ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

நெய்வேலிப் போராட்டம் : வெளியார் வந்தால் மறிப்போம்! - தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கை


நெய்வேலிப் போராட்டத்தை உடைக்க வெளி மாநிலத் தொழிலாளர்களை  பணியமர்த்துவது இன ஒதுக்கலே! வெளியார் வந்தால் மறிப்போம்!

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:


கடந்த 42 நாட்களுக்கும் மேலாக, தீர்வேதும் இல்லாமல் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில், நிர்வாகத்திற்கும் போராடும் தொழிலாளர்களுக்கும் இடையே நேற்று (14.10.2014) நடைபெற்ற பதின்மூன்றாவது கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

இதன் போது, போராட்டத்தை உடைக்கும் பொருட்டு, வெளி மாநிலத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவோம் என நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்.

நெய்வேலி அனல் மின் நிலையம் அமைக்கப்படுவதற்காக நிலம் கொடுத்த குடும்பங்களில் இருந்தவர்களே, தற்போது நிரந்தரப் பணிக்கோரி போராடி வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களில் பெரும்பான்மையோர் ஆவர். இந்த மண்ணின் மக்களை முறியடிப்பதற்காக, வெளி மாநிலத் தொழிலாளர்களை பணியமர்த்துவோம் என நிர்வாகத் தரப்பில் அறிவித்திருப்பது, தமிழர்களைப் புறக்கணிக்கும் இனஒதுக்கல் ஆகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

நிர்வாகத்தின் இந்த முடிவை தமிழக அரசு கண்டிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படியும், தொழிற்சங்கத்தோடு ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் ஒப்பந்தத் தொழிலாளர்களை அவரவர் பணியிடங்களில் ஈர்த்து நிரந்தரப்படுத்தி, மீதமுள்ள தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் 25,000 ரூபாய் வழங்கி, நெய்வேலிப் போராட்டத்திற்கு தீர்வு காண தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தமது அறிக்கையில் தோழர் கி.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். 

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095

முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.