ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

நீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன? - தோழர் பெ. மணியரசன் கட்டுரை!




தமிழ்த் தேசியம் முன்வைக்கும் திறனாய்வுகளிலிருந்து திராவிடத்தையும் பெரியாரையும் காப்பாற்றத் திராவிடவாதிகள் ஏந்தியுள்ள கடைசிக் கவசம் நன்றி”, “விசுவாசம்’’ என்ற சொற்கள்தாம்!

திராவிட இயக்கம் இல்லையேல் - பெரியார் இல்லையேல், பார்ப்பனரல்லாத தமிழர்கள் கல்வி கற்றிருக்க முடியாது; ஆடு மாடு மேய்த்துக் கொண்டு தான் இருந்திருப்பர்; உயர் பதவிகளுக்குப் போயிருக்க முடியாது; இட ஒதுக்கீடு, சுயமரியாதைத் திருமணச் சட்டம், பெண்ணுரிமை, பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு போன்றவை திராவிட இயக்கத்தால் கிடைத்த மாபெரும் சமூகப் பலன்கள். இவற்றையெல்லாம் மறந்துவிட்டு, திராவிட இயக்கத்தையும் பெரியாரையும் விமர்சிப்பது - நன்றி கொன்ற செயல் என்கின்றனர் திராவிடவாதிகள்!

மேற்கண்ட திராவிடச் சாதனைகள் பற்றி பின்னர் பார்ப்போம். முதலில் கடந்து போன சமூக வரலாற்றையும், நடந்து கொண்டிருக்கும் சமூக இயங்கு திசையையும் பற்றித் திறனாய்வு செய்யும்போது, நன்றியுணர்ச்சி விசுவாசம் என்பவையும், வெறுப்புணர்வும் குறுக்கிடக்கூடாது. காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருளை ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே’’ என்றனர் நம் முன்னோர். எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவுஎன்று நம் பேராசான் திருவள்ளுவப் பெருந்தகை வழிகாட்டியுள்ளார்.

மதிப்பீடு செய்யும் போது முதுகு வளைந்து, விசுவாசம்காட்டி ஒரு பொருளை ஆய்வு செய்யக் கூடாது. அதேவேளை முன்பகை நோக்கோடு, வெறுப்புணர்ச்சி கொண்டு ஆய்வு செய்யவும் கூடாது.

திராவிடம் - ஆரியக் கைச்சரக்கு

திராவிடம், திராவிடர் என்பவை ஆரியக்கைச் சரக்குகள் என்பதாலும், தமிழ்நாடு - தமிழர் என்ற இயற்கையான - வரலாற்று வழிப்பட்ட இனப் பெயரையும் நாட்டுப் பெயரையும் புறக்கணிக்கும் கொச்சைப் பெயர்கள் என்பதாலும், அவற்றை நாம் முற்றிலும் புறக்கணிக்கிறோம். இந்தத் தலைமுறைத் தமிழர்கள் மட்டுமின்றி - சங்க காலத்திலிருந்து 17-ஆம் நூற்றாண்டு வரை தமிழர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக் கொண்டதில்லை. தெலுங்கு நாயக்க மன்னர்கள் ஆட்சி தமிழ்நாட்டில் உச்சத்தில் இருந்த போது, ஆரியம், சமற்கிருதம், பார்ப்பனியம் ஆகியவை உச்சத்தில் இருந்து ஆட்சி செய்தன.

அப்போதுதான் திராவிடர், சூத்திரர்’’ என்ற ஆரியச் சொற்கள் - சமற்கிருதச் சொற்கள் அடிமைப் பட்ட தமிழர்களிடையே பரவலாகப் புழக்கத்திற்கு வந்தன.

தமிழர்களில் ஒரு சாரார் தங்களைச் சூத்திரர்கள் என்று சொல்லிக் கொண்டனர்; தமிழரில் உயர்சாதி என்று வகைப்படுத்தப்பட்ட பிரிவினரில் சிலர் தங்களைச் சற்சூத்திரர் என்று சொல்லிக் கொண்டனர். அவ்வாறே தமிழர்கள் தங்களைத் திராவிடர்கள் என்றும் கூறிக் கொண்டனர்.

சூத்திரர்’’ என்ற சொல் தூக்கி எறியப்பட வேண்டிய சொல் என்பதுபோல், “திராவிடர்’’ என்ற சொல்லும் தூக்கி எறியப்பட வேண்டிய சொல்!

பெரியாரின் பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை போன்ற கருத்துகளை வரவேற்றும், அவரது தமிழின மறுப்பு, திராவிடத் திணிப்பு, தமிழ்மொழி எதிர்ப்பு, ஆங்கிலத் திணிப்பு போன்ற தவறான கருத்துகளை மறுத்தும் நாம் திறனாய்வு செய்கிறோம். நுகர்வு வாதத்தில் மையம் கொண்டுள்ள பெரியாரது வாழ்வியல் பார்வையையும் திறனாய்வு செய்கிறோம்.

மேற்கண்ட கூறுகளில் நாம் முன்வைக்கும் பெரியாரியல் மறுப்புகளுக்கும் பெரியாரியல் குறித்த திறனாய்வுகளுக்கும் தக்க விடையளிக்க முடியாத திராவிடவாதிகள், ”, பெரியாரையா குறை சொல்கிறாய், பெரியார் இல்லையேல் உன் பரம்பரை கோவணம் கூட கட்டி இருக்காது, அம்மணமாய்த் திரிந்து ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும்என்ற பாணியில் நம்மைச் சாடுகின்றனர்.

தமிழினத்தை மறுக்காமல் - தமிழ்மொழியைக் காட்டு மிராண்டி மொழி, தமிழ்ச்சனியனை விட்டொழியுங்கள் என்று வசைபாடாமல், தமிழன் என்று சொல்லாதே, திராவிடன் என்று சொல் எனக் குறுக்குச்சால் ஓட்டாமல், பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்பு - சாதி ஒழிப்பு - பெண்ணுரிமை போன்ற முற்போக்குக் கருத்துகளைப் பெரியாரால் பேசியிருக்க முடியாதா? பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள் தமிழர்கள்தானே தவிர, தெலுங்கர்களோ, கன்னடர்களோ, மலையாளிகளோ அல்லவே!

பொருத்தப்படாத - காலாவதி ஆகிவிட்ட பழைய வரலாற்றை மாற்றிப் பொருத்தமான புதிய வரலாற்றை உருவாக்கிடப் போராடும் போது, பழைய வரலாற்றில் கிடைத்த சில முன்னேற்றங்களுக்குப் பல்லாண்டு பாடிக் கொண்டிருந்தால் புதிய வரலாறு படைக்க முடியுமா?

வர்ண - சாதி அடிப்படையிலான குருகுலக் கல்விமுறை கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில், அனைவர்க்குமான பொதுப்பள்ளிகளை- கல்லூரிகளை பட்டணம் தொடங்கி, பட்டிக்காடுவரை திறந்தது வெள்ளையராட்சி. காவிரியில் கல்லணை, மேட்டூர் அணை, மேலணை, கொள்ளிடத்தில் கீழணை, தென் மாவட்டங்களுக்கு முல்லைப் பெரியாறு அணை எனப் பல அணைகளைக் கட்டி, வேளாண்பரப்பை விரிவுபடுத்தியது வெள்ளையராட்சி; காடு மேடெல்லாம் தண்டவாளம் போட்டு, சாதி வேறுபாடின்றி அனைவரும் பயணம் செய்ய தொடர்வண்டி வசதிதந்தது வெள்ளையராட்சி!

அந்த வெள்ளையராட்சிக்கு நன்றியும் விசுவாசமும் காட்டுவதையே வாழ்வியலாகக் கொண்டிருந்தால், விடுதலைப் போராட்டம் நடந்திருக்குமா? அயல் இனத்தாரான வெள்ளையரின் அடிமைகளாக வாழ்ந்த நிலை முடிவுக்கு வந்திருக்குமா?

(பெரியார் வெள்ளையராட்சியைக் கடைசி வரை ஆதரித்தவர். விடுதலை நாளை துக்கநாள் என்றார். அறிஞர் அண்ணா விடுதலை நாள், இன்ப நாள் என்றார். இருவரும் தி.க.வில் இருந்தனர்).

விடுதலைப் போராட்டத்தில் தலைமை ஆற்றலாய் விளங்கியது காங்கிரசுக் கட்சி - அதனிடம் அதிகாரத்தைக் கொடுத்துவிட்டு விடை பெற்றான் வெள்ளையன். தமிழ் நாட்டைப் பொறுத்தவரை காங்கிரசு ஆட்சியில் - குறிப்பாகக் காமராசர் ஆட்சியில், ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப் பட்டன. ஏழை மாணவர்களுக்கு பகல் உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆவடி, திருச்சி, நெய்வேலி எனப் புதிய புதிய தொழிற்சாலைகள் தொடங்கப் பட்டு இலட்சக்கணக்கானோர் புதிய புதிய வேலைகளுக்குப் போயினர். பவானி சாகர் அணை, வைகை அணை எனப் பற்பல நீர்த் தேக்கங்கள் கட்டப்பட்டன.

வெள்ளையனிடமிருந்து அதிகாரத்தைப் பெற்ற காங்கிரசு அனைவர்க்கும் வாக்குரிமை அளித்தது. வரம்புக்குட்பட்டதாக இருந்தாலும் பேச்சுரிமை, எழுத்துரிமை வழங்கியது.

இவற்றிற்கெல்லாம் காங்கிரசுக்கு கடைசிவரை நன்றி விசுவாசம் காட்டியிருந்தால், காங்கிரசைத் தோற்கடிக்கத் தி.மு.க. போராடியிருக்க முடியுமா? “காகிதப் பூ மணக்காது; காங்கிரசு சோசலிசம் இனிக்காது’’ என்று அண்ணா முழங்கியிருக்க முடியுமா?

(பெரியார் 1954 முதல் 1967-இல் தி.மு.க. காங்கிரசைத் தோற்கடிக்கும் வரை காங்கிரசை ஆதரித்தே தேர்தல் பரப்புரைகள் செய்தார். தி.மு.க.வை ஒழித்திடப் படாதபாடு பட்டார்).

சமூக இயங்கியல்

பெரியாரின் வெள்ளையராட்சி ஆதரவோ, காங்கிரசாட்சி ஆதரவோ மக்களிடம் எடுபடவில்லை. தன்னைப் புதுப்பித்துக் கொண்ட வரலாறு, வெள்ளையராட்சியையும் விரட்டியது; காங்கிரசையும் வீழ்த்தியது!

ஒரு சமூகம், அதன் தாயகம், அதன் இறையாண்மை, அதன் ஆட்சிமுறை - சமூக முரண்பாடுகள், பொருளியல் முரண்பாடுகள் என்பவற்றை சில பள்ளிக் கூடங்கள், சில அணைக்கட்டுகள் கட்டுவதன் மூலம், தண்டவாளங்கள் போடுவதன் மூலம், சில தொழிற்சாலைகள் கட்டுவதன் மூலம் தீர்த்துவிட முடியாது. இனம், சமூகம், மொழி, தாய்நாடு, இறையாண்மை, பொருளியல் - சமூகவியல் வாழ்வு என்பவை மிகவும் பெரியவை. அவைதாம் வரலாற்றின் போக்கைத் தீர்மானிக்கின்றன. நன்றி விசுவாசக் கூப்பாடுகள் வரலாற்றின் போக்கைத் தீர்மானிப்பதில்லை.

இனி மேலாவது சமூக இயங்கு ஆற்றலை முடக்கிடும் வகையில் நன்றி - விசுவாசம்’’ என்ற பாசச்சொற்களை திராவிடவாதிகள் பயன்படுத்தாமல் தருக்கத்தைத் தருக்கமாக எதிர் கொள்ள வேண்டும்; சித்தாந்தத்தை சித்தாந்தத்தின் மூலம் எதிர்கொள்ள வேண்டும்!

குருச்சேத்திரப் போரில் குந்தியை அனுப்பி, பாசச்சொற்கள் பேச வைத்து, கர்ணணை ஏமாற்றிக் கொன்றது போல், தமிழ்த் தேசிய வாதத்தின் முன்னால், “நன்றி -- விசுவாசம்’’ என்ற பாசச் சொற்களை வீசாதீர்கள்! தருக்கமும் ஒரு போர்தான்; கருவி ஏந்தாத போர். இப்போரில் தமிழரின் போர் அறம் காத்துப் போர் புரிவோம்!

நீதிக்கட்சி - திராவிட இயக்கமா?

திராவிட இயக்கம் இல்லையேல் -- பெரியார் இல்லையேல் இட ஒதுக்கீடு தமிழர்களுக்குக்கிடைத் திருக்காது என்று திராவிடவாதிகள் பேசுகிறார்கள். இந்தியத் துணைக் கண்டத்தில் - தமிழ்நாடு உட்பட இட ஒதுக்கீடு செயல்படுத்தப்பட்ட வரலாற்றைப் பார்த்தால் - இட ஒதுக்கீட்டிற்கும் திராவிடத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பது தெளிவாகும்.

நீதிக்கட்சித் தலைவர்கள் இட ஒதுக்கீடு கோரியவர்கள்; அவர்களுக்கு சென்னைப் பெரு மாநில ஆட்சி அதிகாரம் கிடைத்த போது இட ஒதுக்கீடு முறையைக் கொண்டு வந்தார்கள். இங்கே எழும் கேள்வி, நீதிக்கட்சிக்கும் - திராவிட சித்தாந்தத்திற்கும் ஏதேனும் தொடர் புண்டா? இல்லை; இல்லை!
நீதிக்கட்சித் தலைவர்கள் திராவிடர் - திராவிட நாடு - திராவிட சித்தாந்தம் என்ற எதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. பெரியார் கூற்றே இதற்குச் சான்று:

1944ஆம் ஆண்டு சூன் மாதம் 17ஆம் நாளிட்ட குடியரசு ஏட்டில் பெரியார் எழுதுகிறார்:

தென்னிந்தியப் பெருங்குடி மக்களுக்கு இலட்சியச் சொல் ஒன்று இல்லாமல் இருப்பது பெருங்கேடு. இந்தக் காரணத்தாலேயும் (பார்ப்பனர்) அல்லாதார்’’ என்ற பட்டம் நமக்குக் கூடாது என்பதாலேயும், நாமெல்லாரும் ஒரு கூட்டிற்குள் வர வேண்டும் என்பதாலேயும் ஒரு குறிச்சொல் தேவை. மிகமிகத் தேவை. இதைப் பல நாட்களாகவே நான் கூறி வருகிறேன்’’ - ஈ.வெ.ரா. சிந்தனைகள், தொகுதி - 1.

அந்தக் காலத்தில் இந்தக் கட்சி எந்த மக்களின் நல்வாழ்விற்காக ஏற்பட்டதோ, அந்த மக்களுக்குப் பெயரென்ன என்ற பிரச்சினை எழுந்தது. ஆனால், “திராவிடர்என்ற பெயருக்கு ஏகோபித்த ஆதரவு கிடைக்காதக் காரணத்தால், பெரிதும் ஆந்திரர் ஒப்புக் கொள்ளாததால், “தென்னிந்தியர்என்று ஏற்படுத்திக் கொண்டார்கள்.

பார்ப்பனரல்லாதார் என்று கூறிக் கொள்ளும் ஜஸ்டிஸ் கட்சிக் காரர்கள் எந்த வகையில் பார்ப்பனரிலிருந்து வேறுபடுகின்றனர்? நடை, உடை, பாவனைகளில், மதத் துறையில், வேஷத்தில் பார்ப்பானை விட இரண்டு மடங்காக அல்லவா இருக்கின்றார்கள்! இந்தப் பார்ப்பனரல்லாதார் வீட்டுக் கலியாணம், கருமாதி, சாந்தி முகூர்த்தம், திவசம், பூசை எல்லாம் பார்ப்பான் இல்லா விட்டால் ஆகாது! உத்தி யோகத்தில், தேர்தலில் மட்டும் பார்ப்பானுடன் போட்டி போட வேண்டும் என்றால் யார் ஒப்புக் கொள்வார்கள்?’’.

பெரியார், கும்பகோணம் சொற்பொழிவு, 26, 27.11.1944, குடியரசு இதழ், 09.12.1944, ஈ.வெ.ரா. சிந்தனைகள் (வே. ஆனைமுத்து தொகுப்பு) பாகம் - 1.

“1917ஆம் ஆண்டிலிருந்து 1943 ஆம் ஆண்டு முடிய 26 ஆண்டுகள் மறைந்தன. காலஞ்சென்ற தலைவர்கள், ஆதியில் திராவிடர் கட்சி’’ என்ற பெயரைக் கொள்வதில் அபிப்பிராயபேதம் கொண்டிருந்தார்கள். இந்தத் திராவிடர் கழகத்தின் அங்கத்தினர்களாக இருக்கும் தேவாங்கர், தங்களைப் பிராமணர்களென்றே கூறிக் கொண்டிருந்தனர். மேலும், ஆந்திர ஜமீன்தார்கள் தங்களை ஆரியர்கள் என்றே கருதி வந்தார்கள். காலஞ்சென்ற உறுதியான தலைவர் பனகல் அரசருக்கே பூணூலும் உச்சிக் குடுமியும் இருந்தன. அவர் பெரிய சமற்கிருதப் பண்டிதர்.

ஸ்ரீரங்கத்தில் வடமொழியில் வாசித்தளிக்கப்பட்ட வரவேற்புக்கு, வடமொழியிலேயே பனகல் அரசர் பதிலளித்திருக்கிறார். இந்தி எதிர்ப்புக் காலத்தில் ஆரியர் - திராவிடர் பிரச்சினை நம் கட்சியைப் பலமாக ஆக்கிரமித்தபோது, வெங்கடகிரிராஜா அவர்கள் அதற்காகவே கட்சியை விட்டு விலகினார்’’.

-பெரியார், சேலம் செவ்வாய்ப்பேட்டை சொற்பொழிவு, 16.1944, குடிஅரசு 29.01.1944 ஈ.வெ.ரா. சிந்தனைகள், தொகுப்பு 1 - பக்கம் 550.

நீதிக்கட்சித் தலைவர்கள் திராவிடத்தை ஏற்கவில்லை என்று பெரியாரே வேதனைப்படுகிறார்கள். திராவிடத்தை மறுத்த நீதிக் கட்சியை திராவிட இயக்கத்தின் தாயாக இன்றையத் திராவிடவாதிகள் திரித்துக் கூறிக் கொள்வதின் உள்நோக்கம் என்ன?

மேலே எடுத்துக் காட்டப்பட்ட பெரியார் கூற்றின்படி பார்த்தால், நீதிக்கட்சித் தலைவர்களுக்குப் பார்ப்பனிய எதிர்ப்பு, ஆரிய எதிர்ப்பு, சமற்கிருத ஆதிக்க எதிர்ப்பு, இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்ற கொள்கைகளேகிடையாது. பதவியில் பார்ப்பனர்களோடு போட்டிபோட்டு, பார்ப்பனரல்லாதார்க்கு உரிய பங்கு வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு, நீதிக்கட்சித் தலைவர்கள் தங்கள் செயல்பாட்டை வரையறுத்துக் கொண்டார்கள்.

இந்த நீதிக்கட்சிதான் தி.க. - தி.மு.க.வின் தாய்க்கட்சி! இந்த நீதிக்கட்சி தொடங்கப்பட்ட 1916 ஆம் ஆண்டுதான் திராவிட இயக்கம் தொடங்கிய ஆண்டு என்கின்றனர் திராவிடவாதிகள்.

தி.க.வும், தி.மு.க.வும் சொந்தமாக - மண்ணில் ஆழமாக வேர்விட்டு வளர்ந்த மரமல்ல. மற்ற மரங்களில் படர்ந்து வளர்ந்த கொடி! தான்படர ஒரு கொழுகொம்பைத் தேடி அலைவது அக்கழகங்களின் பழக்கம்! அதனால்தான் சித்தாந்த வழிப்பட்ட பார்ப்பனிய எதிர்ப்போ, ஆரிய எதிர்ப்போ, சமற்கிருத எதிர்ப்போ, இந்தி எதிர்ப்போ - இல்லாததுடன் தமிழின ஏற்பும் இல்லாத நீதிக்கட்சித் தலைவர்களை - பனகல் அரசர் போன்ற ஆந்திர சமஸ்தானாதிபதிகளைத் தங்களின் மூலத் தலைவர்கள் என்று கூறிக் கொள்கின்றனர். அந்த அடிப்படையில் திராவிட இயக்க நூற்றாண்டு விழாவும் கொண்டாடுகின்றன.

நீதிக்கட்சி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், சிறுபான்மை மத மக்களுக்கும், இட ஒதுக்கீடு வழங்க முயன்றதை - தன்னால் இயன்ற அளவு இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தியதைப் பாராட்டலாம். அதில் நமக்கு மாறுபாடு இல்லை.

உத்தியோகத்தில் இட ஒதுக்கீடு என்ற ஒன்றை வைத்துக் கொண்டு, இன்றையத் தமிழர்கள் பின்பற்ற வேண்டிய அரசியல், சமூகவியல் கொள்கைகளின் மூலக்கூறுகளை நீதிக்கட்சி கொண்டிருந்தது போல், திராவிடவாதிகள் பேசுவது தவறல்லவா! மேலே காட்டப்பட்ட பெரியாரின் கூற்றே மறுக்கிறது என்பதைத் திராவிடவாதிகள் உணர வேண்டும். தீண்டாமை போன்றவற்றை அக்காலத்தில் காந்தியமும் எதிர்த்தது. நீதிக்கட்சியும் எதிர்த்தது.

அடுத்து, இட ஒதுக்கீடு என்பது, நீதிக்கட்சியின் புதிய கண்டுபிடிப்பு அன்று. வெள்ளையர் ஆட்சியில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு வழங்குவதற்காக - ஆய்வுகள் செய்யப்பட்டன. 1882- இல் ஹண்டர் ஆணையம் (Hunter Commission) அமைக்கப்பட்டது. 1882-இல் நீதிக்கட்சி எங்கே இருந்தது? பெரியார் 1879 செப்டம்பர் 17-இல் பிறந்தவர்!

மராட்டியத்தில் கோலாப்பூர் பகுதி சிற்றரசராக விளங்கிய சாகு மகாராஜா 1902-இல் கோலாப்பூர் சமஸ்தானத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி ஆணையிட்டார்.

பிற்காலத்தில் நீதிக்கட்சியினர், இட ஒதுக்கீட்டுக் கொள்கையை செயல்படுத்தியதும், பெரியார் இட ஒதுக்கீடு முறையை வலுவாக ஆதரித்ததும் பாராட்டிற்குரிய செயல்கள். அதேவேளை இட ஒதுக்கீடுஎன்ற கோட்பாட்டின் கண்டுபிடிப்பாளர்களே - அதன் நிறுவனர்களே நீதிக்கட்சித் தலைவர்களும் பெரியாரும்தாம் என்று பேசுவது பொருந்தாக்காமம்!

நீதிக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான டாக்டர் நடேசனார் என்ற தமிழர் பார்ப்பனரல்லாத மக்களின் இட ஒதுக்கீட்டிற்காக அரும்பாடுபட்டவர்! நீதிக்கட்சித் தொடங்குவதற்கு முன்பே இட ஒதுக்கீட்டிற்காக இயங்கியவர்!

யாருடைய உழைப்பையும் பங்களிப்பையும் தமிழ்த் தேசியம் புறக்கணிக்கவில்லை. அது தமிழர் அறமும் இல்லை! அதேவேளை இன்றைய திராவிடவாதிகளின் அரசியல் தேவைகளுக்காக - கடந்த காலத் தலைவர்களுக்கு சகலகலா வல்லக் கதாநாயக வேடம் புனையும் சூழச்சியை ஏற்க முடியாது!

திராவிடம் - திராவிட இனம் என்பதை - ஒரு சித்தாந்தமாக வளர்க்கத் திட்டமிட்டு - அதற்கான செயற்கைப் புனைவுகளைச் செய்தவர் பெரியார் மட்டுமே! பெரியாரைப் பொறுத்தவரை, அவர் விரும்புவதுதான் கொள்கைகளே தவிர, புறநிலை உண்மையாய் உள்ள எந்த அரசியல், சமூகவியல் வரையறுப்புகளையும் அவர் ஏற்க மாட்டார். அன்றாடத் தேவைக் கேற்ப முழக்கங்களை மாற்றிக் கொண்டே இருப்பார்!

1938-இல் தமிழ்நாடு தமிழருக்கே என்பார்! 1944-இல் திராவிட நாடு திராவிடர்க்கே என்பார். மொழிவழி மாநிலமாக தமிழ்நாடு அமைவதற்கான கோரிக்கையை முதலில் எதிர்ப்பார்; பின்னர் அதை ஆதரிப்பார். மீண்டும் 1956-இல் தமிழ்நாடு தமிழர்க்கே என்பார்!

1947 வரை வெள்ளையராட்சியை ஆதரித்தார் பெரியார்! 1952-இல் இராசாசி ஆட்சியைக் கூட ஆதரித்தார். பின்னர் அதை எதிர்த்தார். 1954 முதல் 1967 வரை காங்கிரசை ஆதரித்தார். 1925-இல் காங்கிரசைவிட்டு வெளியேறியபின் காங்கிரசு ஒழிப்பைத் தமது அடிப்படைத் திட்டங்களில் ஒன்றாக வெளியிட்டவர் பெரியார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தி.மு.க.வை அழிக்க 1949 முதல் 1967 வரை, எல்லாப் பரப்புரை முறைகளையும் உத்திகளையும் கையாண்டார் பெரியார். தி.க.வினரை காங்கிரசில் போய் சேரச் சொன்னார். இந்திய ஏகாதிபத்தியக் கட்சியான காங்கிரசு நடுவண் அரசிலும், தமிழ்நாட்டிலும் கோலோச்சியபோது, இரு அரசுகளுக்கும் ஆதரவாக ஏவல் பரப்புரை செய்து வாக்குகள் கேட்ட பெரியார், இவற்றுக்கிடையே தமிழ்நாடு விடுதலை பற்றியும் பேசினார். 1967-இல் தி.மு.க. ஆட்சி அமைத்தபின் தி.மு.க.வை ஆதரித்தார் பெரியார்!

பெரியார் கடைபிடித்த அதே சந்தர்ப்பவாதத்தைப் பின்பற்றி பின்னர், தி.மு.க. காங்கிரசுடன் கூட்டணியில் நடுவண் அரசில் பங்கேற்றது; பின்னர் பா.ச.க. கூட்டணியில் நடுவண் அரசில் பங்கேற்றது. நாளைக்கு நரேந்திர மோடி கூப்பிட்டால் ஓடத் தயாராக உள்ளது. இதுதான் பெரியாரின் அரசியல் பாரம்பரியம் - திராவிடத்தின் அரசியல் பாரம்பரியம்!

சுயமரியாதைத் திருமணம் செல்லும் என்று தி.மு.க. ஆட்சியில் சட்டம் கொண்டு வந்ததாகத் திராவிடவாதிகள் கூறுகின்றனர். சுயமரியாதைத் திருமணச் சட்டம் என்று எந்தச் சட்டமும் இல்லை. இந்துத் திருமணச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து ஒரு தலைவரை வைத்து மாலை மாற்றித் திருமணம் செய்து கொள்வதற்கு வழிவகுத்தது தி.மு.க. ஆட்சி! இச்சட்டத் திருத்தம் இந்துக்களுக்கு மட்டும்தான் பொருந்தும். இது முற்போக்கான - வரவேற்கத்தக்க திருத்தம்தான். ஆனால், இதனை மிகைப்படுத்தி சுயமரியாதைத் திருமணச் சட்டம் என்றும் - எல்லா மதத்தவர்க்கும் பொருந்தும் என்பது போலவும் பேசுவது திராவிடவாதிகளுக்கே உரிய புனைவு ஆற்றலைக் குறிக்கிறது.

திராவிட நாடு படைக்கப் போகிறோம் என்று பந்தா பண்ணியவர்கள் - அந்த இலட்சியத்தைக் குழிதோண்டி புதைத்துவிட்டு, இந்துத் திருமணத் திருத்தச் சட்டத்தைக் காட்டி - தங்களின் இலட்சியத் துரோகத்தை மூடிமறைக்கின்றனர்! மயிலைப் பிடித்துவரப் புறப்பட்டு, மயிலிறகு பொறுக்கி வந்த சாதனைதான்!

1950-இல் இந்தியக் குடியரசுக்கான அரசமைப்புச் சட்டம் செயலுக்கு வந்தது. பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர் நீதி மன்றமும், பின்னர் உச்சநீதி மன்றமும் தீர்ப்பளித்தன. இந்த சமூக அநீதியை எதிர்த்து, பெரியார் போராட்டம் நடத்தினார். தி.மு.க.வும் போராட்டம் நடத்தியது. தமிழ்நாட்டில் காங்கிரசார் உட்பட பெரும்பாலோர் மேற்படித் தீர்ப்புகளை எதிர்த்தனர். மற்ற மாநிலங்களிலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்புக் கிளம்பியது. ஆளும் காங்கிரசுக்குள்ளேயே உச்சநீதி மன்றத் தீர்ப்புக்கு வலுவான எதிர்ப்புக் கிளம்பியது.

இந்தப் பின்னணியில், பிற்படுத்தப்  பட்டோருக்கான இடஒதுக்கீட்டை செல்லத் தக்கதாக்கும் வகையில், அரசமைப்புச் சட்ட திருத்தம் கொண்டுவர காங்கிரசு ஆட்சி முன்வந்தது.

இடஒதுக்கீட்டிற்கு மட்டுமின்றி, புதிய அரசமைப்புச் சட்டத்தில் வேறுபல திருத்தங்களும் புதிய சேர்க்கைகளும் கொண்டுவர தலைமை அமைச்சர் பண்டித நேரு ஒரு கற்றைத் தொகுப்புத் திருத்தங்களை நாடாளுமன்றத்தில் 12.05.1951 அன்று முன்மொழிந்து நிறைவேற்றினார். இடஒதுக்கீட்டை உறுதிப் படுத்த அரசமைப்பு உறுப்பு 15, பேச்சுரிமை மற்றும் வணிக உரிமைகளை வரையறுக்க உறுப்பு 19 மற்றும் பல திருத்தங்கள் ஆகிய வற்றுக்காக உறுப்புகள் 15, 19, 85, 87, 174, 176, 341, 342, 372 ஆகிய அரசமைப்பு உறுப்புகளில் உரியத் திருத்தங்களும், 31A, 31B, 9ஆவது அட்டவணை என்ற புதிய சேர்க்கைகளும் அந்த சட்டத் திருத்தத்தில் இருந்தன. குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத் 18.06.1951 அன்று கையெழுத்திட்டு, இவற்றை செயலுக்குக் கொண்டு வந்தார்.

இத்தனை உண்மைகளையும் மறைத்துவிட்டு, இட ஒதுக்கீட்டுக்கான ஒற்றைத் திருத்தம் மட்டும் பெரியார் போராட்டத்தால் கொண்டுவந்தது போல் திராவிடவாதிகள் சித்தரிக்கின்றனர்.

பெரியார் இல்லையேல் பின் தங்கிக்கிடப்போமா?

1947 ஆகஸ்ட் 15 - இந்திய விடுதலைக்குப் பிறகு, பல மாநிலங்களில் - கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம், போக்குவரத்து, தொழில்துறை என்பவற்றில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அவையெல்லாம் திராவிட இயக்கத்தின் அருங்கொடையால் தமிழ்நாட்டில் மட்டுமே வளர்ந்துள்ளதாகத் திராவிடவாதிகள் வர்ணித்துக் கொள்கிறார்கள். அதுவும் பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழ்நாடு 19-ஆம் நூற்றாண்டு வர்ணாசிரமத்திலிருந்தும், வறுமையிலிருந்தும் மீண்டிருக்காது என்று அச்சுறுத்துகின்றனர்.

பெரியார் பிறக்காத கேரளம், ஆந்திரம், கர்நாடகம் போன்றவற்றிலும் மராட்டியத்திலும் குசராத் போன்றவற்றிலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளை ஒப்பிட்டால், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும் அவற்றை ஒத்தவையே என்று புரிந்து கொள்ளலாம்!

கல்வி கற்றோர் விகிதம் கேரளத்தில் 91.3% ஆந்திரப்பிரதேசம் 90.5% தமிழ்நாடு 85.5% என்றே உள்ளது.

இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் இருப்பதைவிட கேரளத்திலும், கர்நாடகத்திலும் முன்னேறிய நிலையில் உள்ளது. பெரியார் பிறக்காததால் அம்மாநிலங்கள் தமிழ் நாட்டைவிடப் பின்தங்கி விடவில்லை. அம்மாநிலங்கள் பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண்டவையும் அல்ல!

அழிவிலிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்றிய ஒற்றை அவதாரபுருடராகப் பெரியாரையும் தமிழர்களைத் தடுத்தாட்கொண்டு காப்பாற்றிய அரசியல் இரட்சக அமைப்பாக நீதிக்கட்சியையும் காட்டி இன்றைக்கும் மறைமுகத் தமிழ் இன மறுப்பில் - அரசியல் மூடநம்பிக்கை விதைப்பில் திராவிட வாதிகள் ஈடுபடுவது தமிழினத்திற்குச் செய்யும் மாபெரும் துரோகமாகும்!
பெரியாரின் சாரமான இனக் கொள்கை தமிழின மறுப்புக் கொள்கை! அவரது சாரமான மொழிக்கொள்கை, தமிழ் மொழி எதிர்ப்புக் கொள்கை! இவற்றில் கடைசி மூச்சுவரை பெரியார் உறுதியாக இருந்தார். அவருக்கே உரிய சந்தர்ப்பவாதத்தின் அடிப்படையில், “தமிழ்நாடு தமிழருக்கேஎன்ற முழக்கத்தையும் விடுதலைஏட்டில் கடைசிவரை போட்டுக் கொண்டிருந்தார்.

நீதிக்கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் தெலுங்கர்கள் - ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். ஆந்திராவில் கொண்டாடப்படாத நீதிக்கட்சி நூற்றாண்டு விழாவைத் தமிழ்நாட்டில் கொண்டாடுவதன் உள்நோக்கம் என்ன? இனியும் தமிழர்களைத் தமிழ்நாட்டில் இரண்டாந்தரக் குடிமக்களாகவே திராவிடத்தின் பெயரால் வைத்துக் கொள்ள வேணடும் என்ற தொலை நோக்குத் திட்டமா?

நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவர் டி.எம்.நாயர்! அவர் மலையாளி! கேரளத்தில் கொண்டாடப்படாத நீதிக்கட்சி நூற்றாண்டு விழாவைத் தமிழ் நாட்டில் கொண்டாடுவதன் உள்நோக்கம் என்ன?

தமிழ்நாடு தெலுங்கர், மலையாளி, கன்னடர் வேட்டைக்காடாகத் தொடர வேண்டும் என்ற உத்தியா?

தமிழர்களே, விழித்துக் கொள்ளுங்கள்!

(இக்கட்டுரை, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2015 செப்டம்பர் 16-30 இதழில் வெளியானது.)

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

6 comments:

  1. தோழர் மணியரசனின் கட்டுரை மிக அருமையான விளக்கம். உண்மைகள் தெளிவாக்கப்பட்டு உள்ளன. ஆனால் பொியாரை தாண்டி இன்று இரு கழகங்களும் செயலாற்ற முடியாது குறிப்பாக அ.தி.மு.க செலாற்றவே முடியாது. வரும் காலங்களில் தி.மு.க தி.க போனறவை பொியாாின கொள்கைகளை பின்பற்றுவதோடு தமிழர் நலன் சார்ந்த விசயங்களில் முனைப்போடு செலாற்ற வேண்டும.

    ReplyDelete
  2. தமிழை நீச மொழி என்று சொன்ன பார்ப்பனியத்தை எதிர்த்து ஏதாவது கட்டுரை எழுதுங்கள்.

    ReplyDelete
  3. திரு. சூர்யா.. தொடர்ந்து தமிழர் கண்ணோட்டம் வாசியுங்கள். பார்ப்பனியத்தை எதிர்த்தும், அதன் அரச வடிவமாக நிற்கும் இந்தியத்தை எதிர்த்தும் தமிழர் கண்ணோட்டத்தில் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. கீற்று இணையத்தில் அக்கட்டுரைகளை நீங்கள் படிக்கலாம்!

    ReplyDelete
  4. அருமை அருமை..

    ReplyDelete
  5. தெளிவான தகவல்கள்

    ReplyDelete
  6. பெரியாரின் பேச்சுக்கள், செயல்பாடுகள், அரசியல் இயக்கங்கள் இவற்றின் தொடர் இயக்கவியல் செயல்பாடுகளே பெரியாரியம் என்ற சமூக இயங்கியல் தத்துவத்தை தந்துள்ளது...
    இதன் பொருள் எந்தவிதமான ஆதிக்க நிலைப்பாடுகளை அது ஆண் பெண் பாலின ஒடுக்குமுறையிலிருந்து வர்ண வர்க்க என்ற எந்த ஒடுக்குமுறைக்கும் எதிரான தத்துவம்...

    முதல் சட்ட திருத்தம் 1951 என்றாலும் இதில் இட ஒதுக்கீடு தொடர்புடன், ஏனைய சமஸ்தான திருத்தங்களும் இதனுடன் அமைந்திருந்தாலும் மக்கள் போராட்டத்தால் பெரியார் தலைமை ஏற்பால் நடந்த முதல் திருத்தம் என்றுதான் திராவிட இயக்கங்கள் கொண்டாடும்..

    ஆனால் பெரியார் மேல் இவ்வளவு வெறுப்பு வெறி பெ.ம அவர்களுக்கு இருப்பதை அவரின் மேற்கண்ட கட்டுரை தெளிவுபடுத்துகிறது....

    பெ.ம . ஒவ்வொரு கட்டமும் அவர் பேசி வந்திருப்பதும், குறிப்பாக முள்ளிவாய்க்கால் நினைவு கூடத்தை நடராசன் கேட்டுக்கொண்டதற்கிணங்க நடத்திய பிறகு, அவருடைய தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சி தனது அடிப்படையான பொதுவுடமை என்பதை பெயரளவில் கூட ஏற்க மறுத்து கைவிட்ட பிறகு.... பெரியார் அங்கு இப்படிப் பேசினார்... இங்கு இப்படிப் பேசினார்... என சமூகத்திற்கு பொருந்தாத, தேவைப்படாத அதேநேரம் பெரியாரியம் திராவிடம் போன்ற கருத்துக்கள் அழிக்கப்படாமல் தமிழ் தேசியம் என்பது உதிக்காது என்ற சூழ்ச்சியான உத்தி ஒன்றையே கடைபிடிப்பது போன்றதாகும்...

    இது சிலர் அர்த்தமுள்ள இந்துமதம் என்ற கண்ணதாசன் பேச்சை உச்சி முகர் வதற்கு இணையானது

    பெரியாரியல் தமிழக மக்களிடம் மட்டுமின்றி உலக மானிட வர்க்கத்திற்கும் பயன்படக்கூடியது...

    முதலில் தான் சொல்லும் ஒன்றைக்கூட நீங்கள் உங்கள் அறிவை பயன்படுத்தி சரியா என தீர்மானித்து பின் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்ன பெரியார், மாறி மாறி பேசினார் என்றாலும்கூட அது அவர் நலனுக்காக இருக்காது... ஆனால் இங்கு பேசுபவர்கள் அனைவருமே அவரவர் நலனுக்காகத்தான் பேசுகின்றனர் என்பதுபோல் கட்டுரைகள் அமையக்கூடாது என்பதையே பதிவு செய்கிறேன்

    ReplyDelete

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.