ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் தோழர் பெ. மணியரசன் சந்திப்பு!

வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சந்திப்பு!
இராசீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்பு படுத்தப்பட்டு - 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிவரும் அப்பாவித் தமிழரான பேரறிவாளனை, 22.09.2016 அன்று, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் வேலூர் சிறை சென்று சந்தித்தார்.

அண்மையில் குற்ற வழக்குகள் பலவற்றில் தண்டிக்கப்பட்டு வேலூர் சிறையிலிருந்த ஒருவரால் சிறைக்குள் வைத்துத் தாக்கப்பட்ட பேரறிவாளன் அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் ம. இலட்சுமி, தந்தை பெரியார் தி.க. பொறுப்பாளர் தோழர் ஈரோடு குமரகுருபரன், மருத்துவர் பழ. பாலகிருட்டிணன், த.தே.பே. பொதுக்குழு உறுப்பினர் தோழர் வெற்றித்தமிழன், தோழர் செ. ஏந்தல், ஈரோடு வழக்குரைஞர் கு. திலீபன், உள்ளிட்டோர் வேலூர் சிறைக்கு வந்தனர். சிறைக்குள் பேரறிவாளனைச் சந்தித்த தோழர்கள், அன்று பிறந்தநாள் காணும் தோழர் பேரறிவாளனுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனர்.

தோழர் பேரறிவாளனைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த தோழர் பெ.ம., “மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார் பேரறிவாளன்; 3 கிலோ எடையுள்ள இரும்புப் பட்டையால் கொடியவன் தாக்கியுள்ளான். மாங்காய் பிளந்தது போல் தலைக்காயம் உள்ளது. ஆறி வருகிறது. எந்தச் சட்டச்சிக்கலும் இல்லாத நிலையில், இப்போது ஒருமாதம் பேரறிவாளனுக்கு மருத்துவப் பரோல் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்க வேண்டும்” என்றார்.

செய்தி பிரிவு.
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.