ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தலையங்கம் :: மே நாள் சூளுரை


தலையங்கம்

மே நாள் சூளுரை


 

இந்தியாவைத் தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்கிறார்கள் மார்க்சிய ஆய்வாளர்கள். அந்தச் சிறைக்கூடத்திலும், முற்றுகைக்குள்ளான ஒரு தனிச்சிறைக் கொட்டடியில் தமிழ் இனம் உள்ளது. இந்திய அரசு காஷ்மீர் மக்களின் தேசிய விடுதலையை மறுப்பதுடன் காஷ்மீரத்தையே இராணுவச் சிறைக் கூடமாக மாற்றிவைத்திருக்கிறது; நாகர்கள், அசாமியர்கள் போன்ற வடகிழக்குத் தேசிய இனங்களைப் படை கொண்டு தாக்கி, அந்த மண்டலத்தை நிரந்தரப் போர்க்களமாக்கியுள்ளது. இக்கொடுமைகளையெல்லாம் எண்ணிப்பார்த்த பின்னும் ஒரு வினா எழுகிறது. தமிழ் இனம் போல் தாக்குதலுக்குள்ளான இன்னொரு இனம் இந்தியாவில் உண்டா? தேசிய விடுலைப் போராட்டம் அங்கெல்லாம் தீவிர வடிவமெடுத்துள்ளதால் இந்திய அரசு நேரடியாகப் படையனுப்பி அம்மக்களைத் தாக்குகிறது. ஆனால், தமிழ்நாட்டில் அவ்வாறு ஆயுதந்தாங்கிய விடுதலைப் போராட்டம் இல்லை. இந்தியப் பேரரசின் பாதந்தாங்கி, பணிவிடைகள் செய்து, பண்டிகை இனாம்கள் பெறும் கட்சிகள் தாம் இங்கு பெரிய அமைப்புகள்.கங்காணிகளின் சேவைக்கு எஜமானர்கள், கூலி தருவார்களே தவிர, நன்றி காட்டமாட்டார்கள் அல்லவா! அதேபோல்தான், கங்காணிகளின் தலைமையில் உள்ள தமிழர்களுக்கு இந்தியப் பேரரசு நன்றி காட்டுவதில்லை. நன்றி காட்டாவிட்டாலும் அமைதியாக வாழ அனுமதிக்கிறதா? அதுவும் இல்லை.

 

இந்திய ஆளும் வர்க்கத்திற்குத் தமிழர்களின் மீது வரலாற்று வழிப்பட்ட இனப்பகை இருக்கிறது. அதனைத் தீர்த்துக் கொள்ள இந்த அமைதிக் காலத்தில் படை அனுப்ப முடியாது. அதனால் பக்கத்தில் உள்ள கன்னடர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள், சிங்களர்கள் ஆகியோøரத் தனது படைப் பரிவாரங்களாகப் பயன் படுத்துகிறது. கன்னடர்கள், தமிழ்க் காவிரியைத் தடுத்ததுடன் கர்நாடகதில் தமிழர்களை 199192இல் இனக் கொலை புரிந்தார்கள். தமிழ்ப் பெண்களை வல்லுறவு கொண்டு மானபங்கப்படுத்தினார்கள். வீடு வாசல்இழந்து பல இலட்சம் தமிழர்கள் அகதிகளாக ஓடிவந்தார்கள். இப்பொழுது ஒக்கேனக்கலில் ஓடும் நீர் மட்டுமின்றி, ஒக்கேனக்கலும், ஓசூரும் கர்நாடகத்திற்கே சொந்தம் என்று கலகம் செய்கிறார்கள். இதுபோல் பக்கத்து மாநிலங்களிலிருந்து காஷ்மீர் மக்களுக்கு தாக்குதல்கள் வருகின்றனவா? இல்லை மாறாகப் பக்கத்து நாட்டிலிருந்து பல்வேறு காரணங்களுக்காகப் பல்வேறு வழிகளில் உதவிகள் வருகின்றன. கணிசமான மலையாளிகளின் பிழைப்பு தமிழ்நாட்டில் நடக்கிறது. ஆனால் மலையாளிகள் அவர்களின் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உச்சநீதிமன்றத் தீர்ப்பையே துச்சமாகத் தூக்கி எரிந்து முல்லைப் பெரியாறு அணையில் தமிழகம் தண்ணீர் தேக்குவதை மறுப்பதுடன் அவ்வணையை உடைக்கும் உள்நோக்கத்தோடு புதிய அணை கட்டப் போவதாக அறிவிக்கிறார்கள்.

அசாமியர்களுக்கோ அல்லது நாகர்களுக்கோ இப்படி ஒரு அநீதியை அண்டை மாநிலங்கள் இழைக்கின்றனவா? இல்லை; அண்டை நாடுகள்தாம் இப்படியான அநீதியை இழைக்கின்றனவா? இல்லை.

மேற்கு வங்கம், குசராத் போன்ற மாநிலங்களின் கடலில் கூப்பிடு தொலைவில் வங்காளதேசமும் பாகிஸ்தானும் இருக்கின்றன. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கு எத்தனை முறை போர் மூண்டது?

அரசுகளுக்கிடையிலான உறவுகள் முறிந்து, தூதரகங்களின் மூடப்பட்ட கதவுகளில் நூலாம்படை படர்ந்து கிடப்பதுண்டு. குசராத் பாகிஸ்தான் கடல் எல்லைப் பகுதியில் என்றைக்காவது குசராத்தி மீனவøரப் பாகிஸ்தான் கப்பற்படை சுட்டுக் கொன்றதுண்டா? இல்லை. வங்காளக் கடலில் மேற்கு வங்க மீனவர்களை வங்காள தேச கடற்படை சுட்டுக் கொன்றதுண்டா? இல்லை. ஏன்?

குசராத்தி மீனவர்களையும் மேற்கு வங்க மீனவர்களையும் பக்கத்து நாட்டினர் சுட்டுக் கொன்றால், இந்தியக் கப்பற்படை திருப்பிச் சுடும். போர் மூளும். சிங்களக் கப்பற்படையினர் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்றால் இந்தியக் கப்பல் படை திருப்பிச் சுடாது ஏன்? சாகின்ற மீனவர்கள் தமிழர்கள்; ஆரியத்தின் இனப் பகைவர்கள்.

 

கன்னடர்களால், மலையாளிகளால், சிங்களவர்களால் தாக்கப்பட்டும், உரிமை பறிக்கப்பட்டும் இனக் கொலைக்கு உள்ளாக்கப்பட்டும், திருப்பி அடிக்காத தமிழ் இனத்தைப் பார்த்துக் கேலிச் சிரிப்பு சிரித்தார்கள் தெலுங்கர்கள். இந்திய அரசின் எண்ணத்தைப் புரிந்து கொண்டார்கள். தமிழகத்திற்குள் கசிந்து வரும் பாலாற்று நீøரயும் கணேசபுரத்தில் தடுக்க அணை கட்டுகிறார்கள்.உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் தீர்ப்பாயத்தின் தீர்ப்பையும் நடுவண் ஆட்சியாளர்கள் உறுதிபடச் செயல்படுத்தித் தமிழர்களின் உரிமைகளை மீட்டுக் கொடுத்தால், கர்நாடக, கேரள மாநிலங்களில் காங்கிரசுக்கோ,

பா.ஜ.க.வுக்கோ மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று அஞ்சுகிறார்கள் என்று சிலர் காரணம் கூறுகிறார்கள். அப்படியானால், இவ்வளவு இழப்புகளுக்கும் தாக்குதல்களுக்கும், கேவலங்களுக்கும் உள்ளான தமிழர்களுக்குரிய நீதியை நிலைநாட்டவில்லை என்றால், காங்கிரஸ், பா.ச.க. கட்சிகள் மீது தமிழக மக்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டு வாக்களிக்க மறுக்கமாட்டார்களா? தமிழக மக்களைக் குழப்பி, தமிழ் இனத்தின் பகைச் சக்திகள் தமிழ் நாட்டிற்குள் மட்டுமே இருப்பதுபோல் சித்தரித்து காங்கிரசுக்கும், பா.ச.க.வுக்கும் வாக்கு வாங்கித் தரக் கங்காணிக் கட்சிகள் இங்கு இருப்பது உண்மைதான். ஆனால் அது மட்டுமே முழுக்காரணம் அல்ல. இந்திய ஆளும் வர்க்கம் தமிழர்களைத் தங்களது வரலாற்று வழிப்பட்ட பகைவர்களாக இனங்காண்பதே முதன்மைக் காரணம்.

இதனால் இந்திய அரசு, சிங்களர், மலையாளி, கன்னடர், தெலுங்கர் ஆகியோøரத் தமிழ் இனத்தை முற்றுகையிடும் பகைவர்களாகப் பயன்படுத்திக் கொள்கிறது. பக்கத்து இனத்தவர்களோ ஆரியத்தையும் வடமொழியையும் நேசிப்பார்களே அன்றி தமிழர்களை உடன் பிறப்புகளாகவோ, நண்பர்களாகவோ கருத மாட்டார்கள். இப்பொழுது எண்ணிப் பாருங்கள். இந்தியாவில் மிக அதிகமாக மிக மோசமாக இன ஒடுக்குமுறைக்கும், இன இழப்புகளுக்கும், பகை இன முற்றுகைக்கும் உள்ளாகியுள்ள ஒரே இனம் தமிழ் இனம் மட்டுமே! இந்த இனத்தில் பிறந்துள்ள ஒவ்வொருவரும் இந்த உண்மையை உணரவேண்டும். உணர்ந்ததும் அக்கம் பக்கம் உள்ள தமிழர்களுக்கு விளக்க வேண்டும்.
 
தமிழ்த் தேசியப் புரட்சியே அடிமைத்தனம் அறுக்கும் வாள் என அடையாளம் காட்ட வேண்டும். வீறு கொண்டு எழ வேண்டும்; விடியலுக்குத் திரள வேண்டும்; நம் தலைமுறையோடு அடிமைத்தனம் ஒழியட்டும்! அடுத்த தலைமுறை அனைத்துரிமையும் பெற்ற தமிழர்களாகத் தலை நிமிரட்டும்!

 

இதுவே, புதிய தமிழர் கண்ணோட்டம் உங்களுக்கு வழங்கும் புரட்சிகர மே நாள் சூளுரையும் வாழ்த்தும்!

1 comment:

  1. http://eezhakkathiravann.blogspot.com/

    மிகவும் சிறப்பான தளம்.
    இந்தத் தளத்துக்கும் http://eezhakkathiravann.blogspot.com/
    சென்று பாருங்கள் உங்கள் கருத்தை பகிருங்கள்.
    மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
    நேசமுடன்
    சு.பா.ஈஸ்வரதாசன்.

    ReplyDelete

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.