ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

அரித்துவாரில் அவமானப்பட்டுக் கிடக்கும் திருவள்ளுவர் சிலையை மீட்டுத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்! தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!

 அரித்துவாரில் அவமானப்பட்டுக் கிடக்கும் திருவள்ளுவர் சிலையை மீட்டுத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்! தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!  

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பா.ச.க. மாநிலங்களவை உறுப்பினர் தருண் விசய், தமிழினத்தின் பேராசான் திருவள்ளுவப் பெருந்தகையின் சிலையை, உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவாரில் நிறுவுவதற்கு 29.06.2016 அன்று விழா ஏற்பாடு செய்திருந்த நிலையில், அங்குக்ள வடநாட்டவர்கள் திருவள்ளுவர் சிலையை அங்கு நிறுவக் கூடாது என்று தடுத்து விட்டனர்.

அதன்பிறகு, அரித்துவாரில் உள்ள உ.பி. மாநிலத்திற்குச் சொந்தமான பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அச்சிலை நிறுவப்பட்டதாக செய்திகள் வந்தன.

ஆனால், 18.07.2016 அன்று ஆங்கில இந்து ஏட்டில் வந்த படமும் செய்தியும் மேற்படி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நிறுவப்பட்டதாகச் சொல்லப்பட்ட திருவள்ளுவர் சிலை கருப்பு நெகிழித் தாள்களால் (பிளாஸ்டிக்) சுற்றப்பட்டு, கயிறுகளால் கட்டப்பட்டு மேற்படி வளாகத்தில் ஒரு மூலையின் கிடத்தி வைக்கப்பட்டுள்ள உண்மையை வெளிப்படுத்தியுள்ளது.

அப்படத்தைப் பார்த்த தமிழர்கள் தங்கள் நெஞ்சில் ஈட்டி பாய்ந்தது போன்ற துயரத்தில் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் 30.06.2016 அன்று வெளியிட்ட அறிக்கையில், வடநாட்டில் திருவள்ளுவர் சிலை இழிவுபடுத்தப்பட்டுள்ளது - இது தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி மட்டுமல்ல, அவமானமும் ஆகும். எனவே தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு அச்சிலையை மீட்டு தமிழ்நாட்டில் நிறுவி பேராசான் திருவள்ளுவருக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

ஆனால், இதுவரை தமிழ்நாடு அரசு இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பொழுதாவது திருவள்ளுவப் பெருந்தகைக்கு இழைக்கப்பட்டுள்ள அவமானத்தைத் துடைக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அந்தச் சிலையை மீட்டு, உடனடியாகத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்து தக்க இடத்தில் நிறுவ வேண்டும் என மீண்டும் கோருகிறோம்.

அரித்துவாரில் சங்கராச்சாரியார் சதுக்கப் பகுதியில் திருவள்ளுவர் சிலை வைக்கக்கூடாது என்று அங்குள்ள பார்ப்பனப் புரோகிதர்கள் தடுத்தார்கள் என்றும், சங்கராச்சாரியார் சிலை இருக்குமிடத்தில் திருவள்ளுவர் சிலை இருக்கக்கூடாது என்றும் கூறியதாகச் செய்திகள் வருகின்றன. அப்படியென்றால், தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் - கும்பகோணம் போன்ற இடங்களில் சங்கர மடங்கள் இருக்கக்கூடாது.

அவற்றிற்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன உறவு இருக்கிறது?

தமிழர்களின் ஆன்மிக நெறிகளான சிவ நெறி - திருமால் நெறி இரண்டிற்கும், ஆதிசங்கரருடைய அத்வைதத்திற்கும் என்ன தொடர்பிருக்கிறது என்ற கேள்வியை தமிழினத்தின் உரிமைக் காப்புக் களத்தில் செயல்பட்டு வரும் நாங்கள் கேட்கிறோம்.

தமிழினப் பேராசான் திருவஷீமீளுவர் சிலையை அரித்துவாரில் அவமானப்படுத்தியதில் தருண் விசய்க்கு மட்டுமின்றி அவருடன் சேர்ந்து கூடிக் கும்மியடித்த தமிழ்நாட்டு மேனாமினிக்கிகள் மற்றும் வேடதாரிகளுக்கும் பங்கிருக்கிறது.

தமிழ் முகமூடியுடன் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. ஆகிய ஆரியப் பார்ப்பனிய அமைப்புகளை வேரூன்றச் செய்திடும் முயற்சியில் தருண் விசய்க்கும் ஒரு பங்கிருக்கிறது. ஏற்கெனவே அவர் ஆர்.எஸ்.எஸ்.சின் ஆர்கனைசர் இதழின் ஆசிரியராக இருந்தார்.அந்தத் தருண் விசயோடு வேறு சில தன்னல நோக்கங்களோடு தமிழ்நாட்டுத் தமிழர்கள் சிலர் கூடிக் குலாவிக் கொண்டிருக்கிறார்கள். தருண் விசய் பற்றி அறிந்தே அவரை இங்கு அழைத்து வந்து பிரபலப்படுத்தும் பார்ப்பனிய ஆற்றல்களும் இங்கு இருக்கின்றன.

இப்பொழுது இவர்களின் முகமூடிகள் கிழிந்து அசல் முகம் அம்பலப்படும் வகையில் அரித்துவாரில் வடநாட்டினர் திருவள்ளுவர் சிலை அமைக்கக்கூடாது என்று சொல்வதுடன் நம் நெஞ்சமெல்லாம் கொதிக்கும் வகையில் நம் பேராசான் சிலையை கருப்பு நெகிழித் தாள்களால் மூடி அவரை விலங்கிட்டது போல் கயிறுகளால் இறுக்கமாகக் கட்டி, அநாதைப் பிணம் போல் குப்பை மேட்டில் வீசியிருக்கும் காட்சி தெரிவிக்கிறது.

இதுபற்றி கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள அறிக்கையில், “இது திருவள்ளுவருக்கு நேர்ந்த அவமானமல்ல. இந்தியத்தேசியத்துக்கு நேர்ந்த அவமானம” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியத்தேசியம் தான் திருவள்ளுவரை அவமானப்படுத்தியிருக்கிறது. அவர் நிற்க நான்கு சதுரடி நிலம் கொடுக்க மறுத்திருக்கிறது. இதுபற்றி இத்தனை நாள் ஆகியும் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரகாண்ட் முதல்வர் ராவத் உள்ளிட்ட
வடநாட்டுத் தலைவர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை.

சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட உ.பி. ஆளுநர் இராம் நாயக், தமிழ்நாட்டைச் சேர்ந்த - மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் ஆகியோரும்
இதுபற்றி வாய் திறக்கவில்லை. திருவள்ளுவருக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைக்க அவர்கள் தலையிடவில்லை.

இந்த நிலையில், திருவஷீமீளுவர் சிலை குப்பை மேட்டில் வீசப்பட்டது இந்தியத்தேசியத்திற்கு நிகழ்ந்த அவமானம் என எந்த வகையில் வைரமுத்து
சொல்கிறார்? அவர் வேண்டுமானால், ஆரியப் பார்ப்பனியத்திற்கும் இந்தியத்தேசியத்திற்கும் தாசானு தாசனாளிணி இருந்து தன்னலம் காத்துக் கொள்ளலாம். தமிழினத்தின் தன்மானத்தை ஆரியத்துக்கு அடகு வைக்கும் உரிமை அவருக்கில்லை.

அடுத்து, “அரித்துவாருக்கும் திருவஷீமீளுவருக்கும் தொடர்பில்லை என்றால், இந்தியாவுக்கும் தமிழனுக்கும் தொடர்பில்லை என்றாகிவிடும்” என்று கூறிவிட்டு, அடுத்த வரியில் “அப்படி ஆவதை யாரும் விரும்பமாட்டார்கள்” என்றும் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார். இது, கலைஞர் கருணாநிதியிடம் வைரமுத்து கற்றுக் கொண்ட ‘இராசதந்திரம்”! முதல் வரியில் வீரர் போல் முழங்கிவிட்டு, அடுத்தவரியில் எதிரியின் காலடியில் வீழ்வது போல் அறிக்கை விடும் கங்காணி வசனங்களைத் தமிழின இளைஞர்கள் இனியும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

இந்தியத்தேசியம் என்றும் தமிழர்களும் பாரத மாதா புத்திரர்கள் - புத்திரிகள் என்றும் பம்மாத்து செய்து கொண்டிருக்கும் ஆரியப் பார்ப்பனிய ஆற்றல்களும் அவர்களுக்கு அடிவருடிப் பிழைப்பு நடத்தும் இனத்துரோகிகளும் இந்தியாவில்
தமிழர்களும் சமமாகத்தான் நடத்தப்படுகிறார்கள் என்று கூறும் பொய்யைப் புரிந்து கொண்டு தங்கள் உரிமைகளைக் காக்க, - தங்கள் தன்மானத்தைக் காக்க
விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்.

தமிழ் முகமூடி அணிந்து கொண்டு, தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ச.க. ஆகிய ஆரியப் பார்ப்பனிய அமைப்புகளை வேரூன்றச் செய்து வளர்த்திட செய்யும் தந்திரங்களை அடையாளங்கண்டு முறியடிக்க உறுதியேற்க வேண்டுமென்று தமிழ் மக்களை தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

(அரித்துவாரில் ஓர் இடத்தில் திருவள்ளுவர் சிலையை நிறுவ அம்மாநில முதல்வர் ராவத்ஒப்புக்கொண்டதாகக் கூறுகிறார்கள். திருவள்ளுவர்
சிலை நிறுவப் பட்டபின் அதன் நிலையைப் பார்ப்போம்)

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்



பேச: 7667077075, 9443918095 

முகநூல் : www.fb.com/tamizhdesiyam 

ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.