ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மொழித் திணிப்பை முறியடிக்க..” ஆனந்த விகடன்” வார ஏட்டில் பெ. மணியரசன் கட்டுரை!


“மொழித் திணிப்பை முறியடிக்க..”


“ஆனந்த விகடன்” வார ஏட்டில்
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் கட்டுரை!

“மொழித் திணிப்பை முறியடிக்க..” என்ற தலைப்பில், 1.1.2020 நாளிட்ட “ஆனந்த விகடன்” வார ஏட்டில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்களின் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறியுள்ளதாவது :

“தனித்தனியாக அரசு நடத்திக் கொண்டிருந்த பல்வேறு மொழி – இன மன்னர்களைப் பீரங்கியால் வென்று உருவாக்கப்பட்டதே பிரித்தானிய இந்தியா. இந்த உண்மையை உணர்ந்த காந்தியடிகள் ஆங்கிலேயர் வைத்திருந்த மொழி – இன கலப்பு மாகாணங்களை மொழிவழி மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்று 1920 காங்கிரசு மாநாட்டில் தீர்மானம் போடச் செய்தார்.

எனவேதான், இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவை ஒரு தேசம் (Nation) என்று கூறாமல், “அரசுகளின் ஒன்றியம்” (Union of States) என்கிறது. “இந்தியன்” என்றொரு தேசிய இனம் (Nationality) இருப்பதாகக் கூறாமல், “இந்தியாவின் குடிமக்கள்” (Citizen of India) என்றே கூறுகிறது. இந்தியை “தேசிய மொழி” (National Language) என அறிவிக்காமல், ஒன்றிய அரசின் “அலுவல் மொழி” என்று குறிப்பிடுகிறது.

1956இல் இயற்றப்பட்ட மாநில மறுசீரமைப்புச் சட்டப்படி மொழி இன மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அந்தந்த மாநில மொழி, பண்பாடு பொருளாதார வளர்ச்சிக்காக மாநிலங்கள் மறுவரையறை செய்யப்படுகின்றன என்று அச்சட்டத்தின் நோக்கவுரை கூறுகிறது. ஆனால், முதல் நோக்கமான “மொழிப் பாதுகாப்பு” என்பதை சிதைக்கும் வகையிலேயே 1965ஆம் ஆண்டு இந்தி மட்டுமே ஆட்சிமொழி என இந்திய அரசு அறிவித்தது. அதை முறியடிக்கவே, தமிழ்நாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தி எதிர்ப்பு மாணவர் போராட்டம் எழுந்தது! அப்போராட்டம் நடைபெற்ற அதே தமிழ்நாட்டில்தான், இன்றைக்கு வங்கி, அஞ்சலகம், தொடர்வண்டி நிலையம் உள்ளிட்ட எல்லா நடுவணரசு நிறுவனங்களிலும் இந்தியும் ஆங்கிலமும் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு கடைபிடித்து வரும் “இந்தி – சமற்கிருத மொழி பரப்பும் வாரங்கள்”, தமிழினம் உள்ளிட்ட மற்ற இனத்தார் மீது இனப்பாகுபாடு காட்டும் செயலாகும். எல்லா மக்களின் சமத்துவ உரிமையோடு இந்தியாவை நடத்துவதென்றால், அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையிலுள்ள 22 மொழிகளையும் பரப்புதற்கான “இந்திய மொழிகள் வாரம்”தான் கடைப்பிடிக்க வேண்டும்.

இந்தி மொழியில் அறிவிக்கப்படும் நடுவண் அரசுத் திட்டங்களின் பெயர்களைத் தமிழாக்கம் செய்யாமல் அப்படியே இந்திப் பெயரை தமிழில் எழுத வேண்டும் என்கிறது இந்திய அரசு. ஒரே கட்சியின் ஆட்சியில் உலக வல்லரசாகத் திகழ்ந்த சோவியத் ஒன்றியம், பதினைந்து நாடுகளாகப் பிரிந்து போனதற்கு முதன்மையான காரணம் – மற்ற 14 மொழி பேசும் மக்களிடம் இரசிய மொழியைத் திணித்ததும், இரசிய இன மேலாதிக்கத்தைச் செயல்படுத்தியதும்தான்!

இந்திய ஆட்சியாளர்கள் இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து, இந்தி – சமற்கிருத திணிப்புகளைக் கைவிட வேண்டும். தமிழர்கள் தங்கள் இனத்திற்கும் மொழிக்கும் பேராபத்து சூழ்ந்து வருவதைப் புரிந்து கொண்டு, வரலாற்றில் தமிழினம் இல்லாமல் – தமிழ் மொழி இல்லாமல் துடைக்கப்படும் வரை காத்திருக்காமல், இந்தித் திணிப்பு எதிர்ப்பையும், தமிழ் மொழி வளர்ச்சியையும் ஒருங்கிணைத்து மக்கள் திரள் போராட்டம் நடத்த முன்வர வேண்டும்!”.

இவ்வாறு ஐயா பெ. மணியரசன் எழுதியுள்ளார்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.