ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

விகடன் குழுமத் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு தமிழ் இதழியல் துறைக்குப் பேரிழப்பு! - தோழர் பெ.மணியரசன் இரங்கல்!


விகடன் குழுமத் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு தமிழ் இதழியல் துறைக்குப் பேரிழப்பு! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் இரங்கல்!

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 

விகடன் குழுமத் தலைவர் திரு. எஸ்.பாலசுப்பிரமணியன் அவர்கள் காலமானதற்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் இதழியல் துறையில் தடம்பதித்த நிறுவனம் விகடன் குழுமம். புகழ்பெற்ற எஸ்.எஸ்.வாசன் அவர்களால் தொடங்கப்பட்ட ‘ஆனந்த விகடன்’, அவருக்குப் பிறகு திரு. எஸ். பாலசுப்பிரமணியன் அவர்கள் பொறுப்பில் காலத்திற்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டு தமிழின் முன்னணி கிழமை ஏடாக மட்டுமின்றி, அனைத்துப் பிரிவு தமிழ் மக்களுக்கும் உரிய ஏடாகவும் வந்து கொண்டுள்ளது. கிழமை(வாரம்) இருமுறை ஏடான ‘ஜூனியர் விகடன்’, செய்திக் கட்டுரைகள் மட்டுமின்றி செய்திகளைப் பற்றிய பின்னணி, நடந்த உண்மை என்ன என்ற புலனாய்வு போன்ற நவீன இதழியல் கூறுகளைக் கொண்டு தமிழ் மக்களின் பேராதரவைப் பெற்றுள்ளது.

அரசின் அடக்குமுறைகள் வந்தபொழுதும் அதற்காகப் பின்வாங்காமல், இதழியல் சுதந்திரத்தைப் பாதுகாக்க ஈகத்துடன் முன்னின்று முத்திரை பதித்தவர், விகடன் பாலசுப்பிரமணியன் அவர்கள்.

சமகாலத்தில், இதழியல் துறையில் தமிழை முன்னிறுத்துவதற்குப் பங்களிப்பு செய்துள்ள திரு. எஸ். பாலசுப்பிரமணியன் அவர்களுடைய மறைவு, தமிழ் இதழியல் துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், விகடன் குழும அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்கும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தமது அறிக்கையில் தோழர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.