ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மார்ச்சு – 1 – காவிரி எழுச்சி மாநாடு: "தமிழினமே தஞ்சையில் திரள்க!"




மார்ச்சு – 1 – காவிரி எழுச்சி மாநாடு: "தமிழினமே தஞ்சையில் திரள்க!"
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுக்குழுவில் தீர்மானம்!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், சென்னை கட்சித் தலைமையகத்தில் 09.02.2014 ஞாயிறு முழுநாள் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார். பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். தோழர் உதயன், க.அருணபாரதி (சென்னை), குழ.பால்ராசு, பழ.இராசேந்திரன், நா.வைகறை (தஞ்சை), அ.ஆனந்தன் (மதுரை), கோ.மாரிமுத்து (ஓசூர்), க.முருகன் (பெண்ணாடம்), மு.தமிழ்மணி (தூத்துக்குடி), க.பாண்டியன் (நெல்லை), விளவை இராசேந்திரன் (கோவை), கு.சிவப்பிரகாசம் (சிதம்பரம்), த.கவித்துவன் (திருச்சி) உள்ளிட்ட கட்சியின் தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இயற்கை வேளாண் அறிஞர் திரு. கோ.நம்மாழ்வார், பெரியார் பெருந்தொண்டர் தோழர் திருவாரூர் தங்கராசு, கல்பாக்கம் தமிழின உணர்வாளர் திரு. சு.முத்து ஆகியோர் மறைவுக்கு அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

கூட்டத்தின் முடிவில், கீழ்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  1. தஞ்சையில் மார்ச்சு 1 அன்று, நடைபெறும் 'காவிரி எழுச்சி மாநாட்'டை வெற்றிபெறச் செய்ய வேண்டும்

தமிழ்நாட்டின் முக்கிய நீராதாரமாகவும், காவிரி டெல்டா மாவட்டப் பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமுமான காவிரி ஆற்று நீர் உரிமையை முடக்க கர்நாடகம், எல்லா சட்டங்களையும் மீறி இயங்கிக் கொண்டுள்ளது. கட்சிகள் கடந்து கன்னடர்கள் ஓரணியில் நிற்கின்றனர். இந்திய அரசு தனக்குப் பக்கமலமாக இருக்கிறது என்ற துணிச்சலில், புதிதாக 3 அணைகள் கட்டி  தமிழகத்திற்கு மழைக்காலத்தில் வடிந்து வரும் உபரித் தண்ணீரைக் கூட தடுப்பதற்கு அவர்கள் திட்டமிடுகிறார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டின் காவிரி உரிமையை மீட்க தமிழினம் ஒன்று திரள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, வரும் 2014 மார்ச்சு 1 அன்று, தஞ்சையில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், 'காவிரி எழுச்சி மாநாடு' நடைபெறுகின்றது. இம்மாநாட்டில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பங்கேற்பதுடன், இம்மாநாட்டிற்குத் தமிழ் மக்களை பெருந்திரளாகத் திரட்டவும் முடிவெடுத்துள்ளது.

  1. காவிரி உற்பத்தியாகும் குடகு வனப்பகுதியில், மின்பாதை அமைப்பதற்காக 1 இலட்சம் மரங்களை வெட்டும் திட்டத்தை இந்திய அரசே கைவிடுக!
      காவிரி ஆறு உற்பத்தியாகும் கூடகு மலைப்பகுதியில், இந்திய அரசு மின்பகிர்மான நிறுவனம் (Power Grid corporation of India), கர்நாடகாவின் மைசூரிலிருந்து கேரளாவின் கோழிக்கோடு வரையில் 400 கிலோ வாட் மின்சாரம் எடுத்துச் செல்லும் மின்பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் வழியே, சற்றொப்ப 55 கிலோ மீட்டர் வரை அமைக்கப்படும் இப்பாதை காரணமாக சற்றொப்ப 1 இலட்சம் மரங்கள் வெட்டப்படும் பேரபாயம் உள்ளது. தற்போது, 5 கிலோ மீட்டர் அளவில் மின் பாதை அமைக்கப்பட்டு சற்றொப்ப 2000 மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. மரங்கள் வெட்டப்படுவதால் செயற்கையாக ஏற்படுத்தப்படும் சூழலியல் வெற்றிடமும், சூழலியல் சமன்பாட்டுச் சீர்குலைவும், ஏற்பட்டு காவிரி ஊற்று நீரைப் பெருமளவில் பாதிக்கும். குடகு, தமிழகம், கர்நாடகம் என காவிரி ஆற்றை முக்கிய நீராதாரமாகக் கொண்டு வாழும் 8 கோடி மக்களின் வாழ்வுரிமையையே இது மறைமுகமாகப் பறித்தெடுக்கும். மேலும், இவ்வனப்பகுதியையே நம்பி வாழும் யானை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். வனவிலங்குகளின் வாழ்வாதாரங்களை இழப்பது, ஏற்கெனவே நிகழ்ந்து கொண்டுள்ள வனவிலங்கு – மனிதர் மோதலைத் தீவிரப்படுத்தும். மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து, குடகு வாழ் மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைத்து வருகின்றனர். இப்போராட்டங்களுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. இத்திட்டத்தை இந்திய அரசு மின்பகிர்மான நிறுவனம் வேறு பாதையில் செயல்படுத்த வேண்டும். என வலியுறுத்துகிறது

  1. கூடங்குளம் அணுமின் நிலையத்தினுள் புதிதாக அணுஉலைகளைத் தொடங்காதே!

ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் ஒரே சவக்குழியாக இந்திய அரசால் தமிழகத்தின் மீது திணிக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தினுள், புதிதாக 2 அணுஉலைகளை இயக்க இந்திய அரசு அணுசக்தித்துறை முனைப்புடன் செயலாற்றி வருகின்றது. கடந்த 3 ஆண்டுகளாக  கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து சனநாயக வழியில் போராடி வரும் இடிந்தகரை மக்களின் கருத்துகளைப் புறக்கணித்துவிட்டு, கூடங்குளம் அணுமின் நிலையத்தை இந்திய அரசு இயக்கி வருகின்றது. இந்நிலையில், புதிய அணுஉலைகளை அங்கு வேண்டுமென்றே திணிப்பது, மக்கள் போராட்டத்தை இழிவுபடுத்தும் எதேச்சாதிகாரப் போக்காகும். எனவே, மேலும் மேலும் இங்கு அணுஉலைகளைத் திணிக்கும் இந்திய அரசின் தமிழின விரோதப் போக்கை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வன்மையாகக் கண்டிப்பதுடன், இப்புதிய அணு உலைகளை நிறுவும் முயற்சிகளைக் கைவிட வேண்டுமெனவும் இந்திய அரசை வலியுறுத்துகிறது.  

  1. தமிழினப்  படுகொலையாளிகளான இராசபக்சே கும்பல் மீது தற்சார்பான பன்னாட்டு விசாரணை கோரி, மார்ச்சு 3 - ஐ.நா. மனித உரிமை அவைக் கூட்டத்தில் இந்திய அரசு தனித்தீர்மானத்தை முன்மொழிய வேண்டும்!

ஈழத்தமிழர் இனச்சிக்கல் பன்னாட்டு அரங்கில் ஒரு முக்கியக் கட்டத்தை இப்போது அடைந்துள்ளது. நடந்து முடிந்த கொழும்பு காமன்வெல்த் மாநாட்டின் போது பிரித்தானியப் பிரதமர் கேமரோன் யாழ்ப்பாணத்திற்கும், ஈழத்தமிழர் வாழ்விடயங்களுக்கும் சென்று பார்த்தபோது அவருடன் சென்ற முதன்மை உலக ஊடகங்கள் வழியாக அங்கு தொடரும் இன அழிப்பு அவலம் உலகின் பார்வைக்கு வந்துள்ளது. இப்பின்னணியில் வரும் மார்ச்சு 3 அன்று நடைபெறவுள்ள ஐ.நா. மன்ற மனித உரிமைகள் அவைக் கூட்டம் கூடுதல் முகாமை பெறுகிறது. ஈழத்தமிழர் இனஅழிப்பை வெறும் போர்க்குற்றம் எனச் சுருக்கியும், இலங்கை  அரசக் கட்டமைப்பை பாதுகாக்கும் நோக்கிலும் 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் வட அமெரிக்கா முன்வைத்த சூழ்ச்சிகரமானத் தீர்மானங்களை, இந்திய அரசு ஆதரித்தது இப்போக்கு இனியும் தொடரக் கூடாது இராசபக்சே கும்பல் மீது இனப்படுகொலை குறித்த பன்னாட்டு விசாரணை – ஈழத்தமிழ் மக்களிடையே தமிழீழம் குறித்து பொது வாக்கெடுப்பு ஆகிய இரட்டை முழக்கங்கள் ஒட்டுமொத்தத் தமிழர்களின் கோரிக்கையாக எழுந்துள்ளது. எனவே, வரும் மார்ச்சு கூட்டத்தில் அமெரிக்கத் தீர்மானத்தைப் புறக்கணித்து, இனக்கொலையாளி இராசபக்சே கும்பல் மீது தற்சார்புள்ள பன்னாட்டு விசாரணை வேண்டுமெனக் கோரி இந்திய அரசே தனித் தீர்மானத்தை முன்மொழிய வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோருகிறது. வரும் பிப்ரவரி 20 அன்று சென்னையிலும், தமிழகத்தின் இதர மாவட்டத் தலைநகரங்களிலும் இக்கோரிக்கையை முன்வைத்து நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில், தமிழ் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென த.தே.பொ.க. அழைக்கிறது. 

  1. பி.ட்டி கத்தரிக்கு அனுமதி, நியூட்ரினோ திட்டத்துக்கு நிதி – இரண்டையும் கைவிட வேண்டும்

ஜம்முவில் கடந்த 3.02.2014 திங்கள் அன்று நடைபெற்ற தேசிய அறிவியல்மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங்பி.ட்டி கத்தரி உள்ளிட்டமரபீனி மாற்றப் பயிர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அறுவித்துள்ளார், இவை பற்றி தெரிவிக்கப்படும் எதிர்ப்புகள் அறிவியல் அடிப்படையற்றஅச்சமூட்டும் முயற்சிகள் என்று பேசியுள்ளார்அவரது பேச்சுமனிதர்களுக்குக்கேடு விளைவிக்கும் மரபீனி விதைகளை உற்பத்தி செய்யும் பன்னாட்டுநிறுவனங்களுக்கு ஆதரவான அவதூறு அறிக்கையாக உள்ளதுமரபீனீவிதைகளை ஆய்வு செய்யகாங்கிரசு உறுப்பினர்களையும் உள்ளடக்கி இந்தியஅரசின் வேளாண் அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட நாடாளுமன்றக்குழுவின்ஆய்வு அறிக்கை இவற்றுக்கு அனுமதி அளிக்கக் கூடாது எனப் பரிந்துரைத்தது இந்த அறிக்கையை துச்சமாகாத் தூக்கி எறிந்துவிட்டுஅதில் எழுப்பப்பட்டுள்ளசிக்கல்களுக்கு விடைக்கூற முயலாமல் பி.ட்டி கத்தரிக்கும்பிற மரபீனி மாற்றப்பயிர்களுக்கும் தமது அரசு அனுமதி அளிக்கும் என்று பிரதமர் மன் மோகன் சிங்அறிவித்திருப்பது மக்கள் நலனிலும் சன நாயகத்திலும் அக்கறையுள்ளஅனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது

அதே போல் தேனி மாவட்டத்தில் பொட்டிபுரம் மலைப் பகுதியைத் தோண்டிஅங்கு நிறுவப்பட உள்ள நியூட்ரினோ ஆய்வகத்தற்கு 1450 கோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்திருப்பதாக மன்மோகன் சிங் அறிவித்திருப்பதும் இன்னொரு மக்கள் பகைஅறிவிப்பாகும்அப்பகுதி மக்களும்தமிழகத்திலும் கேரளத்திலும் சூழலியல்ஆய்வாளர்களும்ஆர்வலர்களும் இந்நிலையம் குறித்து எழுப்பியுள்ளஎதிர்ப்புகளை ஒரு சிறிதும் மதிக்காமல் செய்யப்பட்டுள்ள இந்த முடிவு ஒருதலைப் பட்சமான திணிப்பாகும்

பிரதமர் மன்மோகன் சிங்கின் இவ்விரண்டு அறிவிப்புகளையும் தமிழ்த் தேசப்பொதுவுடைமைக் கட்சி வன்மையாகக் கண்டிப்பதுடன்இத்திட்டங்களை கைவிடவேண்டுமென வற்புறுத்துகிறது.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.