ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“மேக்கேத்தாட்டை தடுப்போம்! காவிரியைக் காப்போம்!” - 10 நாள் மக்கள் எழுச்சிப் பரப்புரைப் பயணம்!


“மேக்கேத்தாட்டை தடுப்போம்! காவிரியைக் காப்போம்!” காவிரி உரிமை மீட்புக் குழு - 10 நாள் மக்கள் எழுச்சிப் பரப்புரைப் பயணம்! தொடங்குமிடம் – பூம்புகார், நிறைவடையும் இடம் – மேட்டூர் அணை

இன்று (12.10.2019) காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம், தஞ்சையில் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமையில் நடைபெற்றது. இதில், காவிரி உரிமை மீட்புக் குழுவின் பொருளாளர் திரு. த. மணிமொழியன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், இந்திய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. சிமியோன் சேவியர்ராசு, தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவா திரு. க. செகதீசன், மனித நேய சனநாயகக் கட்சி பொறுப்பாளர் திரு. அகமது கபீர், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தலைமைச் செயற்குழு தோழர் பழ. இராசேந்திரன், இந்திய யூனியன் முசுலீம் லீக் திரு. செய்னுலாபுதீன், தமிழ்த்தேசியப் பாதுகாப்புக் கழக மாநிலத் துணைச் செயலாளர் திரு. சி. குணசேகரன், தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் மாவட்டச் செயலாளர் திரு. ச. கலைச்செல்வம், காவிரி உரிமை மீட்புக் குழு முன்னணிச் செயல்வீரர்கள் வெள்ளாம் பெரம்பூர் திரு. து. இரமேசு, அல்லூர் திரு. கரிகாலன், திரு. தனசேகர், திரு. பார்த்திபன், திருவாரூர் திரு. சூனா செந்தில், விடுதலைத் தமிழ்ப்புலிகள் தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

தீர்மானம் – 1 : “மேக்கேத்தாட்டை தடுப்போம்! காவிரியைக் காப்போம்!” 10 நாள் மக்கள் எழுச்சிப் பயணம்

தமிழ்நாட்டுக்கு வரும் காவிரியின் குறுக்கே கர்நாடகம் திட்டமிட்டுள்ள மேக்கேத்தாட்டு அணையைத் தடுக்க தமிழ் மக்களிடம் எழுச்சியை உருவாக்கும் பொருட்டு - “மேக்கேத்தாட்டை தடுப்போம்! காவிரியைக் காப்போம்!” என்ற தலைப்பில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் வரும் 2019 நவம்பர் 11ஆம் நாள் தொடங்கி 20ஆம் நாள் வரை – பத்து நாட்கள் மக்கள் எழுச்சிப் பரப்புரைப் பயணம் நடத்துவதென காவிரி உரிமை மீட்புக் குழு தீர்மானித்துள்ளது.

காவிரி கடலில் கலக்கும் நாகை மாவட்டம் – பூம்புகாரில் தொடங்கி, பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரங்கள் வழியாகப் பயணித்து, சேலம் மாவட்டம் - மேட்டூர் அணையில் இப்பரப்புரைப் பயணம் நிறைவடைகிறது.

இப்பரப்புரைப் பயணத்தின்போது, வழியெங்கும் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் வாழும் தமிழ் மக்களும், உழவர் பெருமக்களும் காவிரி உரிமை மீட்புக் குழுவின் இந்த எழுச்சிப் பரப்புரைக்குப் பேராதரவு தந்து பங்கேற்குமாறு காவிரி உரிமை மீட்புக் குழு அன்புரிமையுடன் அழைக்கிறது!

முதல்வருக்கு வேண்டுகோள் - "மேக்கேத்தாட்டு அணையைத் தடுக்க தமிழ்நாடு அரசு மக்கள் எழுச்சியை உருவாக்க வேண்டும்!"

காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பையும் இறுதித் தீர்ப்பையும் செயல்படுத்த மறுத்ததைப் போலவே உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் (16.02.2018) செயல்படுத்த மறுக்கிறது கர்நாடக அரசு. அதற்கான ஏற்பாடுதான் மேக்கேதாட்டு மிச்ச நீர் அணை!

மிச்ச நீர் என்பது கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர், கபினி, அர்க்காவதி அணைகள் நிரம்பி வெளியேறும் வெள்ள நீர் ஆகும். இந்த வெள்ள நீர் இப்போது நேரடியாக மேட்டூர் அணைக்கு வந்து விடுகிறது. இதைத் தடுத்து முழுமையாகக் கர்நாடகம் புதிய பாசனத்திற்கும் குடிநீர், தொழிற்சாலைத் தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளும் திட்டம்தான் மேக்கேதாட்டு மிச்ச நீர் திட்டம்!

கிருஷ்ணராஜ சாகர், கபினி, அர்க்காவதி அணைகளின் வெள்ள நீர் வந்து கலக்குமிடம் கர்நாடகத்தின் ராம் நகர் மாவட்டத்தின் கனகபுரம் வட்டத்தின் சங்கமம் என்ற இடமாகும். அதிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மேக்கேதாட்டு (ஆடு தாண்டு காவிரி). இரு பக்கமும் 1,000 அடி உயர மலைகளுக்குக் கீழே காவிரி ஓடுகிறது. அந்த இடத்திலிருந்து தமிழ்நாட்டு எல்லை 3.9 கிலோ மீட்டர்தான்!

இந்த மேக்கேதாட்டு அணையின் திட்டமிட்ட தண்ணீர் கொள்ளளவு 67.16 ஆ.மி.க. (T.M.C.) இப்போது கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், ஏமாவதி, கபினி, ஏரங்கி, அர்க்காவதி அணைகளின் மொத்தக் கொள்ளளவு நீர் 114 ஆ.மி.க. (T.M.C.). ஆனால் இவற்றிலிருந்து வெளியேறும் மிச்ச நீரைத் தேக்கும் மேக்கேதாட்டு அணையின் கொள்ளளவோ 67.16 ஆ.மி.க.!

தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரை தட்டுப்பாடில்லாமல், மாதாமாதம் திறந்துவிடத்தான் மேக்கேத் தாட்டு அணை கட்டுகிறோம் என்று கர்நாடகம் கூறுவது நூறு விழுக்காடுப் பொய்! கடந்த காலங்களில் இப்படிச் சொல்லித்தான் ஏமாவதி, ஏரங்கி, கபினி, அர்க்காவதி, சுவர்ணவதி அணைகளைக் கட்டி கர்நாடக அரசு தமிழ்நாட்டுத் தண்ணீரை அபகரித்துக் கொண்டது. மேக்கேத்தாட்டு அணை மட்டும் கட்டப்பட்டுவிட்டால், எப்படிப்பட்ட பெரிய வெள்ளமானாலும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட மேட்டூருக்கு வராது.

மிகை வெள்ளத்திலிருந்து தனது அணைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக – எப்பொழுதாவது வெளியேற்றும் நீர் கூட தமிழ்நாட்டின் மேட்டூர் அணைக்குப் போய் விடக்கூடாது என்பதற்காகவே கட்டப்படும் தடுப்பு நீர்த்தேக்கம்தான் மேக்கேதாட்டு அணை!

உச்ச நீதிமன்றம் 16.2.2018 அன்று வழங்கிய தீர்ப்பு 15 ஆண்டுகளுக்குள் மாற்றப்பட முடியாது. அத்தீர்ப்பின் பிரிவு XI பின்வருமாறு கூறுகிறது :

“கீழ்ப்பாசன மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தண்ணீர் வரத்தைப் பாதிக்கும் வகையில் மேல் பாசன மாநிலம் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. ஆனால், தொடர்புடைய மாநிலங்கள், தங்களுக்குள் கலந்து பேசி, ஒத்த கருத்து அடிப்படையில் தண்ணீர் திறந்து விடும் முறைகளில் மாற்றம் செய்து கொள்ளலாம். இவ்வாறு மாற்றிக் கொள்ள காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அனுமதி வேண்டும்”.

இதன் பொருள், புதிய நீர்த்தேக்கம் கட்டிக் கொள்ளலாம் என்பதல்ல! மாதவாரியாகத் திறந்து விட வேண்டிய தண்ணீரின் அளவை தங்களுக்குள் கலந்து பேசி ஒரு மாதத்தில் கூட்டியோ, குறைத்தோ திறந்துவிட்டு அடுத்த மாதங்களில் அதை ஈடுகட்டிச் சரி செய்து கொள்ளலாம் என்பதே இதன் பொருள்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் விதி XVIII பின்வருமாறு கூறுகிறது :
“தீர்ப்பாயத் தீர்ப்பிற்கு முரண்பாடு இல்லாமல், ஒரு மாநிலம் தனது எல்லைக்குள் தண்ணீர்ப் பயன்பாட்டை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கும், அனுபவிப்பதற்கும் உரிமை உண்டு”.

இதன் பொருள் என்ன? உச்ச நீதிமன்றம் கர்நாடகத்திற்கு ஒதுக்கியுள்ள 284.75 ஆ.மி.க. தண்ணீரை – தமிழ்நாட்டிற்கு ஒதுக்கியுள்ள 177.25 ஆ.மி.க. தண்ணீரை, அந்தந்த மாநிலமும் தனது வசதிற்கேற்ப, தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் இதன் பொருள். கர்நாடகம் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள 284.75 ஆ.மி.க. தண்ணீரை எந்தெந்த பகுதிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என இதன்படி முடிவு செய்து கொள்ளலாம்! ஆனால், கர்நாடகம் தமிழ்நாட்டின் எல்லையோரத்தில் 67.16 ஆ.மி.க. கொள்ளளவில் புதிய நீர்த்தேக்கம் கட்டிக் கொள்ளலாம் என்பது இதன் பொருள் அல்ல.

மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி கோரி, இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் கர்நாடக அரசு மேற்கண்ட XVIII ஆவது விதியைத் தவறாக மேற்கோள் காட்டி வாதம் செய்துள்ளது.

கர்நாடகத்திடமும், இந்திய அரசிடமும் இந்த சட்ட வாதங்களைப் பேசிப் பயனில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் கடந்தகாலப் பட்டறிவு! ஏமாவதி, ஏரங்கி, கபினி அணைகளைத் தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கட்டக் கூடாது என்று தமிழ்நாடு அரசு 1968லிருந்து கர்நாடக அரசுக்கும் இந்திய அரசுக்கும் எதிர்ப்புத் தெரிவித்துக் கடிதங்கள் எழுதியது; உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டது.

ஆனால் கர்நாடகம் அந்த சட்ட விரோத அணைகளைக் கட்டி முடித்திட, இந்திய அரசு கொல்லைப் புற வழியாக அனுமதித்தது. மேக்கேதாட்டு அணையும் இது போல் கட்டப்படாமல் தடுக்க வேண்டுமானால், “இந்திய ஆட்சியாளர்க்குக் கடிதம் கொடுத்தேன், உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டேன்” என்று முதலமைச்சர் பட்டியல் அடுக்கினால் போதாது. ஏமாந்து விடுவோம்.

“இந்திய அரசே, மேக்கேதாட்டு அணை முயற்சியைத் தடுத்திடு; தமிழ்நாட்டின் காவிரி உரிமையைப் பறிக்க, கர்நாடகத்திற்கு துணை போகாதே!” என்று வெளிப்படையாக இந்திய அரசுக்குத் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்து அரசியல் அழுத்தம் தர வேண்டும். இந்தக் கோரிக்கையைத் தமிழ்நாட்டின் மக்கள் முழக்கமாக மாற்றிட குமரி முனையிலிருந்து கும்மிடிப்பூண்டி வரையுள்ள மக்கள் “காவிரி எழுச்சி நாள்” கடைபிடிக்கத் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக அனைத்துக் கட்சி மற்றும் உழவர் அமைப்புகளின் கூட்டுக் கூட்டத்தைத் தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும்.

கர்நாடகம் ஏமாவதி, ஏரங்கி, கபினி ஆகிய சட்டவிரோத அணைகள் கட்டிய போது, அன்றைய ஆளுங்கட்சியான தி.மு.க. அன்றைய இந்திய ஆளுங்கட்சியான இந்திரா காங்கிரசுடன் கூட்டணியில்தான் இருந்தது; தி.மு.க. ஆட்சி, இந்த அணைகள் கட்ட எதிர்ப்புத் தெரிவித்தது என்றாலும், அணை கட்ட நடுவண் அரசு அனுமதித்தது என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், கவனத்தில் கொள்ள வேண்டும். பா.ச.க.வுடன் அ.இ.அ.தி.மு.க. வைத்திருக்கும் கூட்டணியின் வரம்பை உணர்ந்து கொள்ள வேண்டும்.

மேக்கேத்தாட்டு அணையைத் தடுத்து, தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைப் பெற்றிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு செயல்பட வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு கனிவுடன் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் – 2 : 21 விழுக்காடு ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்க!

காவிரிப்படுகை மாவட்டங்களில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி பல்வேறு துன்பங்களுக்கிடையே நம் உழவர்கள் குறுவை சாகுபடி செய்திருக்கிறார்கள். அறுவடைக்குப் பின் அந்த நெல்லை விற்பதற்கு வழியில்லாமல் திண்டாடுகிறார்கள். தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 விழுக்காட்டிற்கு மேல் ஈரப்பதம் இருந்தால் வாங்க மறுக்கிறார்கள். இதனால் அங்கங்கே நெல் கொள்முதல் நிலையங்களுக்கு முன்பாக நெல் மூட்டைகள் குவிந்து கிடக்கின்றன. நெல்லுக்கு சேதாரம் ஏற்படுகிறது.

கடந்த காலங்களில் 21 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல்லை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்திருக்கிறது. இப்பொழுதும் அதுபோல் 21 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல்லைக் கொள்முதல் செய்யுமாறு தமிழ்நாடு அரசு – நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு வழிகாட்ட வேண்டுமென்றும், கொள்முதல் நிலையம் திறக்கப்படாத ஊர்களில் உடனடியாகத் திறக்க வேண்டுமென்றும் காவிரி உரிமை மீட்புக் குழு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கனிவுடன் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் – 3 : பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் பலன்கள் கிடைக்காமல் தவிப்பு

கடந்த 2018 – 2019 ஆம் ஆண்டுக்கான வேளாண் பயிர்க் காப்புத் திட்டத்தில், காப்பீட்டுத் தொகை கிடைக்காமல் பல்வேறு கிராமங்களில் உழவர்கள் பெருந்தொல்லைக்கு ஆளாகி உள்ளார்கள். பல கிராமங்கள் விடுபட்டுப் போயுள்ளன. ஒரே கிராமத்தில் ஒரு பகுதி விவசாயிகள் விடுபட்டுள்ளனர்.
ஒரே கிராமத்தில் இழப்பீட்டுத் தொகை நிர்ணயிப்பதிலும் வேறுபாடு கடைபிடிக்கப்பட்டு சிக்கல்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாடு அரசு, உடனடியாக இதில் தலையிட்டு பயிர்க் காப்பீட்டுத் திட்ட நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல் செய்து, எல்லா கிராமங்களுக்கும், எல்லா உழவர்களுக்கும் பயிர்க் காப்பீட்டு இழப்பீடு கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழுக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் – 4 : உழவர்களுக்கு வட்டியில்லா வேளாண் கடன்

வேளாண் விளை பொருட்களுக்கு உரிய இலாப விலை கொடுக்காமல், அடிமாட்டு விலைக்கு விற்கும் நிலையைத்தான் இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் வழங்கியிருக்கிறது. இதனால், உழவர்கள் தொடர்ந்து கடனாளி ஆவதும், உயிரை மாய்த்துக் கொள்வதும் நடந்து வருகிறது.

இப்பின்னணியைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசு வங்கிகள் உழவர்களுக்கு வட்டியில்லா வேளாண் கடன் கொடுக்க உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு கேட்டுக் கொள்கிறது. தமிழ்நாடு அரசு இந்திய அரசை வலியுறுத்தி, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் வட்டியில்லா வேளாண் கடன் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு கேட்டுக் கொள்கிறது.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 90251 62216, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.