ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்த் தேசியமும் தமிழகப் பிறமொழியினரும் – தோழர் பெ. மணியரசன் கட்டுரை

தமிழ்த் தேசியமும் தமிழகப் பிறமொழியினரும்
தோழர் பெ. மணியரசன் கட்டுரை

புதிதாக ஒரு சமூகக் கருத்தியல் செல்வாக்குப்பெற்று வளரும் போது அதில் பல திரிபுகள் தோன்றுவது இயல்பே. அக்கருத்தியலை உண்மையாக முன்னெடுப்போர் இருப்பர்; உற்சாகத் திற்காக முன்னெடுபோர் இருப்பர்; புதிய புகலிடமாகக் கருதுவோர் இருப்பர்; போர்வையாகப் பயன்படுத்துவோர் இருப்பர்; தூய்மைவாதம் பேசித் துருவமுனைப்புக் குறுங்குழு ஆவோர் இருப்பர்; இப்படி அப்புதிய கருத்தியலை ஏற்போர் எத்தனையோ வகையினர்! செல்வாக்குப் பெற்றுவரும் “தமிழ்த் தேசியம்” என்ற கருத்தியலிலும் இவ்வாறு பல திரிபுகள் தோன்றியுள்ளன.

அத்திரிபுகளுள் ஒன்றிரண்டை மட்டும் பார்ப்போம்.

தமிழனை முதலமைச்சர் ஆக்குவதுதான் தமிழ்த்தேசியத்தின் இலட்சியம் என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மட்டுமின்றி, தேர்தல் பதவிகள் மீது நாட்டமில்லாத தமிழ்த் தேசிய நண்பர்களும் “ தமிழன் ஆள வேண்டும்” என்று கூறுகின்றனர். “தமிழன் ஆளவேண்டும் என்று அவர்கள் கூறுவது விடுதலை பெற்ற தமிழ்நாட்டில் தமிழன் ஆள வேண்டும் என்ற பொருளில் இல்லை.

இப்பொழுது தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தமிழர் வரவேண்டும் என்ற பொருளில் கூறுவதாகும். அதாவது தெலுங்கு, கன்னடம், உருது போன்ற பிற மொழிகளைத் தாய்மொழியாய்க் கொண்டிராத, தமிழைத் தாய்மொழியாய்க் கொண்ட தமிழர் முதலமைச்சராய் வரவேண்டும். அவ்வாறு தமிழர் முதலமைச்சராய் வந்தால் தமிழ் மொழி, தமிழின உரிமை தொடர்பான பல சிக்கல்களுக்கு இந்தியக் கட்டமைப்புக் குள்ளேயே தீர்வு கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.

தமிழ்நாட்டில், தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான உரிமைகள் பறி போனதற்கு முகாமையான காரணம் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத, பிறமொழி பேசுவோர் பலர் முதலமைச்சர்களாக இருந்ததுதான் என்பது அவர்களின் நிலைபாடு. தமிழக முதலமைச்சர்கள் வரிசையில் கருணாநிதி தெலுங்கர், செயலலிதா கன்னடப் பார்ப்பனர், எம்.ஜி.ஆர். மலையாளி, இராசாசி பார்ப்பனர், குமாரசாமி ராஜா தெலுங்கர், ஓமந்தூரர் இராமசாமி ரெட்டியார் தெலுங்கர் அண்ணா கூட அரைத் தெலுங்கர் என்கிறார்கள் அந்நண்பர்கள்.

குறிப்பாக, நாம் தமிழர் கட்சித் தலைவர் தோழர் சீமான் “தமிழ்நாட்டின் முதலமைச்சராய்த் தமிழன் தான் வரவேண்டும்” என்று தீவிரப் பரப்புரை செய்து வருகிறார். தோழர் சீமானே முதலமைச்சராகட்டும். அதற்கு அவர்க்கு எல்லா உரிமையும் இருக்கிறது. முதலமைச்சராகி அவர் என்ன செய்வார்?

“நாம் முதலமைச்சரானால், உத்தரவு போடும் இடத்தில் இருப்போம்; தேர்தலைப் புறக்கணித்தால் மனுக்கொடுத்துக் கோரிக்கை வைக்கும் இடத்தில்தான் இருப்போம்” என்கிறார் சீமான்.

முதலமைச்சரானதும் என்ன ஆணை போடுவார்? தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசின் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் இனிமேல் இந்தியோ அல்லது ஆங்கிலமோ அலுவல் மொழியாக இருக்காது. தமிழ்தான் அலுவல்மொழியாக இருக்கும் என்று ஆணை போடுவாரா, சீமான்? அதற்கு ஒரு முதலமைச்சருக்கும் சட்டப்பேரவைக்கும் அதிகாரம் இருக்கிறதா?

தோழர் சீமான் முதலமைச்சரானால், நெய்வேலி நிலக்கரிச் சுரங்கமும் அங்குள்ள அனல்மின் நிலையமும் தமிழ்நாட்டிற்கே சொந்தம், இந்தியஅரசு அதில் உரிமை கொண்டாட முடியாது என்று சட்டம் போடுவாரா?

தோழர் சீமான் முதலமைச்சரானால், நரிமணம், கோயில்களப்பாள், கமலாபுரம், அடியக்க மங்கலம், புவனகிரி பெட்ரோலியமும் குத்தாலம் சமையல் எரிவளியும் தமிழ்நாட்டிற்கே சொந்தம் என்றும், அவற்றின் மீது இந்திய அரசுக்கு இருந்த உரிமையை நீக்கிவிட்டேன் என்றும் ஆணையிடுவாரா?

கச்சத் தீவு மீட்கப்பட்டுவிட்டது, இனி அது இலங்கைக்குச் சொந்தமில்லை என்று சட்டமியற்ற முடியுமா?உயிர்க்கொல்லி அணு உலைகளைத் தமிழ்நாட்டில் மூடிவிட்டோம் என்று ஆணையிட முடியுமா?

தமிழக மக்களிடம் இனிமேல் இந்திய அரசு, உற்பத்திவரி, கம்பெனி வருமானவரி, தனிநபர் வருமானவரி, சுங்கவரி உள்ளிட்ட எந்த வரியும் விதிக்கக் கூடாது; வசூலிக்கக் கூடாது; அவற்றைத் தமிழக அரசே விதித்து வசூலித்துக் கொள்ளும். அதிலிருந்து சிறுபகுதி நிதியை இந்தியஅரசுக்குத் தமிழகம் தரும் என்று தோழர் சீமான் சட்டமியற்றுவாரா?

பன்னாட்டு முதலாளிகளின் கொள்ளை நிறுவனங்கள் வெளியேற்றப்படும் என்று ஆணையிடுவாரா?

காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, அமராவதி, பவானி, சிறுவாணி, நெய்யாற்றின் கரை இடதுகரைக் கால்வாய் முதலியவற்றிலிருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீரை அண்டை மாநிலங்கள் தடுக்கக் கூடாது அவற்றின் மீது அணைகட்டக் கூடாது, என்று சட்டமியற்றி செயல்படுத்த முடியுமா?

மேற்சொன்ன அனைத்திலும் இந்திய அரசுக்கு மட்டுமே அதிகாரமிருக்கிறது. தமிழக அரசுக்கு அதிகாரம் எதுவுமில்லையா? இருக்கிறது. சுடுகாடு பராமரிக்க, கால்நடைகளைக் கவனிக்க, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விளைநிலங்களை வாங்கிக் கொடுக்க, பள்ளிக்கூடங்கள் நடத்த, மருத்துவமனைகள் பராமரிக்க, வாழ்வுரிமைக்குப் போராடும் மக்களை அடித்துநொறுக்கி, துப்பாக்கியால் சுட்டுத்தள்ளி அடியாள் வேலை பார்க்கும் காவல்துறையைக் கட்டி வளர்க்கத் தமிழகஅரசுக்கு அதிகாரமிருக்கிறது.

இந்தத் தரத்தில் இன்னுஞ்சில அதிகாரங்கள் இருக்கின்றன.
இவையெல்லாம் கங்காணி அதிகாரங்கள். இறையாண்மையுள்ள அரசின் அதிகாரங்கள் அல்ல. தமிழக முதலமைச்சர் பதவி என்பது தலைமைக் கங்காணிப் பதவியே!

ஊழல் பேர்வழிகளை, ஒட்டுண்ணி அரசியல்வாதிகளை விட்டுவிடுங்கள். உண்மையான இனப்பற்றும் நேர்மையான பண்பும் கொண்ட ஒரு தமிழனோ அல்லது தமிழச்சியோ தமிழக முதலமைச்சர் ஆனாலும் மேலே சுட்டிக்காட்டிய அதிகாரங்கள் அவர்க்குக் கிடைக்கப் போவதில்லை. எனவே, உண்மையான சமூக முன்னேற்றத்தை உருவாக்க முடியாது. தமிழகம் இழந்து வரும் உரிமைகளை மீட்கமுடியாது. தமிழ் நாட்டில் எல்லா இடத்திலும் தமிழை அலுவல் மொழியாக ஆக்கிட முடியாது.

ஒட்டு மொத்தத் தமிழ்த் தேசத்தையும் தமிழ்மக்களையும் தில்லி ஏகாதிபத்தியம் அடிமைப்படுத்தி வைத்துள்ளது. தமிழகத்திற்குரிய எல்லா அதிகாரங்களையும் தன்னிடம் குவித்து வைத்துள்ளது இந்திய ஏகாதிபத்தியம். அதன் காலனியாகத்தான் தமிழ்நாடு வைக்கப்பட்டுள்ளது.

இந்த அடிமைத் தளையிலிருந்து தமிழ்நாட்டை விடுவிக்காமல் தமிழ்நாட்டைத் தமிழன் ஆள வேண்டும் என்று முழங்குவது, தமிழின உணர்ச்சியைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்வதாகும். அடிமைத்தனத்தை நீட்டிக்கும் உத்தியாகும். நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நோய் தீர்க்கும் மருந்து கொடுக்காமல் சத்து மாத்திரை தருகிறேன் என்றால் எப்படியோ அப்படித்தான், கங்காணி முதலமைச்சர் ஆக விரும்புவதும்!

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்
(திருக்குறள்)


கருணாநிதியின் இனத்துரோகத்தை, செயலலிதாவின் இந்திய தேசியப் பார்ப்பனியக் கொள்கை நிலைப்பாட்டை அடையாளம் காண்பதும், எதிர்ப்பதும் தேவை. அதே வேளை இவ்விருவரால் மட்டுமே எல்லாம் கெட்டுப் போய்விட்டன என்று கருதுவது, உள்ளதை உள்ளவாறு பார்த்தது ஆகாது.

எல்லாத் தீங்குகளுக்கும் தி.மு.க.வும். அ.தி.மு.க.வும் மட்டுமே காரணம் என்று கருதினால் இந்திய ஏகாதிபத்தியம் தமிழனப்பகையுடன் செயல்படுவதையும், தமிழ்நாட்டைக் காலனிய முறையில் ஒடுக்குவதையும், சுரண்டுவதையும் உரியவாறு கண்டுகொள்ளாமல் விட்டு விடுவோம். காங்கிரசு, பா.ச.க. கட்சிகளும் அவற்றுடன் கூட்டணி சேர்ந்தோ அல்லது இணக்கம் கொண்டோ செயல்படும் இதரக் கட்சிகளும் இந்தியதேசிய வெறியுடன் ஏகாதிபத்தியத் தன்மையுடன் செயல்பட்டுத் தமிழ்நாட்டை ஒடுக்குகின்றன என்ற உண்மையை அறிந்து கொள்ளாதவர்கள் ஆகிவிடுவோம்.

தெலுங்கர், மலையாளி போன்ற பிற இனத்தார் முதலமைச்சர்களாக இருந்ததால்தான் தமிழக உரிமைகள் பறிபோயின, தமிழும், தமிழர்களும் முன்னேற முடியவில்லை என்று ஒரு சாரார் கூறுகிறார்கள்.

தமிழக முதல்வர்களாக காமராசரும் பக்தவத்சலமும் பச்சைத் தமிழர்கள் என்பதில் மேற்படித் தமிழ்த் தேசியர்களுக்கு ஐயம் இருக்காது. காமராசர் எளிமையானவர்; இலஞ்ச இலாவண்யங்களில் ஈடுபடாதவர், பள்ளிக் கூடங்கள் அதிகமாகத் திறந்தவர். ஆனால் அவர் எந்த அளவு தமிழின உணர்வுடன் செயல்பட்டார்? தமிழின உரிமைகளைக் காப்பாற்றினார்?
மொழி வழி மாநில அமைப்பின் போது தமிழர்கள் அதிகம் வாழும் திருப்பதி, திருத்தணி, சித்தூர், புத்தூர், காளத்தி போன்ற வட தமிழ்மண் ஆந்திரப்பிரதேசத்துடன் சேர்க்கப்பட்டதை அவர் எதிர்க்கவில்லை. 

தமிழகத்தில் ம.பொ.சியும் மேற்படி வடக்கெல்லைப் பகுதியில் செயல் பட்ட காங்கிரசாரும், காமராசரின் தலைமையை மீறிப் போராடியதால்தான் திருத்தணியாவது கிடைத்தது. காமராசர் முதலமைச்சராக இருந்த போதுதான் தெற்கெல்லை மீட்பு தேவிகுளம், பீர்மேடு மீட்புப் போராட்டம் தீவரமடைந்தது. அப்பகுதியில் உள்ள காங்கிரசுத் தலைவர்களான நேசமணி பி. எஸ். மணி குஞ்சன் நாடார் போன்றவர்களின் தலைமையில் அப்போராட்டம் நடந்தது. அப்போராட்டத்திற்கு எதிராகத்தான் காமராசர் செயல்பட்டார்.

போராடிய காங்கிரசாரின் முயற்சியால் கன்னியாகுமரி மாவட்டம் மீட்கப்பட்டது. தேவிகுளம் பீர்மேடு பகுதிகளையும் மீட்க வேண்டும் என்று தெற்கெல்லை மீட்புக் காங்கிரசார், அப்போது முதல்வராயிருந்த காமராசரைச் சந்தித்து மனுக் கொடுத்த போது “ குளமாவது, மேடாவது, எல்லாம் இந்தியாவில்தான் இருக்கு போங்கள்” என்றார் காமராசர். 

தேவிகுளம் பீர்மேட்டை இழந்ததால் தான் இன்று முல்லைப் பெரியாரையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காமராசர் முதலமைச்சராக இருக்கும் போதுதான் சென்னை மாநிலம் என்றிருப்பதைத் “தமிழ்நாடு” என்று பெயர் மாற்றக்கோரி, காங்கிரசைச் சேர்ந்த பெரியவர் சங்கரலிங்கனார் சாகும் வரை பட்டினிப்போராட்டம் நடத்தினார். கண்டுகொள்ளவில்லை காமராசர். உண்ணாப் போராட்டத்தில் உயிர்நீத்தார் சங்கரலிங்கனார்.

இப்படிப்பட்ட சிக்கல்களுக்கெல்லாம் “ தமிழன் ஆள வேண்டும்” என்று கூறுவோர் என்ன விடை சொல்கிறார்கள்? காமராசர் தமிழர்தாம்! ஆனால் இந்திய ஏகாதியபத்தியத்தின் தமிழ்நாட்டுத் தளபதியாகச் செயல்பட்ட தமிழர்!

பக்தவத்சலம் முதல்வராக இருந்தபோதுதான் 1965-இல் இந்தி திணிக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் மாபெரும் தமிழ்த் தேசிய எழுச்சியாகக் கிளர்ந்தெழுந்தது.

பக்தவத்சலம் ஆட்சி, காக்கைக் குருவிகளைச் சுட்டுக்கொல்வதைப் போல் முந் நூறுக்கும் மேற்பட்ட மாணவர்களையும், மக்களையும் சுட்டுக்கொன்றது. அப்போது வல்லமைமிக்க அனைத்திந்தியக் காங்கிரசுத் தலைவராகச் செல்வாக்குடன் திகழ்ந்தார். காமராசர். நேரு காலமாகிவிட்டார். இந்திரா அனைத்திந்தியத் தலைவராக வளரவில்லை. அதனால் அப்போது காமராசரே அனைத்திந்தியப் பெருந்தலைவர்.

கீழப்பழூர் சின்னச்சாமி இந்தித் திணிப்பை எதிர்த்துத் தீக்குளித்து மாண்டபோது, “ வயிற்று வலிதாங்காமல், கடன் தொல்லையால், தற்கொலை செய்து கொண்டார் “ என்று எகத்தாளம் பேசினார் பக்தவத்சலம்.

காமராசரும் பக்தவத்சலமும் தமிழர்கள் தாமே! அவர்கள் ஆட்சியில் தமிழினத்திற்கு எதிராக மேற்கொண்ட பெருங் கேடுகள் நடந்தனவே, எப்படி? காமராசரும் பக்தவத்சலமும் தனிநபர்களல்லர்; அவர்கள் ஓர் அனைத்திந்திய ஆளுங் கட்சியின் தமிழகத் தலைவர்கள். அந்த அனைத்திந்தியக் கட்சி, இந்தியதேசிய வெறி கொண்ட ஏகாதிபத்தியக் கட்சி. 

அக்கட்சியின் எல்லைகளைத் தாண்டி இவர்களால் செயல்பட்டிருக்க முடியாது. அவ்வாறு எல்லைகளைத் தாண்டி செயல்படும் தமிழின உணர்வும் உரிமை வேட்கையும் கொள்கையும் இவர்களுக்கு இருந்திருந்தால் இவர்கள் காங்கிரசுக் கட்சியில் இருந்திருக்க மாட்டார்கள்.

தனிநாடு கேட்ட தி.மு.க. தடைச்சட்டம் வரப்போகிறது என்று தெரிந்தவுடன் முன் கூட்டியே விடுதலை இலட்சியத்திற்கு விடைகொடுத்தது. சட்ட மன்றத்தில் ஆட்சி அமைத்து அதன் வழித்த தனிநாடு அமைப்போம். என்றார் அண்ணா. 1967-இல் ஆட்சி அமைத்தது தி.மு.க. முதலமைச்சரானார் அண்ணா. தமிழின உணர்வாளர்கள் எதிர்பார்த்ததை அவரால் செய்ய முடியவில்லை. “ தம்பி நான் சூழ்நிலையின் கைதியாக இருக்கிறேன். முதலமைச்சர் பதவி என்பது முள் கிரீடமாக இருக்கிறது.

நாம் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டோம். ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன” என்று கூறி தமிழின உணர்வுத் தம்பிகளை அமைதிப்படுத்தினார் அண்ணா. “ இருக்கின்ற நிலைமையை ஏற்றுகொள், இதற்கு மேல் எதுவும் எதிர்பார்க்காதே” என்று சொல்லாமல் சொன்னார். குறைந்த காலத்தில் அவரும் காலமாகிவிட்டார்.

கருணாநிதி தெலுங்கர் என்று ஒரு சாரர் சொல்கின்றனர். அது பற்றி நமக்குத் தெரியாது அந்த ஆராய்ச்சி இப்போது எந்த விளைவையும் உண்டாக்கப் போவதில்லை. ஆனால் கருணாநிதிக்கு அடுத்தநிலைத் தலைவர்களாக இருந்த, ஐயத்திற்கு இட மில்லாத தமிழர்களான நெடுஞ்செழியன், அன்பழகன் போன்றவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள்? “நடமாடும் பல்கலைக் கழகம்” “நாவலர்” இரா. நெடுஞ்செழியன் மலையாளியான எம்.ஜி.ஆருக்கும், கன்னடப் பார்ப்பனரான செயலலிதாவுக்கும் துணை நின்று பதவித் தாகம் தணித்துக் கொண்டார். “இனமானப் பேராசிரியர்” அன்பழகன் கல்வியமைச்சராய் இருந்த காலத்தில்தான் மிக அதிகமாக ஆங்கில வழி மெட்ரிகுலேசன் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

ஈழத்தில் 2009-இல் இன அழிப்புப் போர் நடந்த போது, நடுவண் அரசில் பங்கு வகித்து அமைச்சர்களைக் கொண்டிருந்த பாட்டாளி மக்கள் கட்சி எப்படி நடந்து கொண்டது? அப்போதும் நடுவண் அமைச்சர் பதவியில் ஒட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களும் தமிழர்கள்தாம்!
தமிழினம், தமிழ்நாடு அடிமைப்படுத்தப்பட்டிருப்பது குறித்த புரிதலும் அடிமைத் தளையை அறுப்பதற்கான கொள்கையும் அதற்குரிய அமைப்பு வடிவமும் இல்லாத நிலையில் தமிழர்கள் அமைச்சர்களாய் இருப்பது மட்டுமே தமிழனத்தைக் காப்பாற்றாது.

தமிழினத்தில் பிறந்தவர்களில் பல தரத்தினர் உள்ளனர். இருக்கின்ற நிலைமையில் என்ன பெற முடியுமோ. அதைப் பெறுவோம் என்போர், கிடைக்கின்ற அதிகாரத்தைப் பெற இனத்தை அடமானம் வைப்போர், இனப்பகைவர்களுக்கு ஏவல் செய்து பதவி பெறுவோர், எதிரியிடம் எந்தப்பதவியும் பெறுவதிலை, இன விடுதலையே முதன்மை என்று செயல்படுவோர் எனப் பலதரப்பினர் தமிழர்களிடையே உள்ளனர்.

இந்த வேறுபாடுகளையெல்லாம் கவனியாமல் “தமிழன் முதலமைச்சராக வேண்டும்” என்று கூறுவோரில் முன்று வகையினர் இருக்கின்றனர். ஒருவகையினர், விவரமறியாதவர்கள் வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும் வெள்ளந்திகள்! இது குருட்டுத்தனம்! இன்னொரு வகையினர் விவரமறிந்த தன்னலக்காரர்கள். இது திருட்டுத்தனம். மூன்றாம் வகையினர், கடுமையான சிக்கல்களுக்கு எளிமையான தீர்வு கூறுவோர்; இதய நோய்க்கு இஞ்சிமரப்பா மருந்து கொடுப்போர். இவர்கள் குழப்பவாதிகள்.

இந்த மூன்றுவகையினரும் ஒரே தளத்தில்தான் செயல்படுகின்றனர். இவர்களால் தமிழின விடுதலை அரசியலுக்கு ஏற்படும் பின்னடைவும் குழப்பமும் ஒரே தன்மையில் தான் இருக்கும்.

இவர்கள், தமிழக மக்களுக்கிடையே பெரும் குழப்பத்தையும் பிளவையும் உண்டாக்கக் கூடிய இன்னொரு கருத்தை முன் வைக்கின்றனர். நாயக்கர் ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் குடியேறி தமிழ்நாட்டில் நானூறு ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தெலுங்கு, கன்னடம், பேசும் மக்கள் , நவாபுகள் ஆட்சிகாலத்தில் குடியேறிய உருது பேசும் இஸ்லாமிய மக்கள் ஆகியோரை அயலார் என்று கூறுகின்றனர்.

இவர்கள் தமிழகத்தில் வாழலாம்; ஆனால் ஆளக்கூடாது; முதலமைச்சர் ஆகக் கூடாது, அமைச்சர்கள் ஆகக் கூடாது என்கிறனர். இவர்களைத் தமிழ்த் தேசிய அமைப்புகளில் உறுப்பினர்களாச் சேர்க்கக் கூடாது, என்கின்றனர்.

தெலுங்கு, கன்னடம், உருது போன்ற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள், தமிழக ஆட்சியில் பங்கு பெறக் கூடாது, தமிழ்த் தேசிய அமைப்புகளில் உறுப்பினர் ஆகக் கூடாது எனில், அவர்கள் தமிழ்நாட்டின் குடிமக்களாக இருக்க முடியாது என்று கூறுவதாகும். தமிழகத்தில் வாழும் பிறமொழி ஏதிலிகள் என்ற நிலையில் இருக்கலாம் என்று பொருள்.

“இவர்கள் தமிழ்நாட்டில் வாழலாம் ஆனால் ஆளாக்கூடாது” என்று சொல்வதன் உண்மைப் பொருள் இதுவாகத்தான் இருக்கும். இவர்களுக்கு வாக்குரிமை மறுக்க வேண்டும் என்பதுதான் இதன் பொருள்.

நானூறு ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் குடிமக்களாக வாழ்ந்து வரும் இம்மக்களுக்கு வாக்குரிமையை மறுப்பது என்ன ஞாயம்? அது என்ன வகை சனநாயகம்? சிங்கள இனவறியர்கள் கூட தமிழர் களின் வாக்குரிமையை மறுக்கவில்லை; தங்கள் கட்சிகளில் தமிழர்கள் உறுப்பினராகச் சேரக்கூடாது என்று தடை விதிக்கவில்லை.

இந்துத்துவா கட்சியான பா.ச.க. கூட இஸ்லாமியர்களின் வாக்குரிமையை மறுக்கவில்லை. இஸ்லாமியர் களை உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொள்கிறது. சில பொறுப்புகளிலும் வைத்திருக்கிறது. நாம் தமிழின வெறியர்கள் அல்லர். தமிழின உரிமை மீட்பாளர்கள் என்ற புரிதல் வேண்டும்.

“வெளியாரை வெளியேற்றுவோம்” என்ற முழக்கத்தை வைத்துள்ளது தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி “வெளியார்” என்பதற்குப் பொருத்தமான ஒரு விளக்கமும் வரையறையும் வேண்டும். தேசிய இனங்களின், தேசங்களின் வரலாறு, அவற்றின் இருப்பு பற்றிய புரிதலும் உலக நடப்புகள் குறித்த அறிவும் கொண்டு “வெளியார்” பற்றி வரையறுப்பு செய்ய வேண்டும்.

மொழிவழி மாநிலம் அமைக்கப்பட்ட 1956 நவம்பர் 1-க்குப் பிறகு தமிழ் நாட்டில் குடியேறிய பிற மொழியாளர்- பிற மாநிலத்தவரைத்தான் “வெளியார்” என்று வரையறுக்கிறது த.தே.பொ.க.

நானூறு ஆண்டுகாலமாகத் தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டு வாழ்ந்து ஆந்திரம் மற்றும் கர்நாடகத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் தமிழகக் குடிமக்களாக நிலைத்துவிட்ட தெலுங்கு, கன்னட, உருது மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களை அயலார் என்று எந்த அடிப்படையில் வரையறுக்க முடியும்? உலகில் எங்காவது இதற்கு முன் எடுத்துக்காட்டு இருக்கிறதா? ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்டு இங்கு வாழும் ஆங்கிலோ இந்தியர்களைக் கூட அயலார் என்று கருத முடியாது.

தெலுங்கு, கன்னடம், ஆகியவற்றை வரலாற்று வழித் தாய்மொழியாகக் கொண்டுள்ள மக்கள் பலஇலட்சம் பேர் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள். சில பகுதிகளில் அடர்த்தியாக வாழ்கிறார்கள். அவர்களில் மிகப்பெரும்பாலோர் தங்களைச் சாதியாகக் கருதிக் கொள்கிறார்களே தவிர தமிழரல்லாத தனி இனமாகக் கருதிக்கொள்வதில்லை.

எல்லையோரங்களில் வாழும் தெலுங்கு கன்னடம், பேசுவோர் மொழிச் சிறுபான்மையினர் ஆவர் அவர்களும் தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் வாழும் தெலுங்கு, கன்னடம் பேசுவோரும் ஒரு தன்மையினர் அல்லர். எல்லையோரத்தில் வாழ்வோர் தேசிய இனச் சிறுபான்மையோர் உட்பகுதியில் ஆண்டுகளாக வாழ்வோர் தமிழ்த் தேச மக்கள்.

ஐதராபாத்தைச் சேர்ந்த சகிலி சுதாராணி என்பவர் தமது முனைவர் (பி.எச்டி) பட்ட ஆய்விற்குத் “தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்கள்” என்ற தலைப்பு எடுத்துள்ளார். தமது ஆய்விற்காகத் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, கள ஆய்வு மேற்கொண்டார். அவருடைய ஆய்வின் முடிவுகள் பற்றிய செய்தி 7.7.2012 “ தி இந்து” நாளேட்டில் வந்துள்ளது. அதில் ஒரு பகுதி வருமாறு:

“தெலுங்கு மக்கள் தங்களின் பண்பாடு, சடங்குகள் போன்றவற்றைப் பாதுகாத்துக் கொண்டுள்ளார்கள். ஆனால் அவர்களின் மொழி தேய்ந்து விட்டது. முதியவர்கள் மட்டுமே கொஞ்சம் தெலுங்கு பேசுகிறார்கள். அவர்களின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் தமிழில்தான் பேசுகிறார்கள்.தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயப்பாடமாக இருப்பதால், பல்வேறு மாவட்டங்களில் சிதறிக் குடியேறி வாழும் தெலுங்கர்களால் தங்கள் மொழியைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. 90 விழுக்காடுத் தெலுங்கர்கள் தங்கள் தாய்மொழியில் பேசவும் எழுதவும் முடியாதவர்களாக இருக்கிறார்கள். தெலுங்கில் பேசுவோரும் அதிகமாகத் தமிழ்ச் சொற்களைக் கலந்து பேசுகிறார்கள்!”


சுதாராணியின் களஆய்வு எதைக் காட்டுகிறது? நானூறு ஆண்டுகாலத் தமிழக வாழ்க்கை, தெலுங்கு பேசும் மக்களை மெல்ல மெல்ல தமிழின அடையாளங்களைத் ஏற்கச் செய்து விட்டது. தெலுங்கு அடையாளங்களைத் தேயச்செய்து விட்டது. இந்த வளர்ச்சிப்போக்கு மேலும் மேலும் இயல்பாக வளரத் தமிழ்த் தேசியம் துணை செய்ய வேண்டும்.

அதற்கு மாறாக “நீங்கள் தமிழர்கள் இல்லை, தமிழ்த் தேசிய இயக்கங்களில் நீங்கள் உறுப்பினராக முடியாது, தமிழ்நாட்டில் நீங்கள் முதலமைச்சராக முடியாது “ என்று கையில் தடி எடுத்தால், அம்மக்கள் தெலுங்கு அடையாளங்களைக் காப்பற்றுவதில் மீட்பதில் தீவிரம் காட்டுவர்கள். தமிழ்த் தேசியத்தைப் பகைக் கருத்தியலாகப் பார்ப்பார்கள்.

இந்தியத் தேசியமே தங்களைக் காக்கும் கவசம் என்று கருதுவார்கள். இந்தியத் தேசிய – பார்ப்பனியப் படை வரிசையில் முன்னணிப் பாத்திரம் வகிப்பார்கள். கன்னடம் பேசும் மக்களும் இதே நிலை எடுப்பார்கள். உருது பேசும் மக்கள் இஸ்லாமிய அடிப்படை வாத்ததில் தீவிரம் பெற்று, தமிழ் அடையாளங்களைப் புறக்கணிப்பார்கள்.

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் புலிகளுக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு உண்டாக்கிய பின்னடைவுகளை எண்ணிபார்க்க வேண்டும்.

இவ்வாறான அணுகு முறையைக் கைக்கொண்டால் தமிழ்த் தேசியம் தனக்குத் தானே பகைப் பாசறைகளை ஊருக்கு ஊர் உருவாக்கிக் கொள்ளும். பார்ப்பனியம் படமெடுத்தாடும்; பாரதமாதா பலிபீடம் ஊருக்கு ஊர் தயாராகும். தமிழ்த் தேசியம் தன்னைத் தானே வீழ்த்திக் கொள்ளும்.

வரலாற்றுப் போக்கில் தமிழகத்தில் குடியேறி பல நூறு ஆண்டுகளாகத் தமிழகத்தைத் தாயகமாகக் கொண்டு வாழும் பிறமொழி பேசும் மக்களைத் தமிழ்த் தேசிய சக்திகளாக இணைத்துக்கொள்ள வேண்டும் என்று நாம் கூறுவது வெறும் போர்உத்தி (Tactics) மட்டுமன்று. தேசிய இன உருவாக்கத்தின் வரலாற்றுப் போக்கும் அதுவே என்பதும் ஆகும்.

உலகில் தமிழினம் உள்பட எந்தத் தேசிய இனமும் ஒரே குருதி வழி உறவுடன் வளர்ந்தவை அல்ல. பல்வேறு பழங்குடிகள், வெவ்வேறு மரபினக் குழுக்கள் என்று சேர்ந்துதான் ஒரு தேசிய இனம் (Nationality) உருவாகிறது. அவற்றுள் பெரும்பான்மை மக்களையும் வலுவான் மொழியையும் கொண்ட இனக்குழு பிற சிறிய வலுக்குறைந்த பழங்குடிகளையும் இனக்குழுக்களையும் தன்னுள் உள்வாங்கி செரித்துக் கொண்டு வளர்கிறது. தனது அடையாளத்தை முதன்மைப்படுத்தி வளர்கிறது. இயல்பான வரலாற்று வளர்ச்சிப் போக்கில் இது நிகழ்கிறது.

இவ்வாறான வெவ்வேறு இனக்குழுக் கலப்பு ஏற்படும் போது, பெரும்பான்மை மக்களையும் வலுவான மொழியையும் கொண்ட இனக்குழு அடையாளங்களை சிறு பான்மை இனக்குழுக்கள் ஏற்பதைப் போலவே அந்த சிறு பான்மை இனக் குழுக்களின் சில அடையாளங்களையும் பழக்க வழக்கங்களையும் பெரும்பான்மை இனக்குழுவும் ஏற்றுக் கொள்கிறது நடக்கிறது.

தேசம், தேசிய இனச் சமுதாயம் என்பது பழங்குடிகள் (Tribes) போன்றதன்று; மரபினம் (Race) போன்றதன்று. பிற இனக்குழுக்களையும் இணைத்துக்கொண்ட புதிய சமூக மாகும். அதே வேளை அதற்கான மரபு வழிப்பட்ட முதன்மைக் கூறுகள் சில தேசிய இன்ங்களில் வலுவாக நீடிக்கிறது.

வேறு சில தேசிய இனங்களில் மூல மரபின வேர் மறைந்து போகிறது. தமிழ்த் தேசிய இனத்தில் மரபின மூலவேர் வலுவாக இருக்கிறது. எகிப்தியர்கள், யூதர்கள், சீனர்கள், போன்ற தேசிய இன்ங்களுக்கும் அவற்றின் மரபினவேர் தொடர்கிறது; வலுவாக இருக்கிறது. அதே வேளை அவை, அதே பழைய மரபின்ங்களல்ல இன்று வெவ்வேறு இனக்குழுக்களையும் இணைத்துக் கொண்டே அவை தேசிய இனச் சமூகமாக வளர்ந்துள்ளன.

இப்பொழுது நிலவும் இத்தாலிய தேசமும் இத்தாலிய தேசிய இனமும் ரோமனியர்கள், டியூட்டேனியர்கள், எட்ரூஸ்கனியர்கள், கிரேக்கர்கள், அரேபியர்கள் போன்ற மரபின்ங்களின் சேர்க்கைதான் என்பர் ஆய்வாளர்கள். காலியர்கள், ரோமானியர்கள், பிரிட்டானியர்கள், டியூட்டேனியர்கள் போன்றவர்களிடமிருந்து உருவானதுதான் பிரஞ்சு தேசம்- பிரஞ்சு தேசிய இனம் என்பர். இப்போதுள்ள ஆங்கிலேயர்; செர்மானியர் போன்றோரும் பல்வேறு மரபினங்கள் பழங்குடிகள் ஆகியவற்றிலிருந்து உருவானவர்களே! ஒரு தேசம் அல்லது தேசிய இனம் என்பது குருதி வழியே அமைவதை விட வரலாற்று வழியே அமைகிறது என்பதே உண்மை. இந்த வரலாற்றுண்மைக்கு மாறாக தூய குருதிவாதம் பேசுவது, வெறும் மனக்கணக்காக மட்டுமே இருக்கும்.

கலப்பிடமில்லாத தமிழ்ச்சாதிகள் என்று அறியப்பட்டவற்றுள் ஒரே சாதிக்குள் நல்ல கருப்பு நிறம் கொண்டவர்கள் இருக்கிறார்கள்; நல்ல சிவப்பு நிறம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். இந்த நிற வேறுபாடு எப்படி வந்தது? கூரிய மூக்குடையோர் இருக்கிறார்கள்; தட்டை மூக்குடையோர் இருக்கிறார்கள். இந்த எலும்பு அமைப்பு வேறுபாடு எங்கிருந்து வந்தது? இவையெல்லாம் இனக்குழுக் கலப்புகளால் ஏற்பட்டவையே!

தமிழ்க்குருதித் தூய்மைவாதம் பேசும் தோழர்கள், இவ்வினாக்களுக்கு “தங்கள் ஆய்வுப்படி” விடையளிக்க வேண்டும்.

“தமிழர்களா” என்று அறிய சாதி அடையாளத்தை அனைவரும் பகிரங்கப் படுத்தவேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள், ஒரு சாதிக்குள் இருக்கும் நிற வேறுபாட்டையும், மூக்கமைப்பு வேறுபாட்டையும், முக எலும்பு வேறுபாட்டையும் என்ன விளக்கம் கூறி ஞாயப்படுத்துவார்கள்? மாந்த இன ஆராய்ச்சியில் வெவ்வேறு இனங்களை அடையாளங்காண அடிப்படையாகக் கருதப்படும் உடற்கூறுகளில் தோல்நிறமும் மூக்கு அமைப்பும் முகாமையானவை!

தமிழரா என்று அறியச் சாதி கேட்கும் பழக்கம் தொற்றிக்கொண்டால், அத்தொற்றுநோய் வர்ண-சாதி என்ற மனுதருமக் கொள்ளை நோயில் கொண்டு போய் நம்மை சேர்க்கும். பார்ப்பனியம் மீண்டும் கோலோச்சும். பார்ப்பனரல்லாத அனைவரும் சூத்திரர்களாய், பஞ்சமர்களாய் உழல்வோம்!

மாந்த இனம் மனிதக் குரங்குகளாக, நியாண்டர்தால் மனிதர்களாக, கணக்குழுக்களாக, பழங்குடி களாக, மரபினங்களாக, தேசிய இன்ங்களாக எப்படி வளர்ந்து வந்ததோ அதே திசையில் அது வளர்ந்து செல்லட்டும். நாம் இப்போது தமிழ்த் தேசிய இனமாக இருக்கிறோம். தமிழ்த் தேசமும் நமது தேசிய மொழியும் நமது மக்களும் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம்.

உலகெங்கும் பெரும்பாலான தேசிய இன்ங்கள் தங்களது சொந்த தேசத்தை நிறுவிக் கொண்டு விட்டன. நாம் நமது தமிழ்த் தேசத்தை இறையாண்மையுள்ளதாக நிறுவுவோம். அதில் மக்கள் சமத்துவத்தைப் பேணுவோம்.

தமிழ்த்தேச விடுதலைப் புரட்சிக்கும் தமிழ்த் தேச மக்களிடையே சமத்துவம் பேணுவதற்கும் மக்களிடையே உணர்ச்சி ஊட்ட, எழுச்சி ஏற்படுத்த தமிழர்களின் உண்மையான வரலாற்றுப் பெருமிதங்களையும் அறக்கோட்பாடுகளையும் மக்களிடம் எடுத்தியம்புவோம். கடந்த காலச் சாதனைகளிலிருந்து வீரம் பெறுவோம்; கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் பெறுவோம்.

தெலுங்கைத் தாய்மொழியாய்க் கொண்ட தமிழறிஞர்கள், தமிழ்ப்படைப்பாளிகள் தங்கள் அறிவாற்றலால் தமிழ்வளர்த்ததை- தமிழர் பெருமையை நிலை நாட்டியதை நினைவு கூர்வோம்.

உலகம் பன்மைத் தன்மை உடையது; உள்ளம் பன்மைத் தன்மையுடையது. அவை போலவே, தமிழ்த் தேசமும் பன்மைத் தன்மையுடையது. இந்த பன்மைத் தன்மையை தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தார்கள். அதனால், தமிழர் தாயக நிலப்பரப்பை உள்ளதை உள்ளவாறு அறிந்து ஐந்து நிலங்களாக அடையாளம் கண்டார்கள். ஐந்து வகை வாழ்க்கை முறை, ஐந்து வகைப் பண்பாடுகள், ஐந்து வகை தொழில்கள் இருக்கின்றன. என்றார்கள். காலத்தின் பன்மையை அறிந்து ஆறு வகைக் காலங்களைக் கண்டார்கள்.

பண்டைக்காலத் தமிழர்களுக்குத் தெய்வம் கூட ஒன்று அன்று; பன்மைத் தன்மையுள்ள பல தெய்வங்கள்!

இன்றைக்குத் தமிழ்த் தேசத்தில் பிரிக்க முடியாத பகுதிகளாக இணைந்துள்ள மக்கள்தாம் வீட்டில் தெலுங்கு, கன்னடம், உருது, செளராட்டிரம், மராத்தி ஆகிய மொழிகளைப் பேசும் மக்கள். இவர்கள் அனைவரும் தமிழ்த் தேச மக்களே! இவர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் குடியேறித் தமிழகத்தைத் தாயகமாகக் கொண்டு வாழும் மக்கள் இவர்களின் பங்களிப்பு இல்லாமல் தமிழ்த் தேச வாழ்வியலோ, முன்னேற்றமோ இல்லை.

இவர்களின் பங்களிப்பு இல்லாமல் தமிழ்த் தேச விடுதலையும் இல்லை. வீட்டில் பிற மொழி பேசும் இவர்கள் தமிழைத் தங்கள் பொது மொழியாகவும் அலுவல் மொழியாகவும், கல்வி மொழியாகவும் ஏற்றுக் கொண்டே வாழ் கிறார்கள் இனியும் அது தொடரும்; தொடர வேண்டும்.

தமிழ்த் தேசம் பன்மை கொண்டது. தமிழ்த் தேசியமும் பன்மை கொண்டது.

1956- நவம்பர் 1 மொழி வழி மாநில அமைப்பிகுப் பின் தமிழ்நாட்டில் குடியேறிய வெளி மாநிலத்தவர் அனைவரும் வெளியேற வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம். காரணம் என்ன? இவர்கள் தமிழர் தாயகத்தின் மக்கள் தொகையில் தமிழர்களைச் சிறுபான்மை ஆக்கிவிடும் நிலையில் பெருகிக் கொண்டுள்ளார்கள்.

அன்றாடம் பல்லாயிரக்கணக்கில் தமிழகத்தில் குடியேறிக் கொண்டுள்ளார்கள். தமிழர்களின் தொழில், வணிகம், வேலை, கல்வி வாய்ப்புகளைக் கைப்பற்றிக் கொண்டுள்ளார்கள். இவர்களில் பெரும்பாலோர் இந்தி மொழியைத் தமிழ்நாட்டின் அலுவல் மொழி ஆக்கிடத் துடிக்கிறார்கள். எனவே தமிழ்த் தேச மக்களின் தற்காப்புப் போராட்டமாக, 1956க்குபின் வந்த வெளியாரை வெளியேற்றும் போராட்ட்த்தைத் த.தே.பொ.க. முன்னெடுக்கிறது.வருங்காலத்தில் இதில் நாம் வெற்றி பெறுவோம்.

த.தே.பொ.க.வின் திராவிட எதிர்ப்பின் சாரம் என்ன? திராவிடம் என்பது ஒரு மாயை; அது ஒரு மொழியின் பெயரோ அல்லது இனத்தின் பெயரோ இல்லை. எனவே அது ஒரு தேசத்தின் பெயராகவும் பண்பாட்டின் பெயராகவும் இல்லை. ஆரியர்கள் உருவாக்கிய சொல்தான் திராவிடம். பிற்காலத்தில் தென்னகப் பார்ப்பனர்களை மட்டும் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல்தான் திராவிடம்.

ஆந்திரப்பிரதேசத்தின் பெரும் பகுதி, கர்நாடகப் பகுதிகள், கேரளப்பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கி ஆங்கில ஏகாதிபத்தியம் உருவாக்கிய நிர்வாக மண்டலமான சென்னை மாகாணத்தில் “திராவிடம்” என்ற அரசியல் சொல் அவர்களையெல்லாம் இணைக்கப் பயன் படும் என்று தமிழர்களில் சிலரும் மேற்படி இனங்களைச் சேர்ந்த சிலரும் கருதி “திராவிடம்” என்ற சொல்லைப் பயன்படுத்தினர். பார்ப்பனரல்லாத தென்னாட்டு மக்களை மட்டும் குறிக்கும் சொல் “திராவிடம்” என்று பெரியார் கூறியது வரலாற்றுண்மைக்கும் தேசியஇன, மொழி ஆராய்ச்சிக்கும் பொருந்தாக கற்பனை.

“திராவிடம்” என்பது “தமிழர் “ அடையாளத்தையும், தமிழர் வரலாற்றையும் தமிழ்த் தேசிய எழுச்சியையும் மறைக்கவும் மழுங்கடிக்கவும் பயன்பட்டது. 

மொழிவழி மாநில அமைப்பிற்கு முன் சென்னை மாகாண திராவிட அரசியலில், தெலுங்கர், கன்னடம், மலையாளி மேலாதிக்கம் இருந்தது. மொழி வழி மாநில அமைப்பிற்குப்பின், தமிழர் அடையாளத்தை மறைத்து நிற்கிறது திராவிட அரசியல். பிறமொழி பேசும் சிறுபான்மை மக்களைத் தமிழ்த் தேசியத்தில் அரவணைத்துச் செல்வதற்கு மாறாக அச்சிறு பான்மை மக்களைக் காட்டித் தமிழ்தேசியத்தைப் பலியிடுகிறது திராவிட அரசியல்.

மேற்கண்ட காரணங்களுக்காவே த.தே.பொ.க. திராவிடத்தை மறுக்கிறது; எதிர்க்கிறது மற்றபடி பல நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளைப் பேசும் மக்களை அயலாரகப் அடையாளப்படுத்துவதற்காக திராவிடத்தை எதிர்க்கவில்லை.

தமிழ்மொழி, தமிழ் இனம் குறித்துப் பெரியார் முன்வைத்த முற்றிலும் பிழையான கருத்துகளையும், அவரது தவறான அரசியல் நிலைபாடுகளையும் த.தே.பொ.க. எதிர்க்கிறது. அதே வேளை வர்ண-சாதி ஒழிப்பு, பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு போன்றவற்றில் பெரியாரின் பங்களிப்பை நன்றியுடன் பாராட்டுகிறது.

இவ்வாறு கூறுவதால் பெரியாரின் வர்ண- சாதி ஒழிப்பு- பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு ஆகியவற்றில் த.தே.பொ.க. விற்குத் திறனாய்வுகள் இல்லை என்று பொருளில்லை. இவற்றில் திறனாய்வை விட அவரின் பயன் தரும் அளிக்கும் பங்களிப்பு அதிகம் என்று பாராட்டுகிறது.

பெரியாரின் திராவிடக் கருத்தியலையும், தமிழ்மொழி, தமிழ் இனம் தொடர்பான தவறான கருத்துகளையும் எதிர்த்து “திராவிடம்- தமிழ்த் தேசியம்” என்ற பெயரிலும் “ பெரியாருக்குப் பின் பெரியார்” என்ற பெயரிலும் இரு சிறு நூல்கள் எழுதியுள்ளேன். தமிழர் கண்ணோட்டம் இதழில் அவ்வப்போது கட்டுரைகளும் எழுதி வருகின்றேன்.

பெரியாரின் ஏற்க வேண்டிய பங்களிப்புகளை ஏற்று மறுக்க வேண்டிய கருத்துகளை மறுப்பது என்ற அணுகுமுறையையைத்தான் த.தே.பொ.க. கடைபிடிக்கிறது. புரட்சிக்கரத் தமிழ்த் தேசியத்தைச் சிதைவின்றியும் திரிபின்றியும் சரியான உள்ளடக்கத்துடன் சரியான இலக்கில் முன்னெடுப் போம். தமிழ்த் தேசியம் என்பது சனநாயக வடிவம் என்பதை மனங்கொள்வோம்.


இக்கட்டுரை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் சூலை 16-31 இதழில் வெளிவந்தது. கட்டுரையாளர் பெ. மணியரசன் இதழின் ஆசிரியர் மற்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095

முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.