ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழர் இனமுழக்கம் - தஞ்சையில் பெருங்கூடல். ஆபிரகாம் பண்டிதர் சாலை. காரி(சனி)க்கிழமை 29.07.2017 மாலை 6.30 மணி. அழைக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்..!

தமிழர் இனமுழக்கம் - தஞ்சையில் பெருங்கூடல். அழைக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்..!
தமிழ்ச்சமூகம் இன்று முட்டுச் சந்தில் நிற்கவில்லை; முன்னேறிச் சென்று கொண்டுள்ளது. காவிய நாயகர்களின்வருகைக்காக அது காத்திருக்கவில்லை; மக்களே போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்!

தமிழ்நாட்டு ஆறுகளின் கதி என்ன?

வணிக வேட்டைக்கு வந்து ஆட்சி பிடித்த ஆங்கிலேயேர்கள் 1924இல் அருமையான காவிரி ஒப்பந்தம் போட்டு, மேட்டூர் அணை 1934இல் திறந்தார்கள். ஆனால் வெள்ளையரை வெளியேற்றி உருவான இந்திய ஆட்சி காவிரி உரிமையைப் பறித்து விட்டது. உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து விட்டது மோடி அரசு; கன்னடர் இன வெறிக்குத் துணை போகிறது.

வெள்ளையராட்சி 1895இல் முல்லைப் பெரியாறு அணை கட்டிக் கொடுத்தது. இந்தியத்தேசியம் பேசும் கேரளாவின் காங்கிரசுக் கட்சியும் மார்க்சியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியும் அந்த அணையை உடைக்க நேரம் பார்த்துக் கொண்டுள்ளன. அவை அங்கு ஆளும் கட்சிகள்! முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் துச்சமாகத் தூக்கி எறிகின்றன கேரளாவின் இந்தியத்தேசியக் கட்சிகள்! அதில் உள்ள சிற்றணையை மேலும் வலுப்படுத்தத் தமிழ்நாடு அரசு கட்டுமானப் பொருள்கள் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை கேரள அரசு!

பாலாற்றில் தமிழ்நாட்டிற்குள்ள வரலாற்று வழி உரிமையை நிலைநாட்டி 1892இல் வெள்ளையர் அரசு ஒப்பந்தம் போட்டது. வெள்ளையர் வெளியேறியவுடன் ஏராளமான அணைகளைப் பாலாற்றில் கட்டி, ஆந்திரப்பிரதேசம் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரைக் களவாடிக் கொண்டது.

அதேபோல் தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகம் அணைகள் கட்டித் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வராமல் தடுத்து விட்டது.

கேரளம் பவானி ஆற்றில் புதிதாக ஆறு தடுப்பணைகள் கட்டிக் கொண்டுள்ளது. சிறுவாணியிலும் புதிதாகத் தடுப்பணை கட்டுகிறது.

இந்திய ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கெதிராக இனப்பாகுபாடு காட்டுவதால்தான் அண்டை இனங்கள் தமிழ்நாட்டின் சட்டப்படியான ஆற்றுநீர் உரிமைகளைப் பறித்துக் கொண்டன!

கடல் உரிமைப் பறிப்பு

இந்திய அரசு 1974இல் தன்னிச்சையாக சிங்கள அரசுக்குத் தமிழ்நாட்டுக் கச்சத்தீவைக் கொடுத்தது. அதை வைத்து தமிழர்களின் கடல் உரிமையை இலங்கை அரசு பறித்துவிட்டது. எல்லை தாண்டி வந்ததாக 600க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்களை சுட்டுக் கொன்றது சிங்களப்படை!

ஆயிரக்கணக்கான தமிழ் மீனவர்கள் நிரந்தரமாக ஊனப்படுத்தப்பட்டு, துன்பத்தில் உழல்கிறார்கள். சின்னஞ்சிறு இலங்கைக்கு இத்தனை துணிச்சல் கொடுத்தது யார்? இந்தியா! தமிழ் மீனவர்களைத் தாக்கிய, சுட்டுக் கொன்ற - படகுகளைக் கடத்திய சிங்களப் படையாட்கள் மீது ஒரு வழக்கு கூட இந்தியா போடவில்லை.

மலையாள மீனவர் இருவரை அரபிக்கடலில் சுட்டுக் கொன்ற இத்தாலியின் கப்பற்படையினரை சிறைப்பிடித்து வழக்கு நடத்தியது இந்தியா! தமிழர்களுக்கு எதிராக மட்டும் இந்திய அரசு இனப்பாகுபாடு காட்டுவதேன்?

தமிழர்கள் செய்த குற்றமென்ன?

வெள்ளையரை வெளியேற்றும் விடுதலைப் போரில் தமிழர்கள் பங்கேற்கவில்லையா? தடியடிபடவில்லையா? சிறைப் படவில்லையா? செக்கிழுக்கவில்லையா? செத்து மடியவில்லையா? மூவண்ணக் கொடி காக்க உயிர் விடவில்லையா? விடுதலைக்கு முன்னும் பின்னும் தமிழ்நாட்டில் காங்கிரசு ஆட்சி அமைக்க வாக்களிக்கவில்லையா? இந்திய ஆட்சியாளர்களுக்கு தமிழர்கள் மீது இவ்வளவு வன்மம் ஏன்? இத்துணை இனப்பாகுபாடு ஏன்?

தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. சாதித்ததென்ன?

ஐம்பதாண்டுகளாகத் தமிழ்நாட்டை தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் ஆண்டுவரும் காலங்களில்தான் மேற்கண்ட உரிமைப் பறிப்புகளும் உயிர்ப்பறிப்புகளும் அரங்கேறின. தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் ஆற்றலும் இன்றி, அக்கறையும் இன்றி பதவி மோகம், பணமோகம் ஆகியவற்றில் மட்டுமே அக்கழகங்கள் கவனம் செலுத்தின.

இந்திய ஆளுங்கட்சிகளான காங்கிரசு, பா.ச.க. ஆகியவற்றுடன் மாறி மாறி கூட்டணி சேர்ந்து தமிழ்நாட்டின் உரிமைகளை, உயிர்களைக் காவு கொடுக்கும் கங்காணி வேலை செய்தன.

இனியும் இக்கழகங்கள் என்ன செய்யப் போகின்றன? ஏற்கெனவே செய்து வந்த இனத்துரோக வேலைகளைத்தான் செய்யப் போகின்றன!

இந்தி - சமற்கிருதத் திணிப்பு 

இந்திய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து, 1965இல் மாணவர்கள் மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தினர். தமிழ்நாட்டிலும் நடுவண் அரசிலும் அப்போது இருந்த காங்கிரசு ஆட்சிகள் 300 தமிழர்களை சுட்டுக் கொன்றன.

இப்போது பா.ச.க. ஆட்சி இந்தியுடன் சமற்கிருதத்தையும் சேர்த்து வேகமாகத் திணிக்கிறது. ஆரியம் ஆள்கிறது என்பதைப் பறைசாற்றவே சமற்கிருதத்தையும் அதன் ஒரு பிரிவான இந்தியையும் திணிக்கிறார்கள்.

தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. ஆட்சிகளும் அக்கட்சிகளும் ஒப்புக்கு மட்டுமே இந்தியை எதிர்க்கின்றன.

தி.மு.க.வின் டி.ஆர். பாலு நடுவண் சாலைப் போக்குவரத்து அமைச்சராக இருந்த போதுதான், தமிழ்நாட்டுத் தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தியில் வழிக்குறிப்புகள் எழுதப்பட்டன.

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் தான் பள்ளிக்கல்வியில் அரசு பள்ளிகளில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை ஆங்கிலப் பயிற்று மொழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டன.

தமிழ் அழிப்பில் கழக ஆட்சிகள் பங்கு கணிசமானது!

வேளாண்மையையும் குடிநீரையும் அழிக்கும் எண்ணெய் - எரிவளி

பெட்ரோலிய - எரிவளி ஆழ்குழாய்க் கிணறுகள் இறக்கப்பட்ட ஊர்களில் எல்லாம் நிலத்தடி நீர் பாழ்பட்டு, பாசனத்திற்கும் குடிநீருக்கும் பயன்படாமல் போய்விட்டது. எனவே இவற்றையும் ஐட்ரோ கார்பனையும் எதிர்த்து மக்கள் போராடுகிறார்கள். ஆனால், புதிதாக 110 ஆழ்குழாய்க் கிணறுகள் எண்ணெய் மற்றும் எரிவளிக்காக இறக்கப் போவதாக ஓ.என்.ஜி.சி. அறிவித்துள்ளது.

வெளியார் ஆக்கிரமிப்பு 

தமிழ்நாட்டுத் தொழில் வணிகம் அனைத்திலும் வெளி மாநிலத்தவர் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. தமிழ்நாட்டின் தேவைக்கு அதிகமாகப் பன்னாட்டுப் பெருங்குழும நிறுவனங்கள், தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் வெளி மாநிலத்தவர்களே மிகை எண்ணிக்கையில் வேலை பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள நடுவண் அரசுத் தொழிலகங்கள் - அலுவலகங்கள் அனைத்திலும் வெளிமாநிலத்தவர்களே மிகை எண்ணிக்கையில் வேலையில் சேர்க்கப்படுகின்றனர்.

மற்றுமொரு கட்சியா? மாற்று அரசியலா?

தமிழர் தாயகம், தமிழ்த்தேசிய இனம், தமிழ் மொழி ஆகியவற்றின் உரிமைகளை முதன்மைப்படுத்தும் மாற்று அரசியலே இன்றையத் தேவை!

பழைய தி.மு.க., அ.தி.மு.க.வோ அல்லது அவற்றின் பாணியில் புதிய கட்சிகளோ தேவை இல்லை!

பா.ச.க.வின் இந்துத்துவா

பா.ச.க.வின் இந்துத்துவாவின் உண்மைப் பெயர் ஆரியத்துவா தான்! சொந்த இனத்திலும் அயல் இனங்களிலும் உள்ள சாதாரண இந்து மத மக்களை ஏமாற்றி ஈர்த்துக் கொள்ளவே ஆரியத்துவாவாதிகள் இந்துத்துவாஎன்ற பெயரைப் பயன்படுத்துகின்றனர். தமிழில் அர்ச்சனை செய்யவோ, பிராமணரல்லாத தமிழர்கள் அர்ச்சகர்கள் ஆகிடவோ ஆர்.எஸ்.எஸ். ஒப்புக் கொள்ளவில்லை.

தமிழ்நாட்டில் பா.ச.க.வின் ஆரியத்துவா பாசிசத்தை எதிர்கொள்வதற்குரிய சரியான அரசியல் சிந்தாந்தம் தமிழ்த்தேசியமே!

உலகின் மூத்த குடிகளாகவும், முதல் இனமாகவும் உள்ள தமிழர்கள் ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் வாழ்ந்தவர்கள். இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் இமயமலையில் தமிழ்க்கொடி ஏற்றி ஆண்டவர்கள் தமிழ் வேந்தர்கள்! அறிவியல் - அறம் - வீரம் மூன்றும் தமிழர் மரபின் மூன்று தூண்கள்! மனிதர்கள் அனைவரும் சமம் - தமிழர்கள் அனைவரும் சமம் என்பது தமிழர் அறத்தின் சாரம்!

இந்த மாண்புகள் எல்லாம் இப்பொழுது சிதைந்து கிடக்கின்றன. இவற்றை மீட்போம்!

தமிழர் இனமுழக்கம்

வேளாண் தமிழர் வாழ்வுரிமை காப்போம்; தமிழ்நாட்டுத் தொழில் வணிகத்தில் தமிழர் மேலாதிக்கம் பெறப் போராடுவோம்! நடுவண் அரசு தொழிலகங்களில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்குப் பெறுவோம்; தமிழர் கடல் தமிழர்க்கு உரிமையாக்குவோம்; எல்லா நிலையிலும் தமிழே ஆள வைப்போம்! பா.ச.க.வின் பாசிசம் தடுப்போம்!

தமிழ்த்தேசியச் சுடர் ஏந்துவோம்! தமிழ்த்தேசியத்தின் முகம் தமிழ்த்தேசியப் பேரியக்கம்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095

முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.