ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பயிர்கள் கருகியதால் உயிர் நீத்த உழவர் குடும்பங்களுக்கு காவிரி உரிமை மீட்புக் குழு நிதியுதவி!

பயிர்கள் கருகியதால் உயிர் நீத்த உழவர் குடும்பங்களுக்கு காவிரி உரிமை மீட்புக் குழு நிதியுதவி!
இந்திய அரசின் துணையுடன் கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்குரியக் காவிரி நீரை தடுத்து, தான் பயன்படுத்திக் கொண்டதால் காவிரி நீரைப் பறிகொடுத்தும், பருவமழையும் பொய்த்ததாலும், காவிரி டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சாகுபடி செய்த நெற்பயிர் தண்ணீரின்றி கருகியதைக் கண்டு, மனம் கலங்கி மாரடைப்பாலும், நஞ்சுண்டும் உயிர் விடும் உழவர்கள் எண்ணிக்கை அன்றாடம் அதிகரித்து வருகிறது. ஆனால் தமிழ்நாடு அரசோ வறட்சி துயர் துடைப்புப் பணிகளை தொடங்காமல், அலட்சியம் காட்டி வருகிறது.
காவிரி உரிமை மீட்புக் குழுவின் தலைவர்களில் ஒருவரான மன்னார்குடி மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன் அவர்கள் முயற்சியில் திரட்டப்பட்ட “உழவர் துயர் துடைப்பு நிதி”யில், உயிரிழந்த உழவர் குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் ஆறுதல் தொகையாக வழங்கும் பணி இன்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் தலைமையில், திருவாரூர் மாவட்டத்தில் நடந்தது.
ஏற்கெனவே கடந்த சனவரி 8ஆம் நாளன்று, மன்னார்குடி வட்டத்தில் உயிரிழந்த உழவர்கள் ஆறு பேர் குடும்பத்திற்கு இதே போல், தலா 5,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக, திருவாரூர் மாவட்டத்தில், இன்று உதவித் தொகை வழங்கல் நடைபெற்றது.
கொரடாச்சேரி அருகில் முசிறியம் கிராமத்தைச் சேர்ந்த சேகர், பத்தூர் நபசீலன், திமிழி மாரிமுத்து, குடவாசல் பகுதியைச் சேர்ந்த சீதக்கமங்கலம் இராமச்சந்திரன், அதே ஊரைச் சேர்ந்த அழகர்சாமி, கடலங்குடி தங்கராசு, பரவக்கரை இராதாகிருட்டிணன், கற்புனேசுவரம் மீராபாய், புத்தகலூர் வடமலை ஆகிய ஒன்பது உழவர்களின் குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் இன்று வழங்கப்பட்டது.
இக்குழுவில், மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் கலைச்செல்வன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன், தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி, திருத்துறைப்பூண்டி தை. செயபால், மன்னார்குடி வழக்கறிஞர் பாலசுந்தரம், குடவாசல் வழக்கறிஞர் சபேசன் (தமிழர் தேசிய முன்னணி), பெரப்படி கோவிந்தராசு (தமிழர் தேசிய முன்னணி), தண்டலைச்சேரி செல்வராசு ஆகியோர் கலந்து கொண்டனர்.


செய்தியாளர் சந்திப்பு


நிறைவில், திருவாரூரில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அதில் பேசிய தோழர் பெ. மணியரசன் பின்வருமாறு கூறினார் :
“நடப்பு சாகுபடி பருவத்தில் டெல்டா மாவட்டங்களைப் பொறுத்தவரை, கடந்த கார்த்திகை மாதமே காவிரி நீரின்றி பருவமழையும் பொய்த்து, வேளாண் பயிர்கள் பாழ்பட்டு போயின. அப்பொழுது, வறட்சி துயர் துடைப்பு நிதியளிப்பதற்கான கணக்கெடுப்பும், நடுவண் அரசிடம் சிறப்பு நிதி கோருதலும் தமிழ்நாடு அரசு செய்திருக்க வேண்டும்.
ஆனால், நூற்றுக்கும் மேற்பட்ட உழவர்கள் கருகியப் பயிரைப் பார்த்து, உயிரிழந்த பின், மிகவும் தாமதமாக வறட்சி ஆய்வுப் பணியைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு!
மிகவும் குறைவான நிவாரணத் தொகையும் தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதையும் தமிழ்நாடு அரசு இதுவரை தரவில்லை.


நூற்றுக்கும் மேல் இறந்த உழவர்களில் 17 பேர் குடும்பத்திற்கு மட்டும் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். அதுவும் முழுவதும் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. கடன் தள்ளுபடியும் எல்லா விவசாயிகளுக்கும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், கிராமப்புறங்களில் உழவர்களிடையே எதிர்காலம் குறித்த பதற்றமும் கலக்கமும் நிலவுகிறது. இதனால் இப்போது உழவர் சாவு 200க்கும் மேல் போய்விட்டது.
இனியும் கால தாமதம் செய்யாமல், உடனடியாக வேளாண்மை பாதிக்கப்பட்டு உயிர் நீத்த உழவர் குடும்பங்களுக்கு 15 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். பயிர் கருகி சாகுபடி பாழ்பட்டுப் போன நிலங்களுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயத் தொழிலாளர் குடும்பம் ஒன்றுக்கு, 15,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
இந்த துயர் துடைப்புப் பணிகளை போர்க்கால அவசரத்துடன் உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு தோழர் பெ. மணியரசன் தெரிவித்தார்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

இணையம்:www.kaveriurimai.com
பேச: 94432 74002, 76670 77075

முகநூல்: www.fb.com/kaveriurimai

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.