ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

வெளி மாநிலங்களில் இருந்து வேலைக்கு வருபவர்களால் தமிழகத்தில் கள்ள துப்பாக்கி - கள்ள நோட்டு பரவுவதாக ‘தினத்தந்தி’ ஏடு செய்தி!


வெளி மாநிலங்களில் இருந்து வேலைக்கு வருபவர்களால் தமிழகத்தில் கள்ள துப்பாக்கி - கள்ள நோட்டு பரவுவதாக ‘தினத்தந்தி’ ஏடு செய்தி!


வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வேலைக்கு வருபவர்களால் கள்ள துப்பாக்கி மற்றும் கள்ள நோட்டு கலாசாரம் வேகமாக பரவி வருகிறது என்றும்,  கொள்ளை சம்பவங்கள் அரங்கேற்றி வருகின்றன என்றும், தமிழகத்திலிருந்து வெளி வரும் ‘தினந்தந்தி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து, நேற்ற அந்நாளேட்டில் வெளிவந்துள்ள செய்தி வருமாறு :

வெளி மாநில வேலை ஆட்கள்
சென்னை உள்பட தமிழகத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவது, கள்ள துப்பாக்கிகளை விற்பனை செய்வது மற்றும் கொள்ளை சம்பவங்களை அதிக அளவில் அரங்கேற்றுவது போன்ற குற்றச்செயல்கள் வெளிமாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் வேலை செய்பவர்களால் பெரும்பாலும் நடக்கிறது.

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் தினமும் ஆயிரம் வெளிமாநிலத்தவர்கள் வேலைக்காக ரெயில்கள் மூலம் வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் கட்டிட வேலை செய்கிறார்கள். ஓட்டல்கள், டீக்கடைகளில் கூட இவர்களின் ஆதிக்கம் தமிழகம் முழுவதும் பரவி கிடக்கிறது. கிராமப்புறங்களில் கூட இவர்களின் தலை தென்படுகிறது.

குறைந்த சம்பளத்துக்கு இவர்கள் வேலை செய்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக இவர்களை வேலைக்கு சேர்க்கிறார்கள்.

சட்டவிரோத செயல்கள்
ஆனால் உண்மையிலேயே வேலை செய்ய வருபவர்களோடு சமூகவிரோத கும்பலும் சேர்ந்து வந்து தமிழகத்தை நாசப்படுத்துகிறார்கள். மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் தான் அதிக அளவில் குற்றச்செயல் புரிகிறார்கள். சென்னையில் 5 வெளிமாநில கொள்ளையர்கள் போலீசாரால் சுட்டுத்தள்ளப்பட்டனர்.

அதன்பிறகு இவர்களின் கொட்டம் சற்று அடங்கியது. தற்போது போலீசார் துப்பாக்கியை தூக்கவில்லை என்பதால் மீண்டும் வெளிமாநில கிரிமினல்களின் ஆட்டம் அதிக அளவில் தொடங்கி விட்டது.

தமிழக ரவுடிகள் இவர்கள் கடத்தி வரும் கள்ளத்துப்பாக்கிகளை வாங்குகிறார்கள். கள்ள நோட்டுகளை கடத்தி வந்து தமிழகத்தில் கோடிக்கணக்கில் புழக்கத்தில் விடுகிறார்கள். பல கொள்ளை சம்பவங்களில் இவர்கள் தான் ஈடுபடுகிறார்கள்.

கேளம்பாக்கம் சிறுசேரியில் உமா மகேஸ்வரி என்ற பெண் என்ஜினீயர் கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. இது போன்ற நிறைய சம்பவங்களை உதாரணமாக சொல்லலாம்.

வீடு புகுந்து கொள்ளை
சென்னை பட்டினபாக்கத்தில் கடந்த திங்கள் அன்று மலேசியா சென்ற டாக்டர் வீட்டில் கொள்ளை அடித்தது கூட, அந்த வீட்டில் காவலாளியாக வேலை பார்த்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்தான் என்று கண்டறியப்பட்டுள்ளது. தலைமறைவாகி விட்ட அந்த காவலாளியை போலீசார் தேடி வருகிறார்கள். போலீஸ் வேடத்தில் சமீபத்தில் சென்னையில் நிறைய கொள்ளைச்சம்பவங்கள் நடந்தன. மராட்டிய மாநிலம் புனேயைச் சேர்ந்த ஈரானிய கொள்ளையர்கள்தான், இந்த கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டு கலக்கினார்கள்.

ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை. வெளி மாநில குற்றவாளிகள் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதைப்போல வெளிநாட்டு குற்றவாளிகள் போதைப்பொருள் விற்பனை செய்து சென்னையை கதிகலங்க வைக்கிறார்கள். கானா நாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் ஆசாமி நேற்று முன்தினம் சென்னை தேனாம்பேட்டையில் கைது செய்யப்பட்டான்.

கணக்கெடுப்பு
சென்னை நகரில் தங்கி இருந்து வேலை செய்யும் வெளி மாநிலத்தவர்களையும், வெளிநாட்டவர்களையும் கணக்கெடுக்கும் பணி கூட ஒரு பக்கம் போலீசாரால் நடந்து வருகிறது. லாட்ஜ் அறைகளில் தங்கும் வெளிமாநிலத்தவர்கள் பற்றி லாட்ஜ் உரிமையாளர்கள் போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர்.

கட்டிட காண்டிராக்டர்கள் தங்களிடம் வேலை செய்யும் வெளிமாநிலத்தவர்கள் பற்றிய கணக்குகளை போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும், செக்யூரிட்டி நிறுவனங்களும் தங்களிடம் பணிபுரியும் வெளிமாநிலத்தவர்கள் பற்றிய விவரங்களை போலீசாரிடம் கொடுக்க வேண்டும் என்பன போன்ற திட்டங்களை போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் குற்றச்சம்பவங்களை தடுக்க முடியவில்லை. வெளி மாநிலத்தவர்கள் மற்றும் வெளி நாட்டுக்காரர்களை கண்காணித்து கட்டுப்படுத்தும் பணியை போலீசார் இன்னும் தீவிரமாக செய்தால் பலன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு தினந்தந்தி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில், மிகை எண்ணிக்கையில் நுழைந்து கொண்டிருக்கும் வெளி மாநிலத்தவரால் இது போன்ற சீர்கேடுகள் ஏற்பட்டு வருகின்றன என தமிழ்த் தேசியப் பேரியக்கம் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவதுடன், மக்களிடம் இது குறித்த பரப்புரையும் மேற்கொண்டு வருகிறது. அதனை, மெய்பிப்பது போல் இச்செய்தி வெளிவந்துள்ளது.

இனியாவது, தமிழக அரசு விழித்துக் கொண்டு, தமிழகத்தில் வெளி மாநிலத்தவர் நுழைவதற்கு மிசோரம் – அருணாச்சலப்பிரதேச மாநிலங்களில், தற்போது செயலில் உள்ள உள் அனுமதிச் சீட்டு முறை (Inner line Permit System) கோரி, இந்திய அரசிடம் முறையிட வேண்டும். வெளி மாநிலத்தவர் ஆக்கிரமிப்பைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.