ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

இலங்கை இனப்படுகொலையாளிகளை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்து! ஐ.நா. மனித உரிமை ஆணையர் அறிக்கை! ஐயா கி. வெங்கட்ராமன்,


 

இலங்கை இனப்படுகொலையாளிகளை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்து! ஐ.நா. மனித உரிமை ஆணையர் அறிக்கை!

ஐயா கி. வெங்கட்ராமன், பொதுச்செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.



ஐ.நா. மனித உரிமை மன்றத் தீர்மானத்திலிருந்து இலங்கை அரசு விலகிக் கொள்வதாக கோத்தபய இராசபக்சே அரசு அறிவித்துள்ளது.  ஐ.நா. மனித உரிமை மன்றத் தலைமை ஆணையரோ, இனப்படுகொலை குற்றவாளிகளைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்கிறார்.  

இலங்கை அரசும் சேர்ந்து கொண்டு ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் 2015இல் நிறைவேற்றிய தீர்மானம், வெளிநாட்டு சட்ட வல்லுநர்களின் உதவியோடு உள்நாட்டு விசாரணை நடத்தி 2008 - 2009 தமிழீழ அழிப்புப் போரில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொறுப்பேற்பு - நல்லிணக்கம் ஆகியவை குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி கூறியது.

ஆயினும், கோத்தபய இராசபக்சே - மகிந்த இராசபக்சே ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இதிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். ஐ.நா. மனித உரிமை மன்றத்தோடு இணைந்து இச்சிக்கலில் செயல்படப்போவதில்லை எனவும் கூறினர்.

அண்மையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையில் மூன்று நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டபோது, ஈழத்தமிழர்களுக்கு எதிரான போரில் நிகழ்ந்த “போர்க்குற்றம், மனித உரிமை மீறல்” ஆகியவை இலங்கையின் உள்நாட்டுச் சிக்கல் என்று கூறி, கோத்தபய ஆட்சியின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்தார்.

இந்தப் பின்னணியில், ஐ.நா. மனித உரிமை மன்றத்திற்குத் தலைமை ஆணையர் கடந்த 2021 சனவரி 12 அன்று முன்வைத்துள்ள அறிக்கை “கசிந்து” வந்துள்ளது. இதற்கு முன்பாகவும் இலங்கை இனச்சிக்கல் தொடர்பான தீர்மானங்கள் பலநேரம் இதுபோல் “கசிந்தது” உண்டு! பெரும்பாலும், அவையே உண்மையான அறிக்கையாகவும் அமைந்ததும் உண்டு!

கசிந்துள்ள தலைமை ஆணையர் முன்மொழிவு, சில புதிய நிலைமைகளையும் முடிவுகளையும் கூறுகிறது.

(-) கொரோனா தடுப்பு, தகவல் தொடர்பு, பேரிடர் மேலாண்மை, ஊடக மையம் உள்ளிட்ட ஏறத்தாழ 31 குடிமை நிர்வாக அமைப்புகளும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கின்றன.

(-) குடியரசுத் தலைவரின் முற்றதிகாரத்திற்கு வழி ஏற்படுத்தும் 20ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

(-) மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பாக நடைபெற்ற உள்நாட்டு விசாரணைகளில் அரசியல் குறுக்கீடு அதிகரித்து, அவை முன்னேறாமல் தடுக்கப்படுகின்றன.

(-) சிங்களர்களின் வாக்குகளைப் பெற்றே தாங்கள் அரசு அமைத்திருப்பதாகவும், அதனால் சிங்களர்களின் விருப்பங்களுக்கு முன்னுரிமை தருவது தேவையானது என்றும் குடியரசுத் தலைவரே பேசுவதும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் கூட இனப்பாகுபாடு காட்டப்படுவதும் அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

(-) ஊடகத்துறையினர் கடுமையாகக் கண்காணிக்கப்படுகிறார்கள். சனநாயக நடவடிக்கைகள் பெருமளவில் குறுக்கப்பட்டுவிட்டன. மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் அன்றாடம் அதிகரித்திருக்கின்றன.

இவ்வாறு அடுக்கடுக்கான நிலைமைகளை எடுத்துக்கூறும் தலைமை ஆணையர், ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் 2015ஆம் ஆண்டு தீர்மானத்தை இலங்கை அரசு செயல்படுத்தாது என்ற முடிவுக்கு வருகிறார்.  பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான நிலைமைகள் மோசமடைந்து வருவதால் போர்க்குற்றம் குறித்த விசாரணையைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல ஐ.நா. மனித உரிமை மன்றம் செயல்பாடுகளைத் தொடங்கிவிட வேண்டும் என்கிறார்

அதேநேரம், உறுப்பு நாடுகள் போர்க்குற்றம் தொடர்பாக தங்கள் நாடுகளில் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும், கொடும் குற்றச்சாட்டுக்கு ஆளான உயர் அதிகாரிகள் தங்கள் நாடுகளுக்கு வரக்கூடாது என பயணத் தடை விதிக்கலாம் என்றும் பரிந்துரைத்திருக்கிறார்.

நம்மைப் பொறுத்தளவில் நடைபெற்றது வெறும் போர்க்குற்றமல்ல - அப்பட்டமான இன அழிப்பு (Genocide) என்பதே உண்மை! இனப்படுகொலை தொடர்பான குற்ற விசாரணையே பன்னாட்டு அரங்கில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதும், ஐ.நா. மேற்பார்வையில் தனி ஈழம் தொடர்பான கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதுமே நமது கோரிக்கை!

தலைமை ஆணையரின் இந்தப் பரிந்துரை முக்கியமான முன்னேற்றமாகும். தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், மனித உரிமை ஆணையரின் இந்த அறிக்கையை அவருடைய கூட்டணித் தலைவர் மோடி ஆதரிக்க வேண்டுமென கோரிக்கை வைக்க வேண்டும்!

ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்த அறிக்கையின்படி தீர்மானம் நிறைவேற்ற இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும். மற்ற எதிர்க்கட்சிகளும் இக்கோரிக்கையை எழுப்ப வேண்டும்.

அவ்வாறு வரைவுத் தீர்மானம் முன்வைக்கப்பட்டால், அதனையாவது இந்திய அரசு ஆதரித்து, பன்னாட்டு அரங்க விசாரணைக்கு இனப்படுகொலையாளர்களை கொண்டு நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2021 பிப்ரவரி இதழின் ஆசிரியவுரை)
.



தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.