ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

முதல்வர் ஓ. பன்னீர்ச்செல்வம் அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது! பெ. மணியரசன் அறிக்கை!

முதல்வர் ஓ. பன்னீர்ச்செல்வம் அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
அ.இ.அ.தி.மு.க. கட்சிக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியில், தமிழ்நாடு அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கிப் போய் இருக்கிறது.

முதலமைச்சர் ஓ. பன்னீர்ச்செல்வம் தன் வீட்டில், தனக்கு ஆதரவுப் பரப்புரையை நடத்திக் கொண்டிருக்கிறார். ஆதரவாளர்களை சேர்க்கும் பணியிலேயே 24 மணி நேரமும் இருக்கிறார். “புதிய முதல்வர்” என்று அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்களால் தீர்மானிக்கப்பட்ட சசிகலா, சட்டப்பேரவை உறுப்பினர்களை தலைநகருக்கு வெளியே கொண்டு போய் அடைத்து வைத்திருக்கிறார். அவரும் தனக்கு ஆதரவாளர்களை திரட்டும் வேலையிலேயே இருக்கிறார்.

இதனால், அரசு நிர்வாகம் செயல்படாமல் – பல தரப்பு மக்களும் துயரத்தில் வீழ்த்தப்பட்டு இருக்கிறார்கள். அன்றாடம் நடக்க வேண்டிய அலுவலகப் பணிகள், ஏற்கெனவே காலம் கடந்துவிட்ட வறட்சி நிவாரணப் பணிகள் நடைபெறாமல் தேங்கிக் கிடக்கின்றன.

தமிழ்நாட்டின் ஆளுங்கட்சி அரசு எந்திரத்தை முடக்கிவிட்ட நிலையில், இதுதான் நல் வாய்ப்பு என்று கருதி கேரளம், பவானியில் ஆறு தடுப்பணைகள் கட்டும் பணிகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. ஆந்திர அரசு, பாலாற்றில் மேலும் புதிய தடுப்பணைகளைக் கட்டிக் கொண்டிருக்கிறது. சென்னைக்கு வர வேண்டிய கிருஷ்ணா குடிநீரையும் ஆந்திர அரசு குறைத்துவிட்டது.

மிக முக்கியமாக, உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. கர்நாடகத்தின் வல்லடி வழக்குகளை எதிர் கொள்ளக்கூடிய தயாரிப்புப் பணியை, நம் தரப்பில் வழக்காடும் வழக்கறிஞர்களுக்கு எடுத்துரைப்பதற்கு தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தவில்லை.

ஓ.பி.எஸ். வீடும், போயஸ் தோட்டமும் சர்க்கஸ் கூடாரங்கள் போல் ஆகி, தொலைக்காட்சிகளின் நிரந்தர நேரடி ஒளிபரப்பில் இருக்கின்றன.

“காபந்து முதலமைச்சர்” என்பவர் அரசு ஏற்கெனவே எடுத்த முடிவுகளை செயல்படுத்த கடமைப்பட்டவர். உடனடித் தேவைகளுக்காக முடிவுகள் எடுக்க வேண்டிய அதிகாரம் உள்ளவர். அரசமைப்புச் சட்டத்தில், “காபந்து அரசு” என்றோ, “காபந்து முதலமைச்சர்” என்றோ ஒரு வகையினம் கிடையவே கிடையாது.

ஓர் அமைச்சரவை பதவி விலகினாலோ அல்லது அதன் பதவிக்காலம் முடிந்தாலோ, அந்த இடைப்பட்ட காலத்தில், மக்களுக்கு அரசு செய்ய வேண்டிய கடமைகள் நின்று போகாமல் தொடர்வதற்காகவே, “காபந்து அமைச்சரவை” ஏற்பாடு உள்ளது.

எனவே, இப்பொழுது ஓ. பன்னீர்ச்செல்வம் அவர்கள்தான் முதலமைச்சர்! அவர், உடனடியாகத் தலைமைச் செயலகம் சென்று தன் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். சசிகலா அவர்கள் தமிழ்நாடு அரசு நிர்வாகம் செயல்படாமல் முடங்குகின்ற வகையில், எந்தச் செயலிலும் ஈடுபடக் கூடாது.
எனவே, இந்திய அரசமைப்புச் சட்டம் விதித்துள்ள அரசுக் கடமைகள் முடங்கி மக்கள் துன்புறாத வகையில், ஓ.பி.எஸ். செயல்பட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.