ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தொழிற்சங்கத் தலைவர் தோழர் டி. ஞானய்யா மறைவு. கி. வெங்கட்ராமன் இரங்கல்!

தொழிற்சங்கத் தலைவர் தோழர் டி. ஞானய்யா மறைவு. தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் இரங்கல்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும், அஞ்சல்துறை – தொலைத்தொடர்பு துறைத் தொழிற்சங்கத் தலைவருமான தோழர் டி. ஞானய்யா, உடல் நலக்குறைவு காரணமாக கோவையில் நேற்று (08.07.2017) காலமானார். அவருக்கு அகவை 97.

தொலைத்தொடர்புத் துறை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக பல்லாண்டுகளாக செயலாற்றிய தோழர் ஞானய்யா, அத்தொழிற்சங்கத்திலும் இந்திய அரசு ஊழியர்கள் உரிமைப் போராட்டத்திலும் பல நிலைகளில் வழிகாட்டியாக செயல்பட்டவர் ஆவார்.

தனது இறுதி ஆண்டுகளில் மார்க்சியத்தையும் பொதுவுடைமை இயக்கச் செயல்பாடுகளையும் திறனாய்வுப் பார்வையோடு, கட்டுரைகள் பல எழுதியவர். குறிப்பாக மொழி, தேசிய இன உரிமைகள், சாதிச் சிக்கல் குறித்த பார்வைகள் ஆகியவற்றில் பொதுவுடைமை இயக்கம் புதிய பார்வையில் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வந்தார். தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் தொடர் வாசகர் அவர்!

தோழர் டி. ஞானய்யா அவர்களின் மறைவுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பிலும், தமிழகத் தொழிற்சங்க முன்னணி சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இன்னணம்,
கி. வெங்கட்ராமன்
பொதுச்செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.