ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

இந்திய அரசின் “தேசியக் கல்விக் கொள்கை – 2020” ஆரியத்துவ – தனியார்மயக் கல்வியை ஊக்குவிக்கிறது! மாநில அதிகாரத்தைப் பறிக்கிறது! கி. வெங்கட்ராமன் கண்டனம்!




இந்திய அரசின் “தேசியக் கல்விக் கொள்கை – 2020”
ஆரியத்துவ – தனியார்மயக்

கல்வியை ஊக்குவிக்கிறது!

மாநில அதிகாரத்தைப் பறிக்கிறது!


தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!

எந்தவொரு மாற்றுக் கருத்தையும், அது எவ்வளவு ஆரோக்கியமானதாக இருந்தாலும் கேட்டுக் கொள்வதில்லை என்ற முடிவோடுதான் நரேந்திர மோடி அரசு பல சட்ட வரைவுகளின் மீது கருத்துக் கேட்பை ஒரு சடங்காக நடத்துகிறது. கல்விக் கொள்கையிலும் இது வெளிப்பட்டிருக்கிறது.
“தேசியக் கல்விக் கொள்கை வரைவு – 2019” என்ற பெயரால், கடந்த ஆண்டு (2019) மே மாதத்தில் முனைவர் கஸ்தூரிரெங்கன் குழுவின் 484 பக்க அறிக்கையை இந்திய அரசு முன்வைத்தது. இதன் மீது, இந்தியா முழுவதிலுமிருந்து கல்வியாளர்கள் மாணவர் இயக்கங்கள், சில அரசியல் கட்சிகள், மக்கள் இயக்கங்கள் ஆகியவை மிக விரிவான மாற்றுக் கருத்துகளை முன்வைத்திருந்தனர்.
குறிப்பாக, தமிழ்நாட்டில் இந்தக் கல்விக் கொள்கை வரைவு – 2019-இன் மீது மிக விரிவான கருத்துரையாடல்கள் நடைபெற்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பிலும், தனி நபர்களாகவும் ஏராளமான கருத்துகள் இந்திய அரசுக்கு அனுப்பப்பட்டன.
இவை எதையுமே சட்டை செய்யாமல், தாங்கள் ஏற்காததன் காரணத்தையும் விளக்காமல் அதே வரைவை 60 பக்கத்தில் இன்னும் மோசமாக வடிவமைத்து, நேற்று (29.07.2020) இந்திய அமைச்சரவை “தேசியக் கல்விக் கொள்கை – 2020 (NEP – 2020)” என்ற பெயரால் இறுதி செய்து அறிவித்துவிட்டது.
தலைமுறை தலைமுறையாக மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் கல்விக் கொள்கை குறித்து, நாடாளுமன்றத்திலோ நாடாளுமன்றக் குழுக்களிலோ எந்த விவாதமும் நடத்தாமல் அரசின் கொள்கை அறிவிப்பாக அறிவித்திருப்பது, பா.ச.க. அரசு எந்தவித சனநாயகப் பண்பையும் மக்களாட்சி நிறுவனங்களையும் மதிக்கத் தயாராக இல்லை என்பதையே காட்டுகிறது.
ஆரிய – சமற்கிருத ஒற்றைப் பண்பாடு, இந்தி ஆதிக்கம், பன்னாட்டு மற்றும் இந்தியப் பெருங்குழுமங்களுக்குத் தேவையான படிப்பாளிகளை உருவாக்குவது, கல்வியை மேலும் மேலும் தனியார்மயமாக்குவது, இவற்றிற்கேற்ப இந்திய அரசின் கைகளில் கல்வித்துறை அதிகாரத்தை முழுவதுமாகக் குவித்துக் கொள்வது என்ற நோக்கத்தை நிறைவு செய்வதற்காகவே இக்கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின் பொது அதிகாரப் பட்டியலில் கல்வித்துறை இருப்பதை அப்படியே வைத்துக் கொண்டு, அரசமைப்புச் சட்டத்தில் எந்தத் திருத்தமும் செய்யாமலேயே இந்திய அரசின் கைகளுக்கு கல்வி குறித்த முழு அதிகாரத்தையும் மாற்றிக் கொள்வது என்ற சூதானத் திட்டம் இக்கல்விக் கொள்கையின் வழியாக செயல்படுத்தப்படுகிறது.
சமற்கிருதத்தைப் பள்ளிக் கல்வியிலிருந்தே திணிப்பது, மூன்றாவது மொழி என்ற பெயரால் கொல்லைப்புற வழியில் இந்தியைத் திணிப்பது, கல்வித்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பது, பல்கலைக்கழக இணைப்பிலிருந்து கல்லூரிகளைப் பிரித்து தன்னாட்சிக் கல்லூரிகள் என்ற பெயரால் தனியார் கல்வி முதலாளிகளின் வேட்டைக்கு வழிதிறப்பது, மருத்துவக் கல்லூரிக்கு அனைத்திந்திய “நீட்” தேர்வு இருப்பதுபோல், கலை அறிவியல் பாடங்கள் உள்ளிட்ட கல்லூரி வகுப்புகள் அனைத்திற்கும் அனைத்திந்திய நுழைவுத் தேர்வு வைப்பது, அதற்கென தனியார் நிறுவனங்களின் நுழைவை உறுதி செய்யும் வகையில் “தேசியத் தேர்வு ஆணையம்” (National Testing Agency) உருவாக்குவது, கல்வி தொடர்பான மாநில அரசின் அதிகாரம் அனைத்தையும் பறிப்பது, மழலையர் வகுப்பிலிருந்து உயர்கல்வி வரை அனைத்திலும் இந்திய அரசின் முற்றதிகாரத்தை நிறுவும் வகையில் “இராஷ்ட்ரிய சிக்ஷா அபியான்” என்ற பெயரில் இந்தியக் கல்வியமைச்சர் தலைமையில் ஆணையத்தை உருவாக்குவது என அனைத்து முனைகளிலும் பிற்போக்கான கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்கு பா.ச.க. ஆட்சி முனைகிறது.
“கல்வித் தொண்டர்கள்” என்ற பெயரால் ஆர்.எஸ்.எஸ். ஆட்களையும், அற நிறுவனங்கள் – அரசுப் பங்கேற்பு என்ற பெயரால் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் கல்வி நிறுவனங்களையும் திணிக்கும் தீய திட்டமும் “தேசியக் கல்விக் கொள்கை – 2020” மூலம் நிறைவேற்றப்பட இருக்கிறது.
எனவே, மாநில அரசின் கல்வி உரிமையைப் பறிக்கிற, சமற்கிருதம் மற்றும் இந்தியைத் திணிக்கிற, கல்வித்துறையில் தங்குதடையற்ற தனியார் கட்டணக் கொள்ளைக்கு வழி ஏற்படுத்துகிற, கல்வி உளவியலுக்கு முரணான இந்த “தேசியக் கல்விக் கொள்கை – 2020”-ஐ தமிழ்த்தேசியப் பேரியக்கம் முற்றிலும் நிராகரிக்கிறது! பிற்போக்கான இந்தக் கல்விக் கொள்கையை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்துகிறது!
கல்வி அதிகாரத்தை மாநிலங்களுக்குத் திரும்ப அளித்து, கல்வியாளர்களைக் கொண்டு அந்தந்த மாநிலங்கள் தங்கள் சூழலுக்கேற்ப - கல்விக் கொள்கையை உருவாக்கிக் கொள்வதற்கு வழி ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

1 comment:

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.