ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஆபாசத்தைப் பரப்பும் கருத்தடை, உள்ளாடை விளம்பரங்களை ஒளிபரப்ப நிரந்தரத் தடைதேவை! - மகளிர் ஆயத் தலைவர் ம. இலெட்சுமி அம்மாள் அறிக்கை!



ஆபாசத்தைப் பரப்பும் கருத்தடை, உள்ளாடை
விளம்பரங்களை ஒளிபரப்ப நிரந்தரத் தடைதேவை!


மகளிர் ஆயத் தலைவர் ம. இலெட்சுமி அம்மாள் அறிக்கை!


ஆபாசத்தைப் பரப்பும் வகையிலான கருத்தடை சாதனங்கள், உள்ளாடைகள் விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையிட்டுள்ளதை மகளிர் ஆயம் சார்பாக வரவேற்கிறேன்.

விருதுநகர் மாவட்டம் இராசபாளையத்தைச் சேர்ந்த சகாதேவராசா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அதில், தொலைக்காட்சிகளில் ஆபாசத்தைப் பரப்பும் வகையில் கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சனை தொடர்பான மருந்துகள், உள்ளாடைகள், சோப்புகள் போன்றவற்றிற்கான விளம்பரங்கள் ஒளிபரபப் படுவதைச் சுட்டிகாட்டி, அவ்விளம்பரங்கள் இளைஞர்கள் மனதை கெடுத்து சீரழிப்பதால் அவற்றிற்குத் தடை கோரியிருந்தார்.

நேற்று (12.11.2020) மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த ஆபாச விளம்பரங்கள் ஒளிபரப்ப இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மேலும், இது குறித்து நடுவண் தகவல் தொழில்நுட்பத்துறை செயலர், தமிழக செய்தி, திரைப்பட தொழில்நுட்ப மற்றும் திரைப்பட சட்டத்துறை செயலர் ஆகியோர் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க ஆணையிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.

இந்த வழக்கைத் தொடுத்த இராசபாளையம் சகாதேவராசா அவர்களுக்கு மகளிர் ஆயம் பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறது. இடைகாலத் தடைவிதித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோருக்கு மகளிர் ஆயம் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் காட்சி ஊடகங்களில் இவ்வாறான ஆபாச விளம்பரங்களை நிரந்தரமாகத் தடை செய்து ஆணையிட வேண்டும் என்று மகளிர் ஆயம் சார்பில் கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.


செய்தித் தொடர்பகம்,
மகளிர் ஆயம்

தொடர்புக்கு:
7373456737, 9486927540
முகநூல் : www.fb.com/MagalirAyam


 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.