மூன்றாவது மொழியென இந்தியைத் திணிக்கும் இந்திய அரசைக் கண்டித்து பெண்ணாடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!
மூன்றாவது மொழியென இந்தியைத்
திணிக்கும் இந்திய அரசைக் கண்டித்து
பெண்ணாடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!
மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் எப்படியாவது திணித்தே தீருவது என முடிவெடுத்து செயல்படுத்தி வரும் ஆரியத்துவ மோடி அரசு, இப்போது “மூன்றாவது மொழி” என்ற பெயரில் இந்தியைக் கொண்டு வர முயல்கிறது. இதனை அம்பலப்படுத்தும் வகையில் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் பெண்ணாடத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடைபெற்றது.
கோரிக்கைகள்
=============
1. இந்திய அரசே! இந்திய அரசின் 2020 புதிய கல்விக் கொள்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு மொத்த மாக விலக்குக் கொடு! தமிழ்நாட்டிற்கு உரிய கல்வித் தொகை அனைத்தையும் முழுமையாக - உடனடியாக வழங்கு!
2. இந்தித் திணிப்பை உள்ளடக்கிய மும்மொழிக் கொள்கையை முற்றிலுமாகக் கைவிடு! தமிழர்கள் இந்தியைத் தவிர்த்துவிட்டு, தென்னாட்டு மொழிகளில் ஒன்றை மூன்றாவது மொழியாகக் கல்வியில் ஏற்க வேண்டும் என்று நயவஞ்சகமாகக் கூறி, இந்தித் திணிப்பிற்கு இன்னொரு வாசலைத் திறக்காதே!
3. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மாநில அதிகாரப்பட்டியலில் இருந்த கல்வியை, சர்வாதிகாரி இந்திராகாந்தி 1976-இல் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து இந்திய அரசின் மேலாதிக்கம் உள்ள பொதுப்பட்டிய(Concurrent List)லுக்கு மாற்றினார். அதை மீண்டும் மாநில அதிகாரப் பட்டியலுக்குக் கொண்டுவா!
4. உயர் கல்வியில் ஆதிக்கம் செலுத்தி, மாநில அரசுக்கு மிஞ்சியுள்ள கல்வி அதிகாரத்தையும் பறிக்கின்ற பல்கலைக் கழக மானியக் குழுவை (UGCயை) நிரந்தரமாகக் கலைத்திடு! பல்கலைக் கல்விக்கென அனைத்து மாநிலக் கல்விப் பேராளர்களைக் கொண்ட பரிந்துரைக்குழு அமைத்திடுக!
5. இந்திய அரசின் ஒரே ஆட்சி மொழி இந்தி மொழியே எனக் கட்டளை இடும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 343-ஐயும் அதன் தொடர்புடைய உறுப்புகளையும், அரசமைப்புச் சட்டத்திருத்தம் கொண்டுவந்து முற்றிலுமாக நீக்கு. உலகின் மற்ற கூட்டாட்சி நாடுகளில் இருப்பதுபோல், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள - தமிழ் உள்ளிட்ட, 22 மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழிகள் ஆக்கு!
6. தமிழ்நாடு அரசே, தமிழ்நாட்டிற்கென தனி கல்விக் கொள்கையை அறிவித்திடு!
நேற்று (25.02.2025) மாலை 04.30 மணிக்கு பெண்ணாடம் அருகேயுள்ள முருகன்குடி, மேட்டுத்தெருவில் தமிழ்த்தேசிய நாளை முன்னிட்டு பேரியக்கக் கொடியினை பொதுச்செயலாளர் ஐயா கி. வெங்கட்ராமன் அவர்கள் ஏற்றினார்.
பிறகு மாலை 05.00
மணியளவில் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வை தமிழ்த்தேசியப் பேரியக்க நல்லூர் ஒன்றியச் செயலாளர் தோழர் சி. பிரகாசு தலைமையேற்று நடத்தினார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் ஐயா கி. வெங்கட்ராமன், மகளிர் ஆயம் பொதுச்செயலாளர் தோழர் அ. செந்தமிழ்ச்செல்வி , நல்லூர் ஒன்றியத் தலைவர் தொழர் அரா. கனகசபை, தோழர் பெ. ந. லெட்சுமணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மகளிர் ஆயம் பொருளாளர் தோழர் ம. கனிமொழி, மு. வித்யா, சு. சிலம்புச்செல்வி, க. இந்துமதி, இளமதி, பேரியக்கத் துணைத்தலைவர் தோழர் க. முருகன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் மா. மணிமாறன் தோழர்கள் காமராசு, பாலா, அ.சுப்ரமணியராஜா, அறிவுச்செல்வன், ஞானப்பிரகாசம், சசிகுமார், சிலம்பரசன், திருக்குறள் ஞானமன்ற நிறுவனர் திரு. அஞ்சை. இராவணன் மற்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களும் பங்கேற்றனர்.
=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================
Leave a Comment