ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தோழர் திருமுருகன் காந்தி கைது : தமிழ்நாடு அரசின் சனநாயகப் பறிப்பு தீவிரமாகிறது! தோழர் பெ. மணியரசன் கண்டனம்!

தோழர் திருமுருகன் காந்தி கைது : தமிழ்நாடு அரசின் சனநாயகப் பறிப்பு தீவிரமாகிறது! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்! 
#ReleaseThirumurugan

மே பதினேழு இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களை நேற்று (09.08.2018) பெங்களுரு வானூர்தி நிலையத்தில், தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்து, சிறையிலடைக்க சென்னை கொண்டு வந்திருப்பது முற்றிலும் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும், இந்தியக் குற்றவியல் மற்றும் தண்டனைச் சட்டங்களுக்கும் எதிரான செயலாகும்! இச்செயல் சனநாயக விரோதமானது மட்டுமல்ல, தமிழின உரிமைகளுக்கும் எதிரானது!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அறப்போராட்டம் நடத்திய மக்கள் மீது மனிதவேட்டை நடத்துவது போல், காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி 15 பேரை சுட்டுக் கொன்றும், சற்றொப்ப 80 பேருக்கு படுகாயங்களை உண்டாக்கியும் தமிழ்நாடு காவல்துறை வன்முறை வெறியாட்டம் நடத்தியது. இந்த மனித உரிமை மீறலையும், சென்னை – சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தோரைக் கைது செய்த தமிழ்நாடு அரசின் சனநாயக விரோதப் போக்கையும் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தோழர் திருமுருகன் காந்தி எடுத்துக்கூறி, நீதிகேட்டதுதான் அவர் செய்த “குற்றம்” !

ஐ.நா. மன்றத்தின் சட்டதிட்டங்கள்படி ஒரு நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல்களை அந்நாட்டு மக்கள் வெளிப்படுத்துவதற்கு மனித உரிமை மன்றம் வாய்ப்பளிக்கிறது. ஐ.நா. மன்றத்தின் இச்சட்டம் இந்திய அரசு ஏற்றுக் கொண்ட சட்டமாகும். இச்சட்டத்தின்படிதான் திருமுருகன் காந்தி பேசியிருக்கிறார். திருமுருகன் காந்தியின் மேற்படி உரையை மே பதினேழு இயக்கத்தினர் தங்களின் முகநூலில் வெளியிட்டார்கள் என்றும், அதைப் பார்த்த தமிழ்நாட்டைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க.வினர் சென்னை காவல்துறையில் புகார் கொடுத்தார்கள் என்றும், அந்தப் புகாரின் அடிப்படையில் திருமுருகன் காந்தியைக் கைது செய்திருப்பதாகவும் காவல்துறை கூறுகிறது.

அண்ணா தி.மு.க.வினர் புகார் அளித்திருப்பதால், திருமுருகன் காந்தி பேச்சு சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை உருவாக்கும் என்று கருதி, அவரைக் கைது செய்திருப்பதாகக் கூறுகிறார்கள். திருமுருகன் காந்தி பேச்சால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை எழும் என்று கூறும் காரணம், எவ்வளவு போலியானது – புனைவானது என்பது எல்லோருக்கும் புரியும்! அவர் ஐ.நா. அவையில் பேசிவிட்டு வந்த, இந்த இடைப்பட்ட ஒரு மாத காலத்தில் அவரால் எந்த சட்டம் ஒழுங்குப் பிரச்சினையும் எழவில்லை! இது ஒரு அடிப்படையற்ற கற்பனை என்பதற்கு இதுவே சான்று!

தமிழ்நாடு அரசின் இந்தப் புதிய போக்கை ஏற்றுக் கொண்டால், யார் வேண்டுமானால் யார் மீதும் பொய் புகார் கொடுக்கலாம், அந்த அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறையினர் அவர்களைக் கைது செய்யும் என்ற நிலை ஏற்படும்!

தமிழ்நாடு அரசு நடுவண் அரசின் அறிவுறுத்தலோடு தொடர்ந்து தமிழ்நாட்டில் சனநாயக உரிமைகளையும் மனித உரிமைகளையும் பறித்து வருகிறது. அதன் ஒரு பகுதிதான் திருமுருகன் காந்தி கைது! இச்செயல்களால் தமிழ்நாடு அரசு, மேலும் மேலும் தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அந்நியப்பட்டு வருகிறது என்ற உண்மையை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

சனநாயக உரிமைகள், மனித உரிமைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழர்களின் குடிமை உரிமைகள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு தொடர்ந்து பறித்து வருகிறது. பணயக் கைதிகள் போல், மக்களை தன் ஏவலுக்கும் கண்காணிப்புக்கும் கட்டுப்பட்டவர்களாக வைத்துக் கொள்ள தமிழ்நாடு அரசு முனைகிறது.

எனவே, மக்கள் உரிமையில் அக்கறையுள்ள அனைவரும் சனநாயக உரிமைகளை மீட்கவும், தோழர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தியும் மக்கள் திரள் அறப்போராட்டங்கள் நடத்த வேண்டிய தேவை உள்ளது.

தமிழ்நாடு அரசு, தனது சனநாயக விரோத நடவடிக்கைகளைக் கைவிட வேண்டுமென்றும், தோழர் திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

#ReleaseThirumurugan

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.