ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

இளந்தமிழன் பிரிட்சோ படுகொலை: "இந்தியாவுக்கு இலங்கை நட்பு நாடு என்றால் இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா?" பெ. மணியரசன் வினா!


இளந்தமிழன் பிரிட்சோ படுகொலை: "இந்தியாவுக்கு இலங்கை நட்பு நாடு என்றால் இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா?"  தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் வினா!

நேற்றிரவு (06.03.2017), இராமேசுவரம் – தங்கச்சி மடத்தைச் சேர்ந்த தமிழ் மீனவர்கள் கச்சத்தீவு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, சிங்களக் கடற்படைக் காடையர்கள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார்கள். அதில், பிரிட்சோ என்ற இளைஞர் அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். சரோன் என்ற இளைஞர் படுகாயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

சிங்களக் காடையர் நடத்திய இந்தத் தமிழினப் படுகொலை தமிழ்நாட்டுத் தமிழர்கள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் நெஞ்சில் ஈட்டி பாய்ச்சியதுபோல் கொடுந் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அரசு வழக்கம்போல் தனது இலங்கைத் தூதரகத்தின் வழியாக “கவலை” தெரிவித்து, கபட நாடகமாடியுள்ளது. இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திரமோடி, இந்த இனக் கொலையை ஏன் கண்டிக்கவில்லை? கண்டனம் தெரிவித்தால் அவருடைய தகுதிக்கு அவமரியாதையா? அல்லது “அடிமைத் தமிழனுக்காக” தனது நட்பு நாடான இலங்கையைக் கண்டிப்பது நல்லுறவில் பாதிப்பு ஏற்படுத்தும் என்ற பாசப் பிணைப்பா?
உலகில் எங்கேனும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டால் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடனே கண்டிக்கிறார். ஆனால், தமிழ்நாட்டு மீனவர் இலங்கை அரசால் கொலை செய்யப்பட்டால் அவர் கண்டிக்க மறுக்கிறார். தமிழர்கள் இந்தியக் குடிமக்கள் இல்லை, இந்தியாவின் அடிமைகள் என்று அவர் கருதுகிறாரா?

சிங்களக் கடற்படைக் காடையர்கள் தமிழக மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும்போதும், மீனவர்களைக் கடத்திக் கொண்டுபோகும் போதும், இந்தியக் கடலோரக் காவல்படை தலையிட்டு இந்திய சட்டப்படியும், சர்வதேச சட்டப்படியும் இதுவரை ஒரு தடவைகூட அவ் வன்செயல்களைத் தடுக்கவில்லை.

தமிழ்நாட்டுக் கடல் எல்லைக்குள்ளும் பன்னாட்டுக் கடல் பரப்பிலும் தமிழக மீனவர்களை பலதடவை சிங்களக் கடற்படையினர் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். ஒரு தடவை கூட அக்கொலைகாரர்களைப் பிடித்துக் கொண்டு வந்து வழக்கு நடத்த முன் வரவில்லை, இந்திய அரசு!

இந்திய அரசின் மறைமுக ஒப்புதலோடும் ஆதரவோடும்தான் சிங்களக் கடற்படையினர் தமிழக மீனவர்களை – தமிழ்நாட்டுக் கடற்பரப்பிலும் பன்னாட்டுக் கடல் பரப்பிலும் சுட்டுக் கொல்கிறார்கள். தாக்குகிறார்கள். சிறைகளில் அடைக்கிறார்கள். படகுகளைக் கடத்திக் கொண்டு போகிறார்கள். அது மட்டுமின்றி, சிங்களக் கடற்படைக்கு இந்திய அரசு தொடர்ந்து பயிற்சி கொடுத்து வருகிறது.

தமிழர்களுக்கு எதிரான தனது கொலைவெறி நடவடிக்கைகளை இந்திய அரசு கண்டிக்காது என்ற துணிச்சலில் இலங்கை அரசு தமிழ்நாட்டு மீனவர்களை தொடர்ந்து தாக்கி வருகிறது. அத்துடன், பிரிட்சோவை தனது கடற்படை கொல்லவில்லை என்று இந்தியாவை நம்பித் துணிந்தும் பொய் சொல்கிறது.

ஈழத்தமிழர்கள் ஒன்றரை இலட்சம் பேரை சிங்கள இனவெறி அரசு இனப்படுகொலை செய்த போது, அதற்குத் துணை நின்றது இந்திய அரசு! அறுநூறுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தொடர்ந்து கொலை செய்து வருவதை இந்திய அரசு தடுக்கவில்லை என்பதுடன், கண்டிக்கவுமில்லை!

நாடாளுமன்றத்தில் இதுபற்றி தமிழ்நாட்டு உறுப்பினர்கள் வினா எழுப்பினால், இலங்கை இந்தியாவின் நட்பு நாடு என்று இந்திய அரசு விடை கூறுகிறது. தமிழர்களை இனப்படுகொலை செய்யும் இலங்கை, இந்தியாவின் “நட்பு நாடு” என்றால், தமிழ்நாட்டுக்கு இந்தியா “எதிரி நாடு” என்று தன்னைத் தானே அறிவித்துக் கொள்கிறதா?
தமிழ்நாட்டுத் தமிழர்கள் இந்த உண்மையை உணர்ந்து, அதற்குரிய எதிர்வினையாற்ற சிந்தனையாலும் செயலாலும் அணியமாக வேண்டும். தமிழ்நாடு அரசு என்பது இந்தியாவின் தமிழின விரோதச் செயல்களைத் தட்டிக் கேட்காத, தடுத்து நிறுத்தாத கங்காணி அரசாகவே தி.மு.க. ஆட்சியிலும், அ.இ.அ.தி.மு.க. ஆட்சியிலும் தொடர்கிறது.
எனவே, இந்தத் தேர்தல் ஆதாயக் கட்சிகளுக்கு வெளியே தமிழர்கள் இனத்தற்காப்புப் போராட்டங்களை நடத்த வேண்டிய தேவையுள்ளது. சிங்களக் கடற்படைக் காடையர்களால் கொல்லப்பட்ட இளந்தமிழன் பிரிட்சோ மீது ஆணையிட்டு தமிழினத் தற்காப்பு அரசியலையும், அறப்போராட்டங்களையும் முன்னெடுப்போம்!

இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.