ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழை உயர்நீதிமன்ற வழக்குமொழியாக்கிட அமைதிவழியில் போராடிய 10 வழக்கறிஞர்களை பார்கவுன்சில் இடைநீக்கம் செய்தது சட்டவிரோதம்!

தமிழை உயர்நீதிமன்ற வழக்குமொழியாக்கிட அமைதிவழியில் போராடிய 10 வழக்கறிஞர்களை பார்கவுன்சில் இடைநீக்கம் செய்தது சட்டவிரோதம்! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் கண்டனம்!
தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில், வழக்கறிஞர் பகத்சிங் உள்ளிட்ட 10 வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்து வழக்கறிஞர் பணி செய்ய விடாமல் தடுத்துள்ளது. வழக்கறிஞர் பகத்சிங் தலைமையில் 10 வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை வழக்கறிஞர் கூடத்தில் 14.09.2015 அன்று அலுவல் நேரத்தில் வாயில் கருப்புத் துணிகட்டிக் கொண்டு, தமிழை உயர் நீதிமன்ற வழக்கு மொழி ஆக்கிடுமாறு உச்சநீதிமன்றத்தையும் நடுவண் அரசையும் வலியுறுத்தி எழுதப்பட்ட அட்டையைக் கையிலேந்திக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்து அறவழியில் கோரிக்கையை வலியுறுத்தினர்.

இதற்காக அவர்கள் 10 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து இரு பெண் வழக்கறிஞர்களைத் தவிர்த்து 8 ஆண் வழக்கறிஞர்களைப் புழல் சிறையில் அடைத்தனர். 29 நாள் சிறையில் இருந்த பின் அவர்கள் பிணையில் வெளிவந்தனர்.

இன்று (24.11.2015) அந்த 10 வழக்கறிஞர்களையும் வழக்கறிஞர் தொழில் நடத்தத் தடைவிதித்துத் தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் இடைநீக்கம் செய்துள்ளது. பத்து வழக்கறிஞர்கள் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டு இருக்கும் போது தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் அவர்களை இடைநீக்கம் செய்திருப்பது சட்ட விரோதச் செயலாகும். ஒரு குற்றச்சாட்டுக்கு வெவ்வேறு இரு அமைப்புகள் நடவடிக்கை எடுப்பது அரசமைப்புச் சட்ட விதிக்கு முரணானது.

தமிழ்நாட்டில் உள்ள ஏழரைக்கோடி தமிழ் மக்களின் தாய் மொழியான தமிழை, அரசமைப்புச் சட்ட விதி 348(2) – இன் கீழ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குமொழி ஆக்குங்கள் என்று பத்தாண்டுக்கு மேலாக தமிழ் மக்களும் தமிழ்நாடு வழக்கறிஞர்களும் போராடி வருகிறார்கள்.

தமிழ்நாடு அரசு இதற்காக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் வழியாக நடுவண் அரசுக்கு அனுப்பியுள்ளது. அதை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அரசமைப்புச் சட்ட விதியைக் கடைபிடிக்க வேண்டிய இந்திய அரசும் உச்சநீதிமன்றமும் அதைக் கடைபிடிக்காமல் தமிழை உயர்நீதிமன்ற வழக்குமொழியாக்கிட மறுத்து வருகின்றன. இச்செயல் இந்திய அரசும் உச்சநீதிமன்றமும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை செயல்படுத்த மறுக்கும் சட்ட விரோதச் செயலாகும்.

இந்நிலையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தை மதித்தும், ஏழரைக்கோடி தமிழ் மக்கள் கோரிக்கையை ஏற்றும் தமிழை உயர்நீதிமன்ற வழக்குமொழியாக்கிட வேண்டுகோள் வைத்து அறவழியில், வாயில் துணிகட்டி அமைதியாக அமர்ந்து வலியுறுத்திய வழக்கறிஞர்களை சிறையில் அடைத்து அவர்கள் மீது வழக்கு நடத்துவதுடன், வழக்கறிஞர் பணியை செய்யவிடாமல் தடை செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

தமிழ்நாடு – புதுச்சேரி பார்கவுன்சில் தனது செயல்பாட்டை மறு ஆய்வு செய்து வழக்கறிஞர் பகத்சிங் உள்ளிட்ட 10 வழக்கறிஞர் மீது விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்குமாறு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.