ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

இனப்படுகொலைக்கு துணை போன இந்தியக் கொடி எரிப்பு வழக்கில் த.தே.பொ.க. தோழர் தமிழ்ச்சமரன் விடுதலை!

இனப்படுகொலைக்கு துணை போன இந்தியக் கொடி எரிப்பு வழக்கில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர் தமிழ்ச்சமரன் விடுதலை!
 
2008 - 2009 ஆம் ஆண்டுகளில், சிங்கள இனவெறி அரசுடன் இணைந்து தமிழீழத்தில் தமிழினப் படுகொலையில் ஈடுபட்ட இந்திய அரசைக் கண்டிக்கும் வகையில், இந்தியக் கொடியை எரித்துக் கைதான, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சென்னை மாநகரச் செயலாளர் தோழர் நாத்திகன் கேசவன் என்கிற தமிழ்ச்சமரன் அவர்கள், இன்று(04.02.2014) அவ்வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

தமிழீழ இனப்படுகொலைப் போரில் ஈடுபட்ட இந்திய அரசைக் கண்டிக்கும் வகையில், தமிழகத் தலைநகர் சென்னை அண்ணா சாலையில் 07.01.2009 அன்று காலை, தன்னந்தனியாகச் சென்று இந்திய அரசுக் கொடியை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர் தமிழ்ச்சமரன் அவர்களை, திருவல்லிக்கேணி உதவிக்காவல் ஆணையர் சோமசுந்தரம், தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது, தேசியக் கொடி அவமதிக்கப்படுவதை தடுக்கும் சட்டம் 1971 பிரிவு 2 மற்றும் இ.த.ச. பிரிவு 188-ன் படி வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சென்னை புழல் நடுவண் சிறையில் அடைத்தனர்.

16 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு பிணையில் விடுதலையான தோழர் தமிழ்ச்சமரன்,சென்னை எழும்பூர் 13 ஆவது பெருநகரக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி வந்தார். வழக்குரைஞர்கள் பா.இரவிக்குமார் மற்றும் டி மகாராஜன் ஆகியோர் தோழர் தமிழ்ச்சமரனுக்கு ஆதரவாடி நேர்நின்று வழக்கை நடத்தினர். வழக்கு விசாரணையின் போது, தமிழீழ இனப்படுகொலையில் இந்தியாவின் பங்கைக் கண்டிக்கும் வகையில் இந்தியக் கொடியை தாமே எரித்ததாக நீதிபதியிடம் தோழர் தமிழ்ச்சமரன் தெரிவித்தார்.

இவ்வழக்கின் தீர்ப்பை இன்று மதியம் அறிவித்த நீதிபதி திரு எஸ். சிவசுப்பிரமணியன், இந்தியக் கொடியை எரித்து தமது எதிர்ப்பை தெரிவித்த தோழர் தமிழ்ச்சமரனுக்கு இரண்டு வார காலம் கடுங்காவல் தண்டனை விதித்தபோதிலும், ஏற்கெனவே அவர் சிறையிலிருந்த காலத்தை தண்டனையாகக் கருத்தில் கொண்டு கு.வி.மு.ச. பிரிவு 284(1) -ன் கீழ் நீதிமன்றம் அவரை விடுதலை செய்வதாக அறிவித்தார்.

விடுதலையானத் தோழர் தமிழ்ச்சமரன் அவர்களை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன், தலைமையில் திரளான தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தோழர்களும் தமிழக இளைஞர் முன்னணித் தோழர்களும் துண்டணிவித்து, உற்சாகத்துடன் வரவேற்றனர். தோழருக்கு ஆதரவாக வழக்காடிய வழக்கறிஞர்கள் பா.இரவிக்குமார் மற்றும் டி.மகாராஜன் ஆகியோருக்கு துண்டணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

இந்திய அரசுக்கு தமது எதிர்ப்பைப் பதிவு செய்து களமாடிய தோழர் தமிழ்ச்சமரன் அவர்களை நாமும் வாழ்த்துவோம்! (பேச: 9884378328)








(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : பாலா)

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.