ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

காவிரி உரிமை: கண்டனம் முழங்கிட நாளை உழவர்கள் ஆர்ப்பாட்டம்!

Untitled-1

காவிரி உரிமைச் சிக்கலில் உச்சநீதிமன்றம் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்கத் தவறிவிட்டதைக் கண்டித்து நாளை தஞ்சையில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் உழவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 29.01.2013 அன்று, காவிரி சிக்கல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, கர்நாடகத் தரப்பின் வழக்கறிஞர் நாரிமன் கூறிய வாதங்களை அப்படியே ஏற்றுக் கொண்டு, தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர ஆணையிட முடியாதென்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.

கர்நாடகம், காவிரி தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் கூறியபடி 4 டி.எம்.சி. தண்ணீரைத் தான் குடிநீருக்காக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், கர்நாடகம் வல்லடி வழக்காக, 8 டி.எம்.சி. நீரை எடுத்துக் கொள்வோம் என கூறியதைக் கூட உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

காவிரி ஆணையத்தில் போய் தண்ணீா் பெற்றுங்கள் என தமிழகத்திற்குக் கூறிக் கொண்டு, உச்சநீதிமன்றம் ஒதுங்கிக் கொண்டது. இந்தியாவில் இறுதி அதிகாரம் படைத்த அமைப்பான உச்சநீதிமன்றமே, தமிழகத்தினுடைய சட்டப்படியான உரிமைகளை நிலைநாட்டத் தவறிவிட்டது.

இதனால், 16 இலட்சம் சம்பா சாகுபடியும் 5 கோடி மக்களின் குடிநீரும் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழக மக்கள் துயரடைகிறார்கள். இந்த அநீதியைக் கண்டித்து காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், நாளை(31.01.2013) மாலை 5 மணியளவில், தஞ்சை தொடர்வண்டி நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.

இதில், உழவர்களும், தமிழ் உணர்வாளர்களும் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தனது அறிக்கையில் தோழர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.