ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

இன்றையத் தேவை திராவிடமா தமிழ்த்தேசியமா? விவாத அரங்கு!

இன்றையத் தேவை திராவிடமா தமிழ்த்தேசியமா?  சென்னையில் நடைபெற்ற விவாத அரங்கு! 

 தமிழர் தொழில் வர்த்தகப் பெருமன்றம்(CTASIS), நாம், தமிழ் மையம் ஆகிய அமைப்புகளின் சார்பில், மாசி 10 (பிப்ரவரி 13) முதல், மாசி 20 (பிப்ரவரி 23) வரை, சங்கம்4 சொற்பொழிவு நிகழ்வுகள், சென்னையில் நடைபெற்று வருகின்றது. 

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் - துர்காபாய் தேஷ்முக் சாலையிலுள்ள திருவாடுதுறை டி.என். ராசரத்தினம் அரங்கு - முத்தமிழ் மன்றத்தில் பத்து நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வில், பல்வேறு தலைப்புகளில் அறிஞர்களும், கருத்துரையாளர்களும் உரையாற்றி வருகின்றனர். 

பிப்ரவரி 16 - திங்கள் அன்று மாலை இந்நிகழ்வில், இரண்டாம் அமர்வில், “இன்றையத் தேவை திராவிடமா? தமிழ்த்தேசியமா?” என்ற தலைப்பில் விவாத அரங்கம் நடைபெற்றது. “தமிழ்த்தேசியமே!” என்ற தலைப்பில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்களும், திராவிடமே!” என்ற தலைப்பில், திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும் வாதங்களை முன்வைத்து உரையாடினர். அருட்தந்தை ஜெகத் கஸ்பர் நிகழ்வை ஒருங்கிணைத்தார். 

நிகழ்வின் நிறைவில், திராவிட உணர்வாளர்கள் சிலர் “பெரியார் வாழ்க!” - “போலித் தமிழ்த்தேசியம் ஒழிக!” என்றெல்லாம் முழக்கங்கள் எழுப்பினர். தலைவர்கள் அவர்களை அமைதிப்படுத்தினர். அவர்கள் எழுப்பிய “பெரியார் வாழ்க!” என்ற முழக்கத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. தலைவர் தோழர் பெ.மணியரசன் குறிப்பிடுவதைப் போல, பெரியார் மீதான பகுத்தறிவு பக்தி மார்க்கத்தின் வெளிப்பாடாக அம்முழக்கம் வெளிப்பட்டது. எனினும், “போலித் தமிழ்த் தேசியம் ஒழிக!” என்று, அவர்கள் முழக்கம் எழுப்பியதைப் பார்க்கும் போது, உண்மையான தமிழ்த்தேசியம் என்ற ஒன்று இருப்பதை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதும் வெளிப்படுகிறது. அந்நிகழ்வில், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் முன் வைத்த வாதங்களையும், தோழர் பெ.மணியரசன் முன்வைத்த வாதங்களையும் கொண்ட முழமையான ஒலிப்பதிவு இது! 

கேளுங்கள்..! பரப்புங்கள்..!

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.