ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை!” மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வில் - கி. வெங்கட்ராமன் உரை!

“தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை!” மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வில் - பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் உரை!
தமிழீழ விடுதலைப் போரில் வித்தான ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும், நவம்பர் 27 - “தமிழீழத் தேசிய மாவீரர் நாள்”, இவ்வாண்டும் உலகெங்கும் எழுச்சியுடன் நடைபெற்றது.

தமிழீழத்தில்

சிங்கள இனவெறி அரசின் ஆக்கிரமிப்பில் இருந்தாலும், அடக்குமுறைக்கு அஞ்சாது தமிழீழ மண்ணில், மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வுகள் புத்தெழுச்சியுடன் நடைபெற்றன. கிளிநொச்சி, வன்னி விளாங்குளம், மன்னார், மட்டக்களப்பு என பல்வேறு இடங்களில், சிங்கள இராணுவத்தால் உடைத்து நொறுக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்ல கற்களையும் இடிபாடுகளையும் தேடியெடுத்து, மலர்கள் தூவி, சுடரேற்றி, கண்ணீருடன் தமிழீழ மக்கள் வணக்கம் செலுத்திய நிகழ்வு, உலகெங்குமுள்ள தமிழர்களுக்கு உணர்ச்சியூட்டியது.
முன்னதாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாண வர்கள் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாளை 26.11.2016 அன்று எழுச்சியுடன் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. இதே உணர்வெழுச்சியுடன், தமிழீழ மக்கள் புலம்பெயர்ந்து வாழும் பிரிட்டன், பிரான்சு, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடு களிலும், “மாவீரர் நாள்” நிகழ்வுகள் சிறப்புடன் நடைபெற்றன.

தமிழ்நாட்டில் தடை

தமிழீழ மக்களை அழித்த சிங்களத்துக்கும் - அதற்குத் துணை நிற்கும் இந்தியாவுக்கும் “விசுவாசம்” காட்டுகிறோம் என்ற பெயரில், தமிழ்நாட்டில் பொது இடங்களில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்த காவல்துறையினர் தடை விதித்த நிகழ்வுகளும், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் படம் பொறித்தப் பதாகைகளை அப்புறப்படுத்திய நிகழ்வுகளும் சில இடங்களில் நடைபெற்றன. எனினும், தமிழ்நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் மாவீரர் நாள் நிகழ்வுகள் எழுச்சியுடன் நடைபெற்றன.

சென்னை
சென்னையில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமை யகத்தில் நடைபெற்ற மாவீரர் வீரவணக்க நிகழ்வில், பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் மாவீரர் ஈகச்சுடரேற்றி வீரவணக்க உரை நிகழ்த்தினார். பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தமிழீழ விடுதலையின் இன்றைய நிலை குறித்து கருத்துரையாற்றினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி தொடக்கவுரையாற்றினார்.
பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் உரையின் ஒரு பகுதியின் எழுத்து வடிவம் :

“தமிழீழ விடுதலைக்காக உயிரீகம் செய்த மாவீரர் களை நினைவுகூர்ந்து வீரவணக்கம் செலுத்தும் இந் நாளில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நாம் பெற்ற படிப்பினைகளை அறிந்து கொள்வது அவசியமானதாகும்.

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழீழ இனப்படுகொலை என்பது, சாட்சிகளற்ற போர் அல்ல! வட அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் செயற்கைக்கோள்கள் வழியே வேடிக்கைப் பார்த்து நடைபெற்ற இனப்படுகொலைப் போர் அது! குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என கூட்டம் கூட்டமாகத் தமிழர்கள் குண்டு வீசிக் கொன்றொழிக்கப்பட்டனர்.

ஏன், தமிழர்களுக்கு ஆதரவாக உலகின் எந்த நாடும் வரவில்லை? பக்கத்து மாநிலங்களில்கூட இந்த இனப்படுகொலைக்குக் கண்டனம் தெரிவிக்க யாருமில் லையே, ஏன்? ஏனெனில், தமிழர்கள் அரசியல் அநாதைகளாக நிற்கிறோம்!

இந்தியா இந்தப் போரை நடத்துகிறது என்பதால் தான், உலகின் எந்த நாடும் தமிழீழப் படுகொலையை கண்டிக்க முன்வருவதில்லை. தமிழீழச் சிக்கலில் இந்திய அரசின் நிலைப்பாடு, இந்த அளவிற்கு மூர்க்கத்தனமாய் இருப்பதற்கு என்ன காரணம்?

தன் கணவரும் இந்தியத் தலைமையமைச்சருமான இராசீவ் காந்தி கொல்லப்பட்டதால்தான், 2009இல் ஆட்சியிலிருந்த சோனியா காந்தி தமிழீழத் தமிழர் களை அதற்குப் பழிவாங்க, இப்படியொரு போரை நடத்தினார் என்று கூறுகிறார்கள். இதில் ஓரளவு உண்மை இருப்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால், இதுமுதன்மைக் காரணமல்ல என்பதுதான், இந்திய அரசின் தமிழீழம் குறித்த கடந்த காலக் கொள்கைகளை ஆராய்ந்து பார்க்கும் நம்மைப் போன்றோரின் தெளிவான முடிவு!

பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் அடிமை நாடு களாக இலங்கையும் இந்தியாவும் இருந்த போதே, 1940களில் _ இந்தியாவில் காங்கிரசுக் கட்சியில் இலங்கையை எப்படிக் கையாள்வது என விவாதங்கள் நடந்தன. காங்கிரசுக் கட்சித் தலைவர் நேரு, இலங்கை நம் நட்பு வளையத்தில் உள்ள நாடு, அந்நாட்டை இந்தியாவின் ஒரு மாநிலமாக வைத்துக் கொள்ளலாம் என்றார். பிறகு நமது எதிரிகளுடன், சேராத நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்றார்.

1948ஆம் ஆண்டு பிப்ரவரியில், இலங்கை பிரித் தானிய ஆட்சியிலிருந்து “விடுதலை” பெற்றவுடன் இயற்றிய முதல் சட்டம், தென்னிலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிவதற்காக ஆங்கிலேயரால் தமிழ்நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பத்து இலட்சம் மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்தது. இந்திய அரசு அதனைக் கண்டு கொள்ளவில்லை.

1951ஆம் ஆண்டு, சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என தனிச்சிங்கள சட்டத்தை சிங்கள அரசு நிறை வேற்றியபோதுகூட, தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய அரசு அச்சிக்கலில் தலையிடவில்லை.

1962ஆம் ஆண்டு, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லையில் போர் நடந்த போது, ஐ.நா.வில் இது குறித்து விவாதம் வந்தது. இலங்கை இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலை வகித்தது. அப்போது, இந்தியா இலங்கை அரசை எதிர்க்கவில்லை. தனது “நட்பு” வளையத்திலேயே இலங்கையை வைத்துக் கொண்டது.

பின்னர், 1964ஆம் ஆண்டு, சிங்கள அதிபர் சிறீமாவோ பண்டாரநாயகாவும் இந்தியத் தலைமை யமைச்சர் லால் பகதூர் சாத்திரியும் இணைந்து ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதில், 3 இலட்சம் மலையகத் தமிழர்களுக்கு மட்டுமே இலங்கைக் குடியரிமை வழங்கப்படும் என்றும், 5.75 இலட்சம் தமிழர்களை தமிழ்நாட்டுக்குத் திருப்பி அனுப்புவ தென்றும் முடிவெடுக்கப்பட்டது. மீதமுள்ள 1.25 இலட்சம் தமிழர்களை என்ன செய்வதென்று பின்னர் பேசிக் கொள்ளலாம் என இவ்விரண்டு அரசுகளும் முடிவெடுத்தன. ஒன்றேகால் இலட்சம் தமிழர்கள் - எவ்வித உரிமைகளுமற்ற நாடற்றவர்களாக அறிவிக்கப் பட்ட அவலம் நடந்தது!

அதன்பின்னர், 1965ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் போர் நடந்த போதுகூட, இந்தியா வின் பக்கம் ஆதரவு நாடாக இலங்கை வரவில்லை.

அதன்பின், 1971ஆம் ஆண்டு, இந்தியத் தலைமை யமைச்சர் இந்திராகாந்தி, வங்க தேச விடுதலைப் போரில் ஈடுபட்ட “முக்தி வாகினி“ அமைப்பினருக்கு ஆதரவாக இந்தியப் படையை அனுப்பி, “வங்கதேசம்” என்ற தனிநாட்டை உருவாக்கினார். இந்தியாவால் உருவாக்கப்பட்ட அந்த “வங்கதேசத்தை” உலக நாடுகள் பலவும அங்கீகரித்து ஆதரித்த நிலையில், கடைசியாக வந்து ஆதரித்த நாடு இலங்கை!

அப்படிப்பட்ட இலங்கை அரசுடன் “நல்லுறவு பேணப் போகிறோம்” என்ற பெயரில், 1974ஆம் ஆண்டு தமிழ்நாட்டுத் தமிழர்களின் தாயகப் பகுதியான கச்சத்தீவை, பரிசாக வழங்கி மகிழ்ந்தது இந்திய அரசு!

இந்திரா காந்தி ஆட்சி வீழ்ந்து சனதா ஆட்சி மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்த போதும், சிங்கள ஆதரவுத் தொடர்ந்தது.

அதன்பின், 1983 சூலையில் தமிழீழ மக்கள் மீது மிகப் பெரும் அளவில் இனப்படுகொலை கட்டவிழ்த்து விட்டபோது, இந்திய அரசு தமிழீழச் சிக்கலில் தலையிடத் தொடங்கியது. தமிழீழ மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்திய அரசு அச்சிக்கலில் தலையிடவில்லை. தமிழீழ மக்களுக்கு ஆதரவாக நிற்பதுபோல் நடித்து, தமிழ் இளைஞர் களுக்கு - குழுக்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் வழங்கி, அதனைக் காட்டி சிங்கள அரசை அச்சமூட்டி - தன் கைப்பிடியிலிருந்து நழுவும் சிங்கள அரசைப் பணிய வைப்பதற்கான முயற்சியாகவே இந்தியாவின் தலையீடு அமைந்தது.

அதன்பின்னர்தான், இராசீவ் காந்தி செயவர்த்தனே அரசடன் ஒப்பந்தம் செய்து கொண்டு 1987இல் “இந்திய அமைதிப்படை” என்ற அமளிப்படையை தமிழீழத்திற்கு அனுப்பினார். தமிழீழ மக்கள் மீது சிங்கள அரசும் இராணுவமும் கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறையை - இந்திய இராணுவமும் கூடுதல் மூர்க்கத்தனத்தோடு ஏவியது. இந்தியப் படையினரால் தமிழர்கள் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டனர்.

அப்போது, இந்தியப் படையினரை எதிர் கொண்டு பதில் தாக்குதல் நடத்தி, தமிழீழ மக்களைப் பாது காவலராகக் காத்து நின்றவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். தொடர்ந்து சிங்கள அரசால் திணிக்கப்பட்ட பல சமர்களில், சிங்கள இராணுவத் தாக்குதல்களை முறியடித்து, மாபெரும் விடுதலை இயக்கமாக தமிழீழ விடுதலைப்புலிகள் முன்னேறிச் சென்றது வரலாறு!

அதன்பின், நோர்வே நாட்டின் தலையீட்டின் காரணமாக அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட காலத்தில், பன்னாட்டு அரங்கில் சிங்கள அரசுக்கு போதிய அரசியல் வலுவும் செல்வாக்கும் இல்லாத நிலையில், உலக நாடுகளிடமெல்லாம் சென்று வேண்டுகோள் விடுத்து, புலிகளை உலக அளவில் தடை செய்ய பல்வேறு முயற்சிகளை செய்த நாடு, இந்தியாதான்!

இதன் தொடர்ச்சியாகவே, 2009ஆம் ஆண்டு, இந்தியா நேரடியாவே போரில் ஈடுபட்டு, பல்வேறு நாடுகளுடன் ஆதரவைப் பெற்று, தமிழீழத் தமிழர் களை இனப்படுகொலை செய்தது. அந்த இனப்படு கொலையை நிகழ்த்திய சிங்கள அரசை பன்னாட்டு அரங்கில் இந்தியாதான் பாதுகாக்கிறது. இனப்படு கொலைக் குற்றவாளிகள் மீது ஒரு குறைந்தபட்ச விசாரணைகூட வரவிடாமல் தடுக்கிறது இந்திய அரசு! ஏன் இந்திய அரசுக்கு தமிழர்களை அழிப்பதில் இவ்வளவு வெறி?

இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் இந்தியாவின் ஆதிக்கத்திற்கோ இந்தியப் பெருமுதலாளிகளின் மூலதன ஆதிக்கத்திற்கோ விடுதலைப்புலிகள் குறுக்கே வந்ததில்லை. அப்படியிருந்தும் இந்தியா சிங்களத் தோடு நின்றது. ஏன்?

சிங்கள வான்படைத் தாக்குதலில் மாதா கோயில்கள் மட்டுமின்றி, பெருமளவில் “இந்து” கோயில்கள்தாம் தரைமட்டமாயின. போருக்குப் பின்னும் தமிழீழ மண்ணில் பௌத்தமயமாக்கல் நடந்து வருகிறது. இந்துத்துவ பா.ச.க. ஆட்சி ஏன் கண்டுகொள்ள வில்லை? மோடி பதவி ஏற்பில் இராசபட்சேவுக்கு சிறப்பிடம் வழங்கப்பட்டதே, ஏன்?
ஏனெனில், “இந்துத்துவம்” _- “இந்தியம்” என்பவை ஆரிய ஆதிக்கத்தின் இன்றைய வடிவங்கள்!

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சிந்து சமவெளி யில் தமிழர் நாகரிகத்தை அழித்த அதே ஆரியத்தின் இன்றைய அரச வடிவமாகத்தான் இந்திய அரசு இருக்கிறது. எனவேதான், அதே ஆரிய இனப் பகையுடன் தமிழீழத் தமிழர்களையும் தமிழ்நாட்டுத் தமிழர்களையும் இந்திய அரசு குறிவைத்து ஒடுக்குகிறது!

சிங்களத் தலைவர்கள் செயவர்த்தனே தொடங்கி, இந்தியாவின் சிங்களத் தூதர் பிரசாத் கரியவாசம் வரையுள்ள பல தலைவர்கள் இதை வெளிப் படையாகவே கூறியிருக்கின்றனர். இந்தியாவுக்கு “பாரத்” எனப் பெயர் சூட்டுவது, புதிதாக விண் வெளிக்கு ராக்கெட் விட்டால் ஆரிய பட்டா என்றும், அக்னி என்றும் ஆரியப் பெயர்களை வைப்பது, ஆரியர்களின் சமற்கிருத மொழியைத் தொடர்ந்து திணிப்பது என இந்திய அரசு இதனை தானே வெளிக்காட்டியுள்ளது.

எனவே, இவ்வளவு இழப்புகளுக்குப் பிறகாவது இந்த உண்மைகளை தமிழர்கள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். ஆரிய இந்திய அரசுக்கு எதிராக தமிழீழத் தமிழர்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் “தமிழர் சர்வதேசியமாக” ஒன்றிணைந்து போராட வேண்டும்! மாவீரர்களுக்கு வீரவணக்கம்!”

இவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் பேசினார். முன்னதாக, பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம் வரவேற்றார். மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம. இலட்சுமி, பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன், தமிழக இளைஞர் முன்னணி சென்னை செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், தென்சென்னை செயலாளர் தோழர் மு. கவியரசன், வடசென்னை செயலாளர் தோழர் செந்தில் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அனைவரும் மாவீரர் சுடர் முன் நின்று மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

ஓசூர்
ஓசூரில், தமிழ்க் கலை இலக்கியப் பேரவையின் ஒருங்கிணைப்பில் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு, தமிழ் வளர்ச்சி மன்றத்தில் நடைபெற்றது. த.க.இ.பே நடுவண் குழு உறுப்பினர் பாவலர் ப. செம்பரிதி தொடக்க உரையாற்றி நிகழ்வை ஒருங்கிணைத்தார். மூத்த தமிழ் உணர்வாளர்கள் திரு. இராசேந்திரன், திரு. சிவந்தி அருணாச்சலம் ஆகியோர் மாவீரர் நாள் ஈகச்சுடரேற்ற அரங்கத்தில் இருந்த அனைவரும் மெழுகு திரி ஏந்தி நிற்க, “தாயகக் கனவினில் சாவினைத் தழுவிய சந்தன பேழைகளே!” என்ற பாடலை தோழர் முத்து உணர்வெழுச்சியுடன் பாடினார். டைட்டன் மேலாளர் திரு. இராசேந்திரன், மூத்த உணர்வாளர் திரு. சிவந்தி அருணாச்சலம், அசோக் லேலேண்ட் அலகு 1 தொழிலாளர் பாதுகாப்புப் பேரவை நிர்வாகி திரு. ரோம் லஸ், லேலேண்ட் அலகு 2 தொ.பா.பே செயலாளர் திரு. முனுசாமி, லேலேண்ட் 2 சங்க துணைத் தலைவர் தோழர். சக்திவேல், தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் தூ. தூருவாசன், பாவலர் நடவரசன், பாவலர் இளமுருகு பாண்டியன், தோழர் இரவீந்திரன் ஆகியோர் உரை யாற்றினர். நிறைவில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ. மாரிமுத்து வீரவணக்கவுரையாற்றினார். த.க.இ.பே. நகரச் செயலாளர் தோழர் முத்துவேலு நன்றியுரை யாற்றினார்.

மதுரை
மதுரை பெத்தானியாபுரம் - அண்ணா வீதியில் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரெ. இராசு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சிறுமி யாழினி ஈகச்சுடரை ஏற்றி வைத்தார். பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் கதிர்நிலவன், மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, தோழர் வெ.ந. கணேசன் (தமிழர் தேசிய முன்னணி), ஆதித்தமிழர் மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் திரு. விடுதலை வீரன், ம.தி.மு.க. மாவட்டக் குழு உறுப்பினர் திரு. சாம், திரு. கற்பூர நாகராசன் (புரட்சிக்கவிஞர் பேரவை), மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அருணாச்சலம், தோழர் கரிகாலன் (த.தே.பே.) உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.

திருத்துறைப்பூண்டி

திருவாரூர் மாவட்டம் - திருத்துறைப்பூண்டி - புதிய பேருந்து நிலையம் அருகில், பேரியக்க நகரச் செயலாளர் தோழர் து. இரமேசு தலைமையில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வில், ஒன்றியச் செயலாளர் தோழர் ப. சிவவடிவேலு, ஒன்றியத் துணைச் செயலாளர் தோழர் செந்தில் உள்ளிட்ட திரளான தோழர்கள் பங்கேற்றனர்.

பட்டீசுவரம்
குடந்தை வட்டம் -_ பட்டீசுவரம் கடைத்தெருவில், மாவீரர் நாள் வீரவணக்கம் -_ தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக் கூட்டம், சாமிமலை பேரியக்கச் செயலாளர் தோழர் தமிழ்த்தேசியன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக, மாவீரர் நாள் சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் நா. வைகறை, தோழர் பழ. இராசேந்திரன், தோழர் க. விடுதலைச்சுடர், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை திரு. ஆ. பூங்குன்றன் ஆகியோர் உரையாற்றினர்.

புதுச்சேரி
புதுச்சேரி வேல்ராம்பட்டு முதன்மைச்சாலையில் நடைபெற்ற மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வுக்கு, பேரியக்கப் புதுச்சேரி செயலாளர் தோழர் இரா. வேல்சாமி தலைமை தாங்கினார். உலகத் தமிழ்க் கழகப் பொறுப்பாளர் திரு. தமிழுலகன், தோழர் உலகநாதன் (நாம் தமிழர் கட்சி) உள்ளிட்ட திரளான தோழர்கள் பங்கேற்றனர்.

சிதம்பரம்

சிதம்பரம் - கஞ்சித்தொட்டி அருகில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பொறுப்பானர் தோழர் அறவாழி தலைமையில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில், பேரியக்க நகரச் செயலாளர் தோழர் எல்லாளன், தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ. குபேரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தமிழின உணர்வாளர்கள் பங்கேற்றனர்.
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனைப் பேழைகளுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் வீரவணக்கங்கள்!


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
ஊடகம்: www.fb.com/tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.