ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“வேளாண் கொள்முதல் பொறுப்பிலிருந்து தமிழ்நாடு அரசு விலகவே ஒப்பந்தப் பண்ணைச் சட்டம் வழிவகுக்கும்!” “பசுமை விகடன்” வார ஏட்டிற்கு கி. வெங்கட்ராமன் செவ்வி!


“வேளாண் கொள்முதல் பொறுப்பிலிருந்து
தமிழ்நாடு அரசு விலகவே ஒப்பந்தப்
பண்ணைச் சட்டம் வழிவகுக்கும்!”

“பசுமை விகடன்” வார ஏட்டிற்கு
தோழர் கி. வெங்கட்ராமன் செவ்வி!


"ஒப்பந்தப் பண்ணையச் சட்டம் சாதகமா, பாதகமா?” என்ற தலைப்பில் 25.11.2019 நாளிட்ட “பசுமை விகடன்” வார ஏட்டிற்கு தமிழக உழவர் முன்னணி தலைமை ஆலோசகரும், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளருமான தோழர் கி. வெங்கட்ராமன் அளித்துள்ள செவ்வி :
‘‘தமிழக விவசாயிகளை ஓட்டாண்டி ஆக்குவதற்காகவும், கார்ப்பரேட் கம்பெனிகள் சுரண்டிக் கொழிப்பதற்காகவும் மத்திய அரசின் தூண்டுதலோடு தமிழக அரசு இந்தச் சூழ்ச்சியான சட்டத்தைக் கொண்டுவருகிறது.
`வேளாண் உற்பத்தியில் ஈடுபடுபவர்களும், கால்நடைகள் வளர்ப்பவர்களும் அவை தொடர்பான பெரிய தொழில் நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு, அவற்றில் ஈடுபடலாம்’ என இந்தச் சட்டம் சொல்கிறது. சாகுபடியின் தொடக்க காலத்திலேயே நெல், பருத்தி, வாழை உள்ளிட்ட விளைபொருள்களுக்கு விற்பனை விலையைத் தீர்மானித்து ஒப்பந்தம் செய்வதுதான் இதன் சாராம்சம்.
அதேபோல, `கால்நடை வளர்ப்பவர்கள் பால் விற்பனை செய்வதற்குப் பெரிய நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு உத்தரவாதமான சந்தையைப் பெறலாம்’ எனத் தமிழக அரசின் செய்திக் குறிப்பு சொல்கிறது. இதன் உண்மையான நோக்கம், வேளாண் விளைபொருள்களைக் கொள்முதல் செய்யும் பொறுப்பிலிருந்து தமிழக அரசு கொஞ்சம் கொஞ்சமாக விலகி, சந்தையை முற்றிலும் தனியார் வசமாக்குவதுதான்.
ஏற்கெனவே மத்திய அரசின் சாந்தகுமார் குழு, `வேளாண் விளைபொருள்கள் கொள்முதலிலிருந்தும், அதற்கு அடிப்படை விலை தீர்மானிப்பதிலிருந்தும் அரசு விலகிக்கொள்ள வேண்டும்’ என 2015-ம் ஆண்டு பரிந்துரை செய்தது.
அதை மத்திய அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இங்கேயுள்ள சூழலுக்கு அரசு கொள்முதல் நிலையங்கள் அதிகம் தேவைப்படுகின்றன.
வேளாண் விளைபொருள்களுக்கு அரசே அடிப்படை விலையைத் தீர்மானிக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது. ஒப்பந்தப் பண்ணையச் சட்டம் இங்கு ஒத்து வராது”.
இவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் கூறியுள்ளார்.


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.