ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மண்ணின் மக்கள் வேலைத் துண்டறிக்கை கொடுத்த பேரியக்கத் தோழர்களிடம் பா.ச.க. வினர் தகராறு! நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஐயா பெ.மணியரசன் அறிக்கை!

 



மண்ணின் மக்கள் வேலைத் துண்டறிக்கை
கொடுத்த பேரியக்கத் தோழர்களிடம் பா.ச.க. வினர் தகராறு! நடவடிக்கை எடுக்க வேண்டும்


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ.மணியரசன் அறிக்கை!


மற்ற மாநிலங்களைப் போல் தமிழ்நாட்டிலும் மண்ணின் மக்கள் வேலை உரிமைச் சட்டம் இயற்றப்பட வேண்டும். தொழில், வணிகம் ஆகியவற்றில் தமிழர்கள் முன்னுரிமைப் பெற்று முன்னேற வேண்டும் என்ற மக்கள் நல நோக்கத்துடன், “தமிழ்நாட்டுத் தொழில் வணிகம் வேலைகள் தமிழர்களுக்கே”, என்ற முழக்கத்துடன் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கடந்த 01.11.2020 முதல் வெளியாரைப் புறக்கணிக்கக் கோரும் ஒத்துழையாமைப் பரப்புரை செய்து வருகிறது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இப்பரப்புரை கொரோனா முடக்க விதிகளைக் கடைபிடித்து மூவர், நால்வர்க்கு மேல் சேர்ந்து செல்லாமல் நடந்து வருகிறது.

கோயம்புத்தூர் இராமகிருஷ்ணா பகுதி பொன்னையா ராசபுரத்தில் 20.11.2020 வெள்ளிக்கிழமை இரவு 08.30 மணி அளவில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் கு. ராஜேஷ்குமார் மற்றும் தோழர் செல்வராசு இருவரும் அங்கு கடைகளில் மேற்படி ஒத்துழையாமை துண்டறிக்கை கொடுத்துள்ளார்கள். அப்போது அங்கு வந்த பாரதிய சனதாக் கட்சியின் கோவை ஆர்.எஸ்.புரம் மண்டலப் பொறுப்பாளர் இரத்தினம் என்பவர் “இந்துக்களுக்கு எதிரான பிரச்சாரம் செய்கிறாய்; நோட்டீஸ் கொடுக்கக் கூடாது என்று மேற்படி இரண்டு தோழர்களையும் தடுத்துள்ளார். அத்துடன் கைப்பேசியில் பேசி சற்றொப்ப 25 பேர் அளவுக்கு பா.ச.க.வை சார்ந்தவர்களை அழைத்து எல்லோருமாகச் சேர்ந்து ராஜேஷ்குமாரையும், செல்வராசையும் மிரட்டியுள்ளனர்.

அத்துடன், கோயம்புத்தூரில் வெரைட்டி ஹால் B – 3 காவல் நிலையத்திற்கும் கைப்பேசியில் தவறான தகவல்கள் சொல்லிக் காவலர்களையும் அந்த இடத்திற்கு வரச் செய்து விட்டார் இரத்தினம்.
உடனே அங்கு வந்த காவல் துறையினர் தோழர்கள் கு. ராஜேஷ்குமாரையும் செல்வராசையும் B – 3 காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விட்டார்கள். இரவு 12 மணி வரை விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் அவர்களை வைத்திருந்துவிட்டு, “காவல் நிலைய அனுமதி வாங்காமல், இனிமேல் துண்டறிக்கைகள் கொடுக்க மாட்டேன்” என்று காவல் துறையினர் எழுதிய தாளில் கையெழுத்து வாங்கிக் கொண்டு இருவரையும் விடுவித்துள்ளார்கள். பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்த இதே இரத்தினம் கடந்த 01.11.2020 அன்று எங்கள் அமைப்புத் தோழர்கள் கோவை காந்திப் பூங்காப் பகுதியில் காலை 11 மணியளவில் இதே துண்டறிக்கையை மக்களிடம் கொடுத்துக் கொண்டிருந்த போது, சற்றொப்ப பத்து பேரை அழைத்துக் கொண்டு வந்து துண்டறிக்கை கொடுப்பதைத் தடுத்து தகராறு செய்துள்ளனர். அப்போது அந்தப்பகுதியில் வந்த காவல்துறையினர் தலையிட்டு சிக்கல் வராமல் தடுத்துள்ளனர்.

பா.ச.க. வைச் சேர்ந்த மேற்படி இரத்தினத்தினமும் மற்றவர்களும் பேரியக்கத் தோழர்கள் துண்டறிக்கைக் கொடுப்பதை, தடுப்பது சட்ட விரோத செயல்; வன்முறைச் செயல்! இந்திய அரசமைப்புச் சட்டம் அமைப்புகளுக்கும் தனி நபருக்கும் வழங்கும் கருத்துரிமையை வன்முறை மூலம் தடுக்கும் செயல் அத்துண்டறிக்கையின் மீது அவர்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தால், காவல்துறையினரிடம் எழுத்து வடிவில் அவர்கள் புகார் தெரிவித்திருக்கலாம். அந்த சனநாயகப் பாதையை பின்பற்றாமல் கும்பல் சேர்நது வன்முறையாகத் தடுக்கும் மேற்படி இரத்தினம் மற்றும் அவரோடு வந்தவர்கள் மீது காவல்துறை தலைமை உ்டனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்படி பா.ச.க., பொறுப்பாளர் இரத்தினம்¬¬ மற்றும் அவரின் ஆட்கள் விருப்பப்படி சட்டத்திற்கு புறம்பாகச் செயல்பட்டு, ராசேசுகுமாரையும், செல்வராசையும் காவல் நிலைத்திற்கு அழைத்துச் சென்று சட்டத்திற்குப் புறம்பாக எழுதிவாங்கிக் கொண்டு வெளியில் விட்டதற்குப் பொறுப்பான மேற்படி B – 3 காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் மீது தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல் துறைத் தலைமையும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.