ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் கைது - பல இடங்களில் வழக்குப்பதிவு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர்
நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் கைது - பல இடங்களில் வழக்குப்பதிவு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம் என 03.10.2016 அன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள இந்திய அரசைக் கண்டித்து, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் உருவபொம்மையை எரித்து - ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களை தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்தனர். பல இடங்களில் அவர்கள் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை





சென்னை தியாகராயர் நகரில், பேருந்து நிலையம் அருகில், 03.10.2016 மாலை, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி தலைமையில் ஒன்றுதிரண்ட தோழர்கள், இந்திய அரசுக்கு எதிராக ஆவேச முழக்கங்களை எழுப்பியவாறு, நரேந்திரமோடியின் உருவபொம்மையை எரித்தனர். அதில் பங்கேற்ற, தமிழ்த் தேச மக்கள் கட்சித் தோழர் புரட்சி நம்பி, இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், தகவல்தொழில்நுட்பத் தொழிலாளர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் தோழர் பரிமளா, தமிழக இளைஞர் முன்னணி சென்னை செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம. இலட்சுமி உள்ளிட்ட தோழர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

குடந்தை


தஞ்சை மாவட்டம் - குடந்தை - உச்சிப்பிள்ளையார் கோயில் அருகில், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் உருவபொம்மையை எரித்து, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் தீந்தமிழன், தோழர்கள் முரளி, செழியன் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, பின்னர் சொந்தப் பிணையில் விடுதலை செய்தனர்.
 
தஞ்சை


தஞ்சையில், தொடர்வண்டி நிலையம் முன்பு, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் உருவபொம்மையை எரித்து, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. அய்யனாவரம் சி. முருகேசன், தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் தஞ்சை மேற்கு மாவட்டச் செயலாளர் திரு. அலெக்சாண்டர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு தலைமையில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா.சு. முனியாண்டி, வழக்கறிஞர் கரிகாலன் உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்று, நரேந்திரமோடியின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்ணாடம்


கடலூர் மாவட்டம் – பெண்ணாடத்தில், பேருந்து நிலையம் அருகில், 04.10.2016 காலை, தமிழ்த்தேசியப் பேரியக்கம் பெண்ணாடம் கிளைச் செயலாளர் தோழர் கு. மாசிலாமணி தலைமையில் ஒன்றுதிரண்ட தோழர்கள், இந்திய அரசுக்கு எதிராக ஆவேச முழக்கங்களை எழுப்பியவாறு, நரேந்திரமோடியின் உருவபொம்மையை எரித்து - ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் அர. கனகசபை, மகளிர் ஆயம் பொறுப்பாளர் தோழர் வித்தியா, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி. பிரகாசு, தமிழக மாணவர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் மணிமாறன், மனிதநேயப் பேரவை திரு. பஞ்சநாதன் உள்ளிட்ட திரளான தோழர்கள் பங்கேற்றனர்.

மன்னார்குடி


மன்னார்குடியில் 04.10.2016 காலை, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், பேருந்து நிலையம் அருகில், நரேந்திர மோடியின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர் தேசிய முன்னணி பொறுப்பாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், திருவாரூர் மாவட்டப் பொறுப்பாளர் திரு. கலைச்செல்வம் உள்ளிட்ட தோழர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

புளியங்குடி


நெல்லை மாவட்டம் - புளியங்குடியில், பேருந்து நிலையம் அருகில் 04.10.2016 காலை, தமிழ்த்தேசியப் பேரியக்க புளியங்குடி அமைப்பாளர் தோழர் க. பாண்டியன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், வட்டாரப் பொறுப்பாளர் தோழர் முத்துப்பாண்டியன், இராயகரி செயலாளர் தோழர் சொக்கையாபாண்டியன், கடையநல்லூர் வட்டாரப் பொறுப்பாளர் தோழர் முத்துப்பாண்டியன், மகளிர் ஆயம் அமைப்பாளர் தோழர் மு. துரைச்சி உள்ளிட்டோர் நரேந்திர மோடியின் கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மதுரை - தென்காசி மையச்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட தோழர்களை தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்து, அவர்கள் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பிணையில் விடுதலை செய்தனர்.

திருத்துறைப்பூண்டி


திருவாரூர் மாவட்டம் - திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில், 04.10.2016 அன்று பிற்பகலில், தமிழ்த்தேசியப் பேரியக்க ஒன்றியத் துணைச் செயலாளர் தோழர் சை. செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் ப. சிவவடிவேலு, தமிழக உழவர் முன்னணி கோட்டூர் ஒன்றியச் செயலாளர் திரு. இரா. தனபாலன், உழவர் முன்னணி பொதுக்குழு உறு்பபினர் திரு. சா. கோவிந்தசாமி உள்ளிட்டோர் நரேந்திரமோடியின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்திய போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி


புதுச்சேரி 04.10.2016 அன்று, இராசா திரையரங்கம் அருகில், தமிழ்த்தேசியப் பேரியக்க புதுச்சேரி செயலாளர் தோழர் இரா. வேல்சாமி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், தமிழர் தேசிய இயக்கச் செயலாளர் திரு. இரா. அழகிரி, உலகத் தமிழ்க் கழகம் திரு. தமிழ் உலகன், மக்கள் வாழ்வுரிமை இயக்கம் திரு. செகன்னாதன், தமிழர் களம் புதுச்சேரி செயலாளர் தோழர் கோ. அழகர், தமிழ் தமிழர் இயக்கப் பொறுப்பாளர் திரு. மகேசு, பெரியார் அறிவியல் மன்றத் தோழர் சடகோபன், நண்பர்கள் தோட்டம் திரு. திருநாவுக்கரசு உள்ளிட்டோர், நரேந்திரமோடியின் உருவப்படத்தை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

மதுரை


மதுரையில், 04.10.2016 அன்று, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரெ. இராசு தலைமையில், தல்லாகுளம் இந்திய அரசுத் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்ட பேரியக்கக் கிளைச் செயலாளர்கள் தோழர் கதிர்நிலவன், தோழர் சிவா, மகளிர் நடுவண் குழு உறுப்பினர் தோழர் மேரி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

ஒசூர்



ஒசூர் காந்தி சிலை முச்சந்தியில் 05.10.2016 காலை, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ. மாரிமுத்து தலைமையில், பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் செம்பரிதி, தமிழ்க் கலை இலக்கியப் பேரவைச் செயலாளர் தோழர் முத்துவேல், தமிழக இளைஞர் முன்னணி செயலாளர் தோழர் கதிரவன், மகளிர் ஆயம் தோழர் அபிராமி உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள், நரேந்திர மோடியின் உருவபொம்மையை எரித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில், 05.10.2016 காலை,தமிழ்த்தேசியப் பேரியக்க மாநகரச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன் தலைமையில், தமிழக விவசாயிகள் சங்க திருச்சி மாவட்டத் தலைவர் திரு. ம.பா. சின்னத்துரை, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் பாவலர் இராசாரகுநாதன், தமிழக உழவர் முன்னணி பொறுப்பாளர் திரு. நகர். செல்லையா உள்ளிட்ட தோழர்கள் நரேந்திரமோடியின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர். தோழர்கள் மீது காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பின்னர் சொந்தப் பிணையில் விடுதலை செய்தனர்.

செங்கிப்பட்டி


தஞ்சை மாவட்டம் - பூதலூர் ஒன்றியம், செங்கிப்பட்டியில், 05.10.2016 மாலை, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு தலைமையில், பேரியக்க பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் ஆ. தேவதாசு, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட  தோழர்கள் நரேந்திரமோடியின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.