ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு வீரவணக்கம்!

மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு வீரவணக்கம்!
1965இல் - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் போது, தமிழ் மொழி காக்க தீக்குளித்த மயிலாடுதுறை மாணவத் தழல் ஈகி சாரங்கபாணி நினைவு நாளான இன்று, அவரது நினைவுத் தூணுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமையிலான பேரியக்கத் தோழர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.
“தமிழன்னைக்கு எனது உயிரை துறக்கிறேன்” - இப்படி இறுதியாகக் கூறி தனது இறுதி மூச்சையடக்கியவன் மாணவ ஈகி சாரங்கபாணி. அப்போது அவனுக்கு வயது 20. மயிலாடுதுறையில் உள்ள முடிகொண்டான் ஆற்றங்கரையில் உள்ள மருதவஞ்சேரியில் 1945ஆம் ஆண்டு பிறந்தவர். மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் வணிகவியல் இளங்கலை. முதலாமாண்டு படித்து வந்தவர்.

தமிழ்மொழி காக்க தன்னுடலில் மண்ணெண்ணெயை ஊற்றி உயிர் துறப்போம் என்று முடிவுக்கு வந்தான். அப்போது மற்றவர் நம்மை காப்பாற்றி விட்டால் என்ன செய்வது? என்று யோசித்தான்.

ஒரு மரத்தின் கீழ் நின்று உடல் நனையும்படி மண்ணெண்ணெயை ஊற்றினான். பிறகு தான் கொண்டு வந்திருந்த கயிற்றைக் தன்காலில் கட்டினான். கயிற்றின் மறுபகுதியை மரத்தில் கட்டினான். பிறகு தலை கீழாக தொங்கிக் கொண்டு இந்தி ஒழிக! தமிழ் வாழ்க! என்று முழக்கமிட்டு தனது உடலுக்கு தீ வைத்தான். உடல் முழுக்க எரிந்தது. சிறிது நேரத்திலேயே மரணம் அவனை முத்தமிட்டு அணைத்துக் கொண்டது.

சாரங்கபாணியின் தாயார் மண்ணில் உருண்டு என் மகனின் சாவிற்கு காரணமானவர்கள் நாசமாய் போகட்டும் என்று அழுது புலம்பினார். அதன் பிறகு நடந்த தேர்தலில் பேராயக்கட்சி தோற்று நாசமான கதை அறிவோம்.

42 ஆண்டுகள் கழித்து 2007ஆம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் மயிலாடுதுறை ஏ.வி.சி.கல்லூரி வளாகம் அருகில் சாரங்கபாணி நினைவுத்தூண் எழுப்பப்பட்டுள்ளது.
பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர், மயிலாடுதுறை அமைப்பாளர் தோழர் கு. பெரியசாமி, பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. தீந்தமிழன், தோழர்கள் ச. செந்தமிழன், நாடக வினோத், விக்னேசு உள்ளிட்ட பேரியக்கத் தோழர்களும் மாணவர்களும் இன்று அந் நினைவுத் தூணுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

தழல் ஈகி சாரங்கபாணிக்கு வீரவணக்கம்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhdesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.