ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“31 கிணறுகளைக் காணோம்! வணிக ரகசியம் சொல்லும் ஓ.என்.ஜி.சி.” அம்பலப்படுத்தும் தமிழ்த்தேசியப் பேரியக்கம்!

“31 கிணறுகளைக் காணோம்!  வணிக ரகசியம் சொல்லும் ஓ.என்.ஜி.சி.” அம்பலப்படுத்தும் தமிழ்த்தேசியப் பேரியக்கம்!


காவிரிப்படுகையில் எண்ணெய் - எரிவளி எடுத்து வரும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம், பல உண்மைகளை மறைத்து வருவதை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் வழியே தமிழ்த்தேசியப் பேரியக்கம் அம்பலப்படுத்தியுள்ளது குறித்து “சூனியர் விகடன்” Junior Vikatan (14.12.2017) ஏட்டில், செய்திக்கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் கூறியுள்ளதாவது :

“காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எண்ணெய்க் கிணறுகளில், கைவிடப்பட்ட 31 கிணறுகள் குறித்து பதில் அளிக்க மறுத்துள்ள ஓ.என்.ஜி.சி., “அது வணிக ரகசியம்” என்று கூறியுள்ளது. மர்மமான இந்தப் பதில் தங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக மக்கள் கூறுகின்றனர்.

டெல்டா மாவட்டங்களில், மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான கிணறுகளைத் தோண்டி கச்சா எண்ணெயும், இயற்கை எரிவாயுவும் எடுத்து வருகிறது. அதன் காரணமாக, தங்கள் பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனக் கழிவுகளால் விவசாயம் பாழ்படுவதாகவும் மக்கள் குமுறுகிறார்கள். இந்தக் குழாய்களில் அடிக்கடி ஏற்படும் வெடிப்புகளால், கச்சா எண்ணெய் வெடிப்புகளால், கச்சா எண்ணெய் பாய்ந்து விளைநிலங்கள் மலடாகும் அவலமும் உள்ளது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் மறுத்து வருகிறார்கள். “எங்கள் செயல்பாடுகளால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. எந்த இரகசியமும் இல்லாமல். வெளிப்படைத்தன்மையோடு செயல்படுகிறோம்” என்று சொல்கிறார்கள். டெல்லியில் உள்ள ஓ.என்.ஜி.சி. தலைமை அலுவலகத்துக்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சில கேள்விகள் அனுபபினார், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் அருணபாரதி. அவற்றுக்கு ஓ.என்.ஜி.சி. அளித்துள்ள பதில்கள், சர்ச்சையைக் கிளப்பக்கூடியதாக உள்ளன.

இதுகுறித்து அருணபாரதியிடம் பேசினோம். “தமிழ்நாட்டில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எத்தனைக் கிணறுகளை அமைத்துள்ளது, அவற்றில் எத்தனை செயல்படுகின்றன, எத்தனைக் கிணறுகள் கைவிடப்பட்டுள்ளன என்ற விவரங்களைக் கேட்டிருந்தேன்.

அதற்கு “மொத்தக் கிணறுகள் 707. அவற்றில் 299 கிணறுகள் செயல்பாட்டில் உள்ளன. 377 கிணறுகள் கைவிடப்பட்டவை” என்று ஓ.என்.ஜி.சி. பதில் அளித்துள்ளது. 707 கிணறுகளில் 31 கிணறுகள் குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. அதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை.

“கச்சா எண்ணெயும் இயற்க எரிவாயுவும் எடுக்க, என்னென்ன வேதிப்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன” என்று கேட்டிருந்தேன். “பென்டோனைட் மற்றும் நன்னீர் பயன்படுத்தப்படுகின்றன” என்று பதில் தந்தார்கள். இதற்காக அதிகளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது என்பது உறுதியாகிறது.

கதிராமங்கலம், நெடுவாசல் பகுதிகளில் ஓ.என்.ஜி.சி.யின் செயல்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தபோது, “எங்களது பணிகளுக்கு நிலத்தடி நீர் தேவையில்லை” என அதிகாரிகள் தெரிவித்தனர். ஓ.என்.ஜி.சி. கிணறுகள் செயல்படும் குத்தாலம், நரிமணம், கமலாபுரம் வெள்ளக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டதற்குத் தாங்கள் காரணமல்ல என்று சொல்லி வந்தார்கள். “அது உண்மையல்ல” என்பது அவர்களின் பதில் மூலமாகவே இப்போது உறுதியாகிவிட்டது.

“கைவிடப்பட்ட 377 கிணறுகள் எங்கெங்கு அமைந்துள்ளன” என்று கேட்டதற்கு, “அது வணிக இரகசியம்” என்று பதில் தந்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள ஓ.என்.ஜி.சி. கிணறுகள் வேலையிடப்பட்டு, பெயர் பலகையுடன் தான் அமைந்துள்ளன. பிறகு ஏன் ரகசியம் என அதை மூடி மறைக்கிறார்கள் என்று தெரியவில்லை. “தமிழ்நாட்டில் ஓ.என்.ஜி.சி. கிணறுகளின் கழிவுகள் எங்கு கொட்டப்படுகின்றன” என்று கேட்டிருந்தேன். அதற்கு, “கமலாபுரம், நரிமணம் ஆகிய இரண்டு இடங்களில் உள்ள கிணறுகளில் கொட்டப்படுகின்றன” என்று பதில் தந்துள்ளனர். அதைப் பார்த்து அதிர்ந்துபோனேன்.

299 கிணறுகளின் கழிவுகளும் இந்த இரண்டே இடங்களில் பூமிக்குள் செலுத்தப்பட்டால், மிகவும் மோசமான விளைவுகள் ஏற்படும். “கைவிடப்பட்ட கிணறுகள் அமைந்துள்ள நிலங்களைப் புதுப்பிக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்ற கேள்விக்கு, “நிலத்தைப் புதுப்பித்து உரிமையாளர்களிடம் வழங்கிவிடுவோம்” எனப் பதில் தந்துள்ளனர்.

நரிமணத்தில் புதிய கிணறுகள் அமைப்பதற்கான கருத்துக்கேட்புக் கூட்டம் 2014இல் நாகை மாவட்டத்தில் நடந்தது. அப்போது, கைவிடப்பட்ட கிணறுகள் அமைந்துள்ள நிலங்களின் விவசாயிகள், தங்களது நிலத்தைப் புதுப்பித்துத் தருமாறு கோரினர். அதற்குப் பதில் அளித்த ஓ.என்.ஜி.சி. பொதுமேலாளர், “இந்த நிலங்களைப் புதுப்பிக்க, மத்திய அரசு வகுத்துள்ள நடைமுறைகளை மூன்று ஆண்டுகளாகக் கடைபிடித்து வருகிறோம். நாகை மாவட்டத்தில் எட்டு கிணறுகளின் நிலங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன, மீதமுள்ள நிலங்கள் விரைவில் புதுப்பிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு கச்சா எண்ணெயும் இயற்கை எரிவாயுவும் எடுத்துவரும் ஓ.என்.ஜி.சி., கைவிடப்பட்ட நிலங்களைப் புதுப்பிக்க 2011-ஆம் ஆண்டுதான் நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது. இதுவும்கூட முழுமை பெறவில்லை. காவிரிப்படுகையில் பல இடங்களில் கைவிடப்பட்ட கிணறுகள் இருக்கும் நிலங்கள் இன்றுவரை புதுப்பிக்கப்படாமல் உள்ளன. ஓ.என்.ஜி.சி.யின் செயல்பாடுகளால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்பது இவர்களது பதில்கள் மூலமாகவே உறுதியாகிறது” என்கிறார் அருணபாரதி.

இவ்வாறு அச்செய்திக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.