ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

வடநாட்டு டாட்டாவுக்காக - சனநாயகப் படுகொலை செய்கிறது தி.மு.க. ஆட்சி!


 வடநாட்டு டாட்டாவுக்காக - சனநாயகப்

படுகொலை செய்கிறது தி.மு.க. ஆட்சி!

================================

பெ. மணியரசன்,

தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

================================


தமிழ்நாட்டில் – கிருட்டிணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம் - வன்னியபுரத்தில் அமைந்துள்ள வடநாட்டு டாட்டா மின்னணுத் தொழிற்சாலையில் தமிழர்களுக்கு வேலை தர மறுத்து, இந்திக்காரர்களையும் இன்னபிற வடநாட்டினரையும் வேலையில் மிகையாகச் சேர்த்துள்ளனர். 


இந்திக்காரர்கள் திணிப்பு

------------------------------------

கடந்த அக்டோபரில் (2022) ஜார்க்கண்ட் பெண்கள் 860 பேரை தனித் தொடர்வண்டியில் அழைத்து வந்து இங்கு வேலையில் சேர்த்தனர். ஜார்க்கண்ட்டில் அத்தொடர்வண்டியை, இந்திய ஒன்றிய பழங்குடியினர் நலவாழ்வுத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா, பச்சைக்கொடி காட்டி அனுப்பி வைத்தார். மேலும் பலர் வந்து கொண்டுள்ளனர்.


இன்னும் 6,000 ஜார்க்கண்ட் பழங்குடிப் பெண்ளை இங்கு வேலையில் சேர்ப்பதற்காக அங்கு இராஞ்சியிலும், அசாரிப்பாக்கிலும் பயிற்சி கொடுக்கப்பட்டு வருவதாக இந்திய ஒன்றிய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் புதுதில்லியில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்தார். 


தொழிற்சாலை அமைந்துள்ள தமிழ்நாட்டுப் பெண்களுக்கும், ஆண்களுக்கும் வேலை தர மறுத்து வந்தது டாட்டா நிறுவனம். ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை வாங்கிப் போட்டுள்ள அந்நிறுவனம், நிலம் கொடுத்தவர்களின் வீட்டுப் பிள்ளைகளுக்கு வேலை தர மறுத்து வருகிறது. 


தமிழ்நாட்டிற்குள்ளேயே தமிழர்களுக்கு வேலை தர மறுக்கும் டாட்டாவின் தமிழின ஒதுக்கல் (Aparthied) கொள்கையைக் கண்டித்தும், 90 விழுக்காடு வேலை மண்ணின் மக்களுக்கே கோரியும், குறிப்பாக கிருட்டிணகிரி மாவட்ட மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை கோரியும் 09.12.2022 அன்று, டாட்டாவின் மின்னணுத் தொழிற்சாலையை முற்றுகையிடும் போராட்டத்தை தமிழ்த்தேசியப் பேரியக்கம் அறிவித்தது. இது வழக்கமான சனநாயகப் போராட்டம்! 


இந்த அறவழிப் போராட்டத்திற்கு அனுமதி மறுத்தது காவல்துறை. கிருட்டிணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. சரோஜ் குமார் தாக்கூர் அவர்களை 07.12.2022 அன்று நானும், பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், அறப்போராட்டத்திற்குத் தலைமை ஏற்க இருந்த தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ. மாரிமுத்து ஆகியோரும் சந்தித்துப் பேசி, எந்த வன்முறையும் இடம் பெறாத இந்த மக்கள் திரள் போராட்டத்திற்கு அனுமதி கோரினோம். 


மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், “வன்னியபுரத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது; கிருட்டிணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடத்திக் கொள்ளுங்கள்” என்றார். நாங்கள் அதை ஏற்கவில்லை. வன்னியபுரத்தில் போராட்டம் நடத்தக் கோரிய கடைத்தெரு பகுதிக்கும், டாட்டா தொழிற்சாலைக்கும் இடையே ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவு உள்ளது. காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், வன்னியபுரத்தை அடுத்துள்ள கூத்தனப்பள்ளி கிராமத்தின் ஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ள திடல் பகுதியில் அறப்போராட்டத்தை காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவு செய்து கொள்கிறோம் என்று இடம் மாற்றிக் கேட்டோம். அதற்கும் அனுமதி மறுத்தார்கள். 


காவல்துறையின் அடக்குமுறை

-------------------------------------------

மறுநாள் (08.12.2022) காலையிலிருந்து தமிழ்நாடு அரசு, தமிழ்த்தேசியப் பேரியக்கத்திற்கு எதிரான தனது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது; காவல்துறையை ஏவிவிட்டது. தஞ்சை மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம் போன்ற இடங்களில் த.தே.பே. பொறுப்பாளர்களுக்கு காவல்துறையினர் எழுத்து வடிவில் அழைப்பாணை (Summon) கொடுத்து, தோழர்களைக் காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று தடுத்து வைத்தனர். 


தூத்துக்குடி மாவட்டம் – குரும்பூர் காவல் நிலையத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் மு. தமிழ்மணியைக் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றதுடன், அவர் வீட்டு முன் காவல்துறை வண்டியை நிறுத்தி, நான்கு காவலர்களையும் நிறுத்தி விட்டனர். தஞ்சை நகரத்தில், உடல்நலம் சரியில்லாத மூத்த தோழர் இராசு. முனியாண்டி, மாநகரச் செயலாளர் இலெ. இராமசாமி ஆகியோர் வீடுகளுக்குக் காவல் துறையினர் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். 


கும்பகோணத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர், பொதுக்குழு உறுப்பினர் தோழர் சாமிமலை தீந்தமிழன், குடந்தை நகரச் செயலாளர் தோழர் செழியன் ஆகியோரைக் கிழக்குக் காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து உட்கார வைத்தனர். பல இடங்களில் காவல் துறையினர் கொடுத்த அழைப்பாணைகளின் மாதிரிக்கு, தோழர் விடுதலைச்சுடருக்கு கொடுத்ததின் வாசகம் இதோ :


”மேற்குக் காவல் நிலையம், கும்பகோணம்.

அழைப்பாணை – ச/பி. 160/91 54 கு.வி.மு.ச.).


“தமிழர் வாழ்வுரிமை காக்க – தமிழர் தாயகம் காக்க தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் ஓசூர் டாட்டா மின்னணு (எலெக்ட்ரானிக்ஸ்) தொழிற்சாலை முற்றுகைப் போராட்டத்திற்குச் செல்ல திட்டமிட்டுள்ளது தொடர்பாக தங்களை விசாரணை செய்ய வேண்டியுள்ளதால் தாங்கள் 08.12.2022 ஆம் தேதி இரவு 08.00 மணிக்கு கும்பகோணம் கிழக்குக் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


- காவல் ஆய்வாளர், 

மேற்குக் காவல் நிலையம், 

(பொ) கிழக்குக் காவல் நிலையம்,

கும்பகோணம், 08.12.2022.


இரவு 8 மணிக்கு வரச் சொல்லும் அழைப்பாணையை இரவு 7 மணிக்கு கொடுத்துவிட்டு, அப்போதே த.தே.பே. அலுவலகத்திலிருந்து தோழர் விடுதலைச்சுடரை கைது செய்து அழைத்துப் போனார்கள். 


கும்பகோணத்தில் தோழர்கள் ஆதி. கலியபெருமாள், அரங்க. பொன்முடி, குமரன் வீடுகளுக்குச் சென்று காவல்துறையினர் தேடினர். 


திருச்சியில் தோழர்கள் மூ.த. கவித்துவன் (தலைமைச் செயற்குழு), இராசாரகுநாதன் (பொதுக்குழு உறுப்பினர்), முருகேசன் (விராலிமலை) ஆகியோரை அழைத்து வந்து திருச்சி தனியார் மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்தனர். 


தஞ்சை மாவட்டம், பூதலூர் ஒன்றியத்தில் செங்கிப்பட்டி (சாணூரப்பட்டி) பேரியக்க அலுவலகத்தில் இருந்த தோழர்கள் பி. தென்னவன் (பூதலூர் ஒன்றியச் செயலாளர்), இரெ. கருணாநிதி (பொதுக்குழு உறுப்பினர்), க. காமராசு (பொதுக்குழு உறுப்பினர்) உள்ளிட்ட தோழர்களை அப்படியே அலுவலகத்திலேயே வீட்டுக்காவல் வைத்தனர். 


கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இலால்கான் தெரு பேரியக்க அலுவலகத்தில் இருந்த தோழர்கள் ஆ. குபேரன் (பொதுக்குழு உறுப்பினர்), வேந்தன் சுரேசு (சிதம்பரம் நகரச் செயலாளர்), எல்லாளன் (முன்னாள் நகரச் செயலாளர்) மற்றும் பெண்கள் உள்ளிட்ட பலரை வெளியே செல்லவிடாமல் தடுத்துக் காவலில் வைத்தனர், காவல்துறையினர்! இந்நடவடிக்கைக்குக் காவல் உதவிக் கண்காணிப்பாளர் தலைமை தாங்கினார். சீர்காழி நகரச் செயலாளர் தோழர் அரவிந்தனை ஓசூர் செல்லக்கூடாது என்று தடுத்தனர் காவல்துறையினர். 


நாமக்கல் மாவட்டம் – வெண்ணந்தூரில் ஐயா தங்கவேல் அவர்கள் தலைமையில் ஓசூர் புறப்பட்ட இளந்தோழர்களைத் தடுத்து நிறுத்தினர் காவல்துறையினர். அதேபோல், அம்மாவட்டம் குமாரபாளையம் தோழர் வெ. ஆறுமுகம் அவர்கள் இல்லத்திற்குச் சென்று அவரை வெளியே வராமல் தடுத்தனர் காவல்துறையினர். தருமபுரியில் தோழர் முருகேசன் மற்றுமுள்ள பேரியக்கத் தோழர்களை ஓசூர் போகக் கூடாது என்று காவல்துறையினர் தடுத்தனர். மதுரையில் மாநகரச் செயலாளர் தோழர் கதிர்நிலவனைக் காவல் துறையினர் ஓசூர் போகக்கூடாது என்று எச்சரித்தனர். தென்காசி மாவட்டம், புளியங்குடியில் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பாண்டியன் தலைமையில் ஓசூர் புறப்பட இருந்த தோழர்களைத் தடுப்பதற்காக காவல்துறையினர் அவர் வீட்டிற்குச் சென்றனர். ஆனால், அதற்கு முன்பே அவர் ஊர்தியில் புறப்பட்டுச் சென்றுவிட்டார். 


இவ்வாறு பல ஊர்களில் பல்வேறு வடிவங்களில் காவல்துறையின் அடாவடித்தனங்கள் அரங்கேறியுள்ளன. இந்த சனநாயக விரோத – அடாவடித்தனங்கள் அனைத்திற்கும் முழுப் பொறுப்பு காவல்துறையினர் அல்லர்; அவர்கள் அம்பு; ஏவியவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்! 


மேற்படி டாட்டா ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களான வன்னியபுரம், கூத்தனப்பள்ளி, நல்ராலப்பள்ளி, ஊடேதுர்க்கம், நாகமங்கலம், வராகனப்பள்ளி, கருக்கம்பட்டி போன்ற பல ஊர்களில் காவல்துறையினர் புகுந்து, யாரும் போராட்டத்துக்குப் போகக் கூடாது, போனால் வெளியே வர முடியாதபடி சிறையில் போட்டு விடுவோம் என்று மிரட்டினர். அவ்வூர்களில் முற்றுகைப் போராட்டத்திற்காக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் அனைத்தையும் கிழித்தெறிந்தனர். வைக்கப்பட்டிருந்த பதாகைகளை எடுத்துச் சென்றனர். 


பேரியக்கத்தின் பதிலடி

---------------------------------

இந்நிலையில், தலைமையிலிருந்து நாங்கள், தமிழ்நாடு தழுவிய அளவில் பேரியக்கப் பொறுப்பாளர்களுக்கு கைப்பேசி வழியே ஓர் அறிவுறுத்தல் செய்தோம். “ஓசூருக்குப் புறப்பட விடாமல் உங்களைக் காவல் துறையினர் தடுத்தால், அங்கங்கே சாலை மறியல் செய்து கைதாகுங்கள்” என்பதே அது! 


இதற்கிடையே, ஓசூர் வருவாய்க் கோட்ட சார் ஆட்சியர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக,  அவர் அலுவலகப் பொறுப்பாளர் தொலைப்பேசி வழியாகத் தோழர் கோ. மாரிமுத்து அவர்களிடம் தெரிவித்தார். மாரிமுத்து கிராமங்களுக்குச் சென்றிருந்ததால் அவரால் போக முடியவில்லை. ஏன் வரவில்லை என்று அடுத்தநிலை அதிகாரி தொலைப்பேசி வழி மிரட்டினார். 


இவ்வளவுக்கும் பிறகு 08.12.2022 இரவு 8 மணியளவில் ஓசூரில் ஒரு விடுதியில் காவல்துறை அதிகாரிகளுக்கும், எங்களுக்கும் இடையே அமைதிப்பேச்சு நடந்தது. காவல்துறை சார்பில் மாவட்டக் கூடுதல் கண்காணிப்பாளர் திரு. விவேகானந்தன், தேன்கனிக்கோட்டை துணைக் கண்காணிப்பாளர் திரு. முரளி, இராயக்கோட்டை ஆய்வாளர் திரு. சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். அதில், கூத்தனப்பள்ளியைத் தவிர்த்துவிட்டு உத்தனப்பள்ளிக் கடைவீதியில் கூடி அங்கிருந்து டாட்டா தொழிற்சாலைப் பயிற்சிக் கூடத்திற்குச் செல்லும் சாலை வழியில் முழக்கமிட்டுச் சென்று முற்றுகைப் போராட்டம் நடத்த முன்வந்தோம். மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சரோஷ் அவர்களுடன் தொலைப்பேசியில் பேசி ஒரு முடிவுக்கு வந்தோம். 


தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கு மறியல் போராட்டம் நடப்பதைத் தவிர்த்திட, வேறுவழியின்று இங்கு போராட்டம் நடத்தக் காவல்துறை ஒப்புக் கொண்டது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பேரியக்கத் தோழர்களை விடுவிடுத்து விடுவது என்றும் ஏற்றுக் கொண்டது.


ஆனால், அதன் பிறகும் மாவட்டங்களில் தடுத்து வைக்கப்பட்ட தோழர்களைக் காவல்துறையினர் விடுவிக்கவில்லை. உடனே கிருட்டிணகிரி மாவட்டக் காவல் காணிப்பாளர் அவர்களிடமும், சென்னையில் உள்ள உளவுத்துறைத் தலைமை அதிகாரி அவர்களிடமும் தொலைப்பேசியில் முறையிட்டேன். இரவு 10 மணிக்கு மேல் தான் பல இடங்களில் காவல்துறையினர் தோழர்களை விடுவித்தனர். 


இப்படிப்பட்ட சனநாயகப் படுகொலையைக் காவல் துறையினர் தாங்களாகச் செய்ததாக நாங்கள் நம்பவில்லை. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி, தமிழ்நாடு காவல்துறையை வடநாட்டு டாட்டா முதலாளிக்கு ஏவல் துறையாக மாற்றிவிட்டது! 


ஓங்கி ஒலித்த தமிழர் முழக்கம்

------------------------------------------

வடநாட்டு முதலாளி டால்மியாவுக்கு எதிராக 1953இல், லால்குடி வட்டம் – கல்லக்குடியில் தண்டவாளத்தில் தலைவைத்துப்படுத்து கலைஞர் கருணாநிதி தொடர்வண்டி மறியல் செய்தார் என்று பீற்றிக் கொள்ளும் மு.க. ஸ்டாலின் தலைமையானது, அதே வடநாட்டு டாட்டாவுக்காகத் தமிழர்களின் சனநாயக உரிமைகளைப் பறித்து அடக்குமுறைத் தாண்டவம் ஆடிவிட்டது. 


ஆனால், காவல்துறையினரின் இத்தனை அடாவடித்தனங்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் இடையே ஆயிரம் பேர் ஆண்களும் பெண்களும் 09.12.2022 காலை 11 மணியளவில் உத்தனப்பள்ளி கடைவீதி முதன்மைச் சாலையில் அணிவகுத்து மண்ணின் மக்களுக்காக உரிமை முழக்கம் எழுப்பியபோது, அதற்கு முன் ஏற்பட்ட துன்பங்கள் எல்லாம் எங்கோ பறந்தன! அதிலும், அப்பேரணியில் இளையோர் முகங்கள் ஏராளமாக இருந்தன! முண்டியடித்துக் கொண்டு மகளிர் முன் வரிசையில் வந்து முழக்கமிட்டனர்! புத்தெழுச்சி போர்க்கோலம் பூண்டது. உள்ளூர்ப் பிரமுகர்கள் வந்து எங்களுக்குத் துண்டு அணிவித்து,  ஆதரவை வெளிப்படுத்தினர். மழையும் ஒதுங்கிக் கொண்டுப் போராளிகளுக்கு வழிவிட்டது. 


புரட்சிப் பாவேந்தர் பாடல் வரிகள்தாம் நினைவிற்கு வந்தன. 


“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு! 

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே!”.


இந்தப் போராட்டப் பேரணியில் முழங்கி வந்தோர், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தினர் மட்டுமா? இல்லை. தமிழர் கழகத் தலைவர் ஈகச்சுடர் மா.செ.த. தமிழ்முகிலன், தமிழர் முன்னணிப் பொதுச்செயலாளர் இமயம் சரவணன், இளையதலைமுறை கட்சி நிறுவனத் தலைவர் கோவை கோபாலகிருட்டிணன், தமிழர் வணிகக் களம் தலைவர் காஞ்சிபுரம் மு. மேகநாதன், வெள்ளியங்கிரி மலைப் பாதுகாப்புச் சங்கத் தலைவர் பேராசிரியர் முனைவர் காமராசு, சீர்காழி வணிகர் சங்கத் தலைவர் கோபு எனப் பல அமைப்பினரும் பங்கேற்று இடியோசை எழுப்பி எதிரியை எச்சரித்து வந்தனர். 


வழிமறித்துத் தளைப்படுத்திய காவல்துறையினர் வண்டி, வண்டியாய் ஏற்றிக் கொண்டு போய், கெலமங்கலத்தில் மிகமிகப் பெரிய மண்டபத்தில் அடைத்தனர். நாளேடுகளில் காவல்துறை வெளியிட்ட கணக்கு - மொத்தம் 505 பேர். இதில் பெண்கள் 99 பேர்! முழுமையான எண்ணிக்கை இன்னும் கூடுதல்! 


இதே நேரத்தில், சமூக வலைத்தளங்களில் தமிழ்நாடு வேலைகள் தமிழருக்கே என்ற முழக்கம் #TamilnaduJobsForTamils மற்றும் #தமிழகவேலைதமிழருக்கே என்ற குறிச்சொற்களாக எழுந்து நின்றன. சற்றொப்ப 50 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட கீச்சுக்களை சுட்டுரை எதிர்கொண்டது. தமிழ்நாடு அளவிலும், இந்திய அளவிலும் முதல் பத்து இடங்களில் இச்சொற்றொடர்கள் இடம் பெற்றன. போராட்டத்திற்கு வர இயலாதோர், தங்கள் ஆதரவை இதன்வழியே வெளிப்படுத்தி, அரசுக்கு இக்கோரிக்கையின் தீவிரத்தை உணர்த்தினர். போராட்டத்திற்கு முன்பாகவே, பல்வேறு தனியார் வலைக்காட்சிகள் போராட்டத் தலைவர் மாரிமுத்துவின் நேர்காணலை வெளியிட்டன. 


அடைத்து வைக்கப்பட்டுள்ள மண்டபத்தில், பணி ஓய்வு பெற்ற மிகப்பெரிய அதிகாரிகள், காவல்துறையினர், வெவ்வேறு துறை ஆணையர்கள், டாட்டா ஆலையை சுற்றியுள்ள ஊர்ப் பெரியவர்கள், பெண்கள் எனப் பல தரப்பினரும் கைதாகி இருந்தனர். அப்போதுதான் அவர்களோடு எங்களுக்கு அறிமுகமானது.


இறுதிக்கும் இறுதியாக தி.மு.க. என்பது இந்திய ஏகாதிபத்தியத்தின் ஏவல் பாசறை தான் என்பது இப்போதும் வெளிப்பட்டது. பதவி – பணம் – விளம்பரம் மூன்றுக்கும், அல்லது இவற்றுள் ஏதாவதொன்றுக்கு மனத்தைப் பறிகொடுத்த அரசியல் தலைவர்கள் - ஏற்றுக் கொண்ட இலட்சியத்திற்கும், சொந்த இனத்திற்கும் இரண்டகம் செய்வார்கள் என்பது பொது விதி!   


இந்திய ஏகாதிபத்தியமே, இந்தியைத் திணிக்காதே! இந்திக்காரர்களைத் திணிக்காதே! இன்னொரு இந்தி மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றாதே! 


தமிழ்நாட்டில் உள்ள பெரும் தொழில் நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே வழங்கிட, இந்திய அரசுத் துறைகளில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்கிட, தமிழ்நாட்டு அரசு வேலைகள் 100 விழுக்காடு தமிழர்களுக்கே கிடைத்திட தமிழ்நாடு அரசே, தனிச் சட்டம் இயற்று! 


டாட்டா ஆலையே பத்து விழுக்காட்டுக்கு மேல் உள்ள இந்திக்காரர்களை வெளியேற்று! மண்ணின் மக்கள் தமிழர்களுக்கு வேலை கொடு!


இந்த முழக்கங்கள் வெற்றி பெறும் வரை போராடுவோம்! 


=================================

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

=================================

பேச: 9443918095, புலனம் : +91 98419 49462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

================================

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.