ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பழங்குடி மக்கள் போராட்டத்திற்கு இந்திய அரசு பணிந்தது! - கொடிய வனச்சட்ட வரைவு -2019ஐ திரும்பப் பெற்றது! கி. வெங்கட்ராமன் அறிக்கை!


பழங்குடி மக்கள் போராட்டத்திற்கு
இந்திய அரசு பணிந்தது! - கொடிய வனச்சட்ட
வரைவு -2019ஐ திரும்பப் பெற்றது!
=
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!


மலையகத்திலிருந்தும், காடுகளிலிருந்தும் பழங்குடியின மக்களை வெளியேற்றிவிட்டு இந்தியா முழுவதுமுள்ள வனங்களை பெருங்குழுமங்களின் வேட்டைக்குத் திறந்துவிடும் நோக்கில், இந்திய அரசு “இந்திய வனச் சட்ட வரைவு – 2019” – என்பதை நாடாளுமன்றத்தில் முன்வைத்தது.

கோடிக்கணக்கான ஆதிவாசிகளையும், மலையக மக்களையும் அவர்களது வரலாற்றுத் தாயகத்திலிருந்து வெளியேற்றும் இக்கொடிய வரைவுச் சட்டத்தை எதிர்த்து, இந்தியாவின் பல பகுதிகளில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

தமிழ்நாட்டில் ஆதிவாசிகளின் தாயகப் பாதுகாப்புப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்து வரும் தமிழ்த்தேசியப் பேரியக்கம், இச்சட்டத்தை எதிர்த்தப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கு பெற்றது. திருநெல்வேலி மாவட்டம் – வாசுதேவநல்லூரில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் வழிகாட்டுதலில் இயங்கும் “ஆதிவாசிகள் விடுதலை முன்னணி” சார்பில், இச்சட்ட வரைவை எதிர்த்து இரண்டு முறை பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஆதிவாசிகள் விடுதலை முன்னணித் தலைவரும், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினருமான தோழர் க. பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதிவாசிகளின் உரிமைகளை ஆதரித்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களும், மகளிர் ஆயம் தோழர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.

அடுத்த கட்டமாக தமிழ்நாடு ஆதிவாசிகள் கூட்டமைப்பு சார்பில், மதுரையில் நடைபெற்ற கலந்துரையாடலில், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் இந்த வரைவுச் சட்டத்தின் கொடும் தன்மைகளை விளக்கி முதன்மை உரையாற்றினார். அக்கலந்துரையாடலில், 2019 – இந்திய வனச்சட்ட வரைவை திரும்பப் பெற வலியுறுத்தி செங்கல்பட்டு தொடங்கி கன்னியாகுமரி வரை பல்வேறு மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்து, பல மாவட்டங்களில் அந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு அடுத்தகட்டமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள பழங்குடியினரையும், மலையக மக்களையும் ஒன்றுதிரட்டி சென்னையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

இந்தப் பின்னணியில், இந்திய அரசின் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தில்லியில் இன்று (16.11.2019) செய்தியாளர்களை சந்தித்து, இந்த வரைவு வனச்சட்டம் – 2019 முற்றிலும் திரும்பப் பெறப் படுவதாக அறிவித்தார்.

விரைவில், பெரும்பான்மையான பழங்குடி மக்களை வாக்காளர்களாகக் கொண்ட சார்க்கண்ட் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடப்பதைக் கருத்தில் கொண்டுகூட இந்த அறிவிப்பை இந்திய அரசு வெளியிட்டிருக்கலாம். எப்படி இருப்பினும் ஆதிவாசிகளின் தொடர்ந்த தாயக உரிமைப் போராட்டத்திற்குக் கிடைத்த முதல் கட்ட வெற்றி இது! இச்சட்ட வரைவை திரும்பப் பெற்றதை அதிகாரப்பூர்வமாக இந்திய அரசின் அரசிதழில் இந்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.