ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

"தேர்தலுக்கு வெளியே சனநாயக இயக்கம் தேவை என்பதை இரா.கி. நகர் இடைத்தேர்தல் காட்டுகிறது!"

"தேர்தலுக்கு வெளியே சனநாயக இயக்கம் தேவை என்பதை இரா.கி. நகர் இடைத்தேர்தல் காட்டுகிறது!"
கடந்த 28.12.2017 அன்று, சிதம்பரத்தில் நடைபெற்ற தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எண் - 3

"தேர்தலுக்கு வெளியே சனநாயக இயக்கம் தேவை என்பதை இரா.கி. நகர் இடைத்தேர்தல் காட்டுகிறது!"

சென்னை இரா.கி. (இராதாகிருட்டிணன்) நகர் இடைத்தேர்தலில், பணம் வெற்றி பெற்றது என்று பலரும் சொல்கிறார்கள். தேர்தல் சனநாயகத்தை பணச் சூதாட்டமாகவும், பங்குச் சீரழிவாகவும் மாற்றப்பட்டிருப்பது இன்று வந்த நோயல்ல! இந்த நோயை உருவாக்கித் தொற்ற வைத்தவர்கள் தி.மு.க., அ.இஅ.தி.மு.க. தலைவர்கள்!

தன்மானம், சமூகநீதி, முற்போக்கு சிந்தனைகள் ஆகியவற்றைத் தமிழ்நாட்டில் தழைக்க வைத்தவர்கள் திராவிட இயக்கத்தார் என்று பெருமை பேசிக் கொள்கிறார்கள். இந்தியாவிலேயே மிக அதிக விலைக்கு வாக்குரிமையை விற்று வாங்கும் ஊழல் பண்டமாக மாற்றியது திராவிட அரசியல்தான்! அந்தச் சீரழிவின் அதலபாதாளம்தான் இரா.கி. நகர் தேர்தல் முடிவுகள்!

இப்பொழுது, அதை தினகரன் அறுவடை செய்திருக்கிறார். அடுத்தடுத்த தேர்தல்களில் இந்த ஊழல் பந்தையத்தில் யார் முந்தப்போகிறார்கள் என்பது இப்பொழுது சொல்ல முடியாது!

தமிழ்நாட்டில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பத்து கோடியிலிருந்து இருபது கோடி ரூபாய் வரை செலவு செய்தால்தான் போட்டியிட முடியும் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். இந்த நிலையில், தேர்தலில் பங்கெடுப்பதன் மூலம் சமூக மாற்றத்தை, சமூக முன்னேற்றத்தைக் கொண்டு வரலாம் என்பதற்கு வாய்ப்பே இல்லை!

தமிழ்நாட்டில் பெரும் பெரும் தேர்தல் கட்சிகளுக்கு அப்பால்தான், மக்கள் தங்கள் வாழ்வுரிமைக்காகப் போராடிக் கொண்டுள்ளார்கள். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, நெடுவாசல் – கதிராமங்கலம் ஓ.என்.ஜி.சி. எதிர்ப்பு, மணல் கொள்ளைத் தடுப்பு, இனயம் துறைமுக எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி, அதில் மக்கள் முன்னேற்றமும் கண்டு வருகிறார்கள். தங்கள் வாழ்வுரிமையை சுற்றுச்சூழலை அவர்கள்தான் போராடிப் பாதுகாக்கிறார்கள் - கட்சிகள் அல்ல!

ஊழல் அரசியலை எதிர்க்கின்ற, தமிழ்நாட்டு மக்கள் உரிமைக்குக் குரல் கொடுக்கின்ற இளைஞர்களும் மக்களும் இந்தக் காலத்தில், தேர்தல் அரசியலுக்கு வெளியேதான் மக்கள் இயக்கங்களை நடத்தி – சரியான மாற்று அரசியலை வளர்க்க வேண்டிய தேவையுள்ளது. எனவே, உண்மையாகவே மக்கள் வாழ்வுரிமைக்காக செயல்பட விரும்புகின்ற இயக்கங்களும், மக்களும், தனி நபர்களும் தேர்தலுக்கு வெளியே உள்ள மாற்று சனநாயகப் பாதையில் பயணித்து செயல்படுவதுதான் இன்றைக்குள்ள வரலாற்றுத் தேவையாகும்!

தி.மு.க. – அ.தி.மு.க. கட்சிகளை புறக்கணித்து, மாற்றாக புதிய கதாநாயகர்களை திரைத் துறையிலிருந்தோ – வெளியிலிருந்தோ தேடுவது வேறு பெயரில் தி.மு.க. – அ.தி.மு.க. ஊழல் அரசியலை – பண்பாட்டுச் சீரழிவை வளர்ப்பதாகவே முடியும்!

இரா.கி. நகரில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க தேர்தல் ஆணையம் தவறி விட்டது என்று விமர்சிப்பதுமட்டும் ஊழல் தடுப்பு நடவடிக்கையாக அமையாது. மக்களின் விழிப்புணர்ச்சியை சனநாயக உணர்வை – தன்மான உணர்வை வளர்ப்பதன் மூலம்தான் இந்த ஊழல் அரசியலை ஓரங்கட்ட முடியும்.

ஊழலும் சந்தர்ப்பவாத அரசியலும் திருவிழா கொண்டாடிய போதிலும், இரா.கி. நகர் தேர்தலில் பாரதிய சனதாக் கட்சி 1,400 வாக்குகள் மட்டும்தான் வாங்க முடிந்தது என்பது ஆறுதலாக உள்ளது. தமிழ்நாட்டில் தாங்கள் மட்டுமே கொட்டமடிக்க வேண்டுமென்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் ஆரியத்துவா அரசியல் அமைப்பான பா.ச.க.வை முற்றிலும் புறக்கணித்த, இரா.கி. நகர் தொகுதி மக்களைப் பாராட்டுவோம்! 

எனவே, தேர்தல் அரசியலுக்கு வெளியே மக்கள் உரிமை - மக்கள் நலன் சார்ந்த சனநாயக அரசியல் இருக்கிறது என்பதை உணர்ந்து, அதை அமைப்பு வழியில் வளர்த்திட சமூக அக்கறையுள்ள அனைவரும் முன்வர வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுக் கேட்டுக் கொள்கிறது!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.