ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கோதாவரியிலிருந்து காவிரிக்குத் தண்ணீர் என்று திசை திருப்புகிறது நடுவண் அரசு! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

கோதாவரியிலிருந்து காவிரிக்குத் தண்ணீர் என்று திசை திருப்புகிறது நடுவண் அரசு! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள், நேற்று (23.11.2017) சென்னையில் செய்தியாளர்களிடம் கோதாவரியிலிருந்து இரும்புக் குழாய் போட்டு, காவிரிக்குத் தண்ணீர் கொண்டு வரப்போவதாகவும், அதற்குப் பிறகு மாநிலங்களுக்கிடையே தண்ணீர்ப் பற்றாக் குறையால் ஏற்படும் சிக்கல்கள் தீர்ந்து போகும் என்றும் கூறியுள்ளார்.
இதுவரை கங்கையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து காவிரிச் சிக்கலுக்குத் தீர்வு காணப் போவதாக சொல்லி வந்தவர்கள், இப்போது கோதாவரியிலிருந்து கொண்டு வரப்போவதாகச் சொல்கிறார்கள். கோதாவரியிலிருந்து 300 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீர் கொண்டு வந்து, கிருஷ்ணா ஆற்றில் விட்டு, பின்னர் அதிலிருந்து சோமசீலா அணைக்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படும் என்றும், சோசீலாவிலிருந்து 100 ஆ.மி.க. தண்ணீர் எடுத்து கர்நாடகத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் பயன்படும் வகையில் காவிரியில் விடப்படும் என்றும் நிதின் கட்கரி கூறியிருக்கிறார்.
இந்தக் கற்பனைத் திட்டம் நிறைவேற்றப்படுவதாகவே வைத்துக் கொண்டாலும், 100 டி.எம்.சி. தண்ணீரைக் கர்நாடகமும், தமிழ்நாடும் பங்கிட்டுக் கொண்டால், தமிழ்நாட்டுக்கு எவ்வளவு தண்ணீர் கிடைக்கும்? அது எப்படி காவிரி நீர்ச் சிக்கலைத் தீர்த்துவிடும்?
ஏற்கெனவே, தமிழ்நாடு அரசு பணம் கொடுத்து கிருஷ்ணா ஆற்றிலிருந்து கால்வாய் வெட்டப்பட்டு சென்னை குடிநீருக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. ஓராண்டுக்கு 12 ஆ.மி.க. கிருஷ்ணா நீர் சென்னைக்கு வர வேண்டும். இதுவரை எந்த ஆண்டிலும், 12 ஆ.மி.க. தண்ணீர் சென்னைக் குடிநீருக்கு ஆந்திரப்பிரதேசம் விட்டதே கிடையாது!
கிருஷ்ணாவிலிருந்து 12 ஆ.மி.க. தண்ணீர் பெறுவதற்காக தமிழ்நாடு அரசுக்கும் ஆந்திரப்பிரதேச அரசுக்குமிடையே 1977இல் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இத்திட்டத்திற்காக, 2015 மார்ச் வரை மட்டும், சற்றொப்ப 662 கோடி ரூபாயை ஆந்திராவுக்கு தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. ஆனால், இத்திட்டப்படி 12 ஆ.மி.க. தண்ணீர் வரவில்லை, அதிக அளவாக ஓராண்டிற்கு 3.5 ஆ.மி.க. தண்ணீர் மட்டுமே வந்திருக்கிறது!
இந்த நிலையில், கோதாவரியிலிருந்து காவிரிக்குத் தண்ணீர் வரும் என்றும், அது கர்நாடகத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலுள்ள காவிரிச் சிக்கலைத் தீர்த்துவிடும் என்றும் கூறுவது, தமிழ் மக்களை ஏமாளிகளாகக் கருதிக் கொண்டு கூறுவதாகும்!
“கர்நாடகத்திடமிருந்து காவிரி நீர் கோரும் உரிமையை மறந்துவிடுங்கள், கங்கையை நினையுங்கள், கோதாவரியை நினையுங்கள்” என்று தந்திரமாக திசைதிருப்பிவிட்டு - தமிழ்நாட்டை வஞ்சிக்கும் நோக்கம்தான் நடுவண் அமைச்சரின் கோதாவரித் திட்ட அறிவிப்பில் தெரிகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், செய்தியாளர்களிடம் “கோதாவரி நீர் கொண்டு வரும் அற்புதமான திட்டத்தை நடுவண் அமைச்சர் அறிவித்திருக்கிறார்” என்று கூறி, மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். கோதாவரித் தண்ணீர் வந்துவிட்டால், டெல்டா மாவட்டங்களில் பருவமழை தவறும்போது ஏற்படும் சாகுபடி பாதிப்பு நீங்கிவிடும் என்றும் முதலமைச்சர் கூறியிருக்கிறார்.
காவிரி டெல்டாவில் சாகுபடி பாதிக்கப்படுவதற்கான முதற்பெரும் காரணம், கர்நாடகம் தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரை திறந்து விட மறுப்பதுதான் என்பதை மறைத்து, பருவமழைப் பொய்த்துப் போவதுதான் காரணம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கூறுவது ஞாயமா? நேர்மையா?
நடப்பாண்டில் கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், சராசரி அளவைவிட மிக அதிகமாக மழை பெய்து, கர்நாடக அணைகளும் ஏரிகளும் நிரம்பின. ஆனாலும்கூட, தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய மாதவாரியான அளவு நீரைக் கர்நாடகம் திறந்துவிட மறுத்துவிட்டது. அந்த நீரைப் பெற்றுத் தர இந்திய அரசு முன்வரவில்லை. அந்த நீரைப் பெறும் நேரடி முயற்சிகளில் தமிழ்நாடு அரசும் ஈடுபடவில்லை!
உச்ச நீதிமன்றம் 2,000 கன அடி நீரைத் திறந்துவிடச் சொன்னபோதுகூட, அதைச் செயல்படுத்த நடுவண் அரசு முன்வரவில்லை. இதனால் காவிரிப் பாசன மாவட்டங்களில் சாகுபடியைத் தொடங்கியிருக்கும் உழவர்கள் பெருங் கவலையில் மூழ்கியுள்ளார்கள். மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.
பிப்ரவரி 28ஆம் நாள் (2018) வரையாவது மேட்டூரிலிருந்து தண்ணீர் முழுமையாகத் திறந்து விட்டால்தான் நடப்பு சாகுபடியைப் பாதுகாக்க முடியும். இன்றும் கர்நாடக அணைகளில் நீர் 90% அளவுக்கு நிரம்பியுள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையில் மட்டும் வேண்டுமென்று தண்ணீரைக் குறைத்து வைத்துக் கொண்டு, அந்த நீரை வெளியேற்றி - வேறு நீர் நிலைகளில் கர்நாடக அரசு பதுக்கி வைத்துக் கொண்டுள்ளது.
நடப்பு சாகுபடியைப் பாதுகாக்க கர்நாடகத்திலிருந்து தண்ணீர் பெற வேண்டிய தேவை மிகவும் அதிகமாக உள்ள நிலையில், “கோதாவரித் தண்ணீர் வரும்” என்றும், “ஆகா அற்புதம் அற்புதம்!” என்றும் முதலமைச்சர் குதூகலிப்பது பொறுப்பற்ற செயலாக உள்ளது!
தமிழ்நாட்டு மக்கள், கங்கை - காவிரி இணைப்பு, கோதாவரி நீர் கொண்டு வருதல் போன்ற கானல் நீர் திட்டங்களில் இனியும் ஏமாற மாட்டார்கள். காவிரியில் தமிழ்நாட்டுக்குரிய சட்டப்பூர்வமான உரிமையை நிலைநாட்டவும், நடப்பு சாகுபடிக்குக் கர்நாடகத்திடமிருந்து தண்ணீரைப் பெறவும் இந்திய அரசும் - தமிழ்நாடு அரசும் நெஞ்சத்தூய்மையோடு விரைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாண்டும் சாகுபடி பொய்த்தால் வாழ வழி இல்லாத மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.