ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கலவரமண்ணான கதிராமங்கலம் : தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு!

கலவரமண்ணான கதிராமங்கலம் : தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு!
தஞ்சை மாவட்டத்தின் கதிராமங்கலம் கிராமத்தில், பல்லாயிரக்கணக்கான காவல்துறையினரின் முற்று கையின் கீழ் மக்கள் தங்கள் வீடுகளில் முடக்கப் பட்டுள்ளனர், அங்கு என்ன நடக்கிறது என்று அறிவதற்காக நேரில் செல்ல முயன்ற தலைவர்கள் காவல்துறையினரால் பாதி வழியேலேயே கைது செய்யப்படுகின்றனர்…



இப்படியெல்லாம் செய்திகள் வரவே, கதிராமங்கலத்தில் என்ன நடக்கிறது என்பதை நேரில் அறி வதற்காக தமிழர் கண்ணோட்டம் சார்பில் இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி ( Arun Kaliamurthy ), தமிழ்த்தேசியப் பேரியக்கக் குடந்தை நகரச் செயலாளர் தோழர் க. விடுதலைச்சுடர் (க.விடுதலைச் சுடர்) , பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. தீந்தமிழன் (தீந்தமிழன் சாமிமலை ) உள்ளிட்ட தோழர்கள் அங்கு 09.06.2017 அன்று நேரில் சென்றோம்.




குடந்தையிலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 21ஆவது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது, கதிராமங்கலம் என்ற இச்சிற்றூர்! ஊருக்குச் சென்றதும், நம்மை வரவேற்றது காவல்துறையினரும், அவர் களுக்குப் பின்னாலிருந்த தடுப்பு வேலிகளும்தான்!

சாலையையொட்டி இந்திய அரசின் எண்ணெய் மற்றும் எரிவளிக் கழகம் (ஓ.என்.ஜி.சி.) அமைத்துள்ள புதிய ஆழ்குழாய்க்குப் பாதுகாப்பாக, 50 காவல்துறை யினர் அமர்ந்துள்ளனர். அவர்களுக்குப் பின்னணியில் தடுப்பு வேலிகள்! அதற்குப் பின்னால், புதிய ஆழ்குழாய்க் கிணற்றின் மூடி!

அதனைக் கடந்து ஊருக்குள் சென்றோம். பாழடைந்து கிடந்த சிவன் கோவிலின் மீது, கருப்புக் கொடி ஆடிக் கொண்டிருந்தது! தெருக்களிலிருந்து வீடுகளில் கருப்புக் கொடிகள்! ஊர் இளைஞர்கள் ஆங்காங்கு நின்று பேசிக் கொண்டிருந்தனர். அவர்களே, ஊருக்குள் நம்மை அழைத்துச் சென்றனர்.




முதலில் நாம் சென்றது, அந்த ஊரின் வரலாறு குறித்து நன்கறிந்தவராகப் பலரும் அடையாளம் காட்டும், நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியர் புலவர் அரங்க. கலியமூர்த்தி அவர்களது இல்லத்திற்கு!

அவரிடம், கதிராமங்கலம் ஊர் பெயர் குறித்து கேட்டோம். அப்போதைய தமிழக ஆளுநர் கையால் தான் நல்லாசிரியர் விருது வாங்கிய போது எடுத்த புகைப்படத்தைக் கைகாட்டிக் கொண்டே அவர் பேசினார்.

“கம்பரை ஆதரித்த சடையப்ப வள்ளல் வாழ்ந்த இந்த ஊரின் உண்மையானப் பெயர், கதிர் வேய்ந்த மங்கலம்! சடையப்ப வள்ளல் கம்பருக்கு நெற்கதிரை கூரையில் வேய்ந்து கொடுத்ததால்தான், கதிர் வேய்ந்த மங்கலம் என்ற பெயர் வந்தது. இதுவே பின்னர் கதிராமங்கலம் என்றானது. ஒருபுறம் காவிரி ஆறு, இன்னொருபுறம் விக்கிரமனாறு இருப்பதால், நடுவிலுள்ள பகுதி - “நடுவெளி” என்று அழைக்கப் பட்டது. அதுவே இன்று “நறுவளி” எனப்படுகிறது. இரண்டு பக்கமும் தண்ணீர் ஓடியதால், இந்தப் பகுதி யில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதாக வரலாறே கிடையாது! ஆனால், இந்த ஆண்டு குடிநீருக்காக அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறோம்..” என்று ஆதங்கப்பட்டார் புலவர் அரங்க. கலியமூர்த்தி!

அடுத்து நாம் சென்ற தெருவில், வெயிலின் தாக்கத்தால் ஒரு வீட்டில் தண்ணீர் கேட்டோம். அவர்கள் அப்போதுதான் தண்ணீர் எடுத்து வந்ததாகச் சொல்லிவிட்டு, தண்ணீர் கொடுத்தார்கள். அந்த வீட்டில் புதிதாகப் போடப்பட்ட ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் வரவில்லை என்றும், ஏற்கெனவே இருந்த கிணற்றில் தண்ணீர் வற்றி அதில் செடிகள் முளைத்திருப்பதையும் காட்டினார்கள். அதன்பிறகு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து போடப்பட்ட ஆழ்குழாய் கிணற்றிலும் தண்ணீர் வரவில்லையே என்று வருத்தத்தோடு தெரிவித்தார்கள்.




இன்னொரு வீட்டில், அடி குழாய் மூலம் நீண்ட நேரம் அடித்துப் பிறகு வந்த தண்ணீர், மஞ்சள் நிறத்தில் எண்ணெய் வாடையுடன் வெளிவந்ததைக் காட்டினார்கள். இப்படி, ஒவ்வொரு வீட்டிலும் தண்ணீருக்காகப் புலம்பல்களும், வருத்தங்களும்!

அதன்பிறகு, நறுவளித்தெருவில் ஓ.என்.ஜி.சி.யினர் ஏற்கெனவே அமைத்து, பின்னர் கைவிடப்பட்ட ஆழ்குழாய் கிணற்றுக்குச் சென்றோம்.




அந்த இடத்திற்கு மிக அருகிலேயே ஒரு கிணறு இருந்ததாகவும், நாளடைவில் அது தண்ணீரின்றி வற்றி விட்டதாகவும் தெரிவித்தார் ஒருவர். இன்னொருவர், ஆழ்குழாய் கிணற்றுக்கு சில அடி தொலைவிலிருந்த தங்கள் தென்னந்தோப்பில் தென்னை மரங்கள் பட்டுப்போய்விட்டதாகத் தெரிவித்தார்.

அங்கே ஒரு பாழடைந்த கட்டடம் இருந்தது. அதற்குள் சென்று பார்த்தபோது, வயல்வெளிகளில் நீர் இறைக்கும் பம்ப் மோட்டார் ஒன்று பழுதுபட்டுக் கிடந்தது. விசாரித்தபோது, அந்த இடம் ஓர் வயலாக இருந்ததாகவும், ஓ.என்.ஜி.சி.யினர் தங்கள் ஆழ் குழாய் கிணற்றுக்குச் செல்ல வசதியாக அந்த வயலைத் துண்டாக்கி சாலை போட்டதாகவும், அதன்பின்பு அந்த இடத்தில் தண்ணீர் வற்றிவிடவே வேளாண்மையே செய்ய முடியாமல் அந்த இடம் தரிசாகக் கிடப்பதாகவும் புலம்பினார் ஒருவர்! இங்கு வெளிப்பட்ட கழிவுநீரை உட்கொண்ட தங்கள் ஆடுகள் இறந்துவிட்டதாக தெரிவித்தார், வேறொருவர்.




கடந்த 2015ஆம் ஆண்டு, ஓ.என்.ஜி.சி.யினர் அமைத்திருந்த எண்ணெய்க் குழாய் வெடித்ததில், தனது தாய் செயலட்சுமிக்கு முகம் கருகியதாகவும், ஓ.என்.ஜி.சி.யினர் அவரது தாய்க்கு மருத்துவ உதவிகள் செய்ததாகவும் தெரிவித்தார் அவரது மகன் அண்ணாதுரை!

இப்படி, நாம் செல்லும் இடங்களிலெல்லாம் - தெருக்களிலெல்லாம் ஓ.என்.ஜி.சி. ஆழ்குழாய் கிணற்றின் காரணமாக அப்பகுதி நிலத்தடி நீர் முழுமையாகக் கெட்டுப் போய், அதன் பாதிப்புகளை பெண்களும், உழவர்களும் சந்தித்து வருவதை உணர்ந்து கொள்ள முடிந்தது.

அந்த பாதிப்புகளின் வெடிப்பாகவே, கடந்த மே மாதம் இந்தப் பகுதியில் ஓ.என்.ஜி.சி.யினர் ஏற்கெனவே அமைத்துள்ள ஆழ்குழாய்க் கிணற்றைப் பராமரிக்க வருகிறோம் என்றபோது மக்கள் போராட்டம் எழுந்தது! உண்மையில், காவல்துறையினரை வைத்து கடும் அடக்குமுறைகளை ஏவி, புதிய ஆழ்குழாய்க் கிணற்றையே ஓ.என்.ஜி.சி.யினர் நிறுவியுள்ளனர்.




2002ஆம் ஆண்டு இப்பகுதியில் இக்குழாய்களை அமைக்கும்போது, தங்களுக்கும் இதில் வேலை கிடைக்கும், பொருளியல் உயரும் என்றெல்லாம் ஓ.என்.ஜி.சி.யினர் கூறியதை நம்பி, இப்பகுதியில் ஆழ்குழாய்கள் அமைக்க பொது மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்காமல் அமைதி காத்தனர். ஆனால், நாளடைவில் இப்பகுதியின் நிலத்தடி நீரில் எண்ணெய் வாடை வருவதும், கிணறுகள் வற்றி குடிநீருக்கே மக்கள் திண்டாடும் நிலை வந்த பிறகுதான், இப்பகுதி மக்கள் ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாய்களின் பாதிப்பை உணரத் தொடங்கினர்.

மேலும், மீத்தேன் உள்ளிட்ட எரிவாயுக்களை எடுப்பதால் ஏற்படும் பாதிப்புகளும், எண்ணெய் குழாய்கள் வெடித்து உலகின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட விபத்துகள் குறித்தும், சமூக ஊடகங்களின் வாயிலாகத் தெரிந்து கொண்ட இவ்வூரின் படித்த இளைஞர்களும் மக்களுடன் போராட்டத்தில் இணைந்தனர்.

எனவேதான், ஓ.என்.ஜி.சி. குழாய்கள் வேண்டாம் என்று ஒற்றைக் குரலில் முழக்கமிடும் கதிராமங்கலம் மக்கள் மீது ஓ.என்.ஜி.சியும், அவர்களுக்கு அடியாள் வேலை பார்க்கும் காவல்துறையினரும் ஆத்திரம் கொண்டனர்.

2017 சூன் 2 அன்று, கதிராமங்கலத்தையே சுற்றி வளைத்த காவல்துறையினர், அப்பகுதி பெண்களிடம் மிகக்கடுமையாக நடந்து கொண்டுள்ளனர். - தெருவிற்கு நாம் சென்றபோது, அப்பகுதிப் பெண்கள் ஒன்றுதிரண்டு, பெண் காவலர்கள் தங்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதை விவரித்தனர்.



ஒவ்வொரு வீட்டின் வாயிலிலும் காவல்துறை போடப்பட்ட நிலையில், அதை மீறி வெளியில் வந்த பெண்களை - கடைகளுக்குச் செல்ல வந்த பெண்களை “கைது செய்து விடுவோம்” என்றும், அவர்களின் பிள்ளைகளை அடித்துத் துன்புறுத்துவோம் என்றும் பெண் காவலர்கள் மிரட்டியுள்ளனர். சில இடங்களில், பெண்களின் சேலைகளைக்கூட பெண் காவலர்கள் இழுத்து, அவர்களை காவல்துறை ஊர்திகளில் ஏற்றுவதற்காக பிடித்துத் தள்ளியுள்ளனர். கைக்குழந்தையோடு நின்றிருந்த ஒரு பெண்ணை அவ்வாறு தள்ளியதாகவும், அதைத்தாம் தடுத்ததாகவும் இன்னொரு பெண் கூறினார்.

அங்கிருந்த மாற்றுத் திறனாயாளியான நடராசன், “ஏன் இப்படி வந்து தெருவில் அடாவடி செய்கிறீர்கள்?” என்று காவல்துறையினரைக் கேட்டபோது, இரண்டு காவலர்கள் அவரது கைகளைப் பிடித்து தரதரவென இழத்துக் கொண்டுபோய் காவல்துறை ஊர்திகளில் ஏற்றியதை வேதனையுடன் விவரித்தார். அருகில் இருந்தவர்கள் எல்லாம் சத்தம் போட்டவுடன்தான் அவரை இறக்கி விட்டுள்ளனர். பிடித்து இழுத்ததில் கை -_ கால் வலி தாங்கமுடியால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இப்படி பெண்கள் மீதும் மக்கள் மீதும் கடுமையாக நடந்து கொண்ட காவல்துறையினர் மீது தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உடனடியாக ஓ.என்.ஜி.சி. தங்கள் மண்ணை விட்டு வெளியேற வேண்டும் என்பதே நாம் சந்தித்த அனைத்துத் தரப்பினரும் தெரிவித்த ஒற்றைச் செய்தி! உலகிற்கும் கதிராமங்கலம் முன்வைக்கும் செய்தி அதுதான்!

நிலத்துக்கு அடியிலுள்ள எண்ணெயை உறிஞ்சும்போதே, அது நிலத்தடி நீரை எந்தளவிற்குப் பாழ்படுத்தும் என்பதற்கு கதிராமங்கலம் நம் கண் முன் எடுத்துக்காட்டு! எனவே, “ஓ.என்.ஜி.சி.யே எங்கள் மண்ணைவிட்டு வெளியேறு!” என்று கதிராமங்கலம் மக்கள் போடும் முழக்கம், காவிரி டெல்டாவின் பிற பகுதிகளுக்கும் பரவ வேண்டும். ஓ.என்.ஜி.சி.யை விரட்ட வேண்டும்! காவிரிப்படுகையைப் பாதுகாக்க வேண்டும்!

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.