ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

காவிரி மேலாண்மை வாரியத்தின் அதிகாரம் குறைக்கப்படாமல் தமிழ்நாடு அரசு விழிப்போடு செயல்பட வேண்டும். பெ. மணியரசன் வேண்டுகோள்

காவிரி மேலாண்மை வாரியத்தின் அதிகாரம் குறைக்கப்படாமல் தமிழ்நாடு அரசு விழிப்போடு செயல்பட வேண்டும். காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் வேண்டுகோள்.


காவிரி வழக்கில் உச்ச நீதி மன்றம் வழங்கியுள்ள  தீர்ப்பில் ( 30.9.2016)  கர்நாடக அரசின் சட்டவிரோதச் செயல்களையும் நீதிமன்ற அவமதிப்புச்  செயல்களையும் கடுமையாகக் கண்டித்தது ஆறுதல் தருகிறது.
நீதிபதிகள் தீபத் மிஸ்ரா - யூ.யூ. லலித் அமர்வு இது கடைசி எச்சரிக்கை என்று சொல்லிவிட்டு அக்டோபர் 1 முதல் 6 வரை தமிழ்நாட்டிற்கு நொடிக்கு 6000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டுமென்று கர்நாடகத்திற்கு கட்டளை இட்டிருப்பது வரவேற்தக்கது.

நடுவண் அரசு அக்டோபர் 4 க்குள் காவிரி மேலாண்மை வாரியம், மற்றும் காவிரி ஒழுங்குமுறைக் குழு அமைத்து அறிக்கை தரவேண்டுமென்று கட்டளை இட்டிருப்பது பாராட்டுக்குரியது. காலந்தாழ்ந்த நீதி என்றாலும் தமிழ்நாட்டிற்குப் பயன் தரும் தீர்ப்பாகும். இதற்காகப் போராடிய, வாதாடிய அனைத்து உழவர் அமைப்புகள், அனைத்து வணிகர் அமைப்புகள், அனைத்துக் கட்சிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட  தமிழ் மக்கள் அனைவர்க்கும் இந்த வெற்றியில் பங்கிருக்கிறது.

இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தனக்கான தலைமை வழக்கறிஞராக சேகர் நபாதே அவர்களை அமர்த்தியதிலிருந்து நம் தரப்பு வாதம் கூர்மையாக எடுத்து வைக்கப்பட்டது. நடுவண் நீர் வளத்துறை அமைச்சர் கூட்டிய இருமாநில முதலமைச்சர் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி செயலலிதா அவர்கள் அளித்த அறிக்கையும் சிறப்பாக இருந்தது. அவர்களுக்கு  நம் பாராட்டுகள்.

பக்ரா - பியாஸ் மேலாண்மை வாரியத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களும் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு வழங்க வேண்டுமென்று காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு கூறுகிறது. இதில் தமிழ்நாடு அரசு விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். நடுவண் நீர்வளத்துறை செயலாளர் சசி சேகர், காவிர் மேலாண்மை வாரியத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலான சில கருத்துகளை அண்மையில் கூறியிருந்தார். அதுபோல் எதுவும் நடந்தால் அந்தத் தவறை உடனடியாக உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று சரிசெய்திட தமிழ்நாடு அரசு  தலையிட வேண்டும் .

இத்தீர்ப்பை எதிர்த்து கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்தால் உடனடியாக இராணுவத்தை அனுப்பி தமிழ் மக்களைப் பாதுகாக்குமாறு தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
பெ. மணியரசன்
ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு

இடம்: தஞ்சாவூர்

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.