ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழர்களுக்கு அறிவுக்கொடைகள் வழங்கி - ஈகமும் செய்த பேரா. க. நெடுஞ்செழியன் மறைவு பெருந்துயரம்!

 தமிழர்களுக்கு அறிவுக்கொடைகள் வழங்கி - ஈகமும் செய்த பேரா. க. நெடுஞ்செழியன் மறைவு பெருந்துயரம்!

==================================


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

பெ. மணியரசன் அறிக்கை! 

==================================

 

பேராசிரியர் முனைவர் க. நெடுஞ்செழியன் அவர்கள் இன்று (04.11.2022) விடியற்காலை சென்னை அரசு தலைமைப் பொது மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி பெருந் துயரம் அளிக்கிறது. நேற்றைக்கு முதல் நாள் (02.11.2022) அன்று மாலை நானும் தோழர்கள் அ. ஆனந்தன், க. அருணபாரதி ஆகியோரும் ஐயா அவர்களை மருத்துவமனையில் பார்த்தோம்; அப்பொழுதே உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு தன் நினைவிழந்த நிலையில் இருந்தார். செயற்கை மூச்சுக் குழல் வழியாக சுவாசித்தார். அவருடைய மூத்த மகள் நகைமுத்து - அவர் இணையர் பாண்டியன், இளைய மகள் குறிஞ்சி ஆகியோர் மருத்துவமனையில் உடனிருந்து கவனித்துக் கொண்டனர்.


பேராசிரியர் முனைவர் சக்குபாய் நெடுஞ்செழியன் அம்மா அவர்கள் சென்னையில் வீட்டில் இருந்தவாறே சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று மாலை தோழர்கள் கி. வெங்கட்ராமன், அ. ஆனந்தன், நாடக வினோத் ஆகியோரும் நானும் நேரில் பார்த்து நலம் விசாரித்து வந்தோம்.


ஐயா நெடுஞ்செழியன் அவர்கள் தமிழர்களின் வரலாற்றுச் சிறப்புகளை, அறிவாற்றலை மெய்யியல் சான்றுகளுடன் நிறுவி பல நூல்கள் எழுதியுள்ளார். ஆசிவகம் பற்றிய அவரது ஆய்வு தமிழர் வரலாற்றில் தனித் தடம் போட்ட பங்களிப்பாகும்.


தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களில் முதன்மைத் தெய்வங்கள் மாறினாலும் ஐயனார் சிலை மட்டும் கட்டாயம் இருக்கும். தமிழர்களுக்கு ஐயனார் பொது தெய்வம் - ஆனால் அங்கங்கே முதன்மையான வழிபாட்டுத் தெய்வம் வெவ்வேறாக இருக்கும். அதேபோல் "கருப்பு" என்ற முதன்மைச் சொல்லோடு பெயர் தொடங்கும் தெய்வங்கள் தமிழ்நாடெங்கும் இருக்கிற உண்மைகளைத் தொகுத்து வழங்கியவர் ஐயா க. நெடுஞ்செழியன் ஆவார். 


மாணவப் பருவத்திலேயே பெரியார் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு அவற்றின்வழி செயல் பட்டவர்கள் ஐயா நெடுஞ்செழியனும் அம்மா சக்குபாயும்! தமிழர்கள் மிகப் பழங்காலத்திலேயே கடவுள் கொள்கைக்கு அப்பாற்பட்டு மெய்யியல் கருத்துகளை வழங்கியவர்கள் என்ற வரலாற்றுச் செய்தியை இலக்கியச் சான்றுகளுடன் தொகுத்தவர் ஐயா நெடுஞ்செழியன்.


"தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம்" என்ற அவரது நூல் - அவரது முனைவர் பட்ட ஆய்வேடாகும். "தமிழர் தருக்கவியல்", "தமிழரின் அடையாளங்கள்", "ஆசிவகம் என்னும் தமிழர் அணுவியம்", "தமிழர் இயங்கியல்" (தொல்காப்பியமும் சரக சம்கிதையும்), "உலகத் தோற்றமும் தமிழர் கோட்பாடும்", "ஆசிவகமும் ஐயனார் வரலாறும்" உட்பட பல அரிய ஆய்வு நூல்களை வழங்கினார் ஐயா நெடுஞ்செழியன்.

கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுக்கச் சுற்றிக் கோயில்களையும் வரலாற்றுச் சின்னங்களையும் நேரில் பார்த்து ஆய்வு செய்தார். ஐயா அவர்களுடன் நானும் சித்தன்னவாசலுக்கும் - வரகூர் - நடுக்காவேரி கோயில்களுக்கும் சென்று அவர் மூலம் புதிய செய்திகளை அறிந்து கொண்டேன். அவர் நூலொன்றுக்கு அணிந்துரை எழுதும் வாய்ப்பை எனக்கு வழங்கினார்.


ஐயா அவர்கள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் பணியாற்றியபோது அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. தமிழ்த்தேசியப் பேரியக்கத் திருச்சித் தோழர்கள் நெடுஞ்செழியன் ஐயாவை அழைத்து இலக்கியக் கூட்டங்கள் பல நடத்தினர்.


ஆன்மிகத்தில் ஆரிய பிராமண ஆதிக்கத்தை எதிர்கொள்ளவும் - நீக்கவும் தமிழர் மெய்யியல் தரவுகளை ஆயுதங்களாக வழங்கியவர் ஐயா நெடுஞ்செழியன். மனிதச் சமநிலை, ஆண் - பெண் சமநிலை ஆகிய கொள்கைகளைப் பரப்பியவர்; தம் வாழ்க்கையில் கடைபிடித்தவர். தமிழீழ விடுதலையை உறுதியாக ஆதரித்தவர். அவர் மகன் தமிழீழத்திற்குச் சென்று ஈகி ஆனார். 


தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இரா. நாகசாமி சங்க இலக்கியங்களும் திருக்குறளும் சமற்கிருத நூல்களைப் பார்த்து எழுதப்பட்டவை என்று பொய்யுரைத்து நூல் வெளியிட்டார். அதை எதிர்த்துப் பொங்கி எழுந்து ‘நாகசாமி "நூலின்" நாசவேலை' என்ற தலைப்பில் மறுப்பு நூல் எழுதினார். அந்நூலை எமது பன்மைவெளி வெளியீட்டகம் வெளியிட்டது.


கர்நாடகத்தில் இப்போதுள்ள தமிழர் தாயகப் பகுதிகளைத் தமிழ்நாட்டோடு இணைத்து அகண்ட தமிழ்நாடு அமைக்க ஆயுதப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டதாகவும் வீரப்பன் அவர்களுடன் சேர்ந்து கன்னடத் தலைவர்களைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகவும் ஐயா பெங்களூர் குணா அவர்களையும் பேராசிரியர் க. நெடுஞ்செழியன் அவர்களையும் மற்றும் கர்நாடகத் தமிழர்களையும் ஒரு பொய் வழக்கில் தளைப்படுத்தி பெங்களூர் பரப்பன அக்ரகாரச் சிறையில் அடைத்தார்கள். முப்பத்திரண்டு (32) மாதங்கள் சிறையில் இருந்தார்கள். வழக்கை நடத்தி விடுதலை பெற்றார்கள்.


தமிழ் இனத்திற்கு அறிவுக்கொடை வழங்கியதுடன் சிறை ஈகமும் செய்தவர் பேராசிரியர் க. நெடுஞ்செழியன் அவர்கள். அவர்களது மறைவிற்குப் பெருந்துயரத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.


=================================

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

=================================

பேச: 9443918095, புலனம் : +91 98419 49462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

=================================

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.