ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

உயர்நீதிமன்ற – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் வழிகாட்டுவது அரசமைப்பு சட்டமா? வர்ணாசிரம தர்மமா? பெ. மணியரசன் அறிக்கை!


உயர்நீதிமன்ற – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 

நியமனத்தில் வழிகாட்டுவது
அரசமைப்பு சட்டமா? வர்ணாசிரம தர்மமா?

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

உயர் நீதிமன்றங்களில் பணியாற்றும் திறமையான வழக்கறிஞர்களை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக தேர்வு செய்யும் பணியை “உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழு” (கொலீஜியம்) செய்து வருகிறது. அவ்வாறு இப்போது சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உள்ள கல்யாண் ஜபக் என்பவரை உச்ச நீதிமன்றத் தேர்வுக் குழு, உயர் நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்துள்ளது. இவர் இராசஸ்தானைச் சேர்ந்தவர். இவருக்குத் தமிழ்ப் பேசத் தெரியுமே தவிர, தமிழ்ப் படிக்கத் தெரியாது என்கிறார்கள். 

மாநில வாரியாக உள்ள உயர் நீதிமன்றங்களின் பரிந்துரையைப் பெற்று நீதிபதிகளைத் தேர்ந் தெடுக்கும் குழு, அந்தந்த மாநில மண்ணின் மக்களுக்கும், அவர்களில் பிற்படுத்தப்பட்ட - ஒடுக்கப் பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். எனவே, தமிழ் நாட்டின் சென்னை உயர் நீதிமன்றத்தின் வழியாக தமிழர்களே நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 

இராசஸ்தானைச் சேர்ந்த வழக்கறிஞர் கல்யாண் ஜபக்கை நீதிபதியாக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்திற்குப் பரிந்துரை செய்தது சரியல்ல. வெளியிலிருந்து வந்த அரசியல் அழுத்தம் காரணமாக இத்தேர்வு நடந்திருக்கலாம். 

சென்னை உயர் நீதிமன்றத்தில் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமாக நீதிபதிகளாக இருக்கிறார்கள். மண்ணின் மக்களுக்கான இட ஒதுக்கீடு எதுவும் இல்லாததால் மண்ணின் மொழி தெரியாத பிற மாநிலத்தவர்கள் கணிசமான எண்ணிக்கையில் நீதிபதிகளாக இருப்பது சரியல்ல. 

எனவே, வழக்கறிஞர் கல்யாண் ஜபக்கை நீதிபதியாக்கும் முடிவை உச்ச நீதிமன்றத் தேர்வுக் குழு (கொலீஜியம்) கைவிட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த திறனுள்ள - ஆற்றலுள்ள தமிழர்களை நீதிபதிகளாகத் தேர்வு செய்ய வேண்டும். 

உச்ச நீதிமன்றத்தில் பிராமணர் ஆதிக்கம்

கடந்த 10.05.2019 அன்று சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து நீதிபதி வெ. இராமசுப்பிரமணியம் அவர்கள் தேர்வு செய்யப்பட்டு, இமாச்சலப்பிரதேச தலைமை நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார். கடந்த 28.08.2019 அன்று, அதாவது மூன்று மாதத்தில் அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பணி உயர்த்தப்பட்டுள்ளார். 

ஆனால், நீதிபதி வெ. இராமசுப்பிரமணியம் அவர்களுக்கு மூத்தவராக - அவருக்கு முன்பே -காசுமீர் உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், இப்போது மணிப்பூர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும் கடந்த 2017 மார்ச் முதல் பணியாற்றி வரும், இதே சென்னை உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதி சுதாகர் அவர்களுக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் வாய்ப்பு வழங்கப்படவில்லை! 

மூன்றே மாதத்தில் பிராமணரான நீதிபதி இராமசுப்பிரமணியம் அவர்களுக்கு வழங்கப்படும் பணி உயர்வு, பிராமணரல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மூத்த நீதிபதி சுதாகருக்கு வழங்கப்படாததற்குக் காரணம் என்ன? உச்ச நீதிமன்றம் பின்பற்றுவது அரசமைப்புச் சட்டமா? வர்ணாசிரம தர்மமா? 

உச்ச நீதிமன்றத்திலுள்ள 34 நீதிபதிகளில் நீதிபதி பானுமதி மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் அங்கு நீதிபதிகளாக இருக்கும்போது, தமிழ்நாட்டிலிருந்து மட்டும் ஒரே ஒருவர் மட்டும்தான் அங்கு உள்ளார். ஏன் நீதிபதி சுதாகரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியமர்த்தவில்லை? 

நீதிபதி இராமசுப்பிரமணியம் அவர்கள் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகத் தேர்வு செய்த அதே நாளில் (10.05.2019) இதேபோல், மும்பை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் குசராத்தைச் சேர்ந்த நீதிபதி அகில் அப்துல்அமீது குரேஷி என்பவரை கொலீஜியம் மத்தியப்பிரதேசத்திற்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தேர்வு செய்தது. இந்திய அரசின் சட்ட அமைச்சகம் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து இப்போது வரை அந்தப் பணி அமர்த்தலை நிறுத்தி வைத்துள்ளது. இதனை எதிர்த்து, குசராத் உயர் நீதிமன்ற பார் கவுன்சில் வழக்குத் தொடர்ந்துள்ளது. மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி குரேசி, குசராத்தில் போலி மோதலில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜகான் வழக்கில் அமீத்சாவை சிறையில் அடைக்க ஆணையிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள் 34 பேரில் ஒரே ஒருவர்தான் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். மக்கள் தொகையில் 25 விழுக்காட்டினராக உள்ள ஒடுக்கப்பட்ட - பழங்குடியின மக்களிலிருந்து ஒரே ஒருவர்தான், அதுவும் பத்தாண்டுகளுக்குப் பிறகு அண்மையில் அமர்த்தப்பட்டுள்ளார். 14 விழுக்காட்டினராக உள்ள முசுலிம்களில் ஒருவர் மட்டுமே இப்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறார். எண்ணிக்கையில் மிகக்குறைவாக உள்ள பிராமண வகுப்பைச் சேர்ந்த நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தில் நிறைந்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி து. அரிபரந்தாமன் அவர்கள், இதுகுறித்து தனது ஆதங்கத்தை கருத்தாகப் பதிவு செய்துள்ளார். 

உச்ச நீதிமன்றத்தில் - உயர் நீதிமன்றத்தில் ஆரிய பிராமண ஆதிக்கம் கோலோச்ச இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவது கடுமையான கண்டனத்திற்குரியது. உயர் நீதிமன்ற - உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனங்களில் இட ஒதுக்கீடு இல்லை என்றாலும், சமூகப் பிரிவுகளுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் (Adequate Representation) அளிக்க வேண்டியது சட்டக் கடமையாகும். 

இதனை எதிர்த்து அனைத்துத் தமிழ் மக்களும், அமைப்புகளும் சனநாயகக் குரல் கொடுக்க வேண்டும். இது நீதித்துறை சிக்கல் மட்டுமல்ல, சமூகநீதிச் சிக்கல் - தமிழினச் சிக்கல் என்று உணர வேண்டும்!

எனவே, வழக்கறிஞர் கல்யாண் ஜபக் என்பவரை தேர்வு செய்துள்ளதை உச்ச நீதிமன்றக் கொலீஜியம் உடனடியாக இரத்து செய்ய வேண்டுமென்றும், தமிழ்நாட்டிலிருந்து தகுதியுள்ள தமிழர்கள் பலரை நீதிபதிகளாக்க வேண்டுமென்றும், இந்திய அரசையும் உச்ச நீதிமன்றத்தையும் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்



பேச: 7667077075, 9443918095 

முகநூல் : www.fb.com/tamizhdesiyam 
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.