ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

சிதம்பரம் நடராசர் ஆலயத்தை அரசே ஏற்க உடனடியாக தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும்! ஆர்ப்பாட்டம்!



சிதம்பரம் நடராசர் ஆலயத்தை அரசே ஏற்க உடனடியாக தனிச்சட்டம் கொண்டுவரவேண்டும்!

சிதம்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் த.தே.பொ.க தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் மாரிமுத்து பேச்சு!

“தில்லை கோயில் தீட்சதர் சொத்தா?
தமிழக அரசே! தமிழக அரசே!
தீட்சதரோடு கூட்டணி சேர்ந்து
தமிழர்களை வஞ்சிக்காதே!”

”கரையான் புற்றில் கருநாகம்
தில்லை கோயிலில் தீட்சிதர்கள்!”

வெளியேற்று வெளியேற்று!
தில்லை கோயில் சொத்துகளை
தின்று கொழுக்கும் தீட்சிதரை
வெளியேற்று வெளியேற்று”

”தில்லை கோயில் மக்கள் சொத்து!
தமிழக அரசே ஏற்று நடத்து!
தில்லை கோயிலை ஏற்று நடத்த
உடனடியாக சட்டம் இயற்று”

-என்று ஆவேச முழக்கங்கள் எதிரொளிக்க தில்லை நடராசர் ஆலயத்தை அரசே நடத்த தனிச்சட்டம் கொண்டுவரக் கோரி சிதம்பரத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிதம்பரம் பேருந்து நிலையம் காந்திசிலை அருகில் 8.1.2014 புதன் அன்று மாலை 5 மணிக்கு நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க நகர செயலாளரும் தமிழ் வழிபாட்டுரிமை அமைப்பின் அமைப்பாளருமான தோழர் கு.சிவப்பிரகாசம் அவர்கள் தலைமை தாங்கினார்.

மார்க்சிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி தோழர் மோகன், தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர். ஆகுபேரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

நிறைவாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து அவர்கள் கோரிக்கையை விளக்கி உரையாற்றினார்.

அப்போது அவர் :

”தில்லை நடராசர் ஆலயத்தின் நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்று நடத்தியது செல்லாது என உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு முற்றிலும் எதிர்பாராத ஒன்று அல்ல என்ற போதிலும். தமிழர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழக அரசு சிதம்பரம் நடராசர் ஆலயத்தை தனது இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அதற்கான நிர்வாக அலுவரையும் நியமித்தது. இதனை எதிர்த்து சிதம்பரம் தீட்சிதர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து தமிழக அரசின் நிர்வாகம் தொடர ஆணையிட்டது.

இத்தீர்ப்பை எதிர்த்து தீட்சிதர்களும் சுப்ரமணியம் சாமியும் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். தமிழக அரசு இதனை உரிய முறையில் கையாள அக்கறைக் காட்டவில்லை மூத்த வழக்கறிஞர்கள் யாரையும் நியமித்து வாதாட முன்வரவில்லை. ஏனோதானோ என்று நடத்தி வேண்டும் என்றே இந்த வழக்கை குழப்பியதோ என்று ஐயப்பட அடிப்படைகள் உண்டு.

இந்நிலையில் உச்சநீதி மன்ற நீதிபதிகள் பி.எஸ்.சவுக்கான், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் தமிழக அரசின் ஆணையைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளனர். கோயிலில் முறைகேடுகள் நடந்திருந்தால். அது குறித்து தமிழக அரசு விசாரிக்கலாமே தவிர நிர்வாக அலுவலரை நிரந்தரமாக நியமிக்க முடியாது. என்று நீதிபதிகள் கூறியிருப்பது இந்த வழக்கின் அடிப்படையையே அணுகாத தீர்ப்பாக உள்ளது.

வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் தீட்சிதர்கள் தனிவகையறாவினர் (Denomination) அல்லர் என்பதையோ, இக்கோயில் கட்டப்பட்டதிலிருந்து பல கட்டங்களில் விரிவாக்கப்பட்டது வரை அரசுகளின் பணியாக இருந்தனவே தவிர இவற்றில் தில்லை தீட்சிதர்களின் பங்கு பணி எதுவும் இல்லை என்ற உண்மையையோ உச்ச நீதி மன்றம் கருத்தில் கொள்ளவில்லை.

அந்த அடிப்படையில் உச்ச நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பு வழக்கின் முதன்மை சிக்கலை கருதிப்பார்க்காத ஒன்றாக அமைந்துள்ளது. இந்த உண்மையை முன்வைத்து தமிழக அரசு வலுவாக வாதாடாமல் போனது. இந்நிலை வருவதற்கு ஓர் முக்கிய காரணமாக அமைந்து விட்டது.

இத்தீர்ப்பை சட்ட முறையில் எதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசு சிதம்பரம் நடராசர் ஆலயத்தை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொணர்வதற்கு தனிச்சட்டம் வரைந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றுவதே ஒரே வழி.

எனவே தமிழக அரசு தில்லை நடராசர் ஆலய நிர்வாகத்தை ஏற்று நடத்தும் வகையில் உடனடியாக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் . சட்டமன்ற கூட்டத்தொடருக்கு காலதாமதம் ஆகுமானால் உடனடியாக அவசர சட்டம் ஒன்றை இயற்றி சிதம்பரம் நடராசர் ஆலயத்தை தமிழக அரசு ஏற்க வேண்டும்” என்று அப்போது அவர் பேசினார்.
நிறைவாக தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே.சுப்பிரமணிய சிவா நன்றி கூறினார்.

முன்னதாக தீர்ப்பு அளிக்கப்பட்ட அன்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்திருந்த காவல்துறையினர் பின்னர் அனுமதி அளித்தனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி பலத்த காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.