ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“தமிழ் மக்களை குடிமக்கள் என்ற நிலையிலிருந்து பயனாளிகளாக தாழ்த்தியதுதான் தி.மு.க. – அ.தி.மு.க. அரசியல் சாதனை!” - தோழர் பெ. மணியரசன் பேச்சு!

தமிழ் மக்களை குடிமக்கள் என்ற நிலையிலிருந்து பயனாளிகளாக தாழ்த்தியதுதான் தி.மு.. – .தி.மு.. அரசியல் சாதனை!”

பூம்புகார் காவிரிப் போராட்ட அறிவிப்புக் கூட்டத்தில் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர்
தோழர் பெ. மணியரசன் பேச்சு!

கர்நாடகம் காவிரியில் புதிய அணைகட்டாமல் தடை செய்!”, “தமிழ்நாட்டுக் காவிரியிலும், தென்பெண்ணையிலும் கர்நாடகம் கழிவு நீரை விடாமல் தடை செய்!”, “காவிரி மேலாண்மை வாரியம் - ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை உடனே அமை!ஆகிய மூன்று முதன்மைக் கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 17.07.2015 அன்று முதல் நேற்று வரை - மூன்று நாட்களாக, காவிரி உரிமை மீட்புக்குழு நடத்திய, “காவிரிக் காப்பு ஊர்திப் பரப்புரைநேற்று (20.07.2015) மாலை, பூம்புகாரில் நிறைவுற்றது. 

கடந்த 17.07.2015 வெள்ளிக்கிழமை அன்று முசிறி, பேராவூரணி, வேதாரணியம், காட்டுமன்னார்குடி வீராணம் ஏரிக்கரை ஆகிய இடங்களிலிருந்து தனித்தனியே நான்கு அணிகள் ஊர்திப்பயணமாகப் புறப்பட்டு - அதனதன் வழியே பல ஊர்களில் பரப்புரை செய்து, நேற்று (19.07.2015) பூம்புகாரில் வந்து ஒன்று சேர்ந்தனர். அங்கு, பல்லாயிரக்கணக்கான உழவர்களும், தமிழின உணர்வாளர்களும் ஒன்று கூடி நடைபெற்ற, போராட்ட அறிவிப்புக் கூட்டத்தில் பல்வேறு இயக்கங்களின் முக்கியத் தலைவர்கள் உரையாற்றினர். 

கூட்டத்திற்கு, விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திரு. வலிவலம் மு. சேரன் தலைமையேற்றார். தமிழக உழவர் முன்னணி திரு. சோ. இராசராசன் வரவேற்புரையாற்றினார். 

தமிழர் தேசிய முன்னணித் தலைவர் திரு. பழ. நெடுமாறன், தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் பேராசிரியர் எஸ்.ஏ.சின்னசாமி, தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழர் நீதிக்கட்சித் தலைவர் திரு. சு.பா. இளவரசன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் திரு. காவிரி தனபாலன், மனித நேய மக்கள் கட்சித் தலைமை அமைப்பாளர் திரு. மன்னை செல்லச்சாமி, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன், விவசாயிகள் சங்கக்கூட்டமைப்புப் பொதுச் செயலாளர் திரு. ஆறுபாதி ப. கல்யாணம், கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் திரு. பி. விநாயகமூர்த்தி, இந்திய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. ச. சிமியோன் சேவியர்ராஜ், தமிழக உழவர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் திரு. தங்க கென்னடி, தஞ்சை மாவட்ட விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் திரு. சுவாமிமலை விமலநாதன், தந்தை பெரியார் தி.க. நாகை மாவட்டச் செயலாளர் தோழர் ப. வ. பெரியார் செல்வம், வேதாரணியம் வட்டார விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. டி.வி.ராஜன் உள்ளிட்டோர் உரைவீச்சு நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில், போராட்ட அறிவிப்பு உரையாற்றிய காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் பேசியதாவது:


மேக்கேத்தாட்டு அணையை எதிர்த்த போராட்டம்

காவிரி தொடங்குமிடத்தில் கர்நாடகம் புதிய அணைகள் கட்டுவதைத் தடுப்பதற்காக, மேக்கேத்தாட்டுப் பகுதிக்கே சென்று முற்றுகையிட காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நாம் கடந்த மார்ச் மாதம் 7ஆம் நாள், தேன்கனிக்கோட்டையிலிருந்து பேரணியாகப் புறப்பட்டோம். 5000 பேர் உழவர்களும், தமிழ் மக்களும் திரண்டனர்.

நம்மை தடுத்துக் காவல்துறையினர் கைது செய்தனர். இன்று, காவிரி கடலோடு கலக்கும் காவிரிப்பூம்பட்டினத்தில்பூம்புகாரில், அடுத்த போராட்ட அறிவிப்புக்காக கூடியுள்ளோம்.

எனக்கு முன் பேசிய, பேராசிரியர் . செயராமன் அவர்கள், நாம் காவிரியை இழந்து விட்டால், அகதிகளாக அருணாச்சலப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களுக்குத்தான் ஒட வேண்டும் என்று கூறினார்.

நாம் இன்று கூடியிருக்கும் இந்த பூம்புகார் மண்ணைப் பற்றி, இளங்கோவடிகள் சொல்லும்போது, “பொதியில் ஆயினும், இமயம் ஆயினும் / பதி எழு அறியாப் பழங் குடி கெழீஇய / பொது அறு சிறப்பின் புகார்என்றார்.

பொதிய மலை தோன்றிய காலத்திலிருந்து - இமய மலை தோன்றிய காலத்திலிருந்து புகழோடு விளங்குகின்ற மாநகரம், புகார் - பூம்புகார்; இந்த மண்ணில், வாழும் மக்கள் இங்கே பிழைப்பிற்கு வழியில்லாமல் பிற ஊர்களுக்கு போகக்கூடிய தேவையற்றவர்கள். அந்தப் பழக்கம் அவர்களுக்குக் கிடையாது என்று இளங்கோவடிகள் கூறுகிறார். நாம் புதிய வரலாறு படைப்பதற்காக, பழைய வரலாறு கொண்ட பூம்புகார் மண்ணில் கூடியுள்ளோம்.

2500 ஆண்டுகளுக்கு முன், கரிகாற்சோழனின் தலைநகரம் இந்த மண்! இமயம் வரை படையெடுத்துச் சென்று இமயத்தில் புலிக்கொடி ஏற்றி திபெத்திற்கும், சீனாவிற்கும் வணிகப் பாதையை உருவாக்கியவன் கரிகாலன். இன்றைக்கும், அது சோழன் கனவாய் (Chola pass) என்று அழைக்கப்படுகிறது.

கரிகாலன் சென்றது, நாடு பிடிப்பதற்காக அல்ல! காவிரிப் பூம்பட்டினத்து வணிகர்களுக்கு பாதுகாப்பான பாதையினை பல நாடுகளுக்கு அமைத்துக் கொடுப்பதற்காக!

வெண்ணி என்ற இடத்தில் நடந்த போரில் வெற்றி பெற்ற கரிகாலன், அந்த வெற்றியை மக்களுக்கு அர்ப்பணிக்கும் வகையில், கல்லணையில் காவிரியிலிருந்து புதிய ஆறு ஒன்றிணை வெட்டி, அதற்கு வெண்ணாறு என்று பெயரிட்டான். இன்று பல இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு, அந்த வெண்ணாறு பாசன நீர் தருகிறது. நம்முடைய தமிழ் மன்னர்கள், இன்றைய  முதலமைச்சர்கள் போல ஒய்யாரமாக வாழ்ந்திடவில்லை.

ஒன்று போர் களத்திலே விழுப்புண் பட்டிருப்பார்கள் அல்லது மக்கள் பணியிலே ஈடுபட்டிருப்பார்கள். இராசராசச்சோழன் காவிரியில் இன்று பெட்டவாய்த்தலை என்ற ஊரில் புதிதாக ஒரு ஆறு வெட்டினான். அந்த ஆற்றுக்கு, தனக்கு மற்றவர்கள் வழங்கிய சிறப்புப் பெயர்களில் ஒன்றான, உய்யகொண்டான் என்ற பெயரைச் சூட்டினான்.

வெட்டுவாய்த்தலை என்று வழங்கிய அந்த பெயர்தான், பிற்காலத்தில் பெட்டவாய்த்தலை என மாறிற்று என்கிறார்கள் தமிழறிஞர்கள். அந்த உய்யகொண்டான் ஆறு, தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் ஆவாரம்பட்டி வரை பாசனம் கொடுக்கிறது.

அடக்க ஒடுக்கமாக அந்தக் கால குடும்பப் பெண்ணாக வீட்டை விட்டு வெளியில் வராத குடும்பத் தலைவியாக வாழ்ந்த கண்ணகி, தன் கணவன் மீது பொய் குற்றம்சாட்டி பாண்டியன் கொன்றுவிட்டான் என்றவுடன், “தேரா மன்னா செப்புவது உடையேன்என்று ஓங்கிக் குரலெழுப்பி, அரண்மனையை அதிரச் செய்தாள். கணவன் குற்றமற்றவன் என்பதை மெய்ப்பித்து, நீதியை நிலைநாட்டினாள் கண்ணகி. அந்த கண்ணகி நடமாடிய மண்ணில், நாம் கூடியுள்ளோம்.

பேரரசன் கரிகாலன் நடமாடிய மண்ணில் நாம் கூடியுள்ளோம். நமது பழைய பெருமிதங்களை, வீரத்தை புதுப்பித்துக் கொண்டு, காவிரி உரிமையை மீட்பதற்கு நம்மை அணியப்படுத்திக் கொள்வதற்காக இங்கே கூடியுள்ளோம்.

கடந்த சூலை 17ஆம் நாள், முசிறிபேராவூரணிவேதாரணியம்காட்டுமன்னார்குடி ஆகிய ஊர்களிலிருந்து நான்கு அணியினர் புறப்பட்டு, ஊர் ஊராக நம்முடைய உரிமைகளை எடுத்துக்கூறி, பூம்புகாருக்கு அழைத்துபோராட்டத்திற்கு அழைத்து இன்று, இங்கே அந்த நான்கு குழுவினரும் சங்கமித்துள்ளார்கள். பல்லாயிரக்கணக்கான உழவர்களும், தமிழ் உணர்வாளர்களும் இங்கேக் கூடியுள்ளீர்கள்.


நமது கோரிக்கைகள்

நம்முடைய கோரிக்கைகள் மூன்று! கர்நாடகம், காவிரியில் புதிதாக நான்கு அணைகள் கட்டி 70 டி.எம்.சி. அளவுக்கு தண்ணீர் தேக்க முனைந்துள்ளது. அத்திட்டம் நிறைவேறிவிட்டால், ஒரு சொட்டுத் தண்ணீர்கூட கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு வராது. ஏனெனில், எந்த ஆண்டும், கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு வந்து நிரம்பி, அங்கிருந்து 70 டி.எம்.சி. அளவுக்கு உபரி தண்ணீர் கடலுக்குப் போனதில்லை.

கடந்த 2005ஆம் ஆண்டு, கர்நாடக அணைகள் நிரம்பி மேட்டூருக்கு உபரித் தண்ணீர் வந்தது. மேட்டூரிலிருந்து சிறிதளவு தண்ணீர் கடலுக்குப் போனது. அதன்பிறகு, 8 ஆண்டுகள் கழித்து 2013ஆம் ஆண்டுதான், கர்நாடகத்தில் உபரித்தண்ணீர் வெளியேறி, மேட்டூர் நிரம்பி கடலுக்குப் போனது. கடலுக்குப் போன நீரின் அளவு, 20 டி.எம்.சி. தான் இருக்கும்.

எனவே, 70 டி.எம்.சி.யை. அவர்கள் தேக்குகிறார்கள் என்றால், எந்தக் காலத்திலும் கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு உபரி நீர் வரக்கூடாது என்ற திட்டத்தோடுதான், அவர்கள் செயல்படுகிறார்கள். சதித்திட்டம் தீட்டுகிறார்கள். இதை முறியடிக்க வேண்டும். இது முதல் கோரிக்கை!

இந்திய அரசு, அரசமைப்புச் சட்டத்திலுள்ள விதி 355- பயன்படுத்தி, மேக்கேத்தாட்டில் புதிதாக அணைகள் கட்டக்கூடாது என்று கர்நாடகத்திற்கு கட்டளைத் தாக்கீது அனுப்ப வேண்டும் என்பது நமது கோரிக்கை!

ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் ஓடும் ஆறு, இந்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட ஆறு என்பது தான், இந்திய அரசமைப்புச் சட்ட விதி 262 கூறுவதாகும். அந்த 262ஆம் விதியின்படிதான், 1956ஆம் ஆண்டு மாநிலங்களுக்கிடையேயான தண்ணீர் தகராறு சட்டம் என்ற நடுவண் சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்திற்கு உட்பட்டதுதான் காவிரி ஆறு. எனவே, அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்திய அரசு, கர்நாடகத்திற்கு கட்டளைத் தாக்கீது அனுப்ப வேண்டுமெனக் கோருகிறோம்.

கர்நாடகம் தனது நிதிநிலை அறிக்கையில் காவிரியில் புதிய அணைகள் கட்டுவதற்காக 25 கோடி ஒதுக்கியிருக்கிறது. அப்படி ஒதுக்கியிருப்பது சட்ட விரோதம் என நடுவண் அரசு அறிவிக்க வேண்டும்.

355 விதியின் கீழ் அனுப்பப்டும் கட்டளைத் தாக்கீதுக்கு கர்நாடகம் கட்டுப்படவில்லையென்றால், விதி 356- பயன்படுத்தி அந்த ஆட்சியைக் கலைக்க நடுவண் அரசுக்கு அதிகாரமிருக்கிறது. ஆனால், நடுவண் அரசு இதில் தலையிடாமல் நயவஞ்சகமாக ஒதுங்கிக் கொண்டுள்ளது. நாம் இந்த கூட்டத்தின் வாயிலாக, நடுவண் அரசு கர்நாடகம் காவிரியில் கட்ட உத்தேசித்துள்ள நான்கு அணைகளுக்கும் தடையாணை பிறப்பிக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

இரண்டாவதாக, காவிரி ஆற்றில் ஒரு நாளைக்கு 59 கோடி லிட்டர் இரசாயணக் கழிவு நீரும், சாக்கடைக் கழிவு நீரும் கர்நாடகத்தால் கலக்கப்படுகின்றன. அர்க்காவதி ஆற்று வழியாக இந்தக் கழிவு நீர், தமிழ்நாட்டுக் காவிரியில் விடப்படுகிறது. அதேபோல், கர்நாடகத்துக்குக் கழிவு நீர் தென்பெண்ணை ஆற்றில் ஒரு நாளைக்கு 89 கோடி லிட்டர் தமிழ்நாட்டில் விடப்படுகிறது. இந்த செய்தியை, தமிழ்நாடு அரசோதமிழ்நாட்டிலுள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரியமோபொதுப்பணித்துறையோ கண்டறிந்து நமக்கு அறிவிக்கவில்லை. கர்நாடகத்திற்கு எச்சரிக்கவில்லை.

கர்நாடகத்தினுடைய அமைச்சர் காசி ராவ் என்பவர், அம்மாநில சட்டப் பேரவையில் இந்த செய்திகளை தாமாக முன்வந்து அறிவித்தார். அதன்பிறகுதான் தமிழ்நாடு அரசு, தன்னுடைய அதிகாரிகளை அனுப்பி தமிழ்நாட்டுக் காவிரி நீரை சோதனைக்கு எடுத்துச் சென்றது. அந்த அளவிற்கு விழிப்புணர்வோடுதமிழ்நாடு அரசு, செயல்படுகிறது. அதன்பிறகு, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்திலே இந்தக் கழிவு நீர் கலக்கப்படுவதை எதிர்த்து ஒரு மனு தாக்கல் செய்துள்ளது.


நடுவண் அமைச்சரா? கன்னட வெறியரா?

கடந்த சூன் மாதம் 12ஆம் நாள், பெங்களுரில் நடுவண் சட்டத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை  கடுமையாகக் கண்டித்துள்ளார். அவர் கன்னடராக இருந்தாலும், தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து இந்தியாவுக்கும் சட்ட அமைச்சர். அவர் கன்னட வெறியோடு பேசுகிறார்:

பெங்களுரிலிருந்து வெளியாகும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை கர்நாடக அரசு காவிரி ஆற்றில் கலப்பதால், காவிரி நீர் மாசுபட்டுள்ளதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. இந்த வழக்கை கர்நாடகம் சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறது. இந்த விவகாரத்தில், நாங்கள் எதிர்கட்சியாக இருந்தாலும், கர்நாடக அரசுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கத் தயாராக இருக்கிறோம்என்றார். இது, தமிழ் இந்து ஏட்டில் 13.06.2015 அன்று வந்துள்ளது.

நடுவண் அரசின் சட்ட அமைச்சர் சதானந்த கவுடா இனவெறி அடிப்படையில் சட்ட விரோதமாகப் பேசியதை, தமிழ்நாடு அரசோ, தமிழ்நாட்டுப் பெரியக்  கட்சிகளோ கண்டிக்கவில்லை. “இன அடிப்படையில் பேசி, இந்திய அரசமைப்புக்குப் புறம்பாகப் பேசுகிறார், எனவே அவரைப் பதவி நீக்கம் செய்க!” என தலைமை அமைச்சர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாட்டு முதலமைச்சர் செயலலிதாவோமுன்னாள் முதல்வர் கருணாநிதியோ கோரிக்கை வைக்கவில்லை.

இதைப்பற்றியெல்லாம் கவனமற்று கருணாநிதியும் செயலலிதாவும் தங்களுக்குள் பதவி ஆதாயப் போட்டியில் அன்றாடம் அறிக்கை விட்டுக் கொள்வதில்தான் ஈடுபட்டுக் கொண்டுள்ளார்கள். சதானந்த கவுடா கூறியுள்ள இன்னொரு கருத்தை கவனிக்க வேண்டும்.

தன்னுடைய கட்சியான பா..., கர்நாடகத்திலே எதிர்கட்சியாக இருந்தாலும், ஆளும்கட்சியான காங்கிரசுக்கு காவிரிப் பிரச்சினையில் துணை நிற்போம்தோள் கொடுப்போம் என்று அவர் கூறியுள்ளதை கவனிக்க வேண்டும்.

இப்படித் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் காவிரிப் பிரச்சினையிலோ, தமிழ் மக்கள் நலன் சார்ந்த மற்ற மற்ற பிரச்சினைகளிலோ, ஒரு கட்சிக்குத் துணையாக இன்னொரு கட்சி, ஆளுங்கட்சிஎதிர்கட்சிகள் அறிக்கை விட்டுக் கொள்ளுமா?

ஓர் அனைத்துகட்சிக் கூட்டத்தைத்தான் கூட்டி, இங்கே இவர்கள் முடிவெடுப்பார்களா? அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்த முடியாதது ஒரு பக்கம் இருக்கட்டும். தமிழ்நாட்டு சட்டப் பேரவையிலே முதலைமைச்சர், முன்னாள் முதலமைச்சர், முதன்மை எதிர்க்கட்சித் தலைவர் மூவரும் அவரவர் இடத்தில் அமர்ந்து ஒரே நேரத்தில் தமிழ்நாட்டு உரிமைப் பிரச்சினைகள் பற்றி கருத்துப் பரிமாறிக் கொள்ளும் யோக்கியதை இருக்கிறதா?

இந்த மூன்று பேரும் தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் ஒரு பொருள் குறித்து விவாதித்ததே இல்லை. இந்த அநாகரிகம் இந்தியாவிலே வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. பொது வாழ்வுக்கு வந்தவர்கள், தன்னல வெறியோடு சொந்தப்பகையை உண்டாக்கிக் கொண்டதால்தான், தமிழ்நாட்டில் இவர்களால் தமிழர் உரிமைப் பிரச்சினைகளில் ஒத்த கருத்து கொள்ள முடியவில்லை. ஒரு கட்சிக்குத் துணையாக இன்னொரு கட்சி பேச முடியவில்லை.

கர்நாடகத்திலும், தமிழ்நாட்டு மந்திரிகளைப் போல் மந்திரிகள் இலஞ்சம் வாங்குகிறார்கள். பதவிக்காக கட்சி மாறுகிறார்கள்; ஒருவர் ஆட்சியை இன்னொருவர் கவிழ்த்து விடுகிறார்கள். ஆனால், கன்னடர் பிரச்சினை என வந்து விட்டால், கர்நாடக மாநிலப் பிரச்சினை என்று வந்துவிட்டால் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து விடுகின்றன. அப்படி ஒருவேளை அந்தக் கட்சிகள் ஒன்று சேரவில்லையென்றால், அந்தக் கட்சிகளை இனத்துரோகிகள் என்ற அந்த மக்கள் சாடுவார்கள்.


கன்னடரைப் பார்த்துக் கற்றுக் கொள்வோம்

கர்நாடகத்தில் காவிரிப் பிரச்சினை என்று வந்துவிட்டால், கட்சி கடந்து ஒன்று சேர்ந்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட நிலைமை தமிழ்நாட்டில் கிடையாது. காவிரிப் பிரச்சினையில் இந்தக் கட்சித் தலைவர்கள்தலைவிகள் அக்கறையற்று இருந்தாலோ, தமிழர் உரிமைக்கு எதிராக நடந்து கொண்டாலோ அந்தந்த கட்சியிலுள்ள மக்கள் தங்கள் தலைமையை விமர்சிப்பதில்லை;  கண்டிப்பதில்லை; திருத்த முனைவதில்லை.

மாறாக, தங்கள் கட்சியின் தலைவர் செய்த இனத்துரோகத்தை அல்லது எடுத்த தவறான முடிவை அல்லது செயலற்றத் தன்மையை ஞாயப்படுத்திப் பேசுபவர்களாக இங்குள்ள மக்களில் கணிசமானோரை தி.மு..வும் .தி.மு..வும் மாற்றிவிட்டன. குடிமக்களை பயானாளிகள் என்ற அளவுக்கு தரம் தாழ்த்திவிட்டன இக்கட்சிகள்.

குடிமக்கள் என்பவர்கள், இந்த நாடு என்னுடையது. இதை ஆளுகின்ற மக்களில் நானும் ஒருவன் என்ற பொறுப்புணர்ச்சியும் பெருமிதமும் கொண்டவர்கள்; பயனாளிகள் என்பவர்கள், ஆட்சியினரால் இன்று தனக்கு என்ன கிடைக்கும்நாளை என்ன கிடைக்கும் என்று கையேந்தும் பண்பாட்டிற்குப் பழக்கப்பட்டு விட்டவர்கள். குடிமக்கள் தற்காப்பு உணர்ச்சி மிக்கவர்கள்; பயனாளிகள் அண்டிப் பிழைப்பதில் ஆர்வமிக்கவர்கள். குடிமக்கள் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் எச்சரிக்கையோடு இருப்பவர்கள்; பயனாளிகள் நிகழ்காலத்தில் என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு இருப்பவர்கள். குடிமக்கள் போர்க்குணம் மிக்கவர்கள்; பயனாளிகள் கோழைத்தன்மை வளரப் பெற்றவர்கள்.

நம்முடைய தமிழ் மக்களில் கணிசமானவர்களை ...தி.மு.. தலைமையும் தி.மு.. தலைமையும் பயனாளிகளாக மாற்றிவிட்டன. அதனால்தான், இந்தக் கட்சிகள் தமிழ் மக்கள் உரிமைகளுக்குப் போராடாமல் இருப்பதை, இந்த மக்களில் கணிசமானோர் ஏற்றுக் கொள்கிறார்கள்.

தமிழ் மக்கள் கன்னடர்களிடமிருந்து பாடம் கற்க வேண்டும். நாம் சூலை 17ஆம் நாள், காவிரி களப்பரப்புரைப் பயணம் புறப்படுகிறோம் என்ற செய்தி வெளியானதும், கர்நாடகத்திலே ஒரு சிறு மாற்றம் செய்தார்கள்.

சூலை 16ஆம் நாள் வரை, கிருஷ்ணராஜ சாகரிலிருந்து நொடிக்கு 3,731 கன அடி தண்ணீர் திறந்துவிட்டவர்கள், சூலை 17ஆம் நாள் மாலை, ஒரு நொடிக்கு 9,113 கன அடி தண்ணீர் திறந்துவிட்டார்கள். நம்முடைய போராட்டத்தின் தாக்கம் இதிலிருக்கிறது.

கபினி, ஏரங்கி, ஏமாவதி அணைகளில், அணைகள் 95 விழுக்காடு கொள்ளளவு நிரம்பிவிட்டது. கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த உயரம் 124 அடி. இப்போது, தண்ணீர் இருப்பது 108 அடி. இந்த நிலையிலும்கூட, சூன் மாதம் நமக்குத் தர வேண்டிய 10 டி.எம்.சி. தண்ணீரை தரவில்லை. சூலை மாதம் தர வேண்டிய 35 டி.எம்.சி.யை தரவில்லை.

ஒரு நொடிக்கு 12,000 கன அடி வீதம் 24 மணி நேரம் தண்ணீர் திறந்துவிட்டால், அதனளவு 1 டி.எம்.சி. 1 டி.எம்.சி. (Thousand Million Cubic feet) என்பது, 100 கோடி கன அடித் தண்ணீர். இந்தக் கணக்கை வைத்துப் பார்த்தால், சூலை மாதம் நமக்குத் தர வேண்டிய 35 டி.எம்.சி.யை கர்நாடகம் திறந்துவிட 31 நாளும், நொடிக்கு 13,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

சூலை 16ஆம் நாள் வரை, 3,731 கன அடிதான் திறந்துவிட்டனர். சூலை 17 மாலை 6 மணி வாக்கில், 9,113 கன அடி தண்ணீர் திறந்துவிட்டவுடன், அந்த இரவு நேரத்திலேயே மாண்டியா மாவட்டத்தில் கன்னடர்கள் போராட்டத்தைத் தொடங்கிவிட்டார்கள். மண்டியா மாவட்டத்தில், சிறீரங்கப்பட்டினத்தில், மத்தூரில், இன்னும் பல இடங்களில், கன்னட விவசாயிகள் போராடுகிறார்கள். இந்தச் செய்தியை 18.07.2015 நாளிட்ட ஆங்கில இந்து ஏடு, படத்துடன் வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் கன்னடர்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

அணை நிரம்பி வழியும் அளவிற்கு தண்ணீர் இருந்தும், அதில் சிறிதளவு நீரை தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட்டவுடன் உடனே எதிர்வினையாற்றிப் போராடுகிறார்கள், கன்னடர்கள்.

புளிச்ச ஏப்பக்காரனுக்கு உள்ள அந்த துடிப்பு, பசி ஏப்பக்காரனாகிய தமிழனுக்கு ஏன் இல்லாமல் போனது?


காவிரி மேற்பார்வைக் குழு

அண்மையில் மருத்துவர் இராமதாசு நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதிக்கு கடிதம் எழுதி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு கோரியதற்கு, பதிலளித்த உமாபாரதி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தாமதம் இருந்தாலும், இடைக்கால ஏற்பாடாக தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தந்திட காவிரி மேற்பார்வைக் குழு இருக்கிறது - அது பார்த்துக் கொள்ளும் என்று கூறியிருந்தார். இந்த செய்தி, அண்மையில் ஏடுகளில் வெளிவந்தது.

உச்ச நீதிமன்றம் அமைத்த காவிரி மேற்பார்வைக் குழுவைத் தான் அவர் குறிப்பிடுகிறார். நடுவண் நீர்வளத்துறைச் செயலாளர் தலைமையில், நான்கு மாநிலத் தலைமைச் செயலாளர்களையும், தலைமைப் பாசனப் பொறியாளர்களையும் உறுப்பினர்களாகக் கொண்ட, காவிரி மேற்பார்வைக் குழுவை உச்ச நீதிமன்றம் அமர்த்தியது.

அந்த மேற்பார்வைக்குழுக் கூடி, தமிழ்நாட்டிற்குரிய பங்கு நீரை திறந்துவிட கர்நாடகத்திற்கு அறிவுறுத்த வேண்டும். அந்தக் குழுவிற்கு எந்தளவிற்கு அதிகாரம் இருக்கிறதுஇல்லை என்பது ஒருபுறமிருக்கட்டும்.

கர்நாடகத்திற்கு, பல்வேறு முனைகளிலிருந்து அழுத்தம் கொடுக்கும் வகையில், காவிரி மேற்பார்வைக் குழுவை நடப்புத் தண்ணீர் ஆண்டு சூன் மாதம் தொடங்குகிற நேரத்தில், கூட்டுமாறு தமிழக முதலமைச்சர் அந்த துறையைக் கேட்டுக் கொள்ளாதது ஏன்?

காவிரி மேற்பார்வைக் குழுவை உடனே கூட்டச் செய்து, தமிழ்நாட்டிற்குரியத் தண்ணீரைப் பெற்றுத் தாருங்கள் என்று உமாபாரதியை, தமிழக முதலமைச்சர் செயலலிதா ஏன் வலியுறுத்தவில்லை?

அன்றாடம் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கும் தி.மு.. தலைவர் கருணாநிதி, காவிரி மேற்பார்வைக் குழுவை கூட்டி, தமிழ்நாட்டிற்குரியத் தண்ணீரைப் பெற்றுத் தாருங்கள் என்று தலைமை அமைச்சர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதாதது ஏன்?

அடுத்த முதல்வர் என்ற ஆர்வத்தில் சுறுசுறுப்பாக சுற்றுலா வரும் மு..ஸ்டாலின், கோடிக்கணக்கான விவசாயிகளின் - மக்களின் பாசன நீராகவும், குடிநீராகவும் உள்ள காவிரி நீரை திறந்துவிட வலியுறுத்தி, காவிரி மேற்பார்வைக் குழுவைக் கூட்டுமாறு கோரிக்கை வைக்காதது ஏன்?

.தி.மு..வுக்கோ, தி.மு..வுக்கோ மக்கள் நலனில் சிறிதும் அக்கறையில்லை. காவிரிப் பிரச்சினையில் எள்ளளவும் அக்கறையில்லை. காவிரி உரிமை மீட்புக் குழுவினராகிய நாங்கள், இந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள்அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடாதீர்கள் என எந்தக் கருத்தும் சொல்வதில்லை. ஓட்டு அரசியலில் காவிரி உரிமை மீட்புக் குழு ஈடுபடாது. ஆனால், தமிழ்நாட்டு அரசியல் எவ்வளவு ஊதாரித்தனமாக இருக்கிறது என்பதை நாங்கள் மக்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த காலத்தில், காவிரி தண்ணீரை திறந்து விட கர்நாடகம் மறுத்த போது, பெங்களுருக்குச் சென்று கர்நாடக முதலமைச்சர் குண்டுராவை சந்தித்து, தண்ணீர் கேட்டார். சில நிபந்தனைகளை ஏற்று தண்ணீரும் பெற்றார். எம்.ஜி.ஆரைப் போல் தமிழ்நாட்டு முதலமைச்சர் செயலலிதா இப்பொழுது, பெங்களுரு சென்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிடம் உங்கள் அணைகள் 95 விழுக்காடு நிரம்பி விட்டன, எங்கள் தண்ணீரை கொடுத்தால் என்ன?” என்று கேட்டால், அதுவொரு அழுத்தம் கொடுக்குமல்லவா? பெங்களுருவில் ஊடகங்களை சந்தித்து கர்நாடகத்தின் சட்ட விரோதச் செயலை வெளிப்படுத்தலாம் அல்லவா?

அனைத்துக் கட்சியினரை அழைத்துக் கொண்டு தில்லி சென்று தலைமை அமைச்சர் நரேந்திர மோடியைச் சந்தித்து, கர்நாடகத்திற்கு சட்டப்படித் தண்ணீரைத் திறந்துவிட கட்டளையிடுங்கள் என தமிழக முதலமைச்சர் செயலலிதா கேட்டால் அதற்கொரு அரசியல் அழுத்தம் கிடைக்கும். பலனும் இருக்கும்.

இப்படி பல வகைகளில் அழுத்தம் கொடுக்க முன்வராதது ஏன்?

ஆனால், எதையும் செய்யாமல் காவிரியில் தண்ணீர் பெற சுட்டுவிரலைக்கூட அசைக்காமல் சென்னையில் அமர்ந்து கொண்டு, தில்லியிலுள்ள அவரது வழக்கறிஞர்களுக்கு தொலைப்பேசியில் பேசி, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் மட்டும் போடச் செய்து, காவிரிக்குப் பாடுபடுவது போல் கணக்குக் காட்டிக் கொள்கிறார்.


தமிழர்கள் அரசியல் அநாதைகளா?

ஆக, ஆளுங்கட்சியாலும், எதிர்கட்சிகளாலும் கைவிடப்பட்ட அரசியல் அநாதைகளாக தமிழ்நாட்டு மக்கள் இருக்கிறார்கள்.

அரசுஎன்றால் காவல் என்று  பாவாணர் பொருள் சொன்னார். ‘அரசன்என்றால் காவலன். ‘அரண்மனைஎன்றால் காவல்மிகுந்த மனை. தமிழ் மன்னர்கள் தங்களை மக்களின் காவலர்களாகத்தான் கருதிக் கொண்டார்கள், பழங்காலத்தில்!

கண்ணகியின் வாதத்தில் தான் நீதி தவறிவிட்டதை உணர்ந்து கொண்ட பாண்டிய மன்னன், “மன்பதை காக்கும் தென்புலம் காவல், என்முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்என்றுகூறி, கீழே விழுந்து செத்தான் என்கிறார் இளங்கோவடிகள்.

தென்னாட்டுக் காவலன் என்று தன்னை பாண்டியன் கூறிக் கொள்கிறான். இன்றைக்குத் தமிழ்நாட்டின் காவலர்களாக தமிழ்நாட்டுத் தலைவர்கள் விளங்குகிறார்களா? இல்லை.

அவர்கள் அரசியல் தலைவர்கள் - தமிழ்நாட்டுக் காவலர்களாக இல்லை என்பதற்காக நாம் ஒதுங்கி செயலற்று இருக்க வேண்டியதில்லை. நம் மக்களைக் காக்க நாம் முன் வர வேண்டும். புறப்பட வேண்டும். தற்காப்பு உணர்ச்சியும், தற்காப்பு ஆற்றலும் கொண்ட மக்கள்தான் வாழ்வார்கள்.

கர்நாடக அணைகளில் 95 விழுக்காட்டிற்கு தண்ணீர் நிரம்பியிருந்த போதும், அவர்கள் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரைத் தர மறுக்கிறார்கள். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா சொல்கிறார். நான்கு அணைகள் கட்டி 70 டி.எம்.சி. தேக்கினாலும், தமிழ்நாட்டிற்குரிய 192 டி.எம்.சி. தண்ணீரைத் தருவோம் என்கிறார்.

அவர், கூறுவதில் உண்மையிருந்தால், இப்பொழுது தண்ணீர் அவர்களது அணையில் நிரம்பியிருந்த நிலையில், சூன் மாதம் 10 டி.எம்சி.யும், சூலையில் இதுவரை 20 டி.எம்.சி. தண்ணீரும் திறந்துவிட்டிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், நாம் குறுவைச் சாகுபடி செய்திருக்க முடியும்.

சித்தராமையா ஒரு மோசடிப் பேர்வழி; ஒரு பித்தலாட்டக்கார் என்பது இந்த ஆண்டுக்குரிய தண்ணீரை அவர் திறந்துவிடாதில் இருந்தே தெரிகிறது. இவர்கள் நான்கு அணைகளைக் கட்டி 70 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்கினால், தமிழ்நாட்டிற்கு நீர் தருவார்கள்?

கர்நாடகத்திலும் பெரும்பாலும் இந்துக்கள்; தமிழ்நாட்டிலும் பெரும்பாலும் இந்துக்கள். இந்துக்கள் இந்துக்களுக்கு தண்ணீர் விட்டால் என்ன? கர்நாடகத்தில் அனைவரும் இந்தியர்கள், தமிழ்நாட்டில் அனைவரும் இந்தியர்கள் என்கிறார்கள். இந்தியர்களுக்கு இந்தியர்கள் ஏன் தண்ணீர் தர மறுக்கிறார்கள்? கர்நாடகத்தில் உள்ளவர்கள் திராவிடர்கள். தமிழ்நாட்டில் உள்ளவர்களும் திராவிடர்கள் என்கிறார்கள். கர்நாடகத் திராவிடர், தமிழ்நாட்டுத்த் திராவிடருக்கு தண்ணீர் தர மறுப்பது ஏன்?

இதை நாம் கேட்டால் கன்னடர்கள் என்ன சொல்வார்கள்? “நாங்கள் கன்னடர்கள், நீங்கள் தமிழர்கள்நாங்கள் வேறு இனம்நீங்கள் வேறு இனம். உங்களுக்குத் தண்ணீர் தர முடியாது என்பார்கள்”. இதுதானே உண்மை? காவிரிச் சிக்கல் என்பது, வெறும் தண்ணீர் சிக்கலில்லை. அது இனச்சிக்கல்! தமிழர்களுக்கு எதிரான கன்னட வெறியர்களின் சதிச்செயல்!

மிழர்களாக நாம் ஒருங்கிணைந்து, தற்காப்பு ஆற்றலோடு நாம் போராடினால்தான், கன்னடர்களின் வெறியை முறியடித்து, தமிழகத்திற்குரிய உரிமையை பெற முடியும்.


போராட்ட அறிவிப்பு

காவிரி உரிமை மீட்புக் குழு கடந்த 3 ஆண்டுகளில் பல போராட்டஙகைள நடத்தியுள்ளது. இப்பொழுதொரு புதிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. இந்தப் போராட்டத்தை நான் அறிவிக்கிறேன் என்றால், இது நான் எடுத்த தனிப்பட்ட முடிவல்ல. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் காவிரி உரிமை மீட்புக்குழுவிலுள்ள அனைத்து அமைப்புகளின் பொறுப்பாளர்களையும் கலந்து பேசி ஒருமித்து எடுத்த போராட்ட முடிவு இது!

காவிரி என்ற ஓர் இயற்கை வளத்தைப் பாதுகாத்துத் தராத இந்திய அரசே, தமிழ்நாட்டுக் காவிரிப் படுகையில் கிடைக்கும் பெட்ரோலியம்எரிகாற்று ஆகியவற்றை எடுக்காதே!” என்று தடுக்கும் போராட்டம், நாம் நடத்த வேண்டும்.

வருகின்ற செப்டம்பர் 28ஆம் நாள், நாகை மாவட்டம் நரிமணம்பனங்குடி பகுதியைச் சுற்றி, முற்றுகைப் போராட்டம்! ஒரு முழுநாள் முற்றுகைப் போராட்டம்! எல்லா திசையிலும், எல்லா முனையிலும் மக்கள் சூழ்ந்து கொண்டு, அன்று உள்ளே மனிதர்களோ ஊர்திகளோ செல்லக்கூடாது. அதே போல், உள்ளேயிருந்து, ஊர்திகளோ மனிதர்களோ வெளியே வரக்கூடாது. கடந்த காலத்தில், தில்லி போர்ட் க்ளப் மைதானத்தில் இலட்சக்கணக்கான விவசாயிகளை, உத்திரப்பிரதே விவசாய சங்கத் தலைவர் திக்காயத்து திரட்டி முற்றுகைப் போர் நடத்தினார். கோரிக்கைகளை வென்ற பிறகே, அம்முற்றுகையைக் கலைத்தார். நாம் இந்திய அரசைக் கண்டிக்கும் வகையில், நரிமணம்பனங்குடி முற்றுகைப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் (தைதட்டல்). கிராம் கிராமாக மக்கள் எந்தெந்த பகுதிக்கு யார் என முடிவு செய்வோம்.

காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களுக்கு வரும் நடுவண் அமைச்சர்களுக்கு கருப்புக் கொடி காட்டி, காவிரித் தண்ணீரை பெற்றுத்தராமல் காவிரிப் படுகைக்கு வராதீர்கள் என்று விரட்டியடிக்கும் போராட்டத்தை நடத்த வேண்டும் (தைதட்டல்).

கால அவகாசம் இருக்கிறது. இதற்கான தயாரிப்பு வேலைகளை நாளையிலிருந்து நாம் தொடங்க வேண்டும்.

கரிகால்பெருவளத்தான் கால் பதிந்த இந்த பூம்புகார் மண்ணில், கரிகால் பெருவளத்தான் மேல் ஆணையிட்டு, கண்ணகியின் மேல் ஆணையிட்டு, இராசஇராச்சோழன் மேல் ஆணையிட்டு காவிரி உரிமையை மீட்போம்! மீட்போம்! மீட்போம் என்று உறுதியேற்போம்!

கன்னடர்கள் காவிரியில் புதிய அணைகள் கட்டாமல் தடுப்போம்! கர்நாடகம் காவிரியில் கழிவு நீர் விடுவதைத் தடுப்போம்! காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்குமுறைக் குழுவையும் இந்திய அரசு அமைத்திட வைப்போம்! அதற்கான போராட்டங்களாக நாம் முன்னெடுத்துள்ள நரிமணம்னங்குடி முற்றுகைப் போராட்டத்தையும், நடுவண் அமைச்சர்களுக்குக் கருப்புக் கொடி போராட்டத்தையும் வெற்றிகரமாக நடத்துவோம் என்று இந்த போராட்ட வேண்டுகோளை தீர்மாமாக்கும் வகையில் நீங்கள் அனைவரும் கையொலி எழுப்பி ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் (கடல் ஓசை போல் கையொலி ஓசை எழுந்தது) அனைவருக்கும் நன்றி!”

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.

கூட்டத்தில் பெருந்திரளான உழவர்களும், தமிழின உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.



No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.