ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

இட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா? - பெ. மணியரசன் கட்டுரை!


இட ஒதுக்கீட்டுக்குப் 
பெரியார்தான் காரணமா? 
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் கட்டுரை!

வெற்றி பெற்றவர்கள் வரலாற்றை எழுதுகிறார்கள் என்பது ஒரு மரபுத் தொடர். அவர்கள் சமூகத்தின் பன்முக வரலாற்றை எழுதாமல் தங்களை மட்டும் முதன்மைப்படுத்தி எழுதிக் கொள்வார்கள் என்பது இதன் பொருள்.

இலட்சியத்தில் வெற்றி பெறாதவர்களும் இலட்சியத்தைப் பாதியில் கைவிட்டவர்களும் வரலாற்றைத் திரிபுபடுத்தி எழுதிக் கொள்ளலாம் என்பதற்கு பெரியாரியத் திராவிடவாதிகளே சான்று!

பெரும்பான்மை மக்கள் எழுதப் படிக்கத் தெரியாமல் இருந்த காலத்தில் - படித்தவர்களில் - கட்டுக்கோப்பான சிறுபான்மையினர் வரைந்ததே வரலாறு என்று இருந்தது. இன்று 90 விழுக்காட்டினர் கற்றவர்களாக உள்ள காலத்தில் - மேடைப்பேச்சையும் - பிறர் எழுதிய தையும் மட்டுமே சான்றாக வைத்துக் கொண்டு, திரிபாக வரலாற்றைப் பேசுவோர் நிறைந்த நாடாகத் தமிழ்நாடு இருக்கிறது.

பெரியாரியத் திராவிடவாதிகள் - “பெரியார் இல்லையென்றால் தமிழர்கள் மாடு மேய்த்துக் கொண்டுதான் இருந்திருப்பார்கள்என்கிறார்கள். தமிழர்கள் படித்திருக்க மாட்டார்கள், உயர் பதவிகளுக்குப் போய் இருக்க மாட்டார்கள் என்ற பரப்புரையைக் கோயபல்சு இருந்தால் கூச்சப்படும் அளவிற்குக் கூறி வருகிறார்கள்.

பெரிய புராணத்தை எதிர்த்தவர்கள் பெரியார் புராணத்தை எழுதினார்கள்.

பெரியார் புராணத்தில் கூறப்பட்டுள்ள இரண்டே இரண்டு கருத்துகளை மட்டும் இங்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறோம். ஒன்று தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்குப் பெரியார்தாம் முதல் பெருங்காரணமாவார் என்பது. இன்னொன்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் செய்யப் பட்ட முதல் திருத்தம் இடஒதுக்கீட்டிற்கு வழி வகுத்திடத்தான்; அந்த முதல் திருத்தமும் பெரியாரால் தான் வந்தது என்பது!

இட ஒதுக்கீட்டின் மூலவர்கள்

ஆங்கிலேய அதிகாரிகள்தாம் முதல் முதலாக - இட ஒதுக்கீட்டுக்கான மூலக்கருத்தை விதைத்தார்கள். பிராமணரல்லாத இந்துக்கள் மற்றும் முசுலிம்களில் கல்வி கற்றோர் தங்கள் வகுப்பு களுக்கான இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை பல வடிவங்களில் வெளிப்படுத்தினார்கள்.

வெள்ளையராட்சி 19ஆம் நூற்றாண்டில் அனைவருக்குமான பொதுக் கல்வி முறையை உருவாக்கிக் கல்வி நிலையங்களைத் திறந்தது. 1835இல் வந்த மெக்காலே கல்வித் திட்டம் கல்வியை மேலும் முறைப்படுத்தி விரிவுபடுத்தியது.

இக்கல்வி முறையில் பயின்று ஆங்கிலேய ஆட்சியில் அலுவலர்கள் ஆனவர்களில் 100க்கு 90 பேர் பிராமணர்கள். இந்தியாவெங்கும் இதுதான் நிலைமை.

பிராமணரல்லாதார் தங்களுக்குரிய விகிதத்தில் வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினர். பிராமணரல்லாத மண்ணின் மக்களின் கோரிக்கையை வெள்ளை அதிகாரிகள் பரிவுடன் பார்த்தனர்.

ஆங்கிலேய அரசின் வருவாய் வாரியம் (Revenue Board) 1854ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அது வருமாறு :

நிலை ஆணை எண் 128 / 2

மாவட்ட அளவிலான அலுவலர்கள் பணியமர்த்தத்தில் செல்வாக்குள்ள சில குடும்பங்களுக்கு மட்டும் பணிகள் ஏகபோக உரிமை ஆகிவிடாமல் மாவட்ட ஆட்சியாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மையாக உள்ள (பெரும்பான்மையாக உள்ள) சாதிகளுக்கு வேலைகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.” - இதுவே அந்த ஆணை!

மேற்கண்டவாறு ஆணை பிறப்பிக்கப்பட்டும் அது சரிவர செயல் படுத்தப்படவில்லை. ஆனால் இட ஒதுக்கீட்டிற்கான - ஆட்சி யாளர்களின் தொடக்க நிலை ஒப்புதல் என்று இந்த முன்னெடுப்பைக் கருதலாம்.

1854ஆம் ஆண்டு இவ்வாறு தொடங்கிய அரசின் இட ஒதுக்கீட்டு ஆணை - 1871இல் மேலும் வலுப்பட்டது. 1871ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கு எடுக்கப்பட்டது. சாதியும் கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் கண்காணிப் பாளர் டபுள்யு. ஆர். கார்னீஷ்!

1871-க்கு முந்தைய 15 ஆண்டுகளில் மெட்ரிகுலேசன் கல்வி கற்றவர்களில் 55 விழுக்காட்டினர் பிராமணர்கள் என்ற கணக்கும் வந்தது. அப்போது கார்னீஷ் கூறியது கவனிக்கத்தக்கது. கார்னீஷ் அவர்களின் கூற்றை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் முன்னேற்றம் தொடர்பான எந்தச் செய்தியையும் பார்ப்பனக் கண்ணாடி போட்டுக் கொண்டு பார்க்கக் கூடாது. அரசின் உண்மையான கொள்கை - அரசு அலுவலர்கள் எண்ணிக்கையில் பார்ப்பனர்களுக்கு வரம்பு கட்டுவதாகவும், பார்ப்பனரல்லாத இந்துக்கள் மற்றும் முசுலிம்கள் அரசு அலுவலகங்களுக்குள் நுழைவதை ஊக்கப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். எந்த ஒரு சாதிக்கும் தனி முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்கக் கூடாது.”

- Report on the Census of Madras Presidency 1871, Vol - 1, page 197 (தமிழில் : கி. வீரமணி, ‘வகுப்புரிமை வரலாறு’, மூன்றாம் பதிப்பு - 2000).

வகுப்புரிமைக் கோரிக்கை தமிழ்நாட்டில் 1850களில் எழுப்பப்பட்டுள்ளது. அப்போது பெரியார் பிறக்கவில்லை. 1871 மக்கள் தொகைக் கணக்கெடுப்புக் கண்காணிப்பாளர் கார்னீஷ், நாட்டின் முன்னேற்றத்தைப் பிராமணக் கண்ணாடி போட்டுக் கொண்டு பார்க்காதீர்கள். பிராமணரல்லாதவர்க்கு வேலைவாய்ப்பு உரியவாறு கொடுங்கள் என்று கூறியபோதும் பெரியார் பிறக்கவில்லை.

1850களில் - 60களில் மெட்ரிகுலேசன் படித்தவர்களில் 55 விழுக்காடு பிராமணர்கள், 45 விழுக்காடு பிராமணரல்லாதார் என்ற கணக்கைக் கொடுத்தவர் கார்னீஷ். பெரியார் அப்போது பிறந்திருக்கவில்லை

தமிழனும் தமிழச்சியும் படித்திருக்கவே மாட்டார்கள் என்று கூறும் பெரியார் பக்தர்களுக்குக் கார்னீஷ் கணக்கெடுப்பு காணிக்கை யாகட்டும்!

1881 மற்றும் 1891 ஆம் ஆண்டுகளில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புகள் நடந்தபோது பிராமணரல்லாதார்க்கு இட ஒதுக்கீடு கேட்டு பெரிய அளவில் மக்கள் கோரிக்கை எழுப்பினர்.

இட ஒதுக்கீடு இந்தியத் துணைக் கண்டத்தில் முதல் முதலாகச் செயல்படுத்தப்பட்ட இடம் மராட்டிய மாநிலம் - கோலாப்பூர் குறுநிலம் (சமஸ்தானம்). செயல்படுத்தியவர் - கோலாப்பூர் மன்னர் சாகு மகாராசா!

அவர் 1902ஆம் ஆண்டு கல்வியில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு - பிராமணரல்லாத பின்தங்கிய வகுப்புகளுக்கு ஒதுக்கீடு செய்தார். பள்ளிகளில் படிப்போர்க்கு இலவச உணவு - உறைவிட விடுதிகளைத் திறந்தார். தீண்டாமையைக் குற்றமாக்கினார். அப்பொழுதெல்லாம் பெரியார் சமூகப்பணிக்கு வரவில்லை. பெரியார் பிறந்த ஆண்டு 1879 செப்டம்பர் 17.

நீதிக்கட்சியின் தோற்றம்

மருத்துவர் நடேச முதலியார் சென்னை திருவல்லிக்கேணி பெரிய தெருவில் வசித்து வந்தார். அவர் பிராமணரல்லாதார்க்கு இட ஒதுக்கீடு கோரிக்கை வைத்தது 1910 வாக்கில்! பிராமணரல்லாத மாணவர்கள் கல்வி கற்க ஊக்கப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டார். பிராமணரல்லாத அரசு ஊழியர்கள், மாணவர்கள், மற்றவர்களின் உரிமைகளுக்காக அவர் 1912இல்மெட்ராஸ் யுனைடெட் லீக்என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த லீக் - பிராமணரல்லாதார்க்கான இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை எழுப்பி வந்தது.

இந்த மெட்ராஸ் யுனைடெட் லீக் என்ற அமைப்பின் பெயரை 1913இல் திராவிடர் சங்கம் (Dravidian Association) என்று மாற்றினார்.

அக்காலத்தில் பிட்டி. தியாகராய செட்டியும், தாரவாத் மாதவன் நாயரும் காங்கிரசுக் கட்சிப் பிரமுகர்கள். இருவரும் சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள். ஆனால் ஒருவருக்கொருவர் ஆகாது. இருவரும் எதிரும் புதிருமாகச் செயல்பட்டனர். பிராமணரல்லாதார் உரிமைகளை மீட்பதற்காக இவ்விருவரிடமும் பேசி இருவரையும் ஒன்றாக இணைத்தவர் நடேச முதலியார்.

இம்மூவர் முன்முயற்சியில் மற்றும் பல முக்கியக் கல்விமான்கள் - பிரமுகர்கள் ஆகியோரைக் கொண்டு 1916 இறுதியில் உருவாக்கப் பட்டதுதான் நீதிக்கட்சி! (அதன் அசல் பெயர் - தென்னிந்திய நல உரிமைச் சங்கம்).

நீதிக்கட்சி அமைப்பதற்கான முதல் கூட்டம் 20.11.1916 அன்று சென்னையில் நடந்தது. அப்போது பெரியார்க்கு 38ஆம் அகவை தொடங்கி இருந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட 26 பிரமுகர்கள் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அப் பட்டியலில் .வெ. இராமசாமி பெயர் இல்லை. ஆனால் எஸ். முத்தையா முதலியார் பெயர் அப்பட்டியலில் உள்ளது. (அவர்தான் 1928இல் வகுப்புவாரி இட ஒதுக்கீட்டை அமைச்சராக இருந்து முதலில் செயல்படுத்தியவர்).

1916 டிசம்பர் 20ஆம் நாள் - பிட்டி. தியாகராயர் கையொப்பத்துடன் வெளியான நீதிக்கட்சியின் பிராமணரல்லாதார் அறிக்கையில் (Non Brahmin Manifesto) வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு முறை கோரப் பட்டிருந்தது. கல்வி - வேலை வாய்ப்பில் மட்டுமின்றி, அரசியலிலும் பிராமணரல்லாதார் உரிய இடம் பெற வேண்டும் என்று கூறப் பட்டிருந்தது.

பெரியார் 1919இல் அரசியலுக்கு வந்தார். அவர் நீதிக்கட்சியில் சேரவில்லை. காங்கிரசுக் கட்சியில் சேர்ந்தார். அதுவும் இராச கோபாலாச்சாரியாரின் அழைப்பை ஏற்றுக் காங்கிரசுக் கட்சியில் சேர்ந்தார். திராவிடத்தின் தாய்க்கட்சி நீதிக்கட்சி என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், “திராவிடத்தின் தந்தைஅந்தத் தாய்க் கட்சியில் சேராமல் - அவரது மொழியில்பார்ப்பன - பனியா கட்சியானகாங்கிரசில் சேர்ந்தார்.

நம்மைப் பொறுத்தவரை, பெரியார் தமது தொடக்க காலத்தில் காங்கிரசில் சேர்ந்ததைத் தவறாகக் கருதவில்லை. சிந்தனை வளர்ச்சிக்கேற்ப அரசியல் நிலைபாடுகள் மாறலாம்.

நீதிக்கட்சி சென்னை மாகாண ஆட்சியை 1920 தேர்தலில் பிடித்தது. 1922இல் அவ்வாட்சி வேலை வாய்ப்பில் வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு ஆணை பிறப்பித்தது.

இந்த ஆணையையும் நீதிக்கட்சி ஆட்சி செயல்படுத்தவில்லை. 1926 சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி தோற்றுவிட்டது. ஆட்சி அமைத்திடப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பெரும்பான்மை பெற்ற காங்கிரசு சுயராஜ்ஜியக் கட்சியார் ஆட்சி அமைக்க மறுத்து விட்டனர்.

நீதிக்கட்சி அல்ல, சுப்பராயன் ஆட்சியே
இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தியது

கட்சி சார்பற்ற சுயேச்சையான சுப்பராயன் அவர்களை ஆட்சி அமைக்கும்படி ஆளுநர் கேட்டுக் கொண்டார். காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த எஸ். முத்தையா முதலியார் அக்கட்சியின் பிராமண ஆதரவுப் போக்கைக் கண்டித்து, அக்கட்சியிலிருந்து விலகி, சுப்பராயன் அமைச்சரவையில் சேர்ந்தார். அவர்தாம் முதல் முதலாக - புதிய வகுப்புவாரி இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை 04.11.1927 அன்று சென்னை மாகாண சட்டசபையில் அறிமுகம் செய்தார். சுப்பராயன் அமைச்சரவை 1927இல் வகுப்புவாரி இட ஒதுக்கீட்டிற்குப் புதிய ஆணை பிறப்பித்தது (G.O. M.S. No 1021).

எஸ். முத்தையா முதலியார் - பிராமண ஆதிக்க எதிர்ப்பையும், பிராமணரல்லாதார் இட ஒதுக்கீட்டுக் கோட்பாட்டையும் பெரியாரிடமிருந்து கற்றுக் கொள்ளவில்லை! பெரியாருக்கு முன்பே - அவர் இக்கோட்பாடுகளைப் புரிந்து கொண்டவர்; ஏற்றுக் கொண்டவர்.

அதனால்தான், 1916இல் நீதிக்கட்சி அமைப்பதற்கு முன்னோட்டமாக அமைந்த பிராமணரல்லாதார் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார் முத்தையா முதலியார். அதில் பங்கேற்காதவர் பெரியார்.

நீதிக்கட்சியில் ஆந்திரர் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. அது தோற்றதால் தமிழரான சுப்பராயன் முதலமைச்சர் ஆனார் (1926 - 1930). சுப்பராயன் இடஒதுக்கீட்டுக் கோட்பாட்டில் ஆர்வமாய் இருந்தார். முதலமைச்சர் சுப்பராயனும், அமைச்சர் முத்தையா முதலியாரும்தாம் முதன் முதலாக 1928இல் வகுப்புவாரி இட ஒதுக்கீட்டை செயல்படுத்திக் காட்டினர். நீதிக்கட்சி வகுப்புவாரி இட ஒதுக்கீட்டைச் செயல் படுத்தவில்லை.

பெரியார் காங்கிரசில் சேர்ந்து மிகத் தீவிரமாகச் செயல்பட்டார். காந்தியராகவும் இருந்தார். கதர்த் துணிகளை சுமந்து விற்றார். கள்ளுக்கடை மூடலுக்காகத் தம் துணைவியார் நாகம்மையார் வீட்டுத் தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.

இவற்றையெல்லாம் நாம் குறையாகக் கூறவில்லை. இவ்வளவு தீவிரக் காங்கிரசுக்காரராக இருந்த பெரியாரின் தாய்க்கட்சி நீதிக் கட்சி என்று கூறுவதை நாம் மறுக்கிறோம். பின்னர், நீதிக்கட்சியின் வகுப்புவாரி இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை ஏற்றார். காங்கிரசும், நீதிக்கட்சி போல் வகுப்புவாரி இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை முன் வைக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக 1925இல் காஞ்சிபுரம் காங்கிரசு மாநாட்டில் பெரியார் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்படாததால் அவர் காங்கிரசை விட்டு வெளியேறினார்.

பின்னர் தனி அமைப்பு தொடங்கினார். காங்கிரசை விட்டு வெளியேறிய பிறகு, பெரியார் தொடர்ந்து இட ஒதுக்கீட்டுக் கோரிக்கைக்குக் குரல் கொடுத்தார். மாநாடுகள் நடத்தினார். பெரியாரின் இந்த முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம். ஆனால், தமிழ்நாட்டில் வகுப்புவாரி இட ஒதுக்கீட்டுக் கொள்கையைக் கொண்டு வந்தவரே பெரியார்தாம் - நீதிக்கட்சிதான் பெரியாரின் தாய்க்கட்சி என்று சொல்கின்ற கட்டுக் கதைகளைத்தான் நாம் மறுக்கிறோம்.

ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி, இட ஒதுக்கீட்டு ஆணை போட்டதே தவிர, அதைச் செயல்படுத்தவில்லை.

விடுதலைக்கு முந்தைய காங்கிரசு ஆட்சிகளும், அன்றைய சென்னை மாகாணத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை செயல்படுத்தின. 1937இல் முதலமைச்சரான இராசாசியும் வகுப்புவாரி இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தியதுடன் மாவட்ட நீதிபதி தேர்வுக்கும் அதை விரிவுபடுத்தினார் என்கிறார் பேராசிரியர் . அன்பழகன் (நூல் : வகுப்புரிமைப் போராட்டம், கம்யூனல் ஜி.. - பேராசிரியர் . அன்பழகன், திராவிடர் கழக (இயக்க) வெளியீடு).

இட ஒதுக்கீட்டுக்குத் தடை

விடுதலைக்குப் பின் 1950 சனவரி 26இல் இந்திய அரசமைப்புச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. அதன்பின் இட ஒதுக்கீடு கேள்விக்குள்ளானது. “சட்டத்தின் முன் அனைவரும் சமம்என்ற அரசமைப்புச் சட்ட உறுப்புகளுக்கு இட ஒதுக்கீடு எதிரானதாகும் என்ற கருத்துகள் பேசப்பட்டன.

இட ஒதுக்கீட்டு அடிப்படையில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை நடந்தததால் - தகுதியுள்ள பிராமணராகிய தனக்கு இடம் கிடைக்க வாய்ப்பில்லை எனவே வகுப்புவாரி இட ஒதுக்கீட்டை இரத்து செய்ய வேண்டும் என்று செம்பகம் துரைராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார். புதிய அரசமைப்புச் சட்ட உறுப்பு 15-க்கு எதிரானது இட ஒதுக்கீடு என்று உயர் நீதிமன்றம் இட ஒதுக்கீட்டை இரத்து செய்தது. உச்ச நீதிமன்றமும் அத்தடையை உறுதி செய்தது.

சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் செல்லாது என்று தீர்ப்பளித்த ஆணை சுப்பராயன் - எஸ். முத்தையா ஆகியோர் 1927இல் கொண்டு வந்து 1928இல் செயல்படுத்திய G.O. M.S. No. 1021 ஆணைதான். நீதிக்கட்சி 1922இல் போட்ட ஆணை அன்று! அது எப்போதும் உயிர் பெறவில்லை

இட ஒதுக்கீடு விவரம்

முதல்வர் சுப்பராயன் - அமைச்சர் முத்தையா முதலியார் ஆகியோர் முயற்சியில் கொண்டு வரப்பட்ட 1927ஆம் ஆண்டின் வகுப்புவாரி இட ஒதுக்கீடுச் சட்டம் - பின்வருமாறு ஒதுக்கீடு வழங்கியது.

வேலை வாய்ப்பில் 12 இடங்கள் இருப்பதாகக் கணக்கிட்டு, அதைப் பின்வருமாறு பிரித்தார்கள்.

பிராமணர் அல்லாத இந்துக்களுக்கு                                - 5 இடம்
பிராமணர்களுக்கு                                                                       - 2 இடம்
முகமதியர்களுக்கு                                                                     - 2 இடம்
கிறித்துவர்களுக்கு                                                                      - 2 இடம்
(ஆங்கிலோ இந்தியர் உட்பட)
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு                                                     - 1 இடம்
மொத்தம்                                                                                          - 12 இடம்

இந்த விகிதத்தில் வேலை வாய்ப்புகளைப் பகிர்ந்து அளிப்பது என்பதே வகுப்புவாரி இட ஒதுக்கீடு! அதாவது நூறு விழுக்காடும் வகுப்பு அடிப்படையில் பிரிக்கப்பட்டது. இது 1928ஆம் ஆண்டு தான் செயல்படுத்தப்பட்டது.

பின்னர் 1947இல் காங்கிரசு முதலமைச்சர் ஆன ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் 1948இல் பின்தங்கிய வகுப்பார்க்கு (தனி இட ஒதுக்கீடு) இரண்டு இடம் வழங்கி, இட ஒதுக்கீட்டின் மொத்த எண்ணிக்கையை 14 ஆக்கினார். அதுவும் சுப்பராயன் - எஸ். முத்தையா வெளியிட்ட 1927ஆம் ஆண்டு ஆணையில் செய்யப்பட்ட கூடுதல் சேர்க்கையே!

தடையை நீக்கிட போராட்டம்

இவை அனைத்தும் செல்லாது என்று ஆக்கியது சென்னை உயர் நீதிமன்றம். சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துத் தமிழ் நாட்டில் போராட்டங்கள் நடந்தன. அதுபற்றி பேராசிரியர் . அன்பழகன் மேற்படி நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

மாணவர் கூட்டமே தமிழர் பெரும்படையின் முன்னணியாகத் திகழ்ந்தது. சென்னை பச்சையப்பன் கல்லூரிக் காளைகள் ஊதிய அபாயச் சங்கொலி கேட்டு குமரிமுனை வரை உள்ள கல்லூரிகளிலும், உயர் நிலைப் பள்ளிகளிலும் எதிரொலி கிளம்பிற்று..

வகுப்புரிமைத் தந்தை அறிஞர் எஸ். முத்தையா அவர்களும், திராவிடர் கழகத் தலைவர் பெரியார் இராமசாமி அவர்களும், திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் அறிஞர் அண்ணாதுரை அவர்களும் மற்றும் பல திராவிட இயக்கத் தலைவர்களும் வகுப்புரிமைச் சட்டத்தின் அவசியத்தை விளக்கி வெளியிட்ட அறிக்கைகளும் நிகழ்த்திய விரிவுரைகளும் மக்கள் விழிப்பிற்கும் உரிமை எழுச்சிக்கும் காரணமாயின”.

சென்னை மாகாணக் காங்கிரசு ஆட்சியும் இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அதற்கான முயற்சிகளை எடுத்துக் கொள்வோம் என்று அமைச்சரவையில் முடிவு செய்து, உறுதி கூறியது. கல்வி அமைச்சர் மாதவ மேனன் ஆணித் தரமாக உறுதி கூறினார் என்கிறார் அன்பழகன்.

மேலும் . அன்பழகன் கூறுகிறார் :

இந்த உறுதிமொழிகள் கிடைக்கக் காங்கிரசு இயக்கத்தவரிலும் பலர் காரணமாயினர். காங்கிரசு சட்டசபை உறுப்பினர்களான தோழர்கள் கோசல்ராம், பட்டாபிராமன், கக்கன், கன்னியப்பன், சேலம் சுப்பிரமணியன் ஆகியோர் கம்யூனல் ஜி..வை நிலைநிறுத்த எல்லா முயற்சிகளும் எடுத்துக் கொண்டனர்.

காங்கிரசுத் தலைவர் காமராசரும் மற்றும் பலரும் கூட கம்யூனல் ஜி..வை ஆதரித்துப் பேசினர். காங்கிரசு ஏடுகளானதினசரி”, “காண்டீபம்”, “பிரசண்ட விகடன்போன்றவைகளும் கம்யூனல் ஜி..வை ஆதரித்து எழுதின.

- பேராசிரியர் . அன்பழகன் நூல், பக்கம் 95, 96, 97.

சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தள்ளுபடி செய்து கம்யூனல் ஜி..வுக்கு உயிர் கொடுக்கக் கோரி சென்னை மாகாணக் காங்கிரசு ஆட்சி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அங்கு ஏழு பேர் கொண்ட அரசமைப்புச் சட்ட ஆயம் - சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்து - கம்யூனல் ஜீ..வைத் தள்ளுபடி செய்தது.

பிற்படுத்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் இட ஒதுக்கீடு - இல்லாமல் போனது. ஒட்டு மொத்தத் தமிழ்நாடும் கவலையில் உறைந்தது. பெரியார் கம்யூனல் ஜி.. மாநாடு ஒன்றைத் திருச்சியில் போட்டார். அண்ணா - கம்யூனல் ஜி.. கேட்டும், நீதிமன்றத் தீர்ப்புகளைச் சாடியும் கட்டுரைகள் எழுதினார். (அக்கட்டுரைகள் பின்னர்பொன்விலங்குஎன்ற தலைப்பில் 1953இல் நூலாக வந்தது.)

மாணவர்கள் போராடினர். அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும் அல்லது அரசமைப்புச் சட்டம் ஒழிய வேண்டும் என்று தமிழ்நாட்டில் பரவலாகப் பேசப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரசின் செல்வாக்குமிக்கத் தலைவராக விளங்கிய காமராசர் தலைமை அமைச்சர் பண்டித நேருவுடன் பேசினார். அரசமைப்புச் சட்டத்திருத்தம் தேவை என்றார். இதுபற்றி காங்கிரசுத் தலைவர்களில் ஒருவரான . கோபண்ணாதமிழ் இந்துநாளேட்டில்முதல் திருத்தத்தின் மூலவர் காமராஜர்என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார் (15.07.2014).

பெரியாரின் தனி போராட்டமா?

கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டை மீட்கும் போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்புப் பாராட்டத்தக்கது. அதே வேளை அவர் மட்டுமே போராடவில்லைகருத்துகள் கூற வில்லை. பெரியாரியத் திராவிடவாதிகள் - இதில் அண்ணாவின் பங்களிப்பை, தி.மு..வின் போராட்டங்களைக் கூடக் கணக்கில் எடுப்பதில்லை. பிறகு எங்கே, காங்கிரசுக்காரரான எஸ்.முத்தையா அவர்கள் பங்களிப்பை, காங்கிரசுத் தலைவர் காமராசர் பங்களிப்பை கவனிக்கப் போகிறார்கள்!

பெரியார் 1950 - 51 காலத்தில் கடுமையான காங்கிரசு எதிர்ப்பாளராக இருந்தார். 1947 ஆகத்து 15 வரை வெள்ளை யராட்சியை ஆதரித்து, காங்கிரசை எதிர்த்து வந்தார். அதன் போக்கில் இந்திய விடுதலை நாளை - 1947 ஆகத்து 15 துக்க நாளாகக் கடைபிடித்தார். 1949இல் தி..விலிருந்து தி.மு.. பிரிந்தது முதல் தி.மு.. ஒழிப்பு வேலைத் திட்டத்தை முதன்மைப் படுத்தினார் பெரியார்.

1952 முதல் பொதுத் தேர்தலில் பெரியார் கம்யூனிஸ்ட்டுக் கட்சியை ஆதரித்துப் பரப்புரை செய்தார். காங்கிரசை எதிர்த்தார். இந்தப் பின்னணியில் - வகுப்புவாரி இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தை முன்னெடுத்தார் பெரியார்.

1954இல் இருந்து காமராசரையும் காங்கிரசையும் நிபந்தனையற்று ஆதரித்தார் பெரியார். அவ்வாறான சூழலில் 1954க்குப் பின் இட ஒதுக்கீட்டை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்திருந்தால், இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாகவும், பார்ப்பன பனியா காங்கிரசு அரசுக்கு எதிராகவும், 1950இல் பரப்புரை செய்ததுபோல் பெரியார் செய்திருப்பாரா என்ற ஐயமும் எழுகிறது. ஏன் இந்த ஐயம்?

1938இல் இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடிய பெரியார், 1965இல் இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த வரலாறு காணாத மாணவர் - மக்கள் போராட்டத்தை எதிர்த்தார். “காவல்துறையின் கையில் உள்ள துப்பாக்கிகள் பூப்பறிக்க இருக்கிறதா? நாலு காலிகளை சுட்டுத் தள்ளினால் போராட்டம் ஒடுங்கும்என்று அறிக்கை விட்டார். அவ்வாறு பெரியார் அறிக்கை விட்டதற்குக் காரணம், தி.மு.. ஒழிப்பை முதன்மைப்படுத்தி, 1954 முதல் 1967இல் தி.மு.. ஆட்சிக்கு வரும்வரை காங்கிரசை அவர் ஆதரித்ததுதான்!

அது ஒருபக்கம் இருக்கட்டும். இட ஒதுக்கீட்டை மீட்க, 1950 - 51இல் பெரியார் நடத்திய தீவிரப் பரப்புரைகளையும் அவரது செயல்பாடுகளையும் பாராட்டுவோம்; நன்றி தெரிவிப்போம்!

அதேவேளை பெரியார் புராணம் எழுதுவோர் தி.மு.., காங்கிரசு, முத்தையா முதலியார், அண்ணாகாமராசர் உள்ளிட்ட பலரின் பங்களிப்பை மறைப்பதைத் தவறு என்போம்.

அடுத்து, அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் இட ஒதுக்கீட்டிற்காக மட்டும் வந்ததா என்பதைப் பார்ப்போம்.

முதல் திருத்தம் எப்படி ஏற்பட்டது?

1950 சனவரி 26 இல் புதிதாக செயலுக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறையில் சில முட்டுச் சந்துகளில் மாட்டிக் கொண்டது. அவற்றில் முதன்மையானதும், இந்திய ஆட்சியாளர்களுக்குத் தலைவலியாக இருந்ததும் குடிமக்களுக்குக் கருத்துரிமை, பேச்சுரிமை ஆகியவற்றை வழங்கிய உறுப்பு 19(1)(a).

புதிதாக இந்த உரிமையைப் பெற்ற நிலையில் ஏடுகளும், பிரமுகர்களும் ஆட்சியாளர்களைப் பற்றி - குறிப்பாகத் தலைமை அமைச்சர் நேருவைப் பற்றிக் கடுமையாக விமர்சித்தனர். மும்பையில் இருந்து வெளிவந்து கொண்டிருந்தகிராஸ் ரோட்” (CROSS ROAD) என்ற இடதுசாரி ஆங்கில வார இதழ் நேருவின் கொள்கைகளைக் கடுமையாகத் தாக்கி எழுதியது. அவ்விதழைச் சென்னை மாகாண அரசு 1950 இல் தடை செய்தது. அவ்விதழின் வெளியீட்டாளர் ரொமேசு தாப்பர் தடையை நீக்கிட வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். உச்ச நீதிமன்றம் கருத்துரிமை உறுப்பு 19(1)(ணீ)ஐக் காரணம் காட்டி இதழ் மீதான தடையை நீக்கி 26.05.1950இல் தீர்ப்பளித்தது. நீதிமன்றச் சுத்தியல் நேரு அரசின் தலையில் அடித்தது போல் ஆட்சியாளர்களுக்கு சுரீர் என்று வலித்தது. அரசமைப்பின் அடிப்படை உரிமைகள் உறுப்பு 19(1)(a)க்கு திருத்தம் கொண்டு வர இந்திய ஆட்சியாளர்கள் சிந்தித்தார்கள்.

இந்திய ஆட்சியாளர்கள் அரசமைப்புச் சட்டத்தின் அடுத்த முட்டுக்கட்டையாகப் பார்த்த உறுப்பு 19(1)(g). இவ்வுறுப்பு, இந்தியக் குடிமக்கள் தாங்கள் விரும்பும் வேலை, தொழில், உடைமை ஆகியவற்றை மேற்கொள்ள முழு உரிமை பெற்றவர்கள் என்பதாகும். மக்கள் நலனுக்காக, சில தொழில்களை அரசுடைமை ஆக்குவதற்கு இந்தப்பிரிவு இடையூறாக இருந்தது.

எனவே மேற்கண்ட 19(1)(a) மற்றும் 19(1)(g) ஆகியவற்றிற்குஞாயமான கட்டுப்பாடுகளை” (Reasonable Restrictions) விதிக்க நேரு அரசு விரும்பியது.

மூன்றாவதாக நிலச்சீர்திருத்தம் செய்திட, உச்ச வரம்புச் சட்டம் கொண்டுவர, ஜமீன்தாரி முறையை நீக்கிடத் தடையாக இருந்த உறுப்பு 31 (4), (6) ஆகியவற்றைக் கடக்கப் புதிய பிரிவுகள் தேவைப்பட்டன. இப்புதிய திருத்தம் பற்றியும் நேரு அரசு சிந்தித்துக் கொண்டிருந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் நான்காவது சிக்கலாக சென்னை மாகாண அரசின் வகுப்புவாரி இட ஒதுக்கீடு செல்லாது என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்தது. எதிர்க்கட்சிகளும், மாணவர்களும், சென்னை மாகாண அரசும், சென்னை மாகாண ஆளுங்கட்சியும் இட ஒதுக்கீட்டை நிலைநிறுத்த அரசமைப்புச் சட்டத்தில் 15, 16 உறுப்புகளில் திருத்தம் கோரினர்.

இந்த நான்கு சிக்கல்கள் மட்டுமின்றி, நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள், அதிகாரங்கள் தொடர்பான சிக்கல்கள், தேவையான பழைய சட்டங்களைத் தொடர்வதற்கான திருத்தம் என மொத்தம் 14 திருத்தங்கள் அரசமைப்புச் சட்டத்தில் ஒரே ஒரு முன்மொழிவின் மூலம் - முதல் திருத்தம் (First Amendment of the Constitution) என்ற பெயரில் செய்யப்பட்டது. அந்த முதல் திருத்தத்தைத் தலைமை அமைச்சர் பண்டித நேரு 10.05.1951 அன்று நாடாளுமன்றத்தில் முன் வைத்தார். 18.05.1951 அன்று நாடாளுமன்றம் மிகப்பெரும் பெரும் பான்மையுடன் நிறைவேற்றி அதனைச் சட்டமாக்கியது.

அரசின் முன்னுரிமை வரிசைப்படி நாலாவது இடத்தில் இட ஒதுக்கீட்டுத் திருத்தம் இருந்தது. ஆனால் அரசமைப்புச் சட்ட உறுப்புகளின் வரிசையில் பார்த்தால் இட ஒதுக்கீட்டுக்கான திருத்தம் உறுப்பு 15இல் வருகிறது.

இந்த முதல் திருத்தத்தின் நோக்கங்களும் காரணங்களும் (Statement of Objects and Reasons) என்ற முன்னுரையில் இந்திய அரசு கூறியுள்ள பகுதி கவனிக்கத்தக்கது.

கடந்த 15 மாதங்களாக அரசமைப்புச் சட்டம் செயல்பட்டதில் சில சங்கடங்களைத் தங்கள் தீர்ப்புகளின், அறிவிப்புகளின் வழியாக நீதிமன்றங்கள் வெளிக் கொண்டு வந்தன. குறிப்பாக அடிப்படை உரிமைகள் தொடர்பானவை!”.

இவ்வாறு கூறிவிட்டு முதல் நோக்கமாகஅரசமைப்புச் சட்ட உறுப்பு 19இல் கருத்துரிமைக்கு ஞாயமான கட்டுப்பாடுகள் (Reasonable Restriction) விதிக்க வேண்டி உள்ளதுஎன்று அந்நோக்க உரை கூறுகிறது. உறுப்பு 15இல் செய்ய வேண்டிய திருத்தம் முதன்மையானது என அந்நோக்க உரை கூறவில்லை.

கருத்துரிமைக்குக் கட்டுப்பாடு விதிப்பதை முதல் நோக்கமாகக் கொண்டதேன்? நேருவை விமர்சித்த ரொமேஷ் தாப்பரின்கிராஸ் ரோட்ஸ்இதழுக்கு சென்னை மாகாண அரசு விதித்த தடை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நாள் 26.05.1950. அதாவது அரசமைப்புச் சட்டம் செயலுக்கு வந்த ஐந்து மாதத்தில் முதல் சிக்கலாக இத்தீர்ப்பு வந்தது. அதுவும் செல்வாக்கு மிக்க ஆட்சித் தலைவர் பண்டித நேருவை இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி செய்யப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் நீக்கிவிட்டது; நேருவைஇழிவுபடுத்தியதுகருத்துரிமை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது என்று காங்கிரசார் பதறினார்கள்.

எதிர்காலத்தில் அவ்வாறு நடக்காமல் இருப்பதற்காக உறுப்பு 19இல் உட்பிரிவு 2 (கருத்துரிமைக்கு ஞாயமான கட்டுப்பாடுகள் - விதிகள் பிரிவு) புதிதாக சேர்க்கப்பட்டது. அடுத்து தொழில், வணிகம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் வகையில் அதே 19இல் பிரிவுகள் (6), i, ii ஆகியவை சேர்க்கப்பட்டன. நிலம் கையகப்படுத்திட 31இல் புதிதாக, A  மற்றும் B பிரிவுகள் சேர்க்கப்பட்டன. இட ஒதுக்கீட்டிற்கு வாய்ப்பளிக்கும் வகையில் உறுப்பு 15இல் உட்பிரிவு 4 சேர்க்கப்பட்டது.

நாடாளுமன்றம் தொடர்பாக உறுப்பு 85 மற்றும் 87, சட்டப்பேரவை தொடர்பாக உறுப்பு 174 மற்றும் 176, தேவையான பழைய சட்டங்களைத் தொடர்வது தொடர்பாக உறுப்பு 372 ஆகியவை திருத்தப்பட்டன. இவ்வாறாக 14 திருத்தங்கள் செய்யப்பட்டன.

கிராஸ் ரோடுஇதழ் தடை நீக்கம்

கிராஸ் ரோடுஇதழ் தடை நீக்கம் 26.05.1950 அன்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் வந்தது. சென்னை மாகாண இட ஒதுக்கீடு நீக்கத் தீர்ப்பு 09.04.1951 அன்று உச்ச நீதிமன்றத்தில் வந்தது. சென்னை உயர் நீதிமன்றம் இட ஒதுக்கீட்டைத் தடை செய்த தீர்ப்பு 27.07.1950 அன்று வந்தது. “கிராஸ் ரோடுஇதழ்த் தடை நீக்கம்தான் முதலில் வந்தது. அது முதல் நிகழ்வு என்பது மட்டுமின்றி, நடுவண் அரசு தொடர்பானது என்ற அடிப்படையில் அரசமைப்பு திருத்தத்தில் உறுப்பு 19(2)-க்கு முன்னுரிமை தரப்பட்டது.

பெரியார் புராணம் பாடும் பகுத்தறிவுப் பாகவதர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தையே முதல் முதலில் திருத்தியவர் ஐயாதான் என்பார்கள். ஆனால் அவர்களுக்குச் செவி கொடுக்கும் இளையோருக்கு வரலாற்று உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காக இவற்றையெல்லாம் எழுத நேர்ந்தது.

பெரியாரியத் திராவிடவாதிகள் அண்ணாவின் பங்களிப்பைக் கூட உரியவாறு பேசுவதில்லை. அண்ணா தமிழர்களின் வரலாற்றுப் பெருமைகளை, தமிழ் மொழியின் ஆற்றல்களை, சங்கத்தமிழ் நூல்களின் சிறப்புகளை - திருக்குறள், சிலப்பதிகாரச் செழுமைகளைப் பாராட்டி எழுதியும் பேசியும் வந்தார், இது பெரியாரியர்களுக்குப் பிடிக்க வில்லையோ என்னவோ!

மற்றபடி இட ஒதுக்கீட்டு சமூக நீதிக்காக பெரியார் தொடர்ந்து குரல் கொடுத்ததையும் பரப்புரை செய்ததையும் ஆட்சியாளர்களை வலியுறுத்தியதையும் நாம் மதிக்கிறோம்; பாராட்டுகிறோம். அதே வேளை, மற்றவர்கள் பங்களிப்பை மறைத்துஐயாவே அனைத்திற்கும் ஆதிமூலம்என்று கூறுவதையும், அவரன்றி தமிழ்நாட்டில் எதுவும் அசையவில்லை என்று பேசுவதையும் நாம் மறுக்கிறோம்!

வகுப்புவாரி இட ஒதுக்கீட்டை முதல் முதலில் செயல்படுத்தியது ஆந்திரர் தலைமையிலான நீதிக்கட்சி அல்ல; தமிழ்நாட்டுத் தமிழரான சுப்பராயன் தலைமையிலான ஆட்சியே என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளோம்.

நம் முன்னோர்களின் உண்மை வரலாற்றைப் படிப்பது நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் சீரமைக்கத் தேவையான பாடம்!


(தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள், “தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” – 2019 பிப்ரவரி 1 - 15 இதழில் எழுதியுள்ள கட்டுரை இது).

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

7 comments:

  1. சுயேச்சை மந்திரி சபை என்ற பெயரில் டாக்டர் சுப்பராயன்,ஆரோக்கியசாமி முதலியார், அரங்கநாத முதலியார் உள்ளிட்டவர்களை வைத்து காங்கிரஸ் மந்திரி சபையை அமைத்தது, ஆனால் நிற்க முடியவில்லை மந்திரிகள் ராஜினாமா கொடுக்கும் நிலை ஏற்பட்டது இரண்டு மந்திரிகள் ராஜினாமா செய்துவிட்டார்கள் டாக்டர் சுப்பராயன் மட்டுமே ராஜினாமா செய்யாமல் இருந்தார்கள் பின்னர் தான் தலைவர் முத்தையா முதலியார் அவர்களையும் சேதுரத்தினம் ஐயர் அவர்களையும் உள்ளடக்கிய மந்திரி சபை உருவாக்கப்பட்டது.

    இந்த மந்திரி சபை மக்களுக்கு பல நன்மைகளை செய்தது
    ஜஸ்டிஸ் பார்ட்டி மந்திரிசபை எதையெல்லாம் செய்ய பயபட்டதோ அதையெல்லாம் மிகுந்த தைரியத்தோடு இந்த மந்திரி சபையார் செய்தார்கள் அவர்கள் செய்த பல நன்மைகளில் மிகவும் முக்கியமானது இந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ உத்தரவாகும் ஆகும் இந்த உத்தரவை மிகுந்த தைரியத்தோடு எவருடைய எதிர்ப்பையும் லட்சியம் செய்யாது நிறைவேற்றி வைத்தவர் நமது தலைவர் முத்தையா முதலியார் அவர்கள்

    ஜீகம்யூனல் ஜி ஒ. நிறைவேற்றப்படும் பொழுது நான் காங்கிரசில் இருந்தேன் நான் காங்கிரஸில் இருந்த பொழுதும் வகுப்புவாரிப் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை மீது பலமான நம்பிக்கை கொண்டவனாக தான் இருந்தேன்.

    மேலே குறிப்பிட்டுள்ளது கம்யூனல் ஜிஓ ரத்து செய்யும் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய பொழுது அதற்கு எதிரான கிளர்ச்சியை தூவங்குவதற்காக சென்னை பெரம்பூரில் 12 8 1950 இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது

    சமூகநீதி மற்றும் இட ஒதுக்கீட்டிற்கான போராட்டத்தில் மரியாதைக்குரிய ஐயா முத்தையா முதலியார் அவர்களின் பங்களிப்பை திராவிட இயக்கம் இருட்டடிப்பு செய்து விட்டதாக சிலர் கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

    தந்தை பெரியார் அவர்கள் தலைவர் முத்தையா முதலியார் , நமது தலைவர், என்று புகழ்பாடும் முத்தையா முதலியார் பங்களிப்பை மறைத்துவிட்டதாக கதை எழுதுவது எத்தனை பெரிய கேலிக்கூத்து தந்தை பெரியார் அவர்களின் மேலேகுறிப்பிட்ட உரை இன்றளவும் வகுப்புவாரி உரிமை ஏன் என்ற தலைப்பின் கீழ் சிறு வழியூடாக வெளியிடப்பட்டு விற்பனையில் இருக்கிறது சமகாலத்தில் பதிவு செய்யப்பட்டு பரப்பப்பட்ட ஒரு தகவலை மறுத்து கதை எழுதுவது அதற்கு தமிழர் தெலுங்கர் என்று இன்னொரு கூடுதல் காரணம் சேர்ப்பதும் எந்த வகை அறம் என்றே தெரியவில்லை

    ReplyDelete
    Replies
    1. அருமையான விளக்கம் தோழர்... தந்தைப்பெரியாரைப் பற்றி இன்னும் ஆழமாக விளங்கிக் கொள்ள உதவுகிறது

      Delete
  2. 1921 ஆம் ஆண்டு நீதிக் கட்சியின் சார்பாக பனகல் அரசர் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டவுடன் 21.9. 1921 அன்று இடஒதிக்கிடு திட்டம் முதன்முதலாக அரசு ஆணையின் மூலம் வெளியிடப்பட்டது சரிவர நடைமுறைப்படுத்தப்படவில்லை மீண்டும் 15.5.1922 இல் அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது பார்ப்பன அதிகாரிகளும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த வெள்ளைக்கார உயரதிகாரிகளும் நிறைவேற்றி வைக்க முன்வரவில்லை மீண்டும் 6. 2.924 இல் இட ஒதுக்கீடு திட்டம் பற்றிய அரசாணை வெளியிடப்பட்டது அதன்பிறகும் உருவான பலன் ஏற்படவில்லை

    பின்னர் நீதிக்கட்சியின் ஆதரவோடு இயங்கிவந்த டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த திரு எஸ் முத்தையா முதலியார் அவர்கள் துணிவோடு வெள்ளைக்கார உயரதிகாரிகளை இசையவைத்து 16,3. 1928இல் இட ஒதுக்கீட்டிற்கு திட்டத்திற்கு அரசாணையை வெளியிட்டார் அந்த அரசாணையை நிறைவேற்றுவதில் எந்த அதிகாரியாவது தடையாக இருந்தால் அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று அரசு தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டது.

    தந்தை பெரியார் முத்தையா முதலியார் அவர்களே பாராட்டி குடியரசில் தலையங்கம் எழுதினார்

    26.6.1996 திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து

    இந்த உரை சமூகநீதி இப்போது என்ற தலைப்பில் சிறு வெளியீடாக தற்பொழுதும் விற்பனையில் உள்ளது இதில் முத்தையா முதலியாரின் புகழை இட ஒதுக்கீடு தொடர்பான வரலாற்றில் இருட்டடிப்பு செய்து விட்டார்கள் என்று கதை எழுதுபவர்கள். கவனத்திற்கு

    ReplyDelete
  3. (தோழர் பெரியார், குடி அரசு - தலையங்கம் - 11.11.1928)
    மந்திரி S.முத்தையா முதலியார் வாழ்க! வாழ்க! வாழ்க!
    உத்தியோகத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்
    நமது மந்திரி திரு. S. முத்தய்யா முதலியார் அவர்கள் தமது ஆதிக்கத் தில் உள்ள முக்கிய இலாக்காவில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ கொள்கையை நிலைநாட்டி விட்டார். அதாவது, பத்திரப்பதிவு இலாக்கா உத்தியோகத்திற்கு நபர்களை நியமிப்பதில் அடியில் கண்ட வகுப்பு வாரிப்படி தெரிந்தெடுத்து நியமிக்கவேண்டும் என்பதாக ஒருவிதி ஏற்படுத்தி, அதை கவர்னர் பிரபு வாலும், மற்ற மந்திரிகள் நிர்வாக சபை அங்கத்தினர்கள் முதலியவர்களாலும் சம்மதம் பெற்று அமுலுக்கு கொண்டு வரவேண்டியதான சட்டமாக்கி விட்டார். அதாவது, பத்திரப்பதிவு இலாக்கா உத்தியோகத்திற்கு நியமிக்க வேண்டிய ஸ்தானங்கள் 12 இருக்குமானால் அவைகளில்
    பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்பவர்களிலிருந்து 5
    பார்ப்பனர்களிலிருந்து 2
    மகம்மதியர்களிலிருந்து 2
    ஐரோப்பிய ஆங்கிலோ இந்தியர்கள் அடங்கிய கிறிஸ்தவர்களிலிருந்து 2
    தாழ்த்தப்பட்டவர்களிலிருந்து 1
    ஆக 12
    நபர்களை வகுப்புவாரி முறையில் தெரிந்தெடுத்து நியமிக்க வேண்டும் என்கின்ற சட்டம் செய்திருக்கிறார். எனவே மேல்படி இலாக்காவுக்கு எவ்வளவு பேர் தேவை இருந்தாலும் இந்த விகிதப்படியே நியமிக்கப்படவேண்டும் என்பதாகும். இந்த திட்டத்தின் விகிதங்களில் 100-க்கு 3 வீதம் ஜனத்தொகை உள்ள பார்ப்பனருக்கு 100-க்கு 16 உத்தியோகம் வீதமும், 100-க்கு 20 வீதத்திற்கு மேல்பட்ட மகம்மதியர்களுக்கு 100-க்கு 16 வீதமும், 100-க்கு 20 வீதம் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் என்கின்ற வகுப்பாருக்கு 100-க்கு 8 வீதமும் உத்தியோகங்கள் பங்கு பிரித்துக் கொடுத்திருப்பதானது மிகவும் அநியாயமானதென்றே சொல்லுவோம். ஒருசமயம் உத்தியோகத்திற்கு ஏற்ற நபர்கள் குறைவான பங்கு கொடுக் கப்பட்டிருக்கும் வகுப்புகளில் கிடைக்கவில்லை என்று யாராவது சமாதானம் சொல்ல வருவார்களானால் அது அந்த வகுப்பார்களுக்கு உத்தியோகங்கள் கொடுப்பதில் அவர்களுக்கு செய்திருக்கும் கொடுமையை விட பல மடங்கு மேல்பட்ட கொடுமையாகும். என்னவெனில், உத்தியோகப் பங்கில் மண்ணைப் போட்டதல்லாமல் அந்த வகுப்புகளை உத்தியோகத்திற்கு லாயக்கில்லை என்று அவமானப் படுத்தியதாகும். இந்த திட்டத்தை மகமதியர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் ஒப்புக் கொள்வதானது “பிச்சை போடாவிட்டாலும் கவலையில்லை. தயவு செய்து நாயை பிடித்துக் கட்டுங்கள்” என்றபடி ஒரு வீட்டில் பிச்சைக்கு போன ஒருவர் மீது வீட்டுக்காரர் நாயை அவிழ்த்துவிட்டு கடிக்கச் சொன்னபோது எஜமானனைப் பார்த்து அந்தப் பிச்சைக்காரர் கெஞ்சினது போல்தான் ஆகும்.
    எனவே, யார் யாருக்கு எவ்வளவு பங்கு என்பதை தீர்மானித்துக் கொள்ளும் விஷயத்தில் சற்று கஷ்டமோ அதிருப்தியோ இருந்தாலும் சர்க்கார் உத்தியோகம் என்பவைகள் பொது சொத்தென்பதையும் அதில் எல்லோருக்கும் பங்குண்டு என்பதையும் ஒப்புக்கொண்டு பங்கு பிரித்துக் கொடுக்கவும் பங்கு பிரித்துக் கொள்ளவும் ஒரு ஆதாரம் ஏற்படுத்திக் கொள்ள இடம் கிடைத்ததே இது சமயம் நமக்கு ஒரு பெரும் வெற்றியாகும். இதுபோலவே மற்ற இலாக்காக்களுக்கும் ஒரு விதி ஏற்பட்டு விடுமானால் நமது நாட்டைப் பிடித்த கேட்டில் பெரும் பாகம் தொலைய மார்க்க மேற்பட்டுவிட்டதென்றே சொல்லுவோம். இந்த முறைக்கு ஒரு சமயம், அதிகப் பங்குகளுக்கு பல வழிகளிலும் முயற்சித்து கொள்ளை அடித்து அனுபவித்து வரும் பார்ப்பனர்கள் ஒப்புக் கொண்டாலும், நமது அரசாங்கத்தார் ஒப்பு கொள்வது என்பது அவர்களுக்கு மிகவும் கஷ்டமான காரியம் என்பதே நமது அபிப்பிராயம். நமது நாட்டில் வெள்ளைக்கார ஆட்சியானது இந்நாட்டு மக்களின் இவ்வளவு அதிருப்தியின் மீதும் கவலையற்று பொருத்தமற்ற கொடுங்கோன்மைமுறையில் நடைபெற்று வருவதற்கு காரணமே ஒரு வகுப்பை ஒரு வகுப்பார் ஏய்த்து கையில் வலுத்தவன் காரியம் என்பது போல் வலுத்தவன் ஏக போக உரிமை அடையும் படியான மாதிரியில் அமைக்கப்பட்டிருக்கும் தன்மை தான் என்றே சொல்லுவோம்.


    ReplyDelete
  4. இத்தன்மையே உள் கலகங்களுக்கும் வகுப்புச் சச்சரவுகளுக்கும் ஒற்றுமையின்மைக்கும் இடமாய் இருந்து வருகின்றது. எனவே அவர்களுக்குள்ள இந்த சவுகரியமான தன்மையை மாற்றிவிடக் கூடியதும் அடி யோடு கவிழ்த்துவிடக் கூடியதுமான வகுப்பு உரிமைக் கொடுத்து விட்டால் எப்படி ஏக போக உரிமைபோய்விடுமோ அதைப்போல் ஏக போக ஆட்சி யும் போய்விடும். ஆதலால் ஏக போக ஆட்சியை எதிர்பாக்கும் எந்த அரசாங்கத்தாரும் இந்த வகுப்புவாரி உரிமையை ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். இருந்தாலும் எப்படியோ சாமர்த்தியமாகவோ தந்திரமாகவோ நமது திரு.எஸ். முத்தையா முதலியார் அவர்கள் விதி ஏற்படுத்திக் கொண்டது போல் மற்ற மந்திரிகளும் நிர்வாக சபை அங்கத்தினர்களும் ஒருவிதி செய்து கொண்டார்களானால், அதிலும் முக்கியமாக திருவாளர்கள் கிருஷ்ணன் நாயர் அவர்களும் மகமது உஸ்மான் அவர்களும் தங்கள் தங்கள் இலாக்கா வுக்கு திரு. முத்தையா முதலியாரைப் பின்பற்றி இம்மாதிரி ஒரு ஏற்பாடு செய்து வைப்பதில் கவலை எடுத்து வெற்றி பெறுவார்களானால் அதுவே அவர்களது உத்தியோக காலத்தை வெற்றி பெற நடத்தியதாகும் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்ளுகின்றோம். அப்படிக்கில்லாமல் 30 நாளை எண்ணிக் கொண்டிருப்பதும் அது எண்ணி முடிந்தவுடன் ரூபாய் 5333-5-4 ஐ எண்ணுவதும் ரூ 5333-5-4-ஐ எண்ணி ஆனவுடன் மறுபடியும் 30 நாட்களை எண்ணுவதும், மீதி ஏதாவது கொஞ்ச நஞ்சம் நேரமிருக்கு மானால் தங்கள் அண்ணன், தம்பி, மாமன், மைத்துனன், சிநேகிதன் அடிமை முதலியவர்களுக்கு உத்தியோகம் வாங்கிக் கொடுப்பதிலும் மறுபடியும் தங்களுக்கு மேல் உத்தியோகங்கள் கிடைப்பதற்கு தந்திரமும் சூழ்ச்சியும் கண்டுபிடித்துக் கொண்டிருப்பதில் செலவழிப்பதுமான காரியத்தை செய்து கொண்டிருந்தால் அவர்கள் என்னவென்றழைப்பது என்பதை பொது ஜனங்களுக்கே விட்டு விடுகிறோம்.
    இந்த நிலையில் பச்சைப் பார்ப்பனப் பத்திரிகையாகிய “சுதேச மித்திரன்” 8-11-28 தேதி தலையங்கத்தில் “வகுப்புப்பித்தம் தலைக்கேறிவிட்டதா?” என்கின்ற தலைப்புக் கொடுத்து தனது ஆத்திர விஷத்தைக் கக்கியிருக்கின்றான்.
    அதாவது, எடுப்பிலேயே “ ஜஸ்டிஸ் கக்ஷியார் மந்திரிகளாக இருந்த காலத்தில் செய்யத் துணியாத அக்கிரமத்தை ....கனம் எஸ்.முத்தையா முதலியார் செய்யத் துணிந்து விட்டார்” என்று ஆரம்பித்து “இது சட்ட விரோதமான காரியமாகும்” என்று முடித்திருக்கிறான்.
    “மித்திரனின்” ஜாதிப்புத்தி இதுதான் என்பது ஏற்கெனவே எல்லோ ரும் அறிந்ததுதான். என்னவெனில் பார்ப்பனருக்கு இஷ்டமில்லாத எந்தக் காரியமானாலும் அதைப்பற்றி உலகமே முழுகிப் போய்விட்டது போல முதலில் கூப்பாடு போடுவார்கள். அது பலிக்கவில்லையானால் பிறகு சட்டத்தைக் கொண்டு வந்து சட்டம் பேச ஆரம்பித்து விடுவார்கள். மனுதர்ம சட்டத்தைப்போலவே வெள்ளைக்கார சட்டமும் பார்ப்பனர்கள் பிழைப் புக்குத் தக்கபடி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது என்கின்ற தைரியம் அவர்க ளுக்கு இருப்பதால் அவர்களுக்கு சட்டம் என்கிற ஆயுதத்தைக் கொண்டு எப்படியும் பேசலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இனி இந்த நினைப்புக்கு இடம் கொடுக்கக்கூடாது. நாம் நியாயத்திற்கு விரோதமாய் இருக்கும் எந்த சட்டத்தையும் மண்டையில் அடித்து உடைத்து சுட்டு பொசுக்கத் தயாராகயிருக்க வேண்டும்.
    “மித்திரன்”ஜஸ்டிஸ் கக்ஷியை புகழ்ந்ததற்கும் ஆதாரம் இல்லாமல் போகவில்லை. ஏனெனில் சென்ற தேர்தலில் பார்ப்பனர்களின் விஷமப் பிரசாரத்தால் ஜஸ்டிஸ் கக்ஷிக்கு நல்ல சூடு கிடைத்துவிட்டதால் இந்தத் தேர்தலிலும் அப்படி ஏற்பட்டு விடுமோ என்கின்ற பயத்தில் சூடுபட்டவர்கள் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளை ஆகலாம் என நினைத்து குட்டிக் கரணம் அடித்து வருகின்றார்கள். இதன் பலன்களில் ஒன்றுதான் திரு. ராமசாமி முதலியாரவர்கள் தலை ஒருவருக்கும் வால் ஒருவருக்கும் காட்டுவது. இதன் பலன்தான் திரு. பாத்ரோ அவர்கள் சமூக சீர்திருத்தத்திற்கு சட்டம் செய்யகூடாது என்றது. இதன் பலன்தான் இப்பேர்பட்ட திரு. பாத்ரோ அவர்களை பனகால் அரசர் சைமன் கமிட்டி மெம்பராக்கினதும் அவரை அக் கமிட்டிக்குத் தலைவராக்கினதும் ஆகும். இதன் பலன் தான் தொழிலாளர்கள் கொடுமைப்படுத்தப்பட்ட விஷயத்தில் சற்று கவலை கொள்ளாமல் தங்கள் ஆதிக்கத்தின் பெருமையில் அலட்சியமாயிருந்ததும் இன்னும் இது போன்ற பல இரகசியங்களும் ஆகும். எனவே இதன் சக்தியில் இன்னும் நடப்பதைப்பார்க்கலாம் என்றுதான் காத்திருக்கிறோம். எது எப்படியானாலும், ‘மித்திரன்’ ஜாதி என்ன சொன்னாலும், ஜஸ்டிஸ் கக்ஷி எப்படி அந்தர் அடித்தாலும் நமது மக்கள் தைரியத்தை விடாமல் அதிகாரத்திலும் பதவி யிலும் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் நமது வீரர் முத்தைய்யா முதலியார் அவர்களைப் பின்பற்ற வேண்டுமென்பதே நமது வேண்டுகோளாகும்.
    தோழர் பெரியார், குடி அரசு - தலையங்கம் - 11.11.1928

    ReplyDelete
    Replies
    1. அருமையான விளக்கம் தோழர்... தந்தைப்பெரியாரைப் பற்றி இன்னும் ஆழமாக விளங்கிக் கொள்ள உதவுகிறது

      Delete
  5. மணியரசன் ஒரு பார்ப்பனக் கைக்கூலி. பார்ப்பனர்களைக் கொண்டு கட்சி நடத்துபவர். அவர் இப்படித்தான் எழுதுவார். தமிழர்கள் அந்த நபரை புறக்கணிப்பார்கள்

    ReplyDelete

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.