ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

அ.இ.அ.தி.மு.க – தி.மு.க தலைமையில் தமிழர்களின் உயிருக்கும் உரிமைக்கும் பாதுகாப்பில்லை என்பதற்கான எடுத்துக்காட்டே 20 தமிழர் இனப்படுகொலை! - தோழர் பெ.மணியரசன் அறிக்கை!

அ.இ.அ.தி.மு.க – தி.மு.க தலைமையில் தமிழர்களின் உயிருக்கும் உரிமைக்கும் பாதுகாப்பில்லை என்பதற்கான எடுத்துக்காட்டே 20 தமிழர் இனப்படுகொலை!

தமிழ்த் தேசப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுவதாவது: 

”அ.இ.அ.தி.மு.க – தி.மு.க தலைமையில் தமிழர்களின் உயிருக்கும் உரிமைக்கும் பாதுகாப்பில்லை என்பதற்கான எடுத்துக்காட்டே 20 தமிழர் இனப்படுகொலை” என தமிழ்த் தேசப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

தமிழ்நாட்டுத் தமிழர்கள் அரசியல் பாதுகாப்போ, சட்டப் பாதுகாப்போ அற்ற, நாதியற்ற இனமாக இருக்கிறார்கள் என்பதற்கான இன்னுமொரு எடுத்துக்காட்டுதான், ஆந்திரப் பிரதேச வனத்துறையினர் மற்றும் காவல்துறையினரால் இருபது தமிழர்கள் கடத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர நிகழ்வாகும். 

சட்டவிரோதமாகச் செம்மரங்களை வெட்டியபோது தடுக்கச் சென்ற வனத்துறையினர் மற்றும் காவல்துறையினரைத் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கினார்கள் என்றும் அதனால் தற்காப்புக்காகச் சுட்டபோது இருபது தமிழர்கள் உயிரிழந்தார்கள் என்றும் ஆந்திர அரசு கூறிவருகிறது. ஆனால் இருபது தமிழர்களும் பிடித்து வைக்கப்பட்டு பின்னர் ஆந்திர வனத்துறையினர் மற்றும் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்ற உண்மையை ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்களே அம்பலப்படுத்திவிட்டார்கள்.இதைவிடக் கொடிய செய்தியாக அந்த இருபது பேரும் தமிழகத்திலிருந்து ஆந்திர வனத்துறையினரால் விசாரணைக்கென்று அழைத்துச் செல்லப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டார்கள் என்ற தகவல் இப்பொழுது வந்துள்ளது. எது எப்படியிருப்பினும் இருபது தமிழர்களும் கடத்தி வைக்கப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பதில் மாற்றுக் கருத்து எள்ளளவும் கிடையாது. 

ஈழத்தில் தமிழ் இளைஞர்களைப் பிடித்து வைத்து, சுட்டுக் கொன்றபின் சிதறிக் கிடந்த பிணங்களைத் தொலைக்காட்சியில் பார்த்ததுபோல், திருப்பதி சேசாச்சலம் காட்டில் இருபது தமிழர்களின் பிணங்கள் சிதறிக் கிடக்கின்ற காட்சி தெரிகிறது. அவர்களின் கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டு மார்பில் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். சில உடல்களில் தீயால் பொசுக்கிய தடயங்கள் இருக்கின்றன. 

நடந்த உண்மைகள் என்ன என்பதைக் கண்டறிய வல்லுனர்களைக் கொண்ட உயராய்வுக் குழு ஒன்றை ஆந்திரப்பிரதேசத்திற்கு அனுப்பி, துப்பாக்கிச் சூடு நடந்த இடம், பிரேதப் பரிசோதனை உள்ளிட்ட இடங்களில் களஆய்வும் விசாரணையும் நடத்தி அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசு பணித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி ஒரு ஏற்பாட்டைத் தமிழக அரசு செய்யவில்லை. ஆந்திர வனத்துறையினர் மற்றும் காவல்துறையினரின் சட்டவிரோதச் செயலைக் கண்டிக்கக் கூட தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விரும்பவில்லை.

நேற்று தமிழக முதலமைச்சர் ஆந்திரப் பிரதேச முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் “ஆந்திராவின் செம்மரக் கடத்தல் ஒழிப்பு அதிரடிப்படையினர் சேசாச்சலம் வனப்பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக இருபது பேர் குண்டடி பட்டு காயமடைந்து மரணமடைந்துவிட்டதாக வரும் செய்திகள் என்னை மிகுந்த வருத்தமடையச் செய்துள்ளன” என்று கூறி தடவிக் கொடுப்பது போன்ற மென்மையான சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.

“அந்தச் சம்பவத்தில் மனித உரிமை மீறல் இருப்பது போல் தெரிகிறது. எனவே நீங்கள் நம்பத்தகுந்த விசாரணையை விரைவாக நடத்துவதற்கு உத்தரவிட வேண்டும்” என்று தமிழக முதல்வர், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த பல மாதங்களாக இப்படிப் பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ற போதிலும் அதுபற்றி இரண்டு மாநில அரசுகளும் கலந்து பேசி அதற்கொரு முடிவு காணாத காரணத்தால் இன்றைக்கு இருபது பேர் பலியான சம்பவம் நடைபெற்றுள்ளது. இனியாவது இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க இரண்டு மாநில அரசுகளும் முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக இருபது தமிழர்களைக் கடத்திப் படுகொலை செய்த தமிழின விரோதச் செயலை, சாலை விபத்தில் உயிரிழந்தது போன்று “பலியான சம்பவம்” என்று வர்ணித்து, இதற்கு இருமாநிலங்களும் பொறுப்பு என்றும் கூறி ஆந்திரப் பிரதேசக் கொலைகாரர்களுக்குத் தமது அறிக்கையின் மூலம் பாதுகாப்புக் கவசம் வழங்கியுள்ளார் கருணாநிதி.

ஆனால் நீதித்துறையைச் சேர்ந்த இந்திய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினரான நீதிபதி டி. முருகேசன் அவர்கள், இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, “இது மிகவும் கடுமையான மனித உரிமை மீறலாகும். தற்காப்பு என்ற பெயரில் துப்பாக்கிச் சூடு நடத்தி இருபது பேரை உயிரிழக்கச் செய்ததை நியாயப்படுத்த முடியாது. இரண்டு வாரங்களில் விளக்கமளிக்க வேண்டும்” என்று கூறி ஆந்திரப் பிரதேச தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார்.

தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் - முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகிய இருவருக்கும் இருபது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட கொடூரம் அதிர்ச்சியையோ பதற்றத்தையோ அளிக்கவில்லை. ஆந்திரப் பிரதேசத்தோடு நல்லுறவு கெட்டுவிடக்கூடாது என்பதில் இருவரும் அதிக அக்கறை காட்டியிருக்கிறார்கள். தமிழ்நாட்டை மாறிமாறி ஆண்டுகொண்டிருக்கும் அஇஅதிமுக, திமுக தலைமைகளின் தமிழின அக்கறையற்ற மனநிலையாலும், தங்களின் பாதுகாவலராக திரும்பத்திரும்ப தங்களைத் தேர்ந்தெடுக்கும் தமிழ் மக்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்ற நன்றியுணர்ச்சி அற்ற பண்பாலும், தமிழ் மக்கள் தொடர்ந்து அண்டை அயல் இனத்தாரால் தாக்கப்பட்டு வருகிறார்கள்;அழிக்கப்பட்டு வருகிறார்கள்; தங்களின் உரிமைகளை அண்டை அயலாரிடம் பறிகொடுத்து வருகிறார்கள்.

காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டதையொட்டி 1991 டிசம்பரில் கர்நாடகத்தில் காலங்காலமாக வாழ்ந்து வரும் தமிழர்களைக் கன்னட வெறியர்கள் இனப்படுகொலை செய்தார்கள். பல்லாயிரக் கணக்கான தமிழர் நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. பல்லாயிரக்கணக்கான தமிழர் வீடுகள் எரிக்கப்பட்டன. இரண்டு இலட்சம் தமிழர்கள் அகதிகளாகத் தமிழ்நாட்டுக்கு ஓடி வந்தனர்.

2011 நவம்பரில் முல்லைப் பெரியாறு சிக்கலை முன்வைத்து கேரளம் சென்ற அப்பாவித் தமிழர்களை, ஐயப்ப பக்தர்களைத் தாக்கினர். தமிழகத்திலிருந்து சென்ற வாகனங்களை எரித்தனர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் 400 பேர் தோட்ட வேலைக்குச் சென்றபோது மலையாளிகள் அவர்களைக் கடத்திச் சட்டவிரோதக் காவலில் வைத்து இழிவுபடுத்தினர்.

2008- 2009ல் ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களை இந்தியாவின் துணையோடு சிங்கள இன வெறி அரசு இனப்படுகொலை செய்தபோது, ஒப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒதுங்கிக் கொண்டன திமுகவும் அஇஅதிமுகவும்.

தமிழ்நாட்டில் ஏழரைகோடி மக்கள் வசித்தாலும் அவர்கள் அரசியல் பாதுகாப்பற்ற அனாதைகள் என்பதை அண்டை அயலார் புரிந்து கொண்டு நம்மைத் தாக்குகிறார்கள். அதன் தொடர்ச்சிதான் இப்பொழுது ஆந்திரப்பிரதேச வனத்தறையினர் மற்றும் காவல்துறையினர் தமிழகத் தொழிலாளிகளைக் கடத்தி வைத்து இனப்படுகொலை செய்த கொடூரமாகும்.

இனியும், அஇஅதிக, திமுக போன்ற கட்சிகளையும் அவற்றின் குட்டி வடிவங்களாக உள்ள இன்னும் சில கட்சிகளையும் மக்கள் நம்பிக் கொண்டிருந்தால் தமிழினம் மேலும் மேலும் இனப்படுகொலைக்கு உள்ளாகும்; அயல் இனத்தாருக்கு முற்றிலும் அடிமையாகும். தமிழினத் தற்காப்பையும் தமிழின உரிமை மீட்பையும் கருவாகக் கொண்டுள்ள தமிழ்த் தேசியப் புத்தெழுச்சியும் அதற்கான அமைப்பு வடிவமும்தான் இனி தமிழினத்தைப் பாதுகாக்கும்.

செம்மரக் கடத்தலுக்குத் துணை போகும் வழியில் தமிழ் தொழிலாளர்கள் ஆந்திரப் பிரதேசத்திற்கு மரம் வெட்டப் போனால் அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தின் முடிவுக்கு ஒப்படைக்க வேண்டுமே தவிர அவர்களை இனப்படுகொலை செய்ய ஆந்திரப் பிரதேச அரசுக்கு எந்த உரிமையும் இல்லை.

தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகி, ஆந்திராவில் நடந்த இனப்படுகொலையைக் கொலை வழக்காகப் பதிவு செய்து, வேறொரு மாநிலத்தில் விசாரணை நடத்த சிறப்பு நிதிமன்றம் அமைக்குமாறு கோர வேண்டும். இந்திய நடுவண் அரசு தமிழர்களுக்கு ஒருபோதும் நீதி வழங்காது என்ற வரலாற்று உண்மையை உணர்ந்து கொண்டு உச்சநீதிமன்றத்தின் வழியாக நீதீ கோர தமிழக அரசும் தமிழக மக்களும் முயல வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். சுட்டுக் கொல்லப்பட்ட ஒவ்வொருவர் குடும்பத்துக்கும் ஆந்திரப்பிரதேச அரசு தலா இருபத்தைந்து இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். 

இக்கோரிக்கைகளை முன்வைத்துத் தமிழின உணர்வு அமைப்புகள் மக்கள் திரள் போராட்டங்களை நடத்த வேண்டும் .

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார். 



No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.