத்தை அனுமதிக்க ஆயத்தமானது பா.ச.க. ஆட்சி. வலுவாக எதிர்ப்புக் கிளம்பியதால் இப்போதைக்கு இவ்விரு துறையிலும் 49 விழுக்காடு மட்டும் வெளிநாட்டு முதலாளிகளை முதலீடு செய்ய அனுமதிப்பது என முடிவு செய்துள்ளது மோடி ஆட்சி. பாதுகாப்புத் துறையிலும் வெளியார்க்குப் பந்தி வைக்கிறது மோடி அரசு! என்னே பா.ச.க. வினரின் தேசபக்தி’!

வெளிநாட்டு முதலாளிகளுக்கு நன்றி கடன்பட்டுள்ளார் நரேந்திர மோடி!
செங்கோட்டைக் கொத்தளத்தில் நின்றுகொண்டு, திட்டக் குழுவைக் கலைக்கப் போகிறேன் என்று அறிவித்தார். இந்தியப் பெருமுதலாளிகளும், பன்னாட்டு முதலாளிகளும் பரவசமடைந்தனர். நம் வேட்டைக்குக் குறுக்கே, சிறுதுரும்பும் கிடக்காது இனி என்று நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டனர்.

திட்டக்குழுவைக் கலைத்து விட்டு மாநிலங்களுடன் இணைந்து கூட்டுறவுக் கூட்டாட்சி நடத்தப் போவதாக அண்டப்புளுகு ஆகாசப் புளுகு புளுகினார் மோடி. ஏற்கெனவே அமைச்சரவைக் குழுக்களைக் கலைத்தார். அதனால் மாநிலங்களுக்கு என்ன கிடைத்தது? எதுவுமில்லை. இனிமேல் அமைச்சரவைக் குழுக்களின் ஆய்வோ, அனுமதியோ தேவையில்லை; தலைமை அமைச்சர் அலுவலகம் (PMO) நேரடியாகத் தொழில் உரிமங்கள் வழங்கும். ஒற்றைச் சாளர முறையில் உடனுக்குடன் உரிமங்கள் கிடைக்கும்; தொழில் தொடங்க உரிமம் கேட்டு இணைய தளங்களின் வழியே விண்ணப்பித்தால் போதும். இந்தக் கையில் விண்ணப்பம், அந்தக் கையில் உரிமம் என்றார் மோடி!

சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் தடையில்லாச் சான்றிதழ் தேவையில்லை. அதையெல்லாம் மோடி அலுவலகம் பார்த்துக் கொள்ளும். இதன் பெயர் அதிகாரப் பரவலா? அதிகாரக் குவியலா? இந்த மோடிதான், மாநிலங்களோடு கூட்டுறவு முறையில் கூட்டாட்சி நடத்தப்போகிறாராம்!

இந்துத்துவா வெறிபிடித்த நரேந்திர மோடி - அமீத்சா குழுவிடம் எல்லா அதிகாரங்களும் குவியட்டும்; இசுலாமியச் சிறுபான்மையினர், எக்காலத்திலும் எதிரியாய் உள்ள தமிழர்கள், சம்மு-காசுமீர் மக்கள், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தோர் ஆகியோரை ஒடுக்கி ஒழுங்குபடுத்தட்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். திட்டம். ஆனால், இந்த ஒற்றை நபர் அதிகாரக்குவியல் வேறு விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது.

அத்வானியையும், முரளிமனோகர் ஜோசியையும் உயர் அதிகாரத்தளத்திலிருந்து உருட்டி விட்டார் மோடி. பா.ச.க.வின் ஆட்சிக்குழு, தேர்தல் குழு ஆகிய வற்றிலிருந்து அவர்களை நீக்கி விட்டார். அந்தரங்கம் பேசிக் கொள்ளும் குழுவில் ராஜ்நாத் சிங் இன்னும் இருக்கிறாரா என்பதும் கேள்விக்குறியாகிவிட்டது. உ.பி. சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட ராஜ்நாத் சிங் மகனுக்கு வாய்ப்புத் தராமல் ஒரு முதலாளிக்கு வாய்ப்புத் தந்துள்ளார் மோடி! அங்கேயும் முறுகல்!

அண்மையில் பீகார், கர்நாடகம், ம.பி., பஞ்சாப் மாநிலங்களில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 10 இடங்களில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றன. பீகாரில் லாலு - நிதீஷ் கூட்டணி 10க்கு 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இரு தொகுதிகளில் முறையே 700, - 400 வாக்குகள் குறைவாகப் பெற்று, இக்கூட்டணி மயிரிழையில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

எனவேதான் நாம் சொல்கிறோம், நரேந்திர மோடி இட்லராக முடியாது. இந்தியா செர்மனி அன்று. பா.ச.க. நாஜிக்கட்சி அன்று.

இன்னும் ஓர் ஆண்டில், பா.ச.க.வின் மேல் மட்டத்தில் குழுச் சண்டை வெடிக்க வாய்ப்புண்டு. ஆர்.எஸ்.எஸ் - நரேந்திர மோடி குழுவின் ஆரிய எதேச்சாதி காரத்தை, - சமற்கிருத - இந்தித் திணிப்பை தமிழினப்பகை அரசியலை தமிழர்கள் முறியடிக்க நல்வாய்ப்புகள் உள்ளன என்பதை எடுத்துக்காட்டவே இவ்வளவையும் சொல்கிறோம்.

ஆனால், தமிழக அரசியல் எப்படி இருக்கிறது? ஆரிய - எதேச் சாதிகார ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. அரசியல் அணியில் சேர அனுமதி கிடைக்காதா என்று காத்துக் கிடக்கிறார் கருணாநிதி. நரேந்திர மோடியுடன் நல்லுறவுக்காக வலிந்து வலிந்து பாராட்டு அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார் செயலலிதா! ஏற்கெனவே, விசயகாந்து, மருத்துவர் இராமதாசு, வைகோ ஆகியோர் ஆர்.எஸ்.எஸ். பா.ச.க. கூட்டணியில் இருக்கின்றனர்.

ஆர்.எஸ்.எஸ். என்பது ஆரியப்படை! பா.ச.க. என்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவு! தமிழினத்தின் வரலாற்றுப் பகை ஆரியம்! தமிழ்நாட்டைப் பன்னாட்டு நிறுவனங்களின் முழு வேட்டைக் காடாக மாற்றும். நரேந்திர மோடியின் பொருளியல் கொள்கை! கொஞ்ச நஞ்சம் இருக்கும் மாநில உரிமைகளையும் பறித்துக் குவித்துக் கொள்வதுதான் நரேந்திர மோடியின் திட்டம்!

பதவிப் போட்டியால் ஆரிய முகாமுக்குள்ளே குத்து வெட்டு நடக்கப்போகிறது. பல்வேறு மாநிலங்களில் பா.ச.க. வீழ்த்தப்படும்!
எனவே, ஆர்.எஸ்.எஸ். - நரேந்திர மோடி ஆரிய ஆதிக்க - இந்துத்துவா அரசியலை எதிர்த்துத் தமிழ்நாட்டில் நம்பிக்கையோடு போராடலாம். தமிழ்த் தேசிய மாற்று அரசியலை வைத்துப் போராடினால் மட்டுமே பயன் உண்டு. வெறும் நரேந்திர மோடி எதிர்ப்பு மறுபடியும், காங்கிரசுக்கோ அல்லது தமிழகக் கங்காணிக் கட்சிகளுக்கோதான் வாய்ப்புகளை வழங்கும்!

ஏனெனில் இந்துத்துவா என்பது வெறும் மதவாதம் மட்டுமல்ல. ஆரிய இனவாதமும் ஆகும்.
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் - நரேந்திர மோடி ஆரிய எதேச்சாதிகார அரசியலின் ஒரே மாற்று, தமிழ்த் தேசியம் மட்டுமே!

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்



பேச: 7667077075, 9443918095 

முகநூல் : www.fb.com/tamizhdesiyam 

ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.