ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

திருமுருகன் காந்தியைக் காவல்துறையினர் ஆள்கடத்தல் செய்திருக்கிறார்கள் - பெ. மணியரசன் கண்டனம்

திருமுருகன் காந்தியைக் காவல்துறையினர் ஆள்கடத்தல் செய்திருக்கிறார்கள். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் - பெ. மணியரசன் கண்டனம்!
 
அண்மையில் ஜெனிவாவில் ஐ.நா.மனித உரிமை மன்றக் கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்களை சிங்கள இனவெறிக் கும்பலொன்று வழிமறித்து, அவமரியாதையாக நடந்து கொண்டதுடன் அவரைத் தாக்கவும் முற்பட்டது.

     அந்த வன்செயலைக் கண்டிக்கும் வகையில் தோழர் நாகை.திருவள்ளுவன் தலைமையில் தமிழ்ப் புலிகள் கட்சியினர் நேற்று (29.09.2017) சென்னையில் இலங்கைத் தூதரகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற மே 17 இயக்கத் தலைவர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களும் அதே அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான தோழர் பிரவீண்குமார் அவர்களும் ஒரு தேநீர் கடையில் தேநீர் குடித்ததுக் கொண்டிருந்த போது, காவல் துறையினர் அங்கு சென்று அவ்விருவரையும் வலுக்கட்டாயமாகத் தள்ளியும் இழுத்தும், சட்டையைப் பிடித்து இழுத்தும் காவல் வண்டியில் ஏற்றும் காட்சி தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டது.

     “எங்கள் மீது வழக்கு இருக்கிறதா? நாங்கள் செய்த குற்றம் என்ன? எங்களை ஏன் வலுக்கட்டாயமாக இழுக்கிறீர்கள்” என்று திருமுருகன் கேட்டதற்கு “மேலிடத்து உத்தரவு” என்று மட்டுமே காவல் துறையினர் கூறியுள்ளனர்.

     தோழர் நாகை திருவள்ளுவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்த தோழர்களை ஒரு மண்டபத்திலும் தோழர்கள் திருமுருகன், பிரவீண்குமார் ஆகிய இருவரையும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலும் தனித்தனியே அடைத்து வைத்திருக்கிறார்கள்.

     அண்ணன் வைகோ, பேராசிரியர் ஜவஹிருல்லா போன்றவர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசியப்பின் திருமுருகன் காந்தியையும் பிரவீன்குமாரையும் விடுவித்துள்ளார்கள்.

     எந்த வழக்கும் இல்லாத நிலையில் எந்தச் சட்ட மீறலும் இல்லாத திருமுருகன் காந்தியையும் பிரவீன்குமாரையும் காவல் துறையினர் இழுத்துச் சென்று அடைத்து வைத்த நிகழ்வு ஓர் ஆள்கடத்தல் செயலாகும்.

     மேற்கண்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த போதே காவல் துறையினர் திருமுருகனிடம். “நீங்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது; கலந்து கொண்டால் கைது செய்வோம்” என்று எச்சரித்துள்ளார்கள். அதனால் அந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கிப்போய் தேநீர் குடித்துக் கொண்டிருந்தவர்களை இழுத்துச் சென்றிருக்கிறார்கள். காவல் துறையினரின் இச்செயல் சட்டத்திற்கு புறம்பான வன்முறை மற்றும் அடிப்படை மனித உரிமைப் பறிப்பாகும். காவல்துறையினரின் இச்செயலைத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

     எப்பொழுதுமே காவல்துறையில் இதுபோன்ற சட்டப்புறம்பான வன்முறைகளில் எங்கிருந்தோ ஏவியவர்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை, கட்டளையை அரங்கேற்றும் களச் செயல்பாட்டில் உள்ள காவல்துறையினர் மட்டுமே நம் கண்ணுக்கு தெரிகிறார்கள். நமக்கும் வேறு வழியில்லை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறுதான் கோரவேண்டும்.

     தோழர்கள் திருமுருகன் காந்தி, பிரவீண்குமார் ஆகியோர் மீது வன்முறை ஏவி சட்டவிரோதமாக அடைத்து மனித உரிமைப் பறிப்பை நிகழ்த்திட ஏவியவர்கள்? அமைசவரவையைச் சேர்ந்தவர்களா அல்லது “மேல்” அதிகாரிகளா?

     கட்டுக் கோப்பில்லாமல், பயனாளிக்குழுக்களின் தற்காலிகக் கூடாரம் போல் காட்சி தரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சி, தனது தில்லி மேலிடத்தை மகிழ்விக்க தமிழ்நாட்டு மக்களின் இன – மொழி உரிமைப் போராளிகளின் உரிமைகளைப் பறிப்பதிலும் அவர்களின் மீது அடக்குமுறைகளை ஏவுவதிலும் தெரிவு செய்து நெருக்கடி நிலையை (Selective Emergency) பயன்படுத்துகிறது என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் கருதுகிறது. இப்போக்கை திருத்திக் கொள்ளவில்லையென்றால், சனநாயக வழியில் தமிழ் மக்கள் எடப்பாடி ஆட்சியைத் தண்டிப்பார்கள்!
 

 
பெ. மணியரசன்
 
தலைவர் - தமிழ்த் தேசியப் பேரியக்கம்
 
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
நாள் : 30.9.2017 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.