ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

சமஸின் நடுநிலை தவறிய கட்டுரை..! பெ. மணியரசன் எதிர்வினை!


சமஸின் நடுநிலை தவறிய கட்டுரை..! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் எதிர்வினை!

“தி இந்து” தமிழ் நாளிதழில் (21.10.2016) திரு. சமஸ் எழுதியுள்ள “காவிரியில் நமக்கு உரிமை இருக்கிறது, சரி.. உரிமைகளைப் பேசும் தகுதி இருக்கிறதா?” என்ற கட்டுரையில், விவரப்பிழைகள் மலிந்துள்ளன; பன்னாட்டுச் சட்டங்கள், இந்திய நாட்டுச் சட்டங்கள் ஆகியவை கூறும் ஆற்று நீர் உரிமை நீதியை மறுக்கும் கருத்துகள் நிறைந்துள்ளன.

“நமக்கான தண்ணீரைத் தர வேண்டும் என்று பேசுகிறோம். அந்த வரலாற்றின் அடிப்படை என்ன? அந்த நியாயத்தின் அடிப்படை என்ன? ஆதிக்க நியாயம்! ஈராயிரம் வருஷங்களுக்கு முன்பே காவிரியில் நாம் கல்லணையைக் கட்டி விட்டோம். கன்னடர்களோ முக்கால் நூற்றாண்டுக்கு முன்பு முதல் அணையைக் கட்டினார்கள்” என்கிறார் சமஸ்.

சமகாலத் தமிழர்களை மட்டுமின்றி, தமிழர்களின் பாட்டன் கரிகால் சோழனையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார் கட்டுரையாளர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கரிகால் பெருவளத்தான் கட்டிய கல்லணை, ஒரு நீர்த்தேக்கம் அல்ல! அது ஒர் நீர் ஒழுங்கி (Regulator). ஒவ்வொரு வெள்ளப் பெருக்கின் போதும் வெவ்வேறு திசையை உருவாக்கிக் காவிரி ஓடியது. பழைய நீர்த் தடத்தில் உரிய தண்ணீர் வருவதில்லை. இப்பொழுதுள்ள கொள்ளிடம் பகுதியில் முழுமையாகக் காவிரி சென்று விடும் காலமும் உண்டு. அதை ஒழுங்குபடுத்த, கொள்ளிடம் தலைப்பில் ஒரு சுவரை எழுப்பினான் பேரரசன் கரிகாலன். பெருவெள்ளம் வரும்போது, மிகை நீர் அந்தச் சுவரின் மேல் மிதந்து கொள்ளிடத்தில் ஓடும். அளவாக தண்ணீர் வரும்போது மரபு வழிப்பட்ட பாதையில் காவிரி ஓடும். அந்த ஒரு சுவருக்கு அப்பால் கல்லணையில் கரிகாலன் வேறு அணை எதுவும் கட்டவில்லை.

இப்பொழுதுள்ள கல்லணையும் நீர் ஒழுங்கிதான். இது நீர்த்தேக்கமன்று. காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், புதாறு ஆகியவற்றின் தண்ணீரைப் பிரித்துவிடும் நீர் ஒழுங்கிதான் இது! இது பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேய அரசால் கட்டப்பட்டது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கரிகாலன் கல்லணையில் எழுப்பிய நீர் ஒழுங்கியால் கர்நாடகத்திற்கு என்ன இழப்பு? கர்நாடகத்துக்குப் போக வேண்டிய எந்தத் தண்ணீரைத் தடுத்தது கல்லணை?

கரிகாலன் கட்டிய கல்லணை வரலாற்றை “ஒரு வகையில் அது ஆதிக்க வரலாறு; ஆதிக்க நியாயம்” என்கிறார் சமஸ். அவரின் இந்தத் தருக்கம் உண்மை விவரங்களுக்குப் புறம்பானது.

“பாரம்பரிய நதிநீர் உரிமைச் சட்டங்களையெல்லாம் தாண்டி கொஞ்சம் நமக்குள் ஒரு கேள்வியைக் கேட்டுக் கொள்வோம். காலத்தே வளர்ச்சியில் பின் தங்கிய ஒரு மாநிலம் பின்னாளில் தன் வளர்ச்சியை நோக்கி அடுத்தடுத்த அடிகளை எடுத்து வைப்பதில் என்ன தவறு காண முடியும்? காலத்தே யார் முன்னேறியவர்களோ, அவர்களுக்கான முன்னுரிமை என்றும் தொடர வேண்டும் என்ற நியாயத்தைத் தமிழகம் போன்ற ஒரு சமூகநீதி மாநிலம் இன்னும் எவ்வளவு காலத்துக்குப் பேச முடியும்?” என்று சமஸ் கேட்கிறார்.

கர்நாடகம் வேளாண் நிலங்களைப் பெருக்கிக் கொள்ளத் தமிழ்நாடு என்றும் தடையாக இல்லை. 1924-இல் ஏற்பட்ட காவிரி ஒப்பந்தத்தில் கர்நாடகம் தனது பாசனப் பரப்பை ஒன்றரை இலட்சம் ஏக்கரிலிருந்து ஆறு இலட்சம் ஏக்கராகப் பெருக்கிக் கொள்ள உறுதியளிக்கப்பட்டது. காவிரித் தீர்ப்பாய இடைக்காலத் தீர்ப்புக் கர்நாடகம் பதினோரு இலட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்ய உரிமை அளித்தது. இறுதித் தீர்ப்பு 18 இலட்சம் ஏக்கர் சாகுபடி செய்து கொள்ள கர்நாடகத்திற்கு உரிமை அளித்தது. ஆனால் கர்நாடகம் அதை 21 இலட்சமாக அதிகரித்துக் கொண்டது.

1924ஆம் ஆண்டு ஒப்பந்தம் காவிரியில் கர்நாடகத்திற்கு 177 ஆ.மி.க. (டி.எம்.சி.) ஒதுக்கியது. காவிரித் தீர்ப்பாய இறுதித் தீர்ப்பு கர்நாடகத்திற்கு 270 ஆ.மி.க. (டி.எம்.சி.) ஒதுக்கியது.

1974 வரை தமிழ்நாடு 29 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் காவிரி நீர் கொண்டு சாகுபடி செய்தது. காவிரித் தீர்ப்பாயம் தனது இறுதித் தீர்ப்பில் 24,50,000 ஏக்கர் பரப்பில்தான் தமிழ்நாடு சாகுபடி செய்ய வேண்டும் என்று சுருக்கியது.

அன்றையத் தலைமை அமைச்சர் இந்திராகாந்தி அமைத்த காவிரி உண்மை அறியும் குழு நான்கு மாநிலங்களிலும் கள ஆய்வு செய்து 1972-இல் அளித்த அறிக்கையில், 1934லிருந்து 1970வரை கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு வந்த ஆண்டுச் சராசரி நீர் 372.8 ஆ.மி.க. என்றது. 1984ஆம் ஆண்டு மேட்டூர் அணையின் பொன் விழா கொண்டாடப்பட்ட போது, கர்நாடகத்திலிருந்து மேட்டூர் அணைக்கு 50 ஆண்டுகளில் வந்த தண்ணீரின் ஆண்டுச் சராசரி 363.4 ஆ.மி.க. என தமிழ்நாடு பொதுப்பணித்துறை மலரில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் தீர்ப்பாயம் தனது இறுதித் தீர்ப்பில் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீர் ஆண்டுக்கு 192 ஆ.மி.க. என்றது.

காவிரி நீரைப் பயன்படுத்திக் கொள்வதில் கர்நாடகம்தான் முன்னுரிமை பெறுகிறது. கூடுதல் நீர் பெற்று வருகிறது. கர்நாடகம் பெற்று வரும் கூடுதல் தண்ணீர் ஒதுக்கீட்டையும், கூடுதல் சாகுபடிப் பரப்பையும் எதிர்த்துத் தமிழ்நாட்டில் நாம் போராட்டம் நடத்தவில்லை. ஒரு சொட்டுத் தண்ணீர்கூடத் தமிழ்நாட்டிற்குத் தர முடியாது என்பதை கர்நாடகத்தின் அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்கள் தங்களின் பொது முழக்கமாக வைத்துக் கொண்டுள்ளன.

உச்ச நீதிமன்றம் ஆணையிட்ட சிறிதளவுத் தண்ணீரைக்கூடத் திறந்துவிட மறுக்கும் கர்நாடகத்தின் சட்டவிரோதச் செயல்களையும் தமிழர்களைத் தாக்கி – தமிழர் உடைமைகளை எரிக்கும் தமிழினப்பகை வெறியாட்டத்தையும் கர்நாடகத்தின் இந்த அட்டூழியங்களுக்குத் துணை போகும் இந்திய அரசின் இனப்பாகுபாட்டு அரசியலையும் எதிர்த்துத்தான் தமிழ்நாட்டில் போராடுகிறோம்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துங்கள் எனப் போராடுவது குற்றமா? இந்திய அரசே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முறியடிக்காதே என்று கேட்பதும் குற்றமா?

காலத்தே முன்னேறிய தமிழர்கள் தங்களின் முன்னுரிமை மட்டுமே தொடர வேண்டும் என்று போராடுவது சமூகநீதியா என்று கேட்கிறார் கட்டுரையாளர். கர்நாடகத்தின் எந்த சட்ட உரிமையை, அவர்களின் முன்னேற்றத்திற்கான எந்த முன்னுரிமையைத் தமிழ்நாடு எதிர்க்கிறது? வெளிப்படையாக சமஸ், “தமிழர்களே, 192 ஆ.மி.க. தண்ணீர் கேட்காதீர்கள்; காவிரியை நிரந்தரமாக மறந்து விடுங்கள்” என்று கூற விரும்புகிறாரா?

“சமூகநீதி” பற்றி தமிழ்நாட்டிடம் பேசும் சமஸ், இந்தியத்தேசிய நீதி – சர்வதேசிய நீதி - இந்துத்துவா நீதி பற்றியெல்லாம் கர்நாடகத்திற்கு எடுத்துக் கூறுவாரா?

சிந்து, சீரம், செனாப் ஆகிய மூன்று ஆறுகளைப் பாக்கித்தானுக்கு ஒதுக்கி, 1960-இல் இந்தியத் தலைமை அமைச்சர் நேருவும் பாக்கித்தான் அரசுத் தலைவர் அயூப்கானும் போட்ட ஒப்பந்தத்தை நீக்க வேண்டுமென்று, தலைமை அமைச்சர் நரேந்திர மோடி கூறவில்லை. இந்த ஒப்பந்தத்தில் கண்ட அளவுக்கும் அதிகமான தண்ணீர் பாக்கித்தான் போகிறது; அந்த மிகை நீரை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றுதான் கூறி வருகிறார்.

1966-இல் ஹெல்சிங்கியில் (Helsinki) உருவான பன்னாட்டு ஆற்று நீர்ப் பங்கீட்டு வழிகாட்டு நெறிகள்தான் இன்று உலகில் பின்பற்றப்படுகின்றன. காலம்காலமாக இயற்கையாக ஓடி பாய்ந்த பகுதிகளுக்கு – ஆற்றின் தலைப்பகுதியில் இருந்தாலும் கடைப்பகுதியில் இருந்தாலும் அந்த ஆற்றில் சம உரிமை உண்டு – இது தண்ணீர் மரபுரிமை (Riparian Right) என்கிறது ஹெல்சிங்கி விதி! அப்படித்தான் சூடானிலிருந்து எக்கிப்துக்கு ஓடுகிறது நைல்! ஏழு நாடுகளுக்கிடையே ஓடுகிறது டான்யூப்! இந்தியாவிலிருந்து வங்க தேசத்துக்கு ஓடுகிறது கங்கை!

இந்திய நாடாளுமன்றம் 1956-இல் இயற்றி, 2001வரை பல திருத்தங்கள் செய்யப்பட்ட மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்ச் சிக்கல் சட்டம் – 1956, இந்தியாவில் பல மாநிலங்களுக்கிடையில் ஓடும் ஆற்று நீரைப் பகிர்ந்து கொள்ளும் விதிகளை உருவாக்கி வைத்துள்ளது. அதன்படிப் பல தீர்ப்பாயங்கள் இந்தியாவில் ஏற்கெனவே அமைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.

இமாச்சலப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, இராசஸ்தான் இடையே ஓடும் ஆறுகளின் நீரைப் பகிர்ந்து கொள்ள பக்ராபியாஸ் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுத் தண்ணீர் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

குசராத், மகாராட்டிரம், மத்தியப்பிரதேசம் இடையே ஓடும் நர்மதைக்குத் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுத் தீர்வு காணப்பட்டுள்ளது. மகாராட்டிரம், கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் ஆகியவற்றுக்கிடையே ஓடும் கிருஷ்ணா ஆற்றுக்குத் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு அதன் தீர்ப்புப்படி, மேலாண்மை வாரியம் போன்ற அமைப்பு தண்ணீர் பிரித்து விடுகிறது.

அங்கெல்லாம் கடைபிடிக்கப்படும் ஆற்று நீர் மரபுரிமைத் தமிழ்நாட்டிற்கு மட்டும் பொருந்தாதா? இதுதான் இந்தியத்தேசியப் பார்வையா? இது காந்தியப் பார்வையா?

“நீரியல் வல்லுநர்” ஜனகராஜனைத் துணைக்கழைத்துக் கொள்கிறார் சமஸ். சென்னை வளர்ச்சி ஆய்வு நடுவத்தின் (MIDS) “அறிவுசீவி”யாகச் செயல்படும் ஜனகராஜனின் இருபதாண்டு கால நடவடிக்கைகளைக் கவனித்தவர்களுக்கு அவரது “மனோ தர்மம்“ பற்றி நன்கு தெரியும். தமிழர் விரோதச் செயல்களுக்குத்தான் அவரது மனோதர்மம் அவரைத் தூண்டும்.

காவிரி உரிமை மீட்புப் போராட்டம் தமிழ்நாட்டில் எழுச்சி பெறும் போதெல்லாம், அதைச் சீர்குலைக்கத் திட்டங்கள் தீட்டுபவர் அவர்.

தமிழ்நாட்டு – கர்நாடக அரசியல்வாதிகள் போட்டி போட்டு அரசியல் பண்ணுகிறார்கள்; இரு மாநில விவசாயிகளும் இணைந்து “காவிரிக்குடும்பம்” அமைத்து, அதில் பேசி இணக்கமான முடிவு காணலாம் என்று ஜனகராஜனும் இந்து என். இராமும் திட்டம் வழங்கினார்கள். தமிழ்நாட்டிலிருந்து மன்னார்குடி ரெங்கநாதனும் மற்றவர்களும் அதில் சேர்ந்தார்கள். கர்நாடகத்திலிருந்து விவசாயிகள் சங்கத் தலைவர் புட்டண்ணையாவும் மற்றவர்களும் அதில் சேர்ந்தார்கள். காவிரிக் குடும்பம் பல கூட்டம் நடத்தி, பெங்களூருக்கு 30 ஆ.மி.க. தண்ணீர் ஒதுக்கத் தீர்மானம் போட்டது. அத்தோடு சரி!

தமிழ்நாட்டுக்குரிய தண்ணீர் அளவு பற்றி முடிவு செய்யவே இல்லை. தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு 2007-இல் வந்தவுடன் அதன் நகலை முதலில் எரித்தவர் புட்டண்ணையாவும் அவரது சங்க விவசாயிகளும்தான்!

அதன்பிறகு, காவிரிக் குடும்பத்தைவிட்டு புட்டண்ணையா வெளியேறினார். காவிரி உரிமை மீட்டிட, தமிழ்நாட்டில் இனத்தற்காப்புணர்ச்சியுடன் தமிழர் ஒற்றுமை உருவாகாமல் தடுத்திடும் ஜனகராஜனின் தொலைநோக்குத் திட்டம் அத்துடன் தொலைந்தது!

தமிழ்நாட்டின் நீராதாரங்களைச் சீரமைப்பது, தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் பயிர்களை சாகுபடி செய்வது, தண்ணீர் சிக்கனம் போன்றவை தமிழ்நாட்டிற்கு மிகமிகத் தேவை. ஆனால், இவை ஒரு போதும் காவிரி ஆற்று நீருக்கு மாற்றாக அமையா!

சட்டப்படியான காவிரி நீர் உரிமையைப் பலி கொடுத்துதான் மேற்படி சீரமைப்பு மற்றும் சிக்கன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற நிபந்தனை எதுவும் இருக்கிறதா?

ஜனகராஜனும் சமசும் கூற வருவது, நீராதாரச் சீரமைப்பு – நீர்ச்சிக்கனம் போன்றவற்றில் முழுக்கவனம் செலுத்தி – காவிரி நீர் உரிமையை நிரந்தரமாகக் கைவிட வேண்டும் என்பதுதான்!

குடியிருப்புகளில் குழாயில் தண்ணீர் வராவிட்டால் மக்கள் போராடுகிறார்கள். நீங்கள் சிக்கனமாகத் தண்ணீரைப் பயன்படுத்தவில்லை, இனிமேல் உங்களுக்குத் தண்ணீர் தர மாட்டோம் என்று உள்ளாட்சி நிர்வாகம் கூற முடியுமா? அம்மக்கள் குடிநீர் கேட்டு முஷ்டி முறுக்கிப் போராடினால், அது குற்றமா?
 
காவிரி, கொள்ளிடம், பாலாறு போன்றவற்றில் புதர் மண்டத் தொடங்கியது எப்போது? கர்நாடகமும் ஆந்திரப்பிரதேசமும் தமிழ்நாட்டுக்குரியத் தண்ணீரைத் தடுத்து, அந்த ஆறுகள் ஆண்டில் பெரும்பாலான காலத்தில் தண்ணீரின்று கிடக்கத் தொடங்கிய பிறகுதான் புதர்கள் மண்டின.

“எனக்குத் தனிப்பட்ட வகையில் ஒரு கருத்து உண்டு” என்றுகூறி, மேலே சுட்டிக் காட்டப்பட்ட தமிழ்நாட்டு உரிமை மறுப்புக் கருத்துகளை சமஸ் கூறியுள்ளார். இது சமசின் தனிப்பட்ட கருத்து மட்டுமன்று; ஏற்கெனவே பல ஆண்டுகளாக கர்நாடகம் இதே கருத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்திய அரசும் மறைமுகமாக வெளிப்படுத்தி வருகிறது. இப்பொழுது, சுப்பிரமணிய சாமியும் இதே கருத்தை பரப்பி வருகிறார். எனவே, சமஸ் தனிமைப்பட்டு இல்லை!

சமஸின் மேற்படிக் கட்டுரை முழுக்க முழுக்க நடுநிலை தவறிய பார்வை கொண்டது. தமிழ்நாட்டிற்குப் பேரிழப்பை உண்டாக்கக் கூடியது.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.