ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“தமிழர்களே! எந்த இசத்தின் பெயராலும் இனத்துரோகத்தை ஏற்காதீர்கள்! அமெரிக்க ஐரோப்பிய அரசியலைப் பாருங்கள்!”- தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!


தமிழர்களே! எந்த இசத்தின் பெயராலும்
இனத்துரோகத்தை ஏற்காதீர்கள்!

அமெரிக்க ஐரோப்பிய அரசியலைப் பாருங்கள்!”

பெ. மணியரசன்

தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

“வட அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் டொனால்டு டிரம்பை வெற்றி பெறச் செய்தது ‘வெள்ளை இனத் தொழிலாளி வர்க்கம்’ என்று இந்து ஆங்கில ஏடு இன்று (10.11.2016), முதல் பக்கத்திலேயே தலைப்புச் செய்தி போட்டுள்ளது.

“தொழிலாளிக்கு இனமில்லை, மொழி இல்லை” என்று தமிழ்நாட்டில் இடதுசாரி அமைப்புகள் முழக்கமிடுகின்றன. அவற்றின் தலைவர்கள் திருந்துவார்களா என்பது ஐயம்!

தனது தாயகத்தில் தனது வாழ்வுரிமை பாதிக்கப்பட்டால் – தீர்மானிக்கும் ஆற்றலாகத் தான் இருப்பதை இழக்க நேர்ந்தால் தொழிலாளி வர்க்கம் இனத் தற்காப்பு நோக்கில் வீதிக்கு வரும் என்பதை அமெரிக்கத் தொழிலாளி வர்க்கம் மட்டுமின்றி, ஏற்கெனவே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, பிரித்தானியா வெளியே வாக்களித்த இங்கிலாந்துத் தொழிலாளி வர்க்கமும் மெய்ப்பித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பிரியக் கூடாது என்று வாக்களித்து ஸ்காட்லாந்தியத் தொழிலாளி வர்க்கமும் மெய்ப்பித்துள்ளது. பிரித்தானியா ஒரே நாடாக இருந்தாலும் அங்குள்ள இருவேறு இனங்களின் தொழிலாளி வர்க்கம், தங்கள் தங்கள் நலன் கருதி இருவேறு முடிவுகளை எடுத்துள்ளன.

வட அமெரிக்கா – உலகில் மிக மோசமான ஏகாதிபத்திய நாடு! வென்றுள்ள டிரம்பும் வெற்றி வாய்ப்பை இழந்துள்ள ஹிலரியும் ஏகாதிபத்தியவாதிகளே!

அமெரிக்க ஏகாதிபத்திய நிறுவனங்களின் இலாப வேட்டைக்காக உருவாக்கப்பட்ட உலமயக் கொள்கை – மற்ற நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை அமெரிக்காவில், வெளிநாட்டுப் பணியாளர்கள் அதிகமாக வர வாய்ப்பளித்தது. அதனால் வட அமெரிக்க உழைக்கும் மக்களில் கணிசமானோர் வேலை வாய்ப்பை இழந்தனர். வறுமையுற்ற வெளிநாடுகளிலிருந்து வரும் உழைக்கும் மக்கள் குறைந்த சம்பளம் பெற ஒப்புக் கொள்வதால், உள்நாட்டு வெள்ளை இனத் தொழிலாளிகள் அவர்கள் நாட்டுப் பொருளியலுக்கேற்ற உயர் ஊதியம் பெற முடியவில்லை.

வட அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் மேல் தட்டு வர்க்கத்தினர்க்கும் பெரும் பயனளிக்கும் உலகமயம் உள்நாட்டு உழைக்கும் மக்களுக்கு உரிய பயன் தரவில்லை. எனவே அவர்கள் வெளிநாட்டுத் தொழிலாளிகள் வருகையைக் கட்டுப்படுத்த உறுதி கொடுத்த டிரம்புக்கு உழைக்கும் மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்துள்ளார்கள்.

வட அமெரிக்கப் பொருளாதாரத்தை ஆட்டிப் படைப்போர் யூத ஏகபோக முதலாளிகள். குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்தவர்களிடம் – வெளியே நடத்திய கருத்துக் கணிப்பில் யூதர்கள் 71 விழுக்காடு ஹிலரிக்கும் 24 விழுக்காடு டிரம்புக்கும் வாக்களித்ததாக அதே இந்து ஏட்டில் புள்ளி விவரம் வந்துள்ளது.

உலகமயப் பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டையை – ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடும் தொழிலாளி வர்க்கம் சொந்தத் தேசியத் தாயக மண்ணின் மக்களாக உள்ள உழைப்பாளிகளாகவே இருப்பார்கள். வெளி இனங்களிலிருந்து வந்த தொழிலாளிகள் அந்த வர்க்கப் போராட்டத்தை நடத்த முன்வர மாட்டார்கள். பல நாட்டு விவரங்களை ஆய்வு செய்த மேற்கத்திய மார்க்சிய அறிஞர்கள் இதே கருத்தை இப்போது முன் வைத்து வருகிறார்கள்.

எனவே தமிழ்நாட்டில் இடதுசாரிச் சிந்தனை என்ற பெயரால் – பாட்டாளி வர்க்க சர்வதேசியம் – இந்தியத்தேசியம் என்ற பெயரால் தமிழினத் துரோகம் செய்யத் தூண்டும் தலைமைகளின் தவறான வழிகாட்டலுக்குத் தமிழின இளைஞர்கள் பலியாகக் கூடாது.

டிரம்பின் வெற்றியை நாம் எடுத்துக்காட்டுவது – அவரை ஆதரிக்க அன்று! அங்கு மக்களின் “இன உணர்வு” எப்படி இருக்கிறது என்று எடுத்துக்காட்டவே!

தமிழ்நாட்டில் தொடர்வண்டித்துறை, பி.எச்.இ.எல்., பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள், வங்கிகள், வருமான வரி – உற்பத்தி வரி – சுங்க வரி அலுவலகங்கள், நெய்வேலி அனல் மின் நிலையம், பெட்ரோலிய – எரிவளி ஆலைகள் என எல்லா நடுவணரசு நிறுவனங்களிலும் 80 விழுக்காட்டிற்கு மேல் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே வேலையில் சேர்க்கிறார்கள். மண்ணின் மக்களாகிய தமிழ் இளைஞர்களுக்குத் தகுதி இருந்தும், பிறந்த இனம் காரணமாகப் புறக்கணிக்கிறார்கள்.

இந்த நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலைகள் தமிழர்களுக்கே தர வேண்டும், 10 விழுக்காட்டிற்கு மேல் வேலையில் உள்ள வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களை வெளியேற்ற வேண்டும் என்று எமது தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராடி வருகிறது. கடந்த 12.09.2016 அன்று இக்கோரிக்கையை முன் வைத்து, திருச்சித் தொடர்வண்டிக் கோட்டத் தலைமையகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். ஆயிரம் பேர்க்கு மேல் கலந்து கொண்டார்கள்; 560 பேர் கைதானார்கள். அதில் பெண்கள் 150 பேர்!

இதோ – இப்போதுகூட தமிழ்நாட்டில் இந்திய அரசு வங்கிக் கிளைகளில் (ஸ்டேட் பாங்க்) வேலைக்குத் தேர்வு செய்துள்ள 1,420 பேரில் 80 விழுக்காட்டினர் மலையாளிகளும் இந்திக்காரர்களும் என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது.

இந்திய அரசு நமது 90 விழுக்காட்டுக் கோரிக்கையை ஏற்கவில்லையென்றால், மண்ணின் மக்களாகிய தமிழ் இளைஞர்கள் – நடுவணரசு நிறுவனங்களுக்குச் சென்று அறவழியில் முற்றுகையிட வேண்டும்.

தமிழர்களே, உலகம் போகிற போக்கைப் பாருங்கள்! இன அடிப்படையில் அவரவர் தாயக வாழ்வுரிமையைத் தக்க வைக்கப் போராடுகிறார்கள்.

எந்த இசத்தின் பெயரால் இனத் துரோகத்தைத் தூண்டினாலும் ஏமாறாதீர்கள்! போராட்டக் களத்திற்கு முன் கருத்துக் களத்தைச் சரி செய்யுங்கள்!

தமிழினத் தற்காப்புணர்ச்சியைப் பரப்புங்கள்! விவாதியுங்கள்! விழித்துக் கொள்ளுங்கள்! 

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.