ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மத்தியப்பிரதேசத்தில் மண்ணின் மக்களுக்கே வேலை! தமிழ்நாட்டு இனத்துரோகிகள் திருந்துவார்களா? தோழர் பெ. மணியரசன்.

மத்தியப்பிரதேசத்தில் மண்ணின் மக்களுக்கே வேலை! தமிழ்நாட்டு இனத்துரோகிகள் திருந்துவார்களா? தோழர் பெ. மணியரசன் - தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
மத்தியப் பிரதேச காங்கிரசு முதலமைச்சர் கமல்நாத் பதவியேற்ற சில மணி நேரத்தில், “மத்தியப் பிரதேசத்தின் வேலை வாய்ப்புகளை உத்திரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பறித்துக் கொள்கிறார்கள்; மண்ணின் மக்கள் வேலை இல்லாமல் அலைகிறார்கள். இந்தச் சிக்கலைத் தீர்க்க, மண்ணின் மக்களுக்கு 70% வேலை கொடுக்கும் தொழிற்சாலைகளுக்குத்தான் ஊக்கத் தொகை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும்” என்று அறிவித்தார்.
 
.இது ஒன்றும் புதிய அறிவிப்பு அல்ல! மத்தியப் பிரதேசத்தின் “தொழில்துறை கொள்கை”யின் 2010ஆம் ஆண்டு திருத்தங்களின்படி, குறைந்தபட்சம் 50 விழுக்காடு மண்ணின் மக்களுக்கு வேலை கொடுக்கும் நிறுவனங்களுக்குதான் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதை 70 விழுக்காடாக உயர்த்தி கமல்நாத் அறிவித்துள்ளார்.
 
தமிழ்த்தேசியப் பேரியக்கம் மண்ணின் மக்களுக்கே வேலை என்று முழக்கமிட்டால், எம்மை இனவெறியர்கள் என்று முத்திரை குத்தும் இந்தியத்தேசியவாதிகளும், இடதுசாரிகளும் சிந்திக்க வேண்டும்.
 
உத்திரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிதேசம் மூன்றும் இந்தி மொழி மாநிலங்கள்! இந்தியத்தேசியம் பேசும் காங்கிரசு முதலமைச்சர், தன் மாநில மக்கள் வேலையின்றித் தவிக்கும்போது பிற இந்தி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியப் பிரதேசத்தின் தனியார் துறை வேலை வாய்ப்புகளைப் பறித்துக் கொள்ளக் கூடாது என்று கூறி, அதற்கான தீர்வையும் அறிவித்துள்ளார்.
 
பீகார், உத்திரப்பிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்த பா.ச.க.வினரும், சமாஜ்வாதி கட்சியினரும், கமல் நாத்தின் இந்த முடிவை கடுமையாகக் கண்டனம் செய்துள்ளார்கள். இந்தக் கண்டனங்களுக்கு பீகார் மாநில காங்கிரசுக் கட்சியின் செயல் தலைவர் கௌகாப் காத்திரி, அந்தந்த மாநில மக்களுக்கு வேலை கொடுப்பது அந்தந்த மாநில அரசின் முன்னுரிமை என்றும் கமல்நாத் அறிவிப்பில் தவறில்லை என்றும் மறுமொழி கூறியுள்ளார்.
 
அவர் அதோடு நிற்காமல், பீகார் மாநிலத்தில் மண்ணின் மக்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் திட்டங்களை பீகார் மாநில அரசு செயல்படுத்த வேண்டுமென்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
 
குசராத்தில், மண்ணின் மக்களுக்கே வேலை என 1995ஆம் ஆண்டிலிருந்து அரசாணை செயலில் உள்ளது. 2017ஆம் ஆண்டு மே மாதம் (08.05.2017), அந்த ஆணையைக் கடைபிடிக்காத இந்திய அரசின் இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனத்திற்கு எதிராக, குசராத் இளைஞர்கள் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், குசராத் மாநில அரசு தானும் சேர்ந்து கொண்டு, மண்ணின் மக்களுக்குத்தான் வேலை அளிக்க வேண்டும் என வாதிட்டு வருகிறது.
 
தமிழர்களே - இளைஞர்களே புரிந்து கொள்ளுங்கள்!
 
தமிழ்நாட்டில் நடுவண் அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்குத்தான் தர வேண்டுமென்றும், தமிழ்நாடு அரசுத் துறையில் 100 விழுக்காட்டு வேலைகளையும், தனியார் துறையில் 90 விழுக்காட்டு வேலைகளையும் தமிழர்களுக்குத்தான் தர வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராடி வருகிறது.
 
இங்குள்ள இடதுசாரிகளும், இந்தியத்தேசியவாதிகளும் இந்தக் கோரிக்கையை எதிர்க்கிறார்கள். அவர்கள் பேச்சைக் கேட்டால், மண்ணின் மக்களாகிய தமிழர்கள் தங்கள் வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து வளங்களையும் அயல் மாநிலத்தவர்க்கு வழங்கிவிட்டு, அகதிகளாக வேலை தேடி அலைய வேண்டிய அவலம்தான் மிஞ்சும்! பிறந்த இனத்திற்குத் துரோகம் செய்யும், அந்தக் குழப்ப வாதிகளின் சீர்குலைவுக் கருத்துகளுக்கு செவி கொடுக்காதீர்கள்!
 
திராவிட ஆட்சிகள் செய்தது என்ன?

இந்தியாவின் பிற மாநிலங்களில் மண்ணின் மக்களுக்கே வேலை என சட்டங்களும், ஆணைகளும் இயற்றப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு அப்படி எந்தவொரு சட்டமும் இல்லை! தொடர்ந்து தமிழ்நாட்டை ஆண்ட திராவிட ஆட்சிகள் தமிழர்களை நாதியற்றவர்களாக்கி, தமிழ்நாட்டை அயல் இனத்தாரின் வேட்டைக்காடாக்கியுள்ளதை எண்ணிப் பாருங்கள்! மண்ணின் மக்களுக்கே வேலை என்ற தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் முழக்கத்தை எதிரொலியுங்கள்!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.