ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தென்பெண்ணையைத் திருப்பிவிடும் கர்நாடக அரசின் திட்டத்தை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கம் வலியுறுத்தல்!

தென்பெண்ணையைத் திருப்பிவிடும் கர்நாடக அரசின் திட்டத்தை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கம் வலியுறுத்தல்!
தென்பெண்ணை ஆற்றைத் தடுத்துத் திருப்பிவிட கர்நாடக அரசு தீட்டியுள்ள புதிய திட்டத்தை இந்திய அரசு தடை செய்ய வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளரும், தமிழக உழவர் முன்னணி ஆலோசகருமான தோழர் கி. வெங்கட்ராமன் கூறியிருப்பதாவது :

தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 4 இலட்சம் ஏக்கர் விளைநிலங்களை செழிப்படையச் செய்து வரும் தென்பெண்ணை ஆற்றைத் தடுக்க, கர்நாடக அரசு புதிய திட்டம் தீட்டியுள்ளது.

கர்நாடக மாநிலம் – நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு, கிருட்டிணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி வழியாக தமிழ்நாட்டுக்குள் நுழைகிறது. இந்த தண்ணீர் கெலவரப்பள்ளி அணையில் தேக்கி வைக்கப்பட்டு, ஓசூர் பகுதியிலுள்ள 8,000 ஏக்கருக்கு மேலான விளை நிலங்களுக்கும், அங்கிருந்து கிருட்டிணகிரி அணைக்கு வரும் தென்பெண்ணை ஆற்று நீர் மூலம் கிருட்டிணகிரி, காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் சற்றொப்ப 10,000 ஏக்கருக்கு மேலான விளை நிலங்களுக்கும் பாசன நீராகப் பயன்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் வழியாகப் பயணித்து சற்றொப்ப 4 இலட்சம் ஏக்கர் வேளாண் நிலங்களுக்கும், பல இலட்சம் மக்களின் குடிநீருக்கும் தென்பெண்ணை ஆறு பயன்பட்டு வருகிறது.

இத்தனைக்கும், தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு திட்டமிட்டு பல இலட்சம் லிட்டர் கழிவுகளைக் கலந்து மாசுபடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது, தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் வர்தூர் மற்றும் பெல்லாந்தூர் ஏரிகளின் நீரை ரூபாய் 400 கோடி செலவில் கர்நாடக மாநிலத்தின் மற்ற பகுதிகளின் குடிநீர் மற்றும் தொழிற்சாலைகளின் தேவைக்காகத் திருப்பி விடும் புதிய திட்டத்தை கர்நாடக அரசு போட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்துக்குத் தேவையான நிதியை இங்கிலாந்து அரசிடம் கடனாகப் பெறவும், ஆற்று நீரைச் சுத்தப்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தைச் செயல்படுத்தவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை, இசுரேல் நாட்டைச் சேர்ந்த தகால் என்ற தனியார் நிறுவனம் செய்ய உள்ளதாகவும் தெரிய வருகிறது.

இவ்வாறு தென்பெண்ணை ஆற்று நீர் தடுக்கப்பட்டால், தமிழ்நாட்டின் 4 லட்சம் ஏக்கர் வேளாண்மையும், பல இலட்சம் மக்களின் குடிநீரும் வினாக்குறியாகும் ஆபத்து உள்ளது. இந்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, கர்நாடக அரசின் இப்புதியத் திட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும். தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு கழிவு நீர் கலப்பதையும் தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு, உடனடியாக கவனம் செலுத்தி, இத்திட்டத்தைத் தடுத்து நிறுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
               www.fb.com/uzhavarmunnani
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.